Skip to content
Home » மனதில் விழுந்த விதையே-7

மனதில் விழுந்த விதையே-7

அத்தியாயம்-7

Thank you for reading this post, don't forget to subscribe!

     பெண்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்தார்கள்.
   லக்கேஜை ‘தொப்பென’ போட்டுவிட்டு பெரிய மெத்தையில் ‘பொத்’தென்று விழுந்தனர்.

    “அம்மாடி… கார்ல உட்கார்ந்துட்டு வந்ததுக்கே இடுப்பு காலு வலிக்குது. நல்ல வேளை கார் பஞ்சர். இல்லைனா அதை வேற ஓட்டிட்டு வந்திருக்கணும். கை வலிச்சிருக்கும்” என்று சாக்ஷி தீமையிலும் நன்மையை கண்டெடுத்தாள்.

   “ஆமா நான் கூட அவரை(ஆதேஷை) திட்டினேன். பட் காட் கிரேஸ். இப்ப பஞ்சர் ஆகாம இருந்திருந்தா, நாம ஓட்டிட்டு வந்திருக்கணும். கூடவே எங்க அத்தை வீட்ல போலீஸ் இருந்தது. மென்பனி கார் என்றதும் கண்டுபிடிச்சி நம்மளை கோழி அமுக்கற மாதிரி அமுக்கியிருப்பாங்க. இங்க வந்து இப்படி சேப்பா தங்கியிருக்க முடியாது.” என்று சஹானா ஆமோதித்தாள்.

    மென்பனி மட்டும் “இது சேப் தானா? அம்ரிஷ் ஆக்டர், வேதாந்த் டாக்டர், தமிழ் ஆர்மி மேன், அந்த ஆதேஷ் முதல்லயிருந்தே ஒரு மார்க்கமா லுக்கு விடறான்.
    முதல்ல அம்ரிஷ் பத்தி ஏதோ அவன் ஓய்ப் பேட்டி கொடுத்திருக்காளாமே அது என்னனு பார்ப்போம்” என்று அவ்வறையிலிருந்த டிவியை ஆன் செய்து முடித்தார்கள்.

    செய்தி அலைவரிசையை தேடி வைக்க, அதில் இஷா முகம் க்ளோஸப் ஷாட்டில் காட்டப்பட்டது.

  “ஒரு வருஷம் அம்ரிஷோட வாழ்ந்திருக்கேன். அவன் எல்லாம் சைக்கோ. தினமும் டிரிங்க்ஸ் ஸ்மோக்கிங் ஹாபிட்ஸ் இருக்கு. இதுல அவனுக்கு அப்பாவாகற தகுதி இல்லை. அது தெரிந்தும் ஏமாத்தி கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க அவங்க பேரண்ட்ஸ். என் லைப் வேஸ்டா போச்சு.

  நானும் குழந்தை இல்லாதது தான் லைப்பா? சேர்ந்து அன்பா வாழ்வோம்னு நினைச்சேன். பட் அவன் சைக்கோ சார் சைக்கோ. சினிமால ஹீரோவா இருக்கலாம். வெள்ளையா இருக்கறவன் பொய் பேச மாட்டான்னு நம்புவிங்க. அதோட அவனோட பால்வடியற முகம் அவனை கெட்டவன காட்டாது.
  ஆனா உண்மையில அவன் கடைந்து எடுத்த அயோக்கியன். எனக்கு மியூச்வல் டிவோர்ஸ் வேண்டும்.” என்று கூறிக்கொண்டிருக்க, “டிவிய நிறத்தறிங்களா” என்று கர்ஜிணையாக அம்ரிஷ் குரல் அந்த அறையை கிடுகிடுக்க வைத்தது.

   வேதாந்த் தான் வேகமாய் மென்பனி கையிலிருந்த ரிமோட்டை பிடிங்கி டிவியை அணைத்தான்.
 
    “ஏங்க?” என்று பெண்களை கண்டு சோர்ந்து போனவனாய் கேட்டான்.

   “இல்லை சார்… ஆக்டர் அம்ரிஷ் என்றதும் என்ன பிரச்சனைனு ஒரு எதிர்பார்ப்பு.” என்று சஹானா விளக்கினாள்.

   கதவருகே நின்றிருந்த ஆதேஷ் புயலாய் வந்து சஹானாவை அவன் புறம் திருப்பினான். 

  “ஏய் அவன் ஆக்டர் என்றால் அவன் பிரச்சனை கடை பரப்பனுமா? அவன் ஒன்னும் வானத்துல இருந்து குதிக்கலையே. அவனும் நம்மளை போல மனுஷன் தானே? அதென்ன எதிர்பார்ப்பு? 

  உன் ஃபிரண்ட் மிருதுளா லைப்ல கூட தான் பிரச்சனை இருக்கு. நாங்க என்ன ஏதேனு தோண்டி துருவினோமா? ஏதோ பிரச்சனை என்று அம்ரிஷ் அமைதியா இருந்து, இருக்க இடமெல்லாம் தந்தான். நடிகன் வாழ்க்கை மட்டும் வெல்ல கட்டியா?” என்று பேசவும் மென்பனி மற்றும் சாக்ஷி மன்னிப்பு கேட்டார்கள். 

     கார் பஞ்சர் என்றதும் காசு கொடுத்துவிட்டு அம்போவென விட்டு செல்லாமல், ஆண்களின் பிரைவேசி போனாலும் பரவாயில்லை என்று ஏற்றி கொண்டார்களே. தற்போது கூட உங்க இடம் வந்துடுச்சு கார் ஆன் தி வே என்று கழட்டி விடாமல் அப்படியே இங்கே வந்து தங்க வைத்து கொண்டார்கள். 

     ஒரு பெண் அதுவும் மனைவி கட்டிய கணவனை அதுவும் சினி ஸ்டார் ஒருவனை ஆண்மை அற்றவன் என்று நேரடியில் கூறி அவமானம் செய்கின்றாள். நடிகனான அவனுக்கே எத்தனை கஷ்டமோ அதை தாண்டி மனிதநேயம் கொண்டவனாக இருக்க சத்தம் வைத்து டிவியை வைத்தது தவறு தானே?!

    ”ஸாரி ரியல்லி ஸாரி ஸார்.  எங்க தப்பு புரியுது. பிளீஸ் டோன்ட் மிஸ்டேக் மீ. டிவி வைக்கவும் இப்படி ஒரு நியூஸ் மனசை சங்கடப்படுத்தும்னு நினைக்கலை.” என்றதும் பெண்கள் ஆளாளுக்கு அம்ரிஷிடம் மன்னிப்பு வேண்டினார்கள். 

           அம்ரிஷ் அவனாகவே நிதானித்து, “ஸாரி கேர்ள்ஸ்” என்று வெளியேறிவிட்டான். 

       மற்ற ஆண்களும் சென்றிட, முதல்ல எதை பற்றியும் யோசிக்காம ரெஸ்ட் எடுப்போம். மிருதுளா எதையும் யோசிக்காதே இரண்டு மூன்று  நாள் தேடிட்டு விட்டுடுவாங்க.” அந்த நேரம் ஆறுதல் உரைத்து பெண்கள்  மெத்தையில் விழுந்தார்கள். 

    பயண களைப்பா? அல்லது சொகுசான மெத்தையின் சுகமா? நள்ளிரவு உறங்காமல் வந்ததன் விளைவா பேச்சு சத்தமின்றி  உறங்கி வழிந்தார்கள். 

     அதே போல ஆண்கள் குழுவிலும் வண்டியோட்டி வந்ததால் வேதாந்த், மற்றும் தமிழ் உறங்கி வழிய, இரவு எல்லாம் நான்கு பெண்களில் ஒருத்தியை சைட் அடித்து வந்த ஆதேஷ் அவனுமே உறங்கி விட்டான். 

     வெவ்வேறு பிரச்சனையில் சிக்கி தவிக்கும் மிருதுளாவும் அம்ரிஷ் மட்டும் உறங்காமல் இருந்தனர்.    

         தோட்டத்து பக்கம் மெதுவாக நடந்து தன் கவலையை மறக்க முயன்றாள். 

       ‘ஜெகரண்டா மலர்கள்’ பூத்து குலுங்க அந்த மரத்திற்கு கீழே அமர்ந்தாள்.   
    லாவண்டர் நீலநிறத்தில் பூத்து உதிர, கீழே விழுந்த மலரை, கையில் எடுத்து ஒவ்வொன்றாய் சேகரித்தாள்.

  ‘பொயின் செட்டியா’ என்னும் சிவப்பு நிற மலர்செடிக்கு அருகே அம்ரிஷ் வந்து நின்றான்.
 
    அவன் வந்ததை கூட அறியாதவளாக மிருதுளா தாமரை மலராக வீற்றிருந்தாள்.

    தொண்டையை செருமிக்கொண்டு “தூக்கம் வரலையா?” என்றதும் தான் திடுக்கிட்டு திரும்பினாள்.

   “நேத்து முழுக்க நான் நல்லா தான் தூங்கினேன். மயக்கமருந்து கொடுத்தும் தூங்காம இருக்க முடியுமா?” என்று இலகுவாக பேச முயன்றாள்.

    அம்ரிஷ் உதட்டில் லேசான புன்னகை அரும்பியது.

   “ஆர் யூ ஓகே” என்று கேட்டான்.

   “தெரியலை சார். பயமாயிருக்கு. தூக்கு மாட்டி செத்திடலாம்னு லெட்டர் எல்லாம் எழுதி வச்சேன். ஆனா சாகற அளவுக்கு தைரியம் பத்தலை. இவளுங்க தான் என் புலம்பல் தாங்காம என்னை கிட்னாப் பண்ணிட்டு வந்து பிரச்சனையை…” என்று முடிக்காமல் நிறுத்தினாள்.

   “பிரச்சனை இன்கிரிஸ் ஆகிடுச்சுனு நினைக்கிறிங்களா?” என்று கேட்டான். அவனுக்கே அபத்தமாய் இருந்தது. தன்னை விட இவள் மானமோ மனமோ சற்று குறைவான விகிதத்தில் இருக்கும்.

“இல்லை சார். அங்கிருந்தா உடனடியா கல்யாணமாகி அந்த ராஜபாண்டியனிடம் சிக்கியிருப்பேன். இப்ப கொஞ்ச நாள் தள்ளி மாட்டுவேன். அதுவரை சந்தோஷம். ஆனா கண்டிப்பா மாட்டுவேன்.” என்றவள் கண்கள் லேசாக கலங்கியது.

    அம்ரிஷ் அவளருகே இடைவெளியிட்டு அமர்ந்து, “ஏன் அப்படி சொல்லறிங்க?” என்று கேட்டான். மூன்று தோழிகள் முயற்சியெடுத்து காப்பாற்றியிருக்க எப்படியும் மாட்டுவாளென்று உரைப்பது மடத்தனமாக தோன்றியது.

    “எங்கப்பா சித்தி விடமாட்டாங்க. சித்தி என்னை வச்சி அவங்க பையனுக்கு சகல வசதியோட வீடு வாசல்னு வாங்கிட்டாங்க. அதனால எப்படியும் அந்த எம்.எல்.ஏ ராஜபாண்டியன் என்னை துரத்துவான்.

   எனக்கு ஏற்கனவே அரசியல்கட்சி ஆளுங்கனு தெரியும். அதனால தான் சாக முயன்றேன்.

   என்ன… நான் மாட்டியப்பிறகு என் பிரெண்ட்ஸோட பேச கூட விடமாட்டாங்க.
   நான் சாப்பிடாம கூட இருப்பேன். என் பிரெண்ட்ஸோட பேசாம இருக்க மாட்டேன். ஏன்னா… என் பிரெண்ட்ஸ் தான் எனக்கு எல்லாமே.” என்று மனம் போன போக்கில் உரைத்தாள்.

   “சும்மா சாகறேன்… சாக ஆசைப்பட்டேன்னு சொல்லாதிங்க. வாழ்ந்து பாருங்க. ஒரு அடி முன்ன எடுத்து வச்சா நாலடி பின் வாங்குவாங்க” என்றதும் மிருதுளா விரக்தியாய் சிரித்து “அந்த ஒரு அடி தான் எடுத்து வைக்க முடியலையே. பல அடிகள் வாங்கி அனுபவிச்சு, ஒரு கூட்டுக்குள்ள அடைந்து, அடிமையா வாழ ஆரம்பிச்சு நான் கூன் விழுந்த பறவையா மாறிட்டேன். என்னால என் சிறகுகள் வளைந்து கிடக்கு. திரும்ப பறக்கற சக்தி எனக்குயில்லை.

தங்க கூண்டுல சிறகை வெட்டி சோறு தண்ணி வச்சி, அவங்க சொல்லறதை கேட்டு அப்படியே நடக்கற இனமா மாத்திட்டாங்க.” என்று பேசினாள்.

   அம்ரிஷ் போனிலிருந்து தொடர்ச்சியாக நோட்டிபிகேஷன் சத்தம் வந்து சேர, பேண்ட் பேக்கெட்டை துழாவி போனை எடுத்தான்.
    “ஷிட்.” என்று போனை கண்டு எரிச்சலானான்.

   “என்னாச்சு சார்?” என்று மிருதுளா இம்முறை கேட்டதும், “நத்திங் ரூம்ல பார்த்திருப்பிங்களே ஒர் நேரடி ஒளிபரப்பு பேட்டி அதை போன்ல அகைன் பார்த்துட்டு, பிளைட் மோட் போட்டிருந்தேன். லாக்ல போடாம விட்டதால, உட்காரும் போதும் தெரியாம டச்சாகி பிளைட் மோட் ஆப் ஆகிடுச்சு. நோட்டிபிகேஷன் குவியுது.” என்றவன் போனை இம்முறை அணைத்து விட்டு புல் தரையில் அலைப்பேசியை வைத்தான்.

  அதில் அம்ரிஷை சைக்கோ, செக்ஸ் டார்ச்சர், ஆண்மை அற்றவன் என்று குற்றம் சுமத்தி பேசிய அவன் துணைவி இஷா புகைப்படமே இடம் பெற்றிருந்தது.

   மிருதுளாவிற்கு நடிகனின் தனிப்பட்ட வாழ்க்கை என்றதை தாண்டி அவன் பிரச்சனை அறிய எண்ணம் உதித்தது.

   அதனை பற்றி கேட்டால் எரிந்து விழுவாரோ? என்று பயந்தாள்.

  மிருதுளா பேசாமல் தனது அலைப்பேசியை காணவும் இரண்டு நொடிக்கு மேலாக வால்பேப்பரில் இஷா புகைப்படம் இருந்து ஒளியை தந்து கருமை தரவும், இஷாவை பற்றி கேட்க வந்து தயங்குவது அம்ரிஷ் புரிந்துக் கொண்டான்.

    “நடிச்ச பதினாலு படத்துல எட்டு படம் சூப்பர் ஹிட் கொடுத்தேன். கூட நடிக்கிற நடிகையை வச்சி நிறைய கிசுகிசு வரவும் அப்பா அம்மா ரொம்ப அப்செட். அதனால அவசரமா பொண்ணு பார்த்தாங்க. அவசரமா பொண்ணு பார்த்தாலும் அதிகமா வரன் தேடினாங்க. நிறைய பொண்ணுங்க டிஸ்குவாலிப்பிகேஷன் ஆகிட்டாங்க.

   அப்ப தான் அப்பாவோட பிரெண்ட் J.Pஅங்கிள் சந்திப்பு அமைந்தது.

   ஜெ.பரஞ்ஜோதி-மனீஷா இவங்களோட பொண்ணு இஷா. இஷா அவங்களுக்கு ஒரே பொண்ணு. ஜெ.பி அங்கிள் அப்பாவோட பழகிய நெருக்கத்தில உன் பையனுக்கு என் பொண்ணை பிடிச்சிருந்தா கட்டிக் கொடுக்கறதுனு தானா முன் வந்தார்.

  அப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம்.

  இப்ப மென்பனி சாக்ஷியோட பசங்க பொண்ணு உன்னோட குழந்தை கல்யாணம் செய்துப் பார்த்தா நீ விருப்பப்படுவ தானே. நல்ல சிநேகிதிகள். தயக்கமில்லாம சந்தோஷப்படுவ தானே?” என்றதும் ஆமென்று தலையாட்டவும், “அதே போல தான் அப்பா நினைச்சி எனக்கும் இஷாவுக்கும் மேரேஜ் பண்ணி வச்சார்.

    ஒரு வருஷம் ரியலி ஹாப்பியா… அதுவந்து.. ஹாப்பியா இருந்தோம்.

     ஹாப்பினா இந்த பார்க் பீச் தியேட்டர் ஹோட்டல், நகை நட்டு பணம் ஜாலியா ஊர்சுத்தறது இது மட்டும் இல்லை. திகட்ட திகட்ட ஹனிமூனும் நடந்தது.

   அவ என்னை குற்றம் சுமத்தி சொல்லியதுக்கு என்னால ஒவ்வொருத்தருக்கும் ஆதாரம் தரமுடியாது. நான் ஆண்மை உள்ளவனா இல்லையானு வாழ்ந்த அவளுக்கு தெரியும். பொய் சொல்லறா என்பதால டாக்டர் சர்டிபிகேட் தர முடியாது. அப்படியே தந்தாலும் என் பிரெண்ட் டாக்டர் பணத்தை கொடுத்து சர்டிபிகேட் தந்தேன்னு பொய் சொல்வா.
   
   நான் அவளை தங்க தட்டுல தாங்கியிருக்கேன். என்னை சைக்கோனு சொல்லிட்டா. ஐ அம் எ டீ டோட்டலர். நான் குடிப்பேன்னு சொல்லிருக்கா, படத்துல கூட சண்டைக்காட்சியை தவிர்க்க முடியாதானு கேட்பேன். நான் அவளை அடிச்சதா அள்ளி விட்டுயிருக்கா.

   அவளுக்கு தேவையானது கழுத்து வரை பணமும், அவளோட பிரேக்கப் ஆன லவ்வரோட வாழணும். அதுக்கு நான் பலிகாடு” என்று நேற்று மயக்கத்தில் பார்த்தவளிடம் பத்து நிமிடம் கூட பேசாதவளிடம், தன் மனகாயத்தை பகிர்ந்து கொண்டிருந்தான்.

-தொடரும்.

பிரெண்ட்ஸ்…

சமீபத்தில் நடக்கும் விஷயத்திற்கும் கதைக்கும் தொடர்பு இல்லை. இது ஒரு வருடத்திற்கு முன் எழுதிய கதை.

2 thoughts on “மனதில் விழுந்த விதையே-7”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *