Skip to content
Home » மனதில் விழுந்த விதையே-18

மனதில் விழுந்த விதையே-18

அத்தியாயம்-18

Thank you for reading this post, don't forget to subscribe!

மிருதுளாவுக்கு கொடுக்கப்பட்ட அறையில் தனியாக அமர்ந்திருந்தாள்.

அடுத்து என்ன? என்ற பெரிய கேள்விக்கு முன் ஒருவரி பதில் கூட எழுதாமல் இருக்க, சாக்ஷி வந்தாள்.

“படம் பார்க்கலாமா? ஏதாவது சாப்பிடறியா?” என்று கேட்டாள் சாக்ஷி.

“எனக்கு ஏதாவது வேலை வேண்டும் சாக்ஷி. காலேஜ் தவிர்த்து ஒன்னும் தெரியாது இவளுக்கு என்ன வேலை தெரியும்னு திட்டாத.” என்று முன்னெச்சரிக்கையானாள்.

இதற்கு முன் சாக்ஷி வேலைக்கு போடி என்று பலதடவை கூறியும் எனக்கு என்ன தெரியும் வேண்டாம் என்று வீட்டு பறவையாக அடைக்காத்தது மிருதுளா தான்.

“சஹானாவோட ஸ்கூல்ல இங்கிஷிஷ் டீச் பண்ண கேட்டுயிருக்கா, போன்லயே சொல்லி வச்சிருக்கு. நாளைக்கு ஸ்கூலுக்கு போனா கேட்டு சொல்வா. உனக்கு முன்ன நாங்க உன் நலனுக்கு யோசிச்சிட்டு இருக்கோம். நீ மனம் விட்டு பேசு” என்று கைவைத்தாள்.

“உங்களிடம் பேசாம யாரிடம் பேசறது. இப்ப எனக்கு நானே எந்த மாதிரி நினைக்கிறேன்னு தெரியலை. லைப்பை ஏதோ வாழ்ந்தோம் செத்தோம்னு இருக்க முடிவு பண்ணியவ நான்.

இன்னிக்கு வாழறது யாருக்காவது உபயோகமாகணும், ஏதாவது சின்னதா பெயரை உருவாக்கணும்னு கனவுகளோட இருக்கேன். இதுக்கு நடுவுல எந்த ஆசையும் நுழைந்துடக்கூடாது.” என்றுரைத்ததும் சாக்ஷிக்கும் மிருதுளா தனியாக முடிவெடுக்க பழகுவதால் மற்ற எதையும் கேட்காமல் விட்டு பிடித்தாள்.

தெளிவான முடிவை எடுக்க தெரிந்துவிட்டால் வாழ்க்கையில் யாரின் துணையும் தேவைப்படாது. நாம் மற்றவருக்கு அறிவுறுத்தும் இடத்திற்கு சென்றிருப்போம்.

இரவு நெருங்க, குட் நைட் சொல்லிவிட்டு சாக்ஷி அவளது அறைக்கு வந்தாள்.

வேதாந்த் கால் செய்யவும், மகிழ்ச்சியோடு போனை எடுத்தாள்.

“சொல்லுங்க” என்று கேட்டதும், “சென்னை போனதும் ஒரு போன் பண்ணி வீட்டுக்கு வந்தாச்சு, பீஸ் ஃபுல்லா இருக்கோம்னு ஒரு தகவல் சொல்லிருக்கலாம்.” என்று ஆரம்பித்தான்.

“அய்யோ வேதாந்த் நினைச்சதை விட அதிகமாவே பீஸ் ஃபுல்லா இருக்கோம்.
மிருதுளாவே அவங்க சித்தி, அப்பா ராஜபாண்டியன்னு மூன்று பேரையும் வெளுத்து வாங்கிட்டா. நாங்க வெறும் ஆடியன்ஸா தான் வேடிக்கை பார்த்தோம். உங்க அண்ணா நிஷாந்த் வக்கீலா. அவரோட விசிட்டிங்கார்டை கொடுத்ததும் ராஜபாண்டியன் ஷாக்காகிட்டான்.

ஐ திங்க் அவர் இதை எதிர்பார்த்திருக்க மாட்டார். மிருதுளா விசிட்டிங்கார்டை தந்ததும் பேயறைந்தது போல மாறிட்டார்.

அண்ட் அவ என்னோட எங்க வீட்ல பக்கத்து ரூம்ல இருக்கா. ஜாப் கேட்டுயிருக்கா சஹானா ஸ்கூல்ல கேட்டோம். சொல்லறோம்னு சொல்லிருக்காங்க. சஹானா, மென்பனி இப்ப அவங்க வீட்டுக்கு போயிட்டாங்க.

மென்மனி காரை மெய்யப்பன்னு ஒரு டிரைவர் கொண்டு வந்தார். அப்பறம் மென்பனியோட அண்ணன் காரை அவ எடுத்துட்டு அவ வீட்டுக்கு போயிட்டா.

வேதாந்த் அங்க எல்லாரும் எப்படியிருக்காங்க? அம்ரிஷ் உடல்நிலை ஓகேவா?” என்றதும் வேதாந்த் மௌவுனம் உடைத்து, “யா எல்லாரும் ஃபைன். அம்ரிஷ் ஏதோ பேசணுமாம்.” என்று போன் கை மாறியது.

“உங்க பிரெண்ட்டை பத்திரமா பார்த்துக்கோங்க சாக்ஷி. என் மேல கொலைக் காண்டுல இருப்பாங்க. இங்க நாங்க எல்லாரும் நல்லாயிருக்கோம். சொல்ல மறந்துட்டோம். நாங்க சென்னைக்கு தான் வந்துட்டு இருக்கோம்” என்ற தகவலை கூறவும் சாக்ஷி முகம் பூவாக மலர்ந்தது.

“ஓகே அம்ரிஷ் உடம்பை கவனிச்சுக்கோங்க. அப்பறம் வேதாந்த் அண்ணா வக்கீல் கார்ட் தந்திருக்காளே ஏதாவதுனா சொல்ல சொல்லுங்க?” என்றதும் “அண்ணா சொல்லிடுவான் சாக்ஷி. யூ டோண்ட் வொர்ரி.” என்று வேதாந்த் பேசவும் ஸ்பீக்கரில் இருப்பதை யூகித்து நாகரிகமாய் வைத்துவிட்டாள்.

ஆதேஷ் தமிழ் இருவரும் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தார்கள். ஆதேஷ் சஹானாவிற்கு மொக்கை போட ஆரம்பித்தான்.

தமிழ் மென்பனியின் கதைகளை எடுத்து வாசிக்க ஆரம்பித்தான். எழுத்தாளரின் எண்ணங்கள் மனம் சில நேரம் கதையின் இடையே காணலாம். அது அவரின் எண்ணங்களை தாண்டி எழுத்தில் பிரதிபலிக்கும்.

தமிழ் மென்பனி கதையை வாசித்து வரவும், ஆதேஷ் சஹானாவிடம் கடலை வறுத்து பதிலுக்காய் காத்திருந்தான். அவள் பார்த்துவிட்டாள் ஆனால் பதில் இன்னமும் வரவில்லை.

வேதாந்த் காரை ஓட்டுவதால் கவனம் சாலையிலிருந்தது. அம்ரிஷ் வரும்போது எப்படியிருந்தானோ அதேபோல முகத்தை மூடி கண்ணாடி அணிந்து தன் பிம்பத்தை மறைத்தவனாய் பயணித்தான்.

ஆனால் உள்ளத்தில் வரும்போது இருந்த பாரம், கஷ்டம், அவமானம் எல்லாம் மாறி, வேறொரு உணர்வில் கட்டுண்டு கிடந்தான்.

இதற்கு முன் உடல் அயற்ச்சியில் படுத்திருக்க, ஆதேஷ் அம்ரிஷின் தாய் சௌந்தர்யாவிடம் பேசிக்கொண்டிருக்க, அம்ரிஷ் உறங்குவதாக நினைத்து கொண்டு ஆதேஷிடம் அம்ரிஷ் நலத்தை கேட்க வந்த மிருதுளாவின் கொலுசொலியால் அம்ரிஷ் விழித்துவிட்டான்.

மிருதுளா ஆதேஷிடம் தன்னை விசாரிக்க அதனை கேட்டு அவளுக்கு தன்மேல் இருக்கும் பதபதப்பை ரசிக்க காத்திருந்தான்.

அதற்கு பதிலாக தான் ஆதேஷ் வளவளவென்று பேசி சொதப்பி அதனை கேட்க நேர்ந்த மிருதுளா சத்தமின்றி வெளியேறிவிட்டாள்.

ஆதேஷ் பேசியதை வைத்து மிருதுளா கேட்கவும், தனக்கு வேலை மிச்சம் என்பதாக தான் அடுத்து நடப்பதை வேடிக்கை பார்க்க விரும்பினான்.

ஆனால் மிருதுளா முழுவதுமாக எல்லோரையும் புறக்கணிக்க அம்ரிஷிற்கு மகிழ்ச்சி உச்சம் தொட்டது.

குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கின்றது. தன்னை நினைக்க நினைக்க அவளாக ஒதுங்குவதாக எடுத்து கொண்டான்.

எப்படியும் தன் பி.ஏ. சம்பத்தை அனுப்பி ராஜபாண்டியன் கண்காணிக்க கூறியிருந்தான்.

மிருதுளாவிற்கு கஷ்டம் கொடுத்து ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் பார்த்து அதற்கேற்றபடி நடந்து கொள்ள கூறினான்.

மிருதுளாவே சமாளிக்கவும் திடம் பெற்றான். அவன் கூறியது போல நடக்கின்றாளென்ற கர்வம்.

சுயகாலில் நிற்கட்டும் பின்னர் முடிவெடுக்கட்டும் என்று தான் தொல்லை செய்யவில்லை.

மானசீகமாக மிருதுளாவை விரும்ப ஆரம்பித்தான்.

இஷா தன்னை ஒதுக்கி அவமானம் செய்த கணமே கோபுரத்திலிருந்தவள் குப்பைக்கு சென்றுவிட்டாள்.

அவளை மறக்க எளிதானது. முன்பு எல்லாம் காதல், விவாகரத்து என்றதை மறந்து வாழ இயலாது. அத்தனை தவிப்பு மனதிற்குள் கொல்லாமல் கொல்லும். இன்று தவறு உள்ளதென்றால் மறப்பது சுலபமென்ற பார்முலா தான் பெரிதாக நடைமுறையில் உள்ளதே. அதனால் காதலும் விவாகரத்து பெற்றதும் பெரிதாக இதயத்தை அரிக்காதே. அதில் நாயகனும் விதிவிலக்கல்ல.

என்ன இங்கு மிருதுளா சட்டென மனதில் விழுந்த விதையாக வளர ஆரம்பிக்கின்றாள்.
அதிவேகமென்றாலும் ‘விஷத்தை விஷத்தால் முறிப்பது’ போல, ஒரு காதல் தந்த வலியை மறுகாதலால் ஆற்ற நினைப்பது தவறில்லையென்றது அம்ரிஷ் வாதம்.

இங்கு மிருதுளா மனதில் காதலின் உடன் பிறப்பான காமத்திற்காக தான் தன்னை அம்ரிஷ் நாடுகின்றானென தப்பர்த்தம் கொண்டு மிருதுளா எரிமலை தகிப்பில் இருக்கின்றாள். அவளிடம் யார் புரியவைப்பது? புரிந்தாலும் ஏற்கும் பக்குவம் உண்டா?

அதை தான் காத்திருந்து காணப்போகின்றான் நாயகனும் மற்றவர்களும்.

ஆதேஷ் “ஹாய் என்னங்க மெஸேஜ் பார்த்தும் பார்க்காத மாதிரி இருக்கிங்க?” என்று அனுப்பிவிட்டு சோகமான எமோஜியை வரிசையாய் தட்டிவிட்டான்.

அந்த மெஸேஜும் பார்த்து ஐந்து நிமிடம் கழித்தே, “அர்ஜுனரே கொஞ்சம் பொறுங்க, எங்க அம்மா பவானி, அப்பா சுகுமார் இரண்டு பேரும் அமெரிக்காவுக்கு போக டெர்மினல்ல இருக்காங்க அவங்களை வழியனுப்பிட்டு வர்றேன்.” என்று அனுப்பினாள்.

தான் விளையாட்டு துறையில் விற்பயிற்சியை சொல்லி தருவதால் அர்ஜுனரே என்று அழைப்பதை எண்ணி குறுநகை புரிந்து, “காத்திருக்கேன் என் இன்ப இசையே” என்று இவனும் அவள் சஹானா என்ற பாடலிசை சம்மந்தமாய் எழுதி தள்ளினான்.

பவானியோ “வீட்ல நாங்க இல்லை என்றதால ஊர்சுத்தாதே. இப்ப தான் யார் யாரோ வந்து பயமுறுத்தியது. பேசாம எங்களோட வந்திருக்கலாம். வரமாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சிட்ட. அட்லீஸ்ட் சாக்ஷி கூட போய் தங்கு. அப்ப தான் எங்களுக்கு நிம்மதியா இருக்கும்” என்று கூற சுகுமார் ஆமோதிக்க, பலமாய் தலையாட்டி தாய்தந்தையை வழியனுப்பினாள்.

சஹானா மட்டும் தனியாக விமான நிலையத்திலிருந்து வீட்டுக்கு திரும்பினாள்.

வரும் வழியில் ஆதேஷோடு தான் பேசினாள். நேற்று இரவு மிருதுளா, சாக்ஷி, மென்பனி, சஹானா கிளம்பி காலையில் வந்தார்கள். இன்றோ அதிகாலையில் ஆண்கள் குழுவினர் கிளம்பி இன்னமும் பயணத்தில் தான் இருந்தனர்.

சாக்ஷி வீட்டில் தாய் தந்தையர் அறைக்கதவை தட்டவும் போனை ஓரமாக வைத்து விட்டு “என்னம்மா தூங்கலையா? வீட்ல கதவெல்லாம் லாக் பண்ணற செக்கிங் முடிஞ்சுதாப்பா?” என்று இருவரிடம் கேள்வியை உதிர்த்தாள்.

“ஆச்சுடா. மிருதுளா வேற இருப்பதால கூடுதல் பாதுகாப்பு. நம்ம வீட்டு சுவத்துக்கு இந்த பக்கம் யாராவது குதிச்சா அலாரம் அடிக்கும்
நம்ம மென்பனி அண்ணன் தான் செட் பண்ணி கொடுத்தார்.” என்று உரைத்ததும், ‘ஏதேது இது மிருதுளாவுக்காக பண்ணியது போல தெரியலையே. நாம வீட்லயிருந்து நைஸா போனதால செட் பண்ணிருப்பாரோ?’ என்று சாக்ஷி மனதில் ஓடியது.

தந்தை தன்னை குறுகுறுவென பார்க்க, “சூப்பர்ப்பா இனி ஒரு ஆளும் உள்ள வர முடியாது வெளியவும் போக முடியாது.” என்று மகிழ்வதாக நடித்தாள்.

“பெர்த்டே கிப்ட் பிடிச்சிருக்கா?” என்று பத்மா கேட்கவும் பிரேஸ்லெட்டை திருப்பி பார்த்து “என் அம்மாவுக்கு தெரியாதா எனக்கு எது பிடிக்கும்னு.” என கொஞ்சினாள்.

“உன்னோட எந்த பிறந்த நாளும் இப்படி ஒரு நாள் முழுக்க உன் முகம் பார்க்காம கடந்ததில்லை.” என்று சோகமாக பேசவும், “அம்மா மிருதுளா கேட்டா பீல் பண்ணுவா. நாங்க போகலைனா நடுராத்திரி எழுந்து தூக்கு போட்டிருப்பா. அப்ப என்ன செய்யறது? ஆல் இஸ் வெல் அம்மா. இனி இப்படி நடக்காது” என்று சமாதானம் செய்தாள்.

“அம்ரிஷ் யாருடா?” என்று தந்தை குருபிரசாத் கேட்டதும் திருதிருவென விழித்தாள்.

“அப்பா யாரு என்னனு சொன்னா எங்களை தப்பா நினைக்கக்கூடாது. தாம்தூம்னு கத்தக்கூடாது.” என்று உறுதிமொழி வாங்கினாள்.

“முதல்ல அப்பாவிடம் யாருனு சொல்லு” என்று பத்மா அதட்டினார்.

“ஆக்டர் அம்ரிஷ் அம்மா.” என்றதும் “இப்ப டிவில அவனோட ஓய்ப் கூட என்னென்னவோ சொன்னாளே அவனா? அவனோட உனக்கென்ன பழக்கம்? முதல்ல எங்க தங்கனிங்க? எங்க போனிங்க?” என்று பதறினார்.

மிருதுளா பெயரை உச்சரித்தப்போது சிவனேயென்று அறையில் இருந்தவள் அம்ரிஷ் என்றதும் சாக்ஷி அறைக்கு எட்டிபார்த்து வர, பத்மா மிருதுளாவையும் பிடித்து துருவ ஆரம்பித்தார்.

சினிமா நடிகன் என்பதால் பார்த்தால் மரியாதை வரலாம். ஆனால் கேள்விப்பட்ட விஷயத்தை மட்டும் உள்வாங்கும் சராசரி மனிதருக்கு ‘அவன்’ என்ற தரம் தாழ்ந்தவனாக தான் மாறுவான். இது சினிமா உலகத்தின் சாபம்.
வயது தந்தை வயதாக இருந்தாலும் சரி, தாத்தா வயதாக இருந்தாலும் சரி மரியாதை என்பது ஒன்று உச்சத்தில் இருக்கும் இல்லை அதளபாதாளத்தில் கிடைக்கும்.

இங்கு சாக்ஷி அம்மா பத்மாவிற்கு தற்போது அவன் என்றே அம்ரிஷுக்கு மரியாதை கொடுத்தார்.

“அம்மா இங்கிருந்து மென்பனி காரை எடுத்துட்டு வந்ததும், நம்ம வீட்ல பணமும், எனக்கு வாங்கிய கிப்ட் எடுத்துட்டு, நம்ம வீட்டு சுவரை ஏறி குதிச்சு, சஹானாவையும் அழைச்சிட்டு, மிருதுளா வீட்டுக்கு போனோம். ஏற்கனவே கூர்காவுக்கு பணத்தை கொடுத்து கரெக்ட் பண்ணி, நாயுக்கு பிஸ்கேட் போட்டு அவளை கிட்னாப் பண்ணினோம்.” என்றதும் பத்மா முட்டைக்கண்ணால் விழித்தார்.

“ஆமா அவ முழிச்சிருந்தா வரமாட்டாளே. பிறகு கார்ல கொடைக்கானல் போய், சஹானாவோட ஆன்ட்டி வீட்ல டென் டேஸ் இருக்கலாம்னு பிளான்.

பட் ஆக்சிடெண்டா அம்ரிஷ் பிரெண்ட் ஆதேஷ் எங்க காரை இடிக்க வர, முள்ளுல வண்டியை விட்டுட்டோம். இருட்டு நேரம் வேற வழி தெரியலை. அம்ரிஷ் முகத்தை கவர் பண்ணிட்டு இருந்தார். ஒன்னு காரை சரிப்படுத்த சொன்னோம். அவங்களால காரை சரிப்படுத்த நேரமெடுக்கும் இப்படி நைட்ல இருப்பது சேப்டி இல்லை என்று புலம்பினோம். அவங்களும் புலம்ப பேச்சு வாக்குல அவங்களும் கொடைக்கானல் போறதா தெரிந்தது.

அவங்க டிராப் பண்ணறதா கோரிக்கை வைக்க, நாங்க அவங்களோட ஜாயின் ஆகிட்டோம்.” என்றதும் பத்மா அதிர்ச்சியாகி, “இரண்டு பசங்களோட நாலு பொண்ணுங்க தனியா? சாக்ஷி” என்று கோபம் கொள்ள, “அய்யோ அம்மா இரண்டு பேர் இல்லை. நாலு பேர் வேதாந்த் தமிழ்.” என்றதும் எரிமலைக்கு உச்சிக்கு சென்றார்.

“நான் இப்படியாடி வளர்த்தேன்.” ஆ.ஊ. என்று கத்தவும், குருபிரசாத் யோசனைவயப்பட்டார்.

“நிறுத்தும்மா நீ பயப்படற ரேஞ்சுக்கு அங்க எதுவும் நடக்கலை. நாங்க நாலு பேரும் எந்த தப்பும் பண்ணலை. தப்பு பண்ண வந்தா நெருங்கவும் விடமாட்டோம்.

எங்களை எப்படி பாதுகாத்துக்கனு எங்களுக்கு தெரியும்.

கார்ல கொடைக்கானல் போனா சஹானா வீட்ல போலீஸ் நின்னுச்சு. அதனால வேற வழியில்லாம அம்ரிஷ் பங்களால தங்கினோம்.

அம்ரிஷுக்கும் பிரச்சனை என்பதால அவங்க பிரெண்ட்ஸ் கூட தனியா இருக்க வந்தார். சோ இரண்டு பக்கமும் அவங்கவங்க கஷ்டத்தை மறக்க தான் இந்த இன்பிட்வின் டேஸ்.

நாங்க தனியா இருந்தோம். அவங்க தனியா இருந்தாங்க. வேளை வேளைக்கு சாப்பாடு கிடைச்சது. தங்கவும் பாதுகாப்பா இருந்தது. நம்பினா நம்பு இல்லை புலம்புங்க.

அம்ரிஷ் மட்டும் தான் ஆக்டர். கூடயிருந்தவங்களில் வேதாந்த் டாக்டர் , தமிழ் ஆர்மிமேன், ஆதேஷ் ஆர்சரி ஸ்போர்ட்ஸ்மேன்.

அவங்களும் டீசன்டா தான் இருந்தாங்க. சினிமாக்காரங்க என்றாலே தப்புதப்பா அர்த்தம் பண்ணிடாதிங்க. அவங்களும் மனுஷங்க அவங்களுக்கும் பெர்சனல் பிராப்ளம் இருக்கும்.

இப்படி தான் நடிகை டீனா ஹஸ்பெண்ட் இறந்தாங்க. அவங்களுக்கு ஒரு டீன்ஏஜ்ல குழந்தை இருக்கு. இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க, கன்சீவா இருக்காங்கனு ரூமர் கிளப்பி விட்டாங்க. அந்த டீன்ஏஜ் பொண்ணு எவ்ளோ அழகா எங்க மம்மியும் உங்களை மாதிரி தான். காஸப் பேசாதிங்க. அவங்களும் ஹர்ட் ஆகும். மீடியாவுல பேசினா. எந்தளவு வீட்ல டீனாவோட கஷ்டம் உணர்ந்தா அந்த குழந்தை தன் அம்மாவோட வலியை மீடியால சொல்லி அப்படி காஸப் கிரியீட் பண்ணாதிங்கனு ரெக்வஸ்ட் வைப்பா.

மீடியா சொல்லறதை அப்படியே நம்பாதிங்கம்மா. சினிமா என்றால் நெகட்டிவ் ஷேட் மட்டும் கொண்டதில்லை.

தனிபட்ட நபரா பாஸிடிவ் ஆட்களும் உண்டு. அம்ரிஷ் அப்படிப்பட்டவன் தான்” என்று மிருதுளா இருக்கவே சாக்ஷி தன் தோழிக்காகவும் சேர்த்தே தான் பேசினாள். அவளும் என்ன மனநிலையில் இருக்கின்றாளென்றே தெரியவில்லையே.

குருபிராச்தோ “சாரிடாம்மா. அம்மா என்னயிருந்தாலும் பெத்தவ. நாலு பேர் நாலு பசங்களோட தங்கவும் பயந்து போயிட்டா. காலம் அப்படி கெட்டுப்போயிருக்கு இல்லையா. நீ தூங்கு.” என்று மகளை சமாதானம் செய்தார்.

மிருதுளாவுமே தனக்கு கொடுக்கப்பட்ட அறையில் படுக்க சென்றாள்.

நான் என்ன கேட்டேன் குதிக்கறா?” என்று பத்மா புலம்பி அறைக்கு செல்ல கதவு தாழிடவும் குருபிரசாத்தோ, ‘ஒரு வேளை அந்த நடிகனை மகள் விரும்பறாளா இந்தளவு அவனுக்கு சார்பா பேசறா?’ என்று மனதினுள் உறுத்தியபடி உறங்கினார்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

2 thoughts on “மனதில் விழுந்த விதையே-18”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *