அத்தியாயம்-4
Thank you for reading this post, don't forget to subscribe!நான்கு மாதம் கடந்திருக்க, ஒரு திருமண விழாவில் கமலி நீண்ட சடை பின்னி, பூ வைத்து நடந்து வந்தாள். மணமக்களை ‘ஜும்’ செய்த ‘டிரோன் கேமிரா’ சற்று மண்டபத்திற்கு வந்த கமலியையும் சுற்றி வட்டமிட்டது.
விஷ்ணு இருக்கையில் அமர்ந்தபடி, கேமிராவால் பதிவான நேரலையை கவனித்தவன் கமலியை கண்டான்.
கழுத்தை திருப்பி பெண்ணவளை காண, நந்தினி ஓடிவந்து கமலி கையை பிடித்தாள்.
‘சந்தூர் அம்மாவா இவள்’ என்று திருமணமாகி குழந்தை இருக்கும் பெண், தோற்றம் மணமாகாத பெண்ணாக காட்சிக்கு தெரிய, அவளை தான் ரசித்ததை எண்ணி மானசீகமாக தலையில் தட்டிக் கொண்டான் விஷ்ணு.
கமலி விஷ்ணுவை காணாததால் நந்தினியை தூக்கி கொண்டு ஓரிடமாக அமர்ந்தாள்.
ஈஸ்வரனின் சொந்தத்தில் நடைப்பெறும் திருமண வைபோகம். தன் அக்கா குடும்பமும் வந்திருக்க, நந்தினியை அழைத்து வந்திருந்தாள் கமலி. நந்தினி-ஐஸூ இருவரும் விளையாட, அவர்களை கண்ணுக்கு எதிரே விளையாட விட்டு பார்வையாளராய் இருந்தாள் கமலி.
விஷ்ணுவிற்கு நினைவுகள் மறந்து, கண்களை சுற்றி சுழல விட்டபடி பார்வையிட, அவன் இதயத்தை ஈர்க்கும் முகமாய், ஓரமாய் வீற்றிருந்த கமலியின் வதனமே தென்பட்டது. அவனுக்குமே தூரத்து சொந்தம் என்று திருமணத்திற்கு வந்திருந்தார்கள்.
ஆழமாய் மூச்சை இழுத்து விட்டு, ‘கல்யாண வீட்ல எத்தனை பொண்ணுங்க கல்யாணமாகாதவளுங்க. அவங்க பக்கம் பாருடா விஷ்ணு. இவ பக்கமே கண்ணு போகுது இவ கல்யாணமானவ விஷ்ணு’ என்று தன் மனதை கடிந்து கொண்டான்.
ஆளாளுக்கு திருமணத்தில் நட்பு உறவாடி பேசிக்கொண்டிருக்க, கமலிக்கு தன்னை யாரோ அடிக்கடி குறுகுறுவென பார்க்கும் உணர்வு தாக்க, நாலாபக்கமும் கண்களை சுழற்றினாள்.
தன் இதயத்தை தட்டி, காதலை விதைத்து, நேசமாய் முளைத்த காதலுக்கு, பல சந்திப்புக்களை மழையாய் தருவித்து, மரமாய் காதலை வேரூன்றிய விஷ்ணு முகம் கண்டதும், சட்டென இருக்கையை விட்டு எழுந்தாள்.
‘விச்சு’ என்று சத்தமின்றி உச்சரிக்க, விஷ்ணு சரியாய் கமலியை மீண்டும் ஏறிட்டான்.
தன்னை மணமான ஒருத்தி இமை மூடாமல் பார்க்க, தனக்கும் அவளையே பார்க்கும் ஆசைப்பிறக்க, தன் மீது கோபம் கொண்டு முகத்தை திருப்பினான் விஷ்ணு.
கமலியோ ‘இன்னுமா விஷ்ணுவுக்கு என் மேல கோபம்? அவன் நம்பரையே யூஸ் பண்ணலையா?’ என்று அவனது பழைய எண்ணிற்கு அழைத்தாள்.
விஷ்ணு தந்தை இளங்கோ பழைய எண்ணையே திரும்ப வாங்காமல் விஷ்ணுவிற்கு புது எண்ணையும், புது போனை வாங்கி தந்திருக்க, கமலிக்கு அதே கணினி குரல் வந்தது.
இந்த எண் தற்போது உபயோகத்தில் இல்லை என்று.
கமலிக்கு விஷ்ணுவை கண்டதும் அவனிடம் பேச ஆசையாய் நடக்க, கார்த்திகா தன்னிடம் பேசியதும் நிழலாடியது.
‘இங்க பாரு கமலி விஷ்ணு உன்னை மொத்தமா தலைமூழ்கி போயிட்டார். தயவு செய்து அவன் புராணமே பாடாதே. உன்னை ஆழமா விரும்பியிருந்தா இப்படி டோட்டலா போனையே மாற்றுவானா? இதுவே புரிய வேண்டாம். அவன் உன்னை உதறி தள்ளிட்டான்னு.
அவனை நினைச்சி உன் வாழ்க்கையில, நீ மண் அள்ளி போட்டுக்காதே’ என்ற குரல் தற்போது கேட்பது போல் இருந்தது.
விஷ்ணுவும் தன்னை யாரோ போல தானே பார்க்கின்றான்.
முற்றிலும் என்னை உதறி விட்டாரா? என்று மனதாங்கலோடு கண்ணீர் உடைப்பெடுக்க சட்டென இருக்கையில் அமர்ந்தாள். தன்னை வேண்டாமென்று முகம் திருப்புபவனிடம் முன்னால் சென்று காதல் யாசகம் கேட்க போகின்றாயா என்றது மனம்.
யாரும் அறியாது கைக்குட்டையால் கண்ணீரை துடைத்தாள்.
ஆளாளுக்கு மண்டபத்தில் உறவினர்களோடு கலந்திருக்க, கமலியை கவனிக்கவில்லை.
திருமணம் முடிந்து ஒவ்வொருத்தராய் கிளம்ப மண்டபத்தில் நெருங்கிய உறவினர் மட்டும் வீற்றிருந்தனர்.
இளங்கோ வசுந்தரா இருவரும் விஷ்ணு அருகே வந்தார்கள்.
“அப்பா கிளம்பலாமா?” என்று விஷ்ணு கேட்க, கமலிக்கு அவன் குரலில் அவனை காண உந்துதல் ஏற்பட்டது.
“விஷ்ணு ஹவுஸ் ஓனர் இன்னும் கிளம்பலை. அதோ அவங்க தான் நம்ம போகப்போற பிளாட்ஸுக்கு கீழே இருக்கறவங்க” என்று திவ்யபாரதியை சுட்டி காட்டினார்.
“அவங்களும் இங்க தான் இருக்காங்க. அவங்க கிளம்பவும் நாமளும் மூவ் ஆன் பண்ணிடலாம்.” என்று வசுந்தரா கூற, விஷ்ணு சலிப்படைந்தான்.
கமலிக்கோ ‘ஏன் திவ்யபாரதி அத்தையை சுட்டிக்காட்டி பேசுகின்றார்கள். அப்படியென்றால்? நந்துகுட்டி வீட்டின் மேல் மாடியில் வரப்போகும் குடும்பம் இவர்களா? அட காலையில் இந்த(வசுந்தர) அம்மா தானே பால் காய்ச்சினார்கள். அப்படியென்றால் இவர்கள் விஷ்ணுவை பெற்றவர்கள். இப்படியான சூழலிலா சந்திப்பது’ என்று மனம் பல்வேறு குழப்பத்தை தந்தது.
அந்த நேரம் விளையாட்டு மும்முரத்தில், நந்தினி ஐஸூ ஓடிப்பிடிக்க நந்தினி கீழே விழுந்தாள்.
நந்தினி விழும் போதே “சித்தி” என்று அழைக்க, கமலி நந்தினியை தூக்க ஓடினாள்.
“ஒ…ஒன்னுமில்லைடா. என்ன ஐஸூ இது. மெதுவா நந்தினியை விரட்டகூடாது. பாவம் கீழே விழுந்துட்டா பாரு” என்று கடிந்தாள்.
திவ்யபாரதியோ, “அட அந்த பிள்ளையை ஏன்மா திட்டுற. அவளுமே குழந்தை தானே. குழந்தைகள் விளையாடறப்ப கீழே விழறது சகஜம்” என்று கூறினார்.
அதற்குள் கமலி நந்தினியின் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்து, மென்மையான கன்னத்தில் முத்தமிட்டு கற்கண்டு இனிப்பை எடுத்து நீட்டினாள்.
குழந்தை அழுகையை நிறுத்தி கற்கண்டை சுவைத்து ஓடியது.
ஐஸூ நந்தினி இருவரும் விளையாட சென்றதும், மற்றவர் பார்வைகள் கமலி மீது நிலைத்தது.
விஷ்ணு முதல் கொண்டு கமலியை ஏறிட, அந்த மௌவுனத்தை திவ்யபாரதியே உடைத்தார்.
“முன்ன விட இப்ப நந்தினி அவங்க சித்தி கூட அதிகமா ஒட்டுதலா இருக்கா. கமலியும் நல்லா பார்த்துக்கறா” என்று புகழவும், வசுந்தராவோ, “நம்ம அன்பை செலுத்துவதை விட குழந்தைகள் மனசுக்கேற்றது போல யார் பழகறோங்களே அவங்களை குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்குது.
அந்த விதத்துல உங்க மருமக நல்லா குழந்தையோட பழகறாங்க.” என்று பாராட்டவும், கமலிக்கு சங்கடமாய் நின்றாள்.
“முன்ன எல்லாம் எதுக்கெடுத்தாலும் பையனையும், என்னையும் தான் நந்தினி கூப்பிடுவா. இப்ப இந்த நான்கு மாதமா நந்தினிக்கு எல்லாமே கமலி தான்” என்று திவ்யபாரதி நிறைவாய் கூறினார்.
விஷ்ணுவோ ‘கமலி… இந்த பெயர் எனக்குள் என்னவோ பண்ணுது. இவ குழந்தைக்கு அம்மா இல்லையா? குழந்தை சித்தி என்றதே.’ இதே தான் அவனுக்குள் ஓடியது.
திருமண மக்களை விட்டு தன்னையே இக்கூட்டம் பார்க்கவும் “நானும் பாப்பாவும் கிளம்பட்டுமா அத்தை?” என திவ்யபாரதியிடம் கேட்டாள் கமலி.
“நானும் வர்றேன் மா, சேர்ந்தே கிளம்புவோம். கேப்-புக் பண்ணிடு” என்று உரைத்தார் திவ்யபாரதி.
“அக்கா ஐஸூவை அழைச்சிட்டு போகவா?” என்று சுதாவிடம் கேட்டாள் கமலி.
“இல்லை கமலி மாமா, அத்தை பாப்பாவை பார்க்க வந்திருக்காங்க. நாங்க அவங்களை அழைச்சிட்டு ஆவடி கிளம்பறோம். இன்னொரு நாள் வர்றோம்.” என்று மறுத்தாள்.
“சரி அப்ப வீட்டுக்கு கேப் புக் பண்ணுறேன்” என்று கமலி உரைத்தாள்.
விஷ்ணு தந்தை இளங்கோ, “அட நாங்களும் அங்க தான் வரப்போறோம். இரண்டு பேர் என்றால் எங்க காரிலேயே வந்துடலாம்” என்றதும் திவ்யபாரதி சிந்திக்க, கமலியோ ‘அய்யோ வேண்டாம் தனியா கேப்ல போவது நல்லது.’ என்று மனசாட்சியிடம் கூறினாள்.
முடிவெடுப்பது திவ்யபாரதி அல்லவா. “உங்களுக்கு கஷ்டமில்லைனா வர்றோம். காலையில் பால் காய்ச்சிட்டிங்க தானே. இன்னிக்கே குடிபுகுந்திடுவிங்களா?” என்றதும் ”ஆமாங்க” என்றார் வசுந்தரா.
“அப்பறம் என்ன கிளம்பலாம்” என்றார் இளங்கோ.
சுதா-ரங்கநாதன் ஐஸூவை பிடித்து கொள்ள கமலி ஐஸூவை முத்தமிட்டு விடைப்பெற, தெய்வானை சிதம்பரம் இருவரிடமும், சொல்லிக்கொண்டு புறப்பட்டாள்.
விஷ்ணு அதற்குள் கார் பார்க்கிங்கில் இருந்து காரை எடுத்து மண்டப வாசலுக்கு வந்திருந்தான்.
தன் தாய் தந்தையர் படிக்கட்டில் நடத்துவர, தாய் வசுந்தரா அருகே திவ்யபாரதி பேசியபடி வந்தார். பின்னால் கமலி நந்தினியை கைப்பிடித்து அழைத்து நடந்தாள்.
விஷ்ணு பார்வை கமலி மீதே நிலைத்திருக்க, கமலிக்கு உள்ளுக்குள் உதறியது. இவர் ஏன் என்னை இப்படி சில நேரம் தெரியாதவளாக பாவிக்கின்றார். சில நேரம் புதிதாக பார்த்து தொலைப்பது போல உற்று உற்று நோக்குகின்றார்.’ என்று வந்தாள். அவள் வரவும் முன் கதவை திறக்க கமலிக்கு திக்கென ஆனது. ஆனால் விஷ்ணு தந்தை
இளங்கோ முன்னே அமர, “நீ உள்ள போம்மா” என்று வசுந்தரா கூற, கமலி காரின் பின் இருக்கையில் ஏறினாள்.
மடியில் நந்தினியை அமர வைத்து கொண்டாள்.
வலதுபக்கம் திவ்யபாரதி அமர, இடது பக்கம் வசுந்தரா வீற்றுக் கொள்ளவும் கார் அம்பத்தூர் ஓரகடம் நோக்கி பாய்ந்தது.
விஷ்ணு கார் கண்ணாடி வழியாக கமலியை தரிசிக்க, கமலி விஷ்ணுவை கண்டு அருகேயிருந்தவர்களை கண்டும் மௌவுனமானாள்.
அடுக்குமாடி குடியிருப்பு நோக்கி கார் நுழைந்தது.
கீழே கார் பார்க்கிங், ஒவ்வொரு குடியிருப்பு வாசிக்கும் கீழே கார் பார்க்கிங் இருக்க அவர்கள் எண்ணிற்குண்டான தரிப்பிடத்தில் காரை நிறுத்தினான்.
கார் கதவை திறக்கவும் நந்தினி இறங்கி படிக்கட்டில் ஏறினாள்.
“நந்து ஓடாதே” என்று கமலி பின்தொடர, மூன்று பெரியவர்களும் மெதுவாக வந்தார்கள்.
காரில் சாய்ந்த விஷ்ணுவோ ‘ஓ மை காட் ரொம்ப டிஸ்டர்ப் பண்ணறா இந்த பொண்ணு. கீழ் வீடு வேற, அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. இருந்தாலும் அவ போறயிடமெல்லாம் என் கண்கள் செல்லுது இது என்ன ‘பீலிங்’ என்று தலையை அழுத்தமாய் பிடித்தான்.
லேசாக தலை விண்ணென்று வலிக்க ஆரம்பித்தது. கண்கள் இறுகமூடி கதவைத்திறந்து படிக்கட்டில் வந்தான்.
தாய் தந்தையர் தங்கள் தங்கும் இடத்திற்கு சென்றிருப்பார்கள் என்று எண்ண, மாடிக்கு செல்லாமல் கமலி வீட்டிற்குள் இருந்தார்கள்.
“உள்ள வாங்க தம்பி” என்று திவ்யபாரதி அழைக்க, அவரை கண்டு, பார்வை மீண்டும் கமலியை வருடியது.
தட்டில் கூல்டிரிங்க்ஸ் எடுத்து வந்து நீட்டினாள்.
வசுந்தரா மகனிடம், “விஷ்ணு கூல்டிரிங்க்ஸ் எடுத்துக்கோ” என்றதும் கமலி லேசான நடுக்கத்தோடு விஷ்ணு அருகே வந்தாள்.
பெரியவர்கள் மறுபக்கம் மும்முரமாய் இந்த அடுக்குமாடி குடியிருப்பு வசதிகளை விவாதித்தனர்.
விஷ்ணு தட்டிலிருந்த கூல்டிரிங்க்ஸ் எடுத்து பருக, காதலன் காதலியை கண்டு வீசும் உரிமை பார்வைகளை கமலி மீது வீசினான்.
ஒரு மிடறு பருகியவன், “உன்னோட கணவரை நான் சந்திக்கலாமா?” என்று கேட்டான்.
கமலி திரும்பி கண்கள் சுருங்க ‘தப்பா கேட்டுட்டேனா? ஷிட் ‘உன்னோட’ அப்படின்னு ஒருமையா பேசிட்டேனோ’ என்று சுதாரித்து, “உங்களோட கணவரை கல்யாணத்துல பார்க்க முடியலை. எங்க அவர்?” என்று கேட்டுவிட்டான்.
இதில் சுற்றி முற்றி வீட்டை அலசவும் செய்தான். எங்கும் திருமண புகைப்படம் தென்பட்டது போல தெரியவில்லை. கமலியின் கணவனை காணும் ஆவல் விஷ்ணுவிற்கு.
சுவரில் தொங்கியது என்னவோ ராம் தேவி இருவரின் திருமண புகைப்படங்கள் மட்டுமே. அது கூட மாலை போட்டு இருந்தது.
தனியாக ஈஸ்வரன் புகைப்படமிருக்க, அவ்விடம் காலடி எடுத்து முன் நகர்ந்தான்.
புகைப்படத்தை காட்டி, “இவர் தான் உங்க கணவரா?” என்று கேட்டான்.
ஏனோ ஆம் என்று உரைத்தால், அந்த புகைப்படத்தை உடைக்கும் வெறி விஷ்ணுவிற்குள்.
தன்னை கடினப்பட்டு அடக்கிக் கொண்டவன், அவளை காண, “ஆஹ்.. அதான் என் இரண்டாவது பையன் ஈஸ்வரன். பேங்க்ல உத்தியோகம். இப்ப கம்பெனி மூலமா வெளியூருக்கு ஆறு மாசமா போயிருக்கான்.
அண்ணன் குழந்தையை தன் குழந்தையை வளர்க்க முடிவெடுத்தான்.” என்று திவ்யபாரதி கூறுவதை விஷ்ணு கேட்டு நின்றான்.
‘ஓ அண்ணன் குழந்தையை வளர்க்க இவளும் தலையாட்டி கல்யாணம் பண்ணியிருக்காளா? பெரிய தியாகி’ என்றவனுக்கு கமலி மீது ஏனோ கோபமும் மூண்டது.
இந்த இரண்டு வீட்டுக்கு சொந்தக்காரன். பேங்கில் உத்தியோகம் என்றதும் ஒரு குழந்தையை வளர்க்க தலையாட்டி கட்டிக்கொண்டாளா? என்ற இகழ்ச்சி. அடுத்த நிமிடமே ‘சே குழந்தையை பார்த்துக்க மனசு வேணும். அது என் கமலியிடம் இருக்கு’ என்றது மனம்.
விஷ்ணு மனசாட்சியோ என்ன ‘என் கமலியா?’ என்று கேட்டதும் திடுக்கிட்டான்.
-தொடரும்.
Interesting