Skip to content
Home » மனதில் விழுந்த விதையே-19

மனதில் விழுந்த விதையே-19

அத்தியாயம்-19

Thank you for reading this post, don't forget to subscribe!

   மிருதுளாவின் வாழ்க்கை காலையில் எழுந்து நிதானமாக பள்ளிக்கு கிளம்பி, சாக்ஷியின் அன்னை கையால் சமைக்கப்பட்ட உணவை தோழியோடு ருசித்து,  அவள் தந்தை குருபிரசாத்திடமும் டிவியில் வரும் செய்திகளை விவாதித்து, சாக்ஷியின் நடன பள்ளிக்கு செல்லும் வழியில் இவள் பள்ளியிருக்க, சாக்ஷியே மிருதுளாவை ஸ்கூல் வாசலில் விட்டுவிட்டு செல்வாள்.

  அதன் பின் சஹானா பள்ளியில் சந்தித்து பேசிக்கொள்வார்கள்.

  காலையிலிருந்து மாலை வரை பாடம் நடத்தும் பணியில் மூழ்கி போவாள் மிருதுளா. இடையே மதிய வேளையில் சஹானாவோடு சாக்ஷி அன்னை கொடுத்த உணவை சாப்பிடுவாள். மாலை மிருதுளா தனியாக பஸ் பிடித்து வீட்டுக்கு செல்வாள். மற்றபடி ராஜபாண்டியனால் எந்த ஆபத்தும் வரவில்லை. ஒருவேளை காத்திருந்து திட்டம் போடலாம்.

மதன் மட்டும் ஒரு நாள் வந்து பேசிவிட்டு சென்றான். அதுகூட அன்னை செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டான்.
  மிருதுளா எப்பவும் போல நிதானமாக தம்பியிடம் பேசி வழியனுப்பிவிட்டாள்.

   மிருதுளா வாழ்க்கை இப்படி தான் சென்றது.

மென்பனியின் வாழ்வில் அவள் தினசரி கதையை, தமிழ் வாசித்து அதற்கு கருத்து வழங்கி, ஒரு வாசகனாய் பின் தொடர்ந்தான்.

   அதை தவிர தனிபட்டு ஆதேஷ் போல பேச முயற்சிக்கவில்லை. ஆனால் கதையின் கருத்து வழியாக பல துணைக் கருத்துகளில் எண்ணங்களை பகிர்வார்கள். பழைய கதைகளின் ஊடே பேச்சு என்பதால் அது தனிபட்டு மற்ற வாசகருக்கும் இவள் புதுக்கதையை வாசிக்கும் சஹானாவின் கருத்திலும் படவில்லை.

ஆதேஷ் தினமும் பேசுவான், தனியாக ஒரு நாள் வீட்டுக்கு அருகேயிருக்கும் காபி ஷாப்பில் எதச்சையமாக சந்தித்தனர். சஹானாவை பொறுத்தவரை எதச்சையமான சந்திப்பு. ஆதேஷ் திட்டமிட்டு வந்து சந்தித்து சென்றான்.

  சாக்ஷியும் வேதாந்தோடு அளவோடு பேசி நின்றாள்.

அன்று அப்படி தான் சாக்ஷி நடனபள்ளியிலிருந்து கிளம்பும் நேரம் கால் சுளுக்கு பிடித்தது. அதே வலியோடு வீட்டுக்கு வந்துவிட்டாள். சாதாரணமான ஸ்பிரே, தைலம் பூசினால் சரியாகிவிடுமென்று எண்ணினாள்.

  ஆனால் நேரம் செல்ல அதுவோ கால் வலி உயிரை வாட்டியது. வீட்டிலிருந்து வெளியே ஒரடி கூட நடக்க முடியவில்லை.
 
   டாக்டரிடம் செல்ல எழவேண்டுமே. அப்பொழுது தான் வேதாந்த் நினைவு வந்தது.

   “அப்பா என் போன்ல வேதாந்த் நேம் இருக்குல, அதுக்கு கால் பண்ணி நிலைமையை சொல்லுங்க அவர் வருவார்.” என்று கூற மிருதுளாவோ தோழி முகம் சுணங்கி வலியில் போராடவும் “அவர் நரம்பியல் டாக்டர் அங்கிள்.” என்று கூறியதும் மகளின் போனிலிருந்து எடுத்து அழைத்தார்.

   வேதாந்த் சாக்ஷியிடம் அழைப்பு என்றதும் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்காத குறையாக அழைப்பை ஏற்றான்.

  “சொல்லுங்க சாக்ஷி மேம்” என்று மரியாதையோடு விளித்தான். அதிலேயே குருபிரசாத் கொஞ்சம் தெம்பு வந்தவராக, “டாக்டர் வேதாந்த்?” என்று கேட்டார்.

  வேதாந்த் போனை உற்று நோக்கினான். சாக்ஷி போனிலிருந்து ஆண்குரல் என்றதும், விளையாட்டை ஏறக்கட்டினான்.
  
  “எஸ் நீங்க?” என்று கேட்டான்.

  “நான் சாக்ஷியோட அப்பா குருபிரசாத்.” என்று ஆரம்பிக்க, ‘என்னடா இது அவ அப்பாவிடம் நம்ம மேட்டரை ஓபன் பண்ணிட்டாளா? பட் நான் பிரப்போஸ் பண்ணலையே. அவளும் என்னிடம் லவ் பத்தி எதுவும் வாயை திறக்கலை. டேரக்டா அப்பாவிடம் சொல்லி என்னிடம் கல்யாணத்தை பத்தி பேச ட்ரை பண்ணறாளா?’ என்று எண்ணங்கள் அவனை வேறு விதமாக வழிநடத்தியது.

  அவன் எண்ணத்தை அணைப்போடும் விதமாக சாக்ஷி தந்தை குருபிரசாத் “சாக்ஷிக்கு கால் சுளுக்கு பிடிச்சிருக்கு. எழுந்து நடக்க முடியலை. கால் வேற வீக்கமா இருக்கு. ஹாஸ்பிடலுக்கு வரச்சொன்னா காலை கீழே வைக்க முடியலைனு அழுவறா, இந்த நம்பருக்கு கால் பண்ண சொன்னா” என்று விவரிக்க வேதாந்த் மானசீகமாக தனக்கு கொட்டு வைத்து கொண்டான். காதல், கல்யாணம் என்று வேகமாய் தான் எண்ணம் அலைப்பாய துவங்கிவிட்டதே.

  ஓவர் ஸ்பீடு வேண்டாமென்று நண்பர்களுக்கு சொல்லி சிலநாட்கள் பார்ப்போமென்று கூறியிருக்க இந்த இருபது நாளிலே இப்படி ஆசை வந்தால்?

   “அங்கிள் அட்ரஸை சொல்லுங்க நான் வர்றேன்” என்று கூறியதும் அவரும் மடமடவென உரைத்தார்.

    “ஓகே அங்கிள் நான் வந்துட்டு இருக்கேன்னு சாக்ஷியிடம் சொல்லுங்க” என்று துண்டித்து விட்டான்.

  வேதாந்த் யோசனைவயப்பட்டவனாக அம்ரிஷிடமும், தமிழ், ஆதேஷிடமும் கூறினான். சற்று வேகத்தடையிட்டு பழக கூறியதே வேதாந்த் தான். அப்படியிருக்க சாக்ஷியை பார்க்க போனால்? அதனால் நண்பர்களிடம் தெரிவித்தான்.

   “டாக்டரா தானே கூப்பிட்டாங்க. போய் என்னனு பார்த்து சுளுக்கு எடுத்து விடு போடா” என்று ஆதேஷ் கேலி செய்தான்.

தமிழ் அப்பொழுது தான் காஷ்மீர் மண்ணில் காலடி எடுத்து வைத்திருந்தான். ஏற்கனவே பத்து நாள் கொடைக்கானலில் கழிந்தது. இந்த இருபது நாள் சென்னையில் கழிய கிளம்பிவிட்டான். இதோடு ஆறு மாதம் வரை லீவு என்று கிடைக்காது. எப்படியும் போன் மட்டும் பழகுவான். அதுகூட தன் பணி இடம் சென்றால் போன் உபயோகிக்க கூடாது. லாக்கரில் உறங்கும். இவன் பனியில் உறங்க வேண்டும். அதுவரை காதலை வளர்ப்பானோ அல்லது கதையை வாசித்து மென்பனியின் எழுத்துக்கு மட்டும் அடிமையாவானோ?!

  இந்த வேதாந்த் அம்ரிஷிடமும் பகிர்ந்திருந்தான்.

     வேதாந்த் தன் டாக்டர் உடைமையை எடுத்து காரை இயக்கி சாக்ஷி வீட்டிற்கு வரும் போது ஒரு மணி நேரம் கூடுதலானது.
  
    “மச்சான் அப்பார்ட்மெண்ட் மாதிரி இல்லை. தனி தனி வில்லாவா இருக்கு. முகத்தை காட்டின மக்கள் சூழ்ந்திடுவாங்க. ஜாக்கிரதை டா” என்று கூறிவிட்டு வேதாந்த் கீழிறங்க, கதவு மணியோசை அடித்து காத்திருந்தான். கதவு திறந்ததும் அம்ரிஷ் வேகமாய் காரிலிருந்து வீட்டுக்குள் நுழைந்தான்.

  “ஏ.. யாருப்பா நீங்க?” என்று அலறியவரிடம் “அங்கிள் நான் தான் வேதாந்த் டாக்டர்.” என்று ஸ்டதஸ்கோப்பை கழுத்தில் போட்டு நின்றான்.

   “இ..இவரு?” என்று முகம் மூடியிருந்த அம்ரிஷை கேட்டார்.

  “வீட்ல யாரிருக்கா அங்கிள்?” என்று கேட்க, “ஏன் நான் என் மனைவி பத்மா, என் பொண்ணு சாக்ஷி அவ பிரெண்ட் மிருதுளா. ஏன் கொள்ளையடிக்க போறிங்களா?” என்று கேட்டதும் அம்ரிஷ் முகத்தை மறைத்தவையை களைந்தான்.

  “அம்ரிஷ்?” என்று குருபிரசாத் வாயடைத்து போக, “சாக்ஷி எங்க அங்கிள்?” என்று அம்ரிஷும் கேட்டான். எப்படியும் சாக்ஷி இருக்குமிடம் தன் ஜோடி இருப்பாளென்ற நம்பிக்கை.

    “டேய் ஆளா பறக்காதடா. நீ இப்போ விவாகரத்து ஆனவன். கொஞ்சமாவது பீலிங் இருக்கற மாதிரி சோகமா இருக்கியா? மிருதுளாவை பார்க்கற சந்தோஷம் தான் உன் மூஞ்சுல தாண்டவம் ஆடுது” என்று நண்பனை கட்டுப்படுத்தினான்.

  குருபிரசாத்திற்கு டாக்டர் வருவானென்று தயாராகியிருக்க, கூடவே நாயகன் அம்ரிஷ் வந்ததும் கைகால் கல்லாய் மாறியது போல  ஸ்தம்பித்து போனார்.

  ஹாலில் இருந்தே மிருதுளா நிற்பது தெரிய, நேராக அம்ரிஷ் உள்ளே நுழைந்துவிட்டான்.

  “ஹாய் சாக்ஷி எப்படியிருக்கிங்க? ஏதோ பிராக்சர்னு வேதாந்த் சொன்னா?” என்று வாயெல்லாம் பல்லாக ஆனந்தத்தோடு கேட்பவனை எந்த ரகத்தில் சேர்க்கயென்று வேதாந்த் தடுமாறினான். மிருதுளாவை கண்டு நமுட்டு சிரிப்பை உதிர்க்கவும் தவறவில்லை அம்ரிஷ். அவளோ புஸுபுஸுவென  கோபத்தில் மூச்சுவிடுவது தெளிவாக காட்டியது.

  வேதாந்தின் தடுமாற்றம் சாக்ஷியை காணும் வரை. அவளை கண்டதும், “வாட் ஹாப்பன் சாக்ஷி?” என்று கால் வீக்கத்தை கண்டு அருகே சென்று அவளை ஆராய்ந்தான்.

   பத்மாவோ டிவியில் கண்ட நாயகனை வீட்டில் கண்டதும் கணவரை பார்த்து திகைக்க, அவரோ இங்க வா என்று கண் ஜாடை காட்டினார்.

   பத்மா இரு ஆடவர்களை கண்டு பேந்தபேந்த விழித்து அறையிலிருந்து வணக்கம் வைத்து பேச்சற்று கணவரிடம் சென்றார்.

  “லேசா டான்ஸ் டீச் பண்ணிட்டு இருந்தப்ப ஸ்கிட் ஆகிடுச்சு. லைட்டா அப்பவே வலி இருந்தது. நான் தான் கிளாஸ் டிஸ்பெரல் பண்ணிட்டு வீட்டுக்கு வந்து ரெஸ்ட் எடுத்தா பெட்டரா இருக்கும்னு கவனிக்கலை. பட் இப்ப சிவியரா வலிக்கு. வீக்கமும் இருக்கு. காலை கீழே வைக்க முடியலை.” என்று அம்ரிஷ் வேதாந்த் இருவரிடமும் உரைத்தாள்.

சாக்ஷி காலை பிடித்து ஆராய்ந்து அவள் வீக்கத்தில் கைவைத்து “இங்க வலிக்கா? இப்போ? இப்போ, லைட்டா பெயின் இருக்கா தாங்க முடியாத வலியா?” என்று விசாரணை துவங்கினான் வேதாந்த்.

   “வலி தாங்கற லெவல் தான் பெயின் இருக்கு. ஆனா காலை கீழ வச்சா மட்டும் உயிர் போற மாதிரி வலிக்கு.” என்றதும் வேதாந்த் மெது மெதுவாய் ஆராய்ந்தான்.
எந்த நரம்பு எந்த விதமாக பயணித்து செல்லும் என்று அறிந்தவனின் கைகள் அவள் காலில் ஊர்ந்தது.

   தாய்தந்தையர் வேறு இருக்க, தயக்கமாய் இருந்தவளிடம், “பிராக்சர் இருக்கற மாதிரி தெரியலை சாக்ஷி. பிராக்சர் என்றால் இந்நேரம் வலி தாங்கியிருக்க முடியாது. நீங்க சும்மா இருந்தாலும் வலி சுருக்கு சுருக்குனு இருக்கும். இது சுளுக்கு தான். என்ன எசகுபிசகா சுளுக்கியிருக்கும். பரவாயில்லை என்னனு பார்த்திடலாம். எதுக்கோ ஒரு ஸ்கேன் பண்ணிடலாம். உங்க ஜாப் டான்ஸ் ஆச்சே” என்றவன் மருந்து மாத்திரையை எழுதினான். ஜெல், ஸ்பிரே என்று எழுதி முடித்து, “ஈவினிங் இதே ஏரியாவுல டாக்டர் அசோகன் இருப்பார். ஒரு ஸ்கேன் எடுத்துடுங்க. அவர் எனக்கு ரிப்போர்ட் அனுப்பிடுவார். அதுவரை இதை இரண்டு முறை யூஸ் பண்ணிடுங்க” என்று எழுதி கொடுத்தான்.

கூடுதலாக காலை பிசியோதெரபி டாக்டரை போல அமுக்கி விட்டான். அது பெண்ணவளுக்கு சுகமான வலியை தர, வேதாந்தை பார்வையால் விழுங்கவே ஆரம்பித்தாள்.

   அம்ரிஷ் கண்கள் மிருதுளாவை ஏறிட்டது. அவளோ சாக்ஷி பெற்றோர்கள் வெளியே இருக்கின்றதாக செருமினாள்.

  “நீங்க எப்படி வந்திங்க?” என்று அதன் பின்னே அம்ரிஷை கண்டு கேட்டாள் சாக்ஷி.

  “சும்மா தான் சாக்ஷி. இந்தபக்கம் வர்ற வேலையிருந்தது. உங்களை பார்க்கறதா வேதாந்த் சொல்லவும் சரி ஓரெட்டு பார்க்கலாம் வந்தேன். பிரெண்ட்லியா” என்றதும் ‘அதுசரி’ என்றவள் வேதாந்திடம் பார்வையை பதித்தாள்.

  அவனோ தோளைக் குலுக்கினான். மிருதுளா வந்ததிலிருந்து வாய் திறக்கவில்லை. ஏன் ஒரு நலன் விசாரிப்பு கூட பேசாமல் மரமாக நின்றாள்.
 
   வேதாந்த் அவனாக மிருதுளாவிடம் “என்ன மிருதுளா உங்க பிரெண்டை ஒழுங்கா கவனிக்க வேண்டாமா? பாருங்க கால் எப்படி வீங்கியிருக்கு. கொஞ்சம் பார்த்துகோங்க.” என்றவன் காலில் மென்மையாய் ஒரு அழுத்தத்தோடு பிசைந்தவன் இதமாய் பிடித்து கிளம்பவா என்பது போல நோக்கினான்.
 
    “அப்பா அம்மாவிடம் இன்ட்ரோ பண்ணலை.” என்றதும் மிருதுளா வேகமாய் “அங்கிள் ஆன்ட்டி” என்று அழைத்துவிட்டாள்.

  இன்னும் விட்டால் அம்ரிஷ் மிருதுளாவிடம் நெருங்கி நின்று ஏதேனும் பேசிவிடுவானோ என்ற பயம். சாக்ஷி தாய் தந்தையை அழைத்துவிட்டாள்.

  அம்ரிஷ் மீண்டும் ஒதுங்கி நின்றான். சாக்ஷி தாய் தந்தையர் வரவும், “அப்பா நான் சொன்னேன்ல ஆக்டர் அம்ரிஷ் டாக்டர் வேதாந்த்.” என்று அறிமுகப்படுத்தினாள்.

  அதற்குள் கிச்சனில் குருபிரசாத் பத்மாவிடம் தான் எண்ணியதை கிசுகிசுத்தார்.
  பத்மா தலையில் கைவைத்து தவித்தார். மகள் நடிகனை காதலிக்கின்றாளோ என்று தான் ஓடியது. அதுவும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து வாங்கியவனை.

   எதற்கும் வந்தவர்களுக்கு உபசரித்து அனுப்பும் முறைக்கு மாதுளை ஜூஸ் போட்டு எடுத்து வந்தார்.

  குருபிரசாத் பெயருக்கு பேச வேண்டுமேயென்ற காரணத்திற்காகவும், மகள் பத்து நாள் தங்கியதற்கு உணவும் இருக்க இடமும் அளித்தவரென்ற மரியாதைக்கும் இஷாவின் பேட்டியை தவிர்த்து விசாரித்தார்.
 
   “சாக்ஷி சொன்னா நீங்க தான் தங்க இடவசதி செய்து உணவெல்லாம் அரேஞ்ச் பண்ணியதா. ரொம்ப நன்றி சார்” என்று வணங்கினார்.

  “அய்யோ அங்கிள் கையெடுத்து கும்பிட்டு பெரிய மனுஷனாக்காதிங்க. நானும் ஒரு சராசரி மனுஷன். பால்ட் எங்க மேல தான். ஆதேஷ் மட்டும் வண்டியை தாறுமாறா ஓட்டலைனா, இவங்க தனியா போய் நிம்மதியா இருந்திருப்பாங்க. கார் பஞ்சர் ஆனதால தான் தனியா அந்த நைட் நேரத்துல விட்டுட்டு போக முடியலை.

  சொல்லப்போனா இவங்க நாலு பேர் பெர்த்டே செலிபிரேட் குக்கிங், டான்ஸ்னு டைம் ஓட்டவும் தான் எனக்குமே என் லைப்ல இருந்து வெளியே வர முடிஞ்சது.” என்று மனம் திறந்து பேசினான்.

  ‘டாக்டர் என்று என்னை அழைச்சிட்டு இவனிடம் பேசிட்டு இருக்காரே’ என்று பொறுமினாலும் தனியாக சாக்ஷியிடம் ‘மிருதுளா ஏதாவது பேசினாளா? என்ன சொன்னா?’ என்று இவன் கிசுகிசுத்து கேட்க, சாக்ஷியோ ‘அம்ரிஷ் எதுக்கு வந்தார். உங்க வேலையா?’ என்று சண்டை பிடித்தாள்.

   பத்மா சும்மா இல்லாமல் “டிவில வந்த பொண்ணு உங்க ஓய்ப் தானே தம்பி?” என்று கேட்க அங்கே நிசப்தம் ஆனது.

அம்ரிஷை இங்கு அழைத்து வரும் முன் சாக்ஷியிடம் ஒரு வார்த்தை கூறியிருக்க வேண்டுமோ என வேதாந்த் தாமதமாக நினைத்தான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

1 thought on “மனதில் விழுந்த விதையே-19”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *