தீரனின் தென்றல் – 26
Thank you for reading this post, don't forget to subscribe!பொன்னி சமையல் அறையில் இருக்க அவருக்கு உதவியாக கீரை கட்டை பிரித்து ஆய்ந்து கொண்டு இருந்தாள் சித்ரா. தென்றல் அலுவலகம் சென்றிருக்க தலைவலி என்று விடும்பு எடுத்த சித்ராவிற்கு காலை டிபனே பொன்னி தான் செய்து கொடுக்க மதிய உணவுக்கு உதவ சித்ரா வந்திருந்தாள்.
பள்ளி விடுமுறை என்பதால் சக்தியை அழைத்துக் கொண்டு அபூர்வாவை பார்க்க வந்திருந்தாள் ரூபிணி.
வந்த உடனேயே குழந்தைகள் ஒருவருக்கொருவர் குதூகலத்துடன் கத்தி சேட்டைகளை தொடங்க “அடியே.. கொஞ்சம் அமைதியா தான் விளையாடுங்க டி.. சத்தம் காது சவ்வு கிழிஞ்சிடும் போல….” ரூபிணி அலுத்துக் கொண்டு கூற
“அம்மா வீட்டுக்கு உள்ளேயே கத்தினா அப்படி தான் கேட்கும். அப்போ எங்களை வெளியே பார்க்ல போய் விளையாட விடு.” சக்தி கேட்க
“ஏன்டி… அப்பு குட்டி நேத்து தான் ஓடி விளையாடி மயங்கி விழுந்தா… இன்றைக்கும் எதாவது ஆகவா?” ரூபிணி இடுப்பில் கை வைத்து முறைக்க
“ம்ம்… அப்போ துணைக்கு நீ வந்து உட்காரு அத்தை…” அபூர்வா மழலை மொழியில் கோபப்பட
“அப்பு குட்டி… அத்தைக்கு ஏற்கெனவே ரொம்ப டயர்டா இருக்கு டா… உங்களுக்கு துணைக்கு வந்து உட்கார்ந்தா அடுத்த பத்து நிமிஷத்துல உங்க கூட சேர்ந்து விளையாட கூப்பிடுவ… என்னால முடியாது ப்பா..” ரூபிணி சொல்ல
“ச்சு… போ அத்தை..” உதட்டை சுழித்து முகத்தை திருப்பிக் கொண்டாள் அபூர்வா. அதை பார்த்து சிரித்த சித்ரா
“சரி வாங்க… நான் உங்க கூட பார்க் ஏரியாக்கு வரேன்.” என்று அழைக்க
“உனக்கே தலைவலினு லீவ் போட்டு இருக்க… இதுல இவளுங்க உன்னை படுத்தி எடுப்பாளுங்க…” பொன்னி சொல்ல
“பரவாயில்ல அம்மா… தலைவலி இருந்தது தான்… ஆபீஸ் அக்கவுண்ட்ஸ் ஃபைல் பார்த்திருந்தா ரொம்ப அதிகமா ஆகிருக்கும் னு தான் லீவ் போட்டேன். பசங்க கூட கொஞ்சம் சிரிச்சு விளையாடினா எனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்..” என்று கூறிவிட்டு குழந்தைகள் இருவரையும் பார்க் அழைத்து வந்தாள் சித்ரா.
அபூர்வாவை அதிகம் ஓட விடாமல் அவளின் சைக்கிளில் அமர்த்தி சக்தி பத்திரமாக பின்னிருந்து தள்ளியபடி அவளோடு சேர்ந்து விளையாட சக்திக்கு இருக்கும் பக்குவத்தை உள்ளுக்குள் மெச்சிக் கொண்டாள் சித்ரா.
அபூர்வா ஓட்டிச் சென்ற சைக்கிள் எதிரில் வந்த ஆதீரன் மீது மோத இப்போதும் அபூர்வா விழாமல் ஆதீரன் பிடித்துக் கொள்ள சித்ரா “குழந்தைக்கு என்னாச்சு” என்று ஓடி வந்தாள்.
ஆதீரன் பிடித்து நிறுத்தி இருக்க அவளை தன்பக்கம் இழுத்துக் கொண்ட சக்தி “என்னாச்சு அப்பு.. அடி பட்டுச்சா?” என்று அக்கறையாக கேட்க அபூர்வா சைக்கிள் சக்கரம் ஏறி நிற்கும் ஆதீரன் கால்களை பார்த்து விட்டு அவன் பக்கம் வேகமாக ஓடி வந்து
“உனக்கு அடி பட்டுச்சா? ஸ்ஸ்.. சாரி…” என்று தலை சாய்த்து கேட்க தன் தாயை தன் மகவிடம் கண்ட ஆதீரன் கண் கலங்கி நின்றான்.
“ஏன் அழுவுற? அடி பட்டது வலிக்குதா?” என்று அவன் கன்னத்தை அபூர்வா துடைத்து விட “அப்பூ… வேண்ணாம்… அவங்க கூட எல்லாம் பேசக்கூடாது. அத்தை பார்த்தா திட்டுவாங்க..” என்று சக்தி அறிவுரை சொல்ல
“அச்சோ சத்தி… இவங்க டேஞ்சர் அங்குள் னு நினைச்சியா? இவங்க டேஞ்சர் இல்ல…” தன் மழலையில் அபூர்வா விளக்க முயல
“எது? நாங்க டேஞ்சரா? குட்டிப் பாப்பா… என்னடா பேசுறீங்க?” மதன் அதிர்வாக கேட்க சித்ராவும் எதுவும் புரியாமல் முழிக்க
“ஐயோ… அங்குள் அது டேன்ஜர் இல்ல ஸ்டேஞ்சர். ஸ்டேஞ்சர்…” என்று சக்தி அதை திருத்த முயல பாவம் சக்திக்கும் சரியாக சொல்ல தெரியவில்லை…
“பாஸ்… என்ன பாஸ் சொல்றாங்க ரெண்டு பேரும்…” புரியாமல் மதன் கேட்க லேசாக சிரித்த ஆதீரன்
“நாம ரெண்டு பேரும் ஸ்ட்ரேஞ்சர் இல்லை னு சொல்றா அப்புக்குட்டி…” என்று ஆதீரன் விளக்க
“ஹப்பா… உங்களுக்கு புரியுதா?” என்று பெருமூச்சு விட்டான் மதன்.
“சார்… எனக்கே பாப்பா பேசினது புரியலை உங்களுக்கு எப்படி?” சித்ரா ஆச்சரியமாக கேட்க அவளை பார்த்து சிரித்து விட்டு அபூர்வா முன்பு மண்டியிட்டு அமர அபூர்வா அவன் காலில் அடி ஏதாவது பட்டதா என்று ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தாள்.
“ஹே அப்பு… இந்த மதன் அங்குள் தானே அத்தை பிரண்டு… இவரு யாருனே தெரியாது… எதுக்கு அவர் கூட பேசுற?” ரூபிணி போல இடுப்பில் கை ஊன்றி தன்னை விட சிறிய அபூர்வாவை பாதுகாக்க எண்ணி சக்தி கேட்க
“இல்ல சத்தி… எனக்கு இவரை தெரியும்… நான் பார்த்தேன் இவரை….” கண்ணை உருட்டி உருட்டி அபூர்வா கூற சித்ரா மதன் ஆச்சரியமாக பார்க்க
ஆதீரன் கண்களில் நீர் கோர்க்க மகிழ்வோடு பார்த்தான் தன் மகளை…
“எப்போ அப்பு பார்த்த? நான் இந்த அங்குளை பார்த்ததே இல்லையே?” சக்தி கையை விரித்து கேட்க தன் ஆட்காட்டி விரலை தாடையில் தட்டி விழிகளை உருட்டி பெரிதாக யோசித்தாள் அபூர்வா…
“ம்ம்… அன்னைக்கு… அதான் நானு அம்மம்மா இல்லாம கீழ விதும் (விழும்) போது இவன் தான் வந்து என்னை பிடிச்சான்.. நான் பார்த்தேன். அப்போம் (அப்பறம்)… தெட்டு (தென்னு) என்னை பார்த்திட்டு போனப்ப ரூம்ல என்னை பார்த்து அழுதான். நானு பார்த்தே சத்தி… ஆனா யார்ட்டயும் பேசுனா தெட்டு திட்டுவா… அதான் பேசலை கண்ணை மூடி தூங்கிட்டேன்.” என்று தன் நினைவலைகளை கசக்கி பிழிந்து கூறிவிட்டாள் அபூர்வா.
“அபூர்வா குட்டி மத்த எல்லாம் கூட புரிஞ்சுது… அது என்ன மா தெட்டு? அது தான் புரியவே இல்ல…” தன் அதி முக்கிய கேள்வியை மதன் கேட்டு வைக்க அவனை முறைத்து பார்த்த அபூர்வா
“தெட்டல்… தெட்டலை நான் தெட்டு னு கூப்பிடுவேன்… உனக்கு என்ன?” எதிர்கேள்வி கேட்ட குழந்தையை பாவமாக பார்த்து
“இன்னும் எனக்கு புரியலை பாப்பா..” என்று மதன் கூற
“ஐயோ!” என்று தலையில் அடித்து கொண்ட சக்தி “அங்குள் தெட்றல் அத்த தான்… பாப்பாக்கு சொல்ல வரலை..” என்று கூறிய சக்தியிடம் இன்னும் தனக்கு விளங்கவில்லை என்று எப்படி கூறுவான்… விட்டால் அழுது விடுவான் போல…
ஆதீரன் தான் மட்டுமே கூப்பிடும் செல்லப் பெயரை தன் மகள் கூப்பிட தென்றல் அனுமதித்துள்ளாளே… என்று ஆச்சரியத்தில் உறைந்து நிற்க சித்ரா தான் மதனை பார்த்து சிரித்து விட்டு “என்ன சார் இது கூட புரியலையா? தென்றல் பெயரை தான் குழந்தைங்க சொல்ல முடியாம இப்படி சொல்றாங்க..” என்று சொல்ல
“ஆமாமா… மழலை மொழி புரிஞ்சுக்குற அளவுக்கு எனக்கு முன் அனுபவம் இல்லையே…” மதன் தோளை குலுக்கி சொல்ல முறைத்தாள் சித்ரா.
“சார் நீங்க ஊருக்கு போனதா மதன் சொன்னாரு. எப்போ வந்தீங்க?” ஆதீரனை சித்ரா கேட்க
“ஆங்… இப்போ தான் வந்தேன் சித்ரா. உங்களுக்கு ஏதோ உடம்பு சரியில்லைனு லீவ் போட்டதா மதன் சொன்னான் இப்போ எப்படி இருக்கீங்க சித்ரா?” ஆதீரன் சித்ராவை விசாரிக்க
“அது ஒன்னும் இல்லை சார் லேசா தலைவலி தான்… பசங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணதுல நல்லாவே குறைஞ்சுடுச்சு…” சிநேக புன்னகையோடு கூறிவிட்டு
“சார் நீங்க ஊர்ல இருந்து இப்போ தான் வந்ததா நீங்க சொல்றீங்க ஆனா அபூர்வா நேத்து மயங்கி விழும் போது உங்களை பார்த்ததா சொல்றா? எப்படி சார்?” என்று குழப்பமாக சித்ரா கேட்க
“அதை பத்தி நான் உனக்கு அப்புறமா சொல்றேன் சித்து…” என்று மதன் பதில் சொல்ல சித்ரா முறைக்க “சாரி சித்ரா..” என்று அசடு வழிய பெயரை திருத்தினான்.
பெரியவர்கள் பேசிக் கொண்டு இருக்க தீரனின் காலை தட்டி தன்னை பார்க்க செய்த அபூர்வா “ஆமா… நீயும் தெட்டு கூட தான் வேலை செய்றியா? உன் பெயர் என்ன?” என்று கேட்க
“அபூர்வா… பெரியவங்களை நீ வா போ னு பேசக்கூடாது… என்னை நீ ஆன்டி வாங்க போங்க னு சொல்லி தானே கூப்பிடுற?” சித்ரா அபூர்வாவை பார்த்து கேட்க அவளோ எதுவும் புரியாதது போல முகத்தை வைத்து தலையை சொறிய தன் மகளை ரசித்தான் ஆதீரன்.
“இட்ஸ் ஓகே சித்ரா… குழந்தைங்க என்ன சொன்னாலும் அழகு தான்…. பூர்வி மா… என் பெயர் ஆதீரன்…” என்று ஆதீரன் சொல்ல
“ஆன்டி எனக்கு பசிக்குது….” என்று வயிற்றை தடவி சக்தி கூற “சரி வாங்க சாப்பிட போகலாம்… சார் நீங்களும் இன்னும் லஞ்ச் சாப்பிடலைனா வாங்க சார் சாப்பிடலாம் தென்றலோட அம்மா சூப்பரா சமைப்பாங்க…” சித்ரா ஆதீரனை அழைக்க
“ம்க்கும்… அவங்க எவ்வளவு சூப்பரா சமைச்சாலும் இவர் மூஞ்சியை பார்த்தா எங்களுக்கு சாப்பாடு போடுவாங்களா னு தெரியலையே…” மதன் முணுமுணுக்க
“என்ன… என்ன சொல்றீங்க மதன்?” என்று சித்ரா கேட்க ஆதீரன் முறைத்தான் அவனை
“இல்ல பாஸ்க்கு மட்டும் லஞ்ச் இருக்கா… இல்ல இந்த அப்பாவி ஜீவனுக்கும் சாப்பாடு போடுவீங்களா னு கேட்டேன்…” என்று மதன் பேச்சை மாற்ற
“சரி வாங்க…” என்று மட்டும் சொல்லி விட்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு சித்ரா வீட்டை நோக்கி நகர சொல்லாமலேயே குழந்தைகள் ஓட்டிக் கொண்டு இருந்த சைக்கிளை தூக்கிக் கொண்டான் மதன்.
சித்ரா சக்தி அபூர்வா தென்றல் வீட்டினுள் நுழைய மதனும் ஆதீரனும் மதன் வீட்டிற்குள் செல்லப் போக “சார் வாங்க சார் உள்ளே…” சித்ரா சாப்பிட அழைக்க
“இட்ஸ் ஓகே சித்ரா… ரெஃப்ரஷ் ஆகிட்டு வரோம்” என்று ஆதீரன் கூற
“ஏன் சித்ரா தென்றல் எதுவும் லஞ்ச்காக வீட்டுக்கு வர மாட்டாங்களே…” ரகசிய குரலில் மதன் கேட்க அவனை சந்தேகமாக பார்த்தாள் சித்ரா.
“இல்ல சும்மா… வரலையா னு கேட்டேன்…” சமாளிக்க
“இல்ல… அவ காலையிலயே லஞ்ச் எடுத்துட்டு போய்ட்டா…” என்று சொல்லி விட்டு சித்ரா உள்ளே வரப் போக “யார்கிட்ட சித்ரா இவ்வளவு நேரம் பேசிட்டு இருக்கீங்க?” என்றபடி வந்த ரூபிணி ஆதீரனை வாசலில் பார்த்து அதிர சரியாக அங்கு வந்தான் குமார்.
“அண்ணே…” என்று ரூபிணி அதிர்ந்து நிற்க குமார் அவனை சட்டை செய்யாமல் வீட்டினுள் செல்ல அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது ரூபிக்கு..
“ஏங்க வேலு… அண்ணே நிக்குது.. பேசாம போறீங்க?” என்று ரூபி கேட்க சித்ரா புரியாமல் பார்க்க
“ஏன் உன் அண்ணன் என்ன புது மாப்பிள்ளையா? ஆரத்தி எடுத்து வெத்தலை பாக்கு வைச்சு அழைச்சா தான் உள்ள வருவானா?” என்று எங்கோ பார்த்து குமார் கேட்க தீரன் மதன் ரூபி மூவருமே அதிர்ந்து பார்க்க சத்தம் கேட்டு வெளியே வந்த பொன்னி நம்ப முடியாது பார்த்தவர்
“வா… வாங்க மாப்ளை…” என்று அழைத்திருக்க “எது… மாப்ளையா?” என்று அதிர்ந்தாள் சித்ரா.
ஆனாலும் குமார் அழைக்காமல் இருக்க இன்னும் உள்ளே வராது தயங்கி நின்றான் ஆதீரன்.
“ஏன் எல்லாரும் வாசல்ல நிக்கிறீங்க?” என்றபடி சக்தி வர அவளோடு வந்த அபூர்வா
“ஆதீரா… வா வீட்டுக்குள்ள…” என்று உரிமையுடன் கையை பிடித்து அழைத்து வந்தாள் தன் தந்தையை…
இத்தனை ஆண்டுகள் தாய் தன்னை அழைக்கும் ஆதீரா என்ற அழைப்புக்கு ஏங்கி கிடந்த தீரனுக்கு கண்ணீர் பெருக யாரும் சொல்லாமலேயே தன் தந்தை மீது உரிமை கொண்டாடும் அபூர்வாவை பார்க்க அனைவருக்கும் ஆச்சரியம் தான்.
ஆதீரனை அபூர்வா உள்ளே அழைத்து வர அனைவரும் உள்ளே வந்தனர்.
“ரூபி… குழந்தைங்களுக்கு பசிக்கும்… சாப்பிட வை…” என்று குமார் சொல்ல
“நான் பசங்களை பார்த்துக்கிறேன்… நீங்க பேசுங்க…” என்று சித்ரா நாசுக்காக வெளியேறினாள் சித்ரா.
ஒரு அசௌகரிய அமைதி நிலவ யார் அதை கலைப்பது என்று புரியாமல் அனைவரும் இருக்க குமாரே அதை கலைத்தான்.
“அப்பறம்… இன்னைக்காவது எங்கிட்ட பேச முடிவெடுத்து வந்தியா? இல்ல தற்செயலா எங்க கண்ல பட்டியா?” என்று ஆதீரனை பார்த்து குமார் கேட்க
“ஏங்க அப்போ அண்ணே இங்க இருக்கிறது உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா?” ரூபி கேட்க
“இங்க அவன் இருக்கிறது மட்டும் இல்ல… தென்றல் வேலை செய்ற ஆஃபிஸ் ஆதீ கன்ஸ்ட்ரக்ஷன் அப்பறம் இந்த அப்பார்ட்மெண்ட்ஸ் எல்லாத்துக்கும் சொந்தகாரன் இந்த ஆதீரன் தான்… தென்றலுக்காக தான் இந்த வீட்டை ஏற்பாடு பண்ணி தங்க வச்சது நேத்து அபூர்வா உடம்பு சரியில்லாம மயங்கி விழுந்தப்போ பதறி தூக்கிட்டு போய் ஹாஸ்பிடல்ல சேர்த்தது கூட இவர் தான்ங்குற வரைக்கும் தெரிஞ்சு தான் பேசுறேன்…” குமார் சொல்ல பசியை விட குமார் சொன்னதில் அதிர்ந்து மயக்கமே வருவது போல இருந்தது மதனுக்கு…
- தொடரும்…
- நன்றியுடன் DP ✍️