Skip to content
Home » தீரனின் தென்றல்-23

தீரனின் தென்றல்-23

தீரனின் தென்றல் – 23

Thank you for reading this post, don't forget to subscribe!

பூரணி இறந்ததும் அவர் கூறியது படி தீரன் எதுவும் செய்யாமல் ஒதுங்கிக் கொள்ள மகன் முறையில் நின்று குமார் தான் அனைத்தும் செய்தான்… பூரணிக்கு செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தும் முடிய ஆதீரன் அவனின் வீட்டில் விட்டேத்தியாக அமர்ந்திருக்க குமாருக்கு தென்றல் விஷயத்தில் ஆதீரன் மீது கோபம் இருந்தாலும் இந்த நிலையில் தன் நண்பனை பார்க்கவே கஷ்டமாக இருந்தது.

அவன் அருகில் வந்து அமர்ந்தான் குமார். “அதான் எல்லாம் முடிஞ்சிருச்சே… பேசாம வேலைக்கு போற வழியை பாரு…. உன் மனசுக்கு கொஞ்சம் மாறுதல் கிடைக்கும்” எங்கோ பார்த்து பட்டும் படாமல் குமார் பேச அவனை நிமிர்ந்து பார்த்து கசந்த புன்னகை சிந்தினான் ஆதீரன்.

“உனக்கும் இன்னும் என் மேல கோபம் போகலை.‌.‌ இல்லையா குமாரு?” ஆதீரன் கேட்க

“என் தங்கச்சி விஷயத்துல கோபம் இருக்க தான் செய்யுது… கோபப்படாட்டி இத்தனை வருஷம் அவ என்னை அண்ணா னு கூப்பிட்டதுக்கு அர்த்தம் இல்லாம போகுமே…” குமார் சொல்ல

“தென்றல் இனி என்னை மன்னிக்கவே மாட்டா இல்லையா குமாரு? அம்மாக்கு உடம்பு சரியில்லை னு சொன்னப்போ கூட அவ என்னோட வரலை இல்லையா?” ஆதீரன் வருந்த

“டேய் லூசு மாதிரி பேசாதே… நிறைமாச பிள்ளைத்தாச்சி… நீ கூப்பிட்ட உடனே உன் பேச்சை கேட்டு ஓடி வந்துட முடியுமா? ஆங்… நீ என்ன சொன்னாலும் அதை அப்படியே செய்துட்டு இருந்த பொண்ணு தான் தென்றல்… அவ இப்போ இப்படி உன்னை விலகி போக காரணம் உன்னோட செயல் தானே..?” குமார் சொல்ல ஆதீரன் தலை குனிந்தான் குற்ற உணர்ச்சியில்

“ஆனா தென்றல் எவ்வளவு நல்லவ தெரியுமா? அம்மாகிட்ட அடிக்கடி ஃபோன் பண்ணி பேசிட்டு தான் இருந்தா… ஆனா அம்மா தவறினது அவளுக்கு தெரியாது… நானும் சொல்லலை… அம்மா சொல்லி இருந்தாங்க தென்றலுக்கு நான் துணையா இருந்து கூட இருந்து பார்த்துக்கனும் னு… சரி நான் கிளம்பறேன்…” என்று குமார் முடிக்க

“என்னை தான் முகத்திலேயே முழிக்க கூடாது னு சொல்லிட்டா… நீ அவ கூடவே இரு குமாரு… முடிஞ்சா நான் தெரிஞ்சு எந்த தப்பும் செய்யலை… இப்போ எல்லாத்தையும் உணர்ந்துட்டேன் னு மட்டும் உன் தங்கச்சி கிட்ட சொல்லிடு மச்சான்…” ஆதீரன் கோரிக்கை வைக்க எதுவும் பேசாமல் வெளியேறினான் குமார்.

குமார் சென்ற பிறகு தன் வீடும் வாழ்க்கையும் இன்னும் வெறுமையான உணர்வு ஆதீரனுக்கு… ஒருநாள் முழுக்க வீட்டில் தனியாக இருந்தவனுக்கு பைத்தியம் பிடிப்பது போல தோன்ற மறுநாள் அலுவலகம் கிளம்பி சென்றான் ஆதீரன்.

பூரணி இருந்த வரை இரவு பகல் பாராது வேலை செய்தாலும் வேலை நேரம் முடிந்த உடனேயே வீட்டிற்கு வந்து மீதி வேலைகளை பார்ப்பான்..‌ இப்போது வீட்டில் தனியே இருக்க விருப்பம் இன்றி சில நேரங்களில் அலுவலகத்திலேயே கிடப்பான் யாருமற்று…

தனிமை வேண்டுபவர்களுக்கு வரமாக… வேண்டாத ஆதீரன் போன்றோருக்கு அது சாபமாக… ஒரு வாரம் சென்றிருந்தது குமார் இவனை விட்டுச் சென்று… கடந்த இரண்டு நாட்கள் அலுவலகத்தில் தங்கி விட்டு அன்று தான் வீட்டிற்கு வந்திருந்தான் ஆதீரன்.

உள்ளத்தில் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு… மகிழ்ச்சியா அடக்கப்பட்ட அதிக துக்கமா…? நெஞ்சை அடைப்பது போன்ற உணர்வு… குளித்து விட்டு அன்னையின் புகைப்படம் முன்பு வந்து நின்று காய்ந்த மாலையை அகற்றிவிட்டு புதிதாக பூச்சரத்தை எடுத்து மாலை போட்டு தீபம் ஏற்றி கண் மூடி கும்பிட்டு கொண்டு இருக்க ஃபோன் அடித்தது..

எடுத்துப் பார்த்த ஆதீரன் வியந்தான். ரூபிணி அழைத்திருந்தாள். ஆர்வமுடன் எடுத்து காதில் வைத்து

“ரூபி… சொல்லுமா… எப்படி இருக்கீங்க? தென்றல் எப்படி இருக்கா அவ நல்லா இருக்கா இல்லையா?” என்று விடாமல் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க

“அண்ணே கொஞ்சம் பொறுமையா கேளு எல்லாத்தையும்… நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம்.. அண்ணே… தென்றலுக்கு டெலிவரி ஆகிடுச்சு அண்ணே…” ரூபி சொல்ல உவகையில் உள்ளம் பறப்பதைப் போல உணர்ந்தான் ஆதீரன்.

“ரூ… ரூபி என்னடா சொல்ற? தெ… தென்றல் தென்றல் எப்படி டா இருக்கா குழந்தை எப்படி இருக்கு? எ… என்ன குழந்தைடா?” வார்த்தை தந்தியடிக்க கேட்டு முடித்தான் தீரன்.

“அண்ணே… பெண் குழந்தை அண்ணே… பாப்பா பார்க்க அப்படியே உன்னை மாதிரி தான் இருக்கா தெரியுமா?” என்று ரூபிணி சொல்லிக் கொண்டு இருக்க

“ரூபி யார்கிட்ட ஃபோன் ல பேசிட்டு இருக்க? என்று குமார் கேட்பது ஆதீரன் நன்கு கேட்டது.

“வேலு… அண்ணா கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்..”

“அண்ணனா? எந்த அண்ணன்?

“எனக்கு என்ன பத்து அண்ணானா இருக்காங்க… ஆதீரன் அண்ணாகிட்ட தான் பேசிட்டு இருக்கேன்…” ரூபி சாதாரணமாக சொல்ல

“ஏய்…” குமாரின் பதட்டமான குரல் தெளிவாக கேட்டது ஆதீரனுக்கு…

“என்னாச்சு வேலு? “

“ஏய் லூசு? அன்னைக்கு தானே தென்றல் அவ்வளவு சொன்னா… ஆதீரன் கிட்ட பேசினால் நான் உங்க கூட இருக்க மாட்டேன்… எங்கேயாவது குழந்தையை தூக்கிட்டு போய்டுவேன் னு சொன்னால்ல… இப்போ மட்டும் நீ அவனோட பேசுறது அவளுக்கு தெரிஞ்சா… ஏன் ரூபி இப்படி? உனக்கு தான் அவளோட வீம்பு பிடிவாதம் பத்தி எல்லாம் தெரியும் ல…” குமார் சொல்ல

“வேலு அதுக்காக தென்றலுக்கு குழந்தை பிறந்திருக்கு… அந்த குழந்தையோட அப்பா அண்ணா தானே அவருக்கு அதை சொல்லக் கூடாதா?” ரூபி கேட்க என்று அழைப்பில் ஆதீரன் இருப்பதை மறந்து இருவரும் வாதிட்டு கொண்டு இருக்க

“ஹலோ… ஹலோ ரூபி…” என்று ஆதீரன் சத்தமாக அழைக்க அலைபேசியை காதில் வைக்க போன ரூபியிடம் இருந்து வாங்கிய குமார்

“ஆதீரா… நாங்க பேசுனதுலயே உனக்கு எல்லாம் புரிஞ்சிருக்கும்… தென்றலோட வீம்பு பிடிவாதம் பத்தி உனக்கு நல்லாவே தெரியும். இப்போ ரொம்ப வீக்கா வேற இருக்கா.. இந்த நேரத்துல நான் ரிஸ்க் எடுக்க விரும்பலை. உன் விஷயம் பொறுத்தவரை என் தங்கச்சி முடிவு தான் என் முடிவும்…” என்று சொல்லி விட்டு பதிலை எதிர்பார்க்காமல் துண்டித்திருந்தான் அழைப்பை…

அதுதான் தென்றலைப் பற்றியும் தன் குழந்தை பற்றியும் தீரன் கடைசியாக தெரிந்து கொண்டது… பார்க்காத தன் பிள்ளையையும் சிறுமியில் இருந்து பார்த்து காதலித்த தன் தென்றலையும் நினைக்காத நொடி இல்லை ஆதீரன் வாழ்வில்…

மீண்டும் இவர்கள் கிளைக்கு வந்த அந்த நிறுவனத்தின் முதலாளி தர்மலிங்கம் இப்போதும் சென்னைக்கு வரச் சொல்லி வலியுறுத்த மறுக்காமல் அழைப்பை ஏற்று சென்னை வந்து தன் திறமையை இன்னும் மெருகேற்றி அதன் மூலம் தான் பணிபுரியும் நிறுவனத்திற்கும்
நற் பெயரை வாங்கி தந்தான் ஆதீரன்.

ஒரு ப்ராஜெக்ட் சக்ஸஸ் மீட்டிங் ல் பங்கு பெற்ற ஷ்ரதா ஆதீரன் கம்பீரம் ஆளுமை கண்டு வியந்து அவன் மீது ஆசை கொண்டு அந்த ஆசை வளர்ந்து தீர மோகமாக அவனிடம் ஏதேதோ சமிக்ஞையில் சொல்லிப் பார்க்க ஆதீரன் அதை எல்லாம் கண்டு கொள்ளவே இல்லை…

“ம்கூம் ட்யூப் லைட்…” என்று அலுத்துக் கொண்டு நேரடியாக ஆதீரனை தனியே சந்தித்து “எனக்கு உன்னை பிடிச்சிருக்கு என்னை கல்யாணம் பண்ணிகோ” என்று உத்தரவு போல கூற அவளை அலட்சியமாக பார்த்த ஆதீரன்

“சாரி மேடம்.. என்னால அது முடியாது… எனக்கு ஆல்ரெடி மேரேஜ் ஆகி ஒரு பெண் குழந்தை இருக்கு..” என்று தன்மையாக கூறி விட்டு அகன்றான் ஆதீரன்.

ஆனால் அவன் மறுத்த உடன் தன்னையே ஒருவன் மறுப்பதா… எப்படியும் அவனை அடைந்தே தீருவேன் என்று உள்ளுக்குள் சபதம் போட்டுக் கொண்டு தன் தந்தையிடம் சென்று

“அப்பா எனக்கு உங்க கம்பெனி ஒர்க்கர் ஆதீயை ரொம்ப பிடிச்சிருக்கு… அவர்கிட்ட பேசி எங்களுக்கு மேரேஜ் பண்ணி வைங்க…” என்று சொல்ல அவருக்கும் ஆதீரன் மீது நல்ல நம்பிக்கை நல்லெண்ணம் இருந்ததால் அவனை வீட்டிற்கு அழைத்து

மகளின் விருப்பத்தோடு “இது தன் விருப்பமும் கூட… என் பொண்ணு என் சொத்து பத்து எல்லாமே நீதான் பார்த்துக்கனும்…” என்று அன்போடு வேண்டிக் கேட்டார் தர்மலிங்கம்.

ஷ்ரதா போல அடக்க முயற்சி செய்தால் அடங்க மறுக்கலாம்…. ஆனால் இவரே இத்தனை பணிவு காட்டினால் தான் என்ன செய்ய? என்று யோசித்த ஆதீரன் பக்குவமாக ஷ்ரதாவிடம் கூறிய பதிலையே கூற

“உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா? எனக்கே தெரியாதேப்பா… எங்க உன் மனைவி? நான் பார்த்ததே இல்லை..” தர்மலிங்கம் வியக்க

“சார் அது… அது வந்து…” என்று தயங்கி இழுத்த ஆதீரன்… “சார்.. என் மாமா பொண்ணு தான் சார்… அவ பிறந்ததே எனக்காக தான் னு என் அம்மா சொல்லிட்டே இருப்பாங்க… சின்ன வயசுல இருந்தே அவளை எனக்கும் அவ்வளவு பிடிக்கும். ஆனா அவ ஓபனா காட்டிடுவா… நான் பெருசா வெளிப்படையா சொன்னதே இல்லை என் பிரியத்தை… பயங்கர குறும்புகாரி சார்… அவள் மேல அந்த பிடிப்பு காதல் இதெல்லாம் இருந்தாலும் எதையும் சொல்லாம அவளை வம்பிளுத்து அழ வைச்சிட்டே இருப்பேன் ஒவ்வொரு நாளும்…” என்று ஆதீரன் சொல்ல சொல்ல அவன் முகத்தில் நீண்ட காலம் கழித்து மெல்லிய பிரகாசம்… எல்லாம் உள்ளத்தில் இருந்து சிரிப்பவளின் பிரதி பிம்பமே காரணம் என்பதை அவன் மட்டுமே அறிவான்.

“சரிப்பா… குழந்தையே இருக்கு னு சொல்ற? ஆனா இதுவரைக்கும் நான் கூட பார்த்தே இல்லையே உன் மனைவியை?” தர்மலிங்கம் சந்தேகமாக கேட்க

“சார்… எனக்கும் அவளுக்கும் ஒரு சின்ன மனஸ்தாபம் சார்… அதோட அவ பிரசவத்துக்காகவும் அவங்க அண்ணா வீட்டுக்கு போனவ இன்னும் கொஞ்சம் கோபத்தோட அங்கேயே இருக்கா சார்… பட் எனக்கு என் வொய்ஃப் தென்றலும் குழந்தையும் தான் லைஃப்… உங்க பொண்ணு ஏற்கனவே இப்படி வந்து என்கிட்ட பேசுனாங்க சார்.. நான் இதே காரணத்தை தெளிவா சொல்லியும் இப்போ உங்ககிட்ட சொல்லிருக்காங்க… ப்ளீஸ் கொஞ்சம் அவங்களுக்கு சொல்லி வைங்க சார்…” என்று பணிவாகவே அவரிடம் விடைபெற்று சென்றான் ஆதீரன்.

அதன் பின்னர் கூட ஷ்ரதா தொந்தரவு தந்து கொண்டே இருக்க அவளின் கம்பெனியில் இருந்து வேலையை விட்டு வந்த ஆதீரன் ஊரில் இருந்த தன் பெயரில் மாமா எழுதி வைத்த சொத்து அனைத்தும் அடமானம் வைத்து பணம் புரட்டி ஆதீ கன்ஸ்ட்ரக்ஷன் அண்ட் பில்டர்ஸ் கம்பெனியை துவங்க இதை ஒரு போட்டி நிறுவனமாக நினைக்காது ‘ஒரு இளைஞன் தன் திறமையை நிரூபித்து உள்ளான் அவனின் திறமை முதலில் உணரப்பட்டது என் நிறுவனத்தில் தான்’ என்று பெருந்தன்மையோடு துவக்கி வைத்தார் தர்மலிங்கம்.

அதனாலேயே அவர்மீது அலாதி ப்ரியமும் மரியாதையும் ஆதீரனுக்கு உண்டு. அதனால் மட்டுமே ஷ்ரதா தரும் இம்சைகளை இன்று வரை பொறுத்துப் போகிறான்….

தென்றல் நினைவுகளை உள்ளே வைத்து கொண்டு ஓயாது உழைத்து இன்று தமிழகத்தில் அதிலும் சென்னையில் பல இளைஞர்கள் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளும் வகையில் யூத் ஐகான் என்று பெயர் வாங்கி விட்டான் ஆதீரன்.
அடமானம் வைத்த சொத்துகளை மீட்டு பத்திரமாக ஊரில் மாமாவின் நம்பிக்கைக்கு உரிய நபரின் பொறுப்பில் விட்டுவிட்டான்….

ஆனால் அவனின் தென்றுலும் குழந்தையும் என்ன ஆனார்கள் எங்கே போனார்கள் எதுவும் தெரியாது… குமார் அடிக்கடி வேலையில் மாற்றம் பெற்றாலும் அவனின் தாய் உயிரோடு இருந்த வரை அடிக்கடி மதுரை வந்து சென்றவன் சென்ற ஆண்டு குமாரின் தாய் இறந்து போக மதுரை வருவதை சுத்தமாக நிறுத்திக் கொண்டான்.

இப்படி ஒரு புள்ளியில் தொடங்கிய இவர்கள் வாழ்க்கை எங்கெங்கோ சுற்றி கடைசியில் தென்றலை தீரனின் அலுவலகத்திலேயே வேலைக்கு அமர்த்தி விட்டது விதி… இனி மீண்டும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பார்களா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்…

  • தொடரும்…

ஃப்ளாஷ் இப்போதைக்கு முடியுது… இனி அங்கங்கே விட்டுப்போன பகுதிகள் குமாரும் தென்றலும் அப்புறமா சொல்லுவாங்க… அதுக்கு முன்னாடி இந்த எபி எப்படி இருக்கு னு கமெண்ட்ஸ் போட்டு போங்க

  • நன்றியுடன் DP ✍️

1 thought on “தீரனின் தென்றல்-23”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *