Skip to content
Home » தீரனின் தென்றல்-38

தீரனின் தென்றல்-38

தீரனின் தென்றல் – 38

Thank you for reading this post, don't forget to subscribe!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தான் செல்ல வேண்டிய ரயிலுக்காக மகளை ஒரு கையிலும் கொண்டு வந்த பையை ஒரு கையிலும் அணைத்துக் கொண்டு காத்திருக்க முதல் முறை டீவியில் பார்த்து தனக்கு பிடித்த தொடர்வண்டி பெட்டிகளை நேரில் கண்ட மகிழ்வில் குழந்தைக்கு உண்டான குதூகலிப்போடு அபூர்வா ஆச்சரியமாக ஒவ்வொன்றையும் பார்த்திருக்க கண்ணீர் வழிந்திடாது அணையிட முயன்று கொண்டு இருந்தாள் தென்றல்.

அங்கும் இங்கும் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த அபூர்வா திடீரென ஒரு திசையை பார்த்து “ஹை…” என்று துள்ளி குதித்து தென்றல் கைப்பிடியை உதறி விட்டு கீழே இறங்கி ஓட

“ஏய் புவிக்குட்டி…” என்று பின்னால் ஓடிய தென்றல் அபூர்வா சென்று நின்ற இடத்தை பார்த்து அதிர்ந்தாள். தன்னை நோக்கி வந்த தன் மகளை பாசத்தோடு அணைத்திருந்த ஆதீரன் தன் நெருப்பு விழிகளால் தென்றலை முறைக்க உள்ளுக்குள் கிலி பரவியது தென்றலுக்கு.. இருந்தாலும் என்ன செய்திடுவான் என்று தைரியத்தை வரவழைத்து நின்றாள் தென்றல்.

தன் நெஞ்சோடு அணைத்து கொண்டு ஆதீரன் எழுந்து நிற்க “நீ எப்படி இங்க வந்த? எதுக்கு வந்த? கொடு என் குழந்தையை…” என்று அபூர்வாவை அவனிடம் இருந்து பிரித்து இழுக்கப்போக தன் பக்கம் மகளை இழுத்துக் கொண்டவன்

“இவ எனக்கும் பொண்ணு தான்… என்னை விட்டு எங்க கூட்டிட்டு போற என் பொண்ணை? இதோ பாரு தென்றல் இத்தனை வருஷம் இருந்ததை விடு இனி என் பொண்ணை எங்கேயும் அனுப்ப முடியாது.

ஏய்… உன்னை நினைச்சு அத்தை அங்க அழுதுட்டு இருக்காங்க.. வா தென்றல் என்னோட…” என்று அழைக்க

“அதான் அவங்களுக்கு என்னை விட நீதான் முக்கியம் னு சொல்லிட்டாங்களே… இனி நான் எதுக்கு? இதோ பாரு நான் எங்கேயும் வரதா இல்லை… பாப்பாவை கொடு…” என்று அவனிடம் இருந்து குழந்தையை கேட்க

“என் பொண்ணு என் கூட தான் இருப்பா..” என்று தென்றலிடம் அழுத்தமாக கூறிய ஆதீரன் அபூர்வா பக்கம் திரும்பி “பூர்வி மா… அப்பாவை விட்டு ஊருக்கு போகனுமா நீங்க?” என்று கொஞ்சலாக கேட்க

“இல்ல ப்பா.. தெட்டு நாம இன்னி ( இன்னைக்கு) போலா..‌ அப்பாவு அம்மம்மாவு நாலிக்கு ( நாளைக்கு) வருங்க (வருவாங்க) சொன்னா… அப்பா.. எனக்கு ட்டென் (ட்ரெயின்) பிக்கும் போலா ப்பா…” அபூர்வா தென்றல் தன்னை ஏமாற்றி அழைத்து வந்த கதையை ஒப்பிக்க அவளை முறைத்து பார்த்த தீரன்

“சரி குட்டி மா… மாமா அத்தை சக்தி அம்மம்மா மதன் அங்கிள் சித்ரா ஆன்ட்டி எல்லாரும் சேர்ந்து இன்னொரு நாள் ரொம்ப தூரம் ட்ரெயின் ல போகலாம்… இப்போ நீங்க சொல்லாம வந்ததால எல்லாரும் ஃபீல் பண்ணிட்டு இருக்காங்க… அதனால நாம வீட்டுக்கு போகலாம்..” என்று தீரன் சமாதானம் செய்ய

“ம்ம்..‌ தெட்டு வா.. வீட்டு போலாம்” என்று சொல்லி தீரன் தோளை இன்னும் இறுக்கமாக அபூர்வா கட்டிக் கொள்ள மகளை அணைத்துக் கொண்ட ஆதீரன் தென்றல் எடுத்து வந்திருந்த பேகை தூக்கிக் கொண்டு ரயில் நிலையத்தில் இருந்து வெளியேற அவன் பின்னாலேயே ஓடி வந்தாள் தென்றல்.

“கார்ல ஏறு…” என்று உத்தரவு போட அவனோடு சேர்ந்து கொண்டு “அம்மா ஏது சீக்கம் (ஏறு சீக்கிரம்)” என்று உத்தரவு போட்ட தன் செல்ல மகாராணியை ஆசையாக முத்தமிட்டு கொண்டான் ஆதீரன்.

தென்றல் ஏறி அமர சீறிப்பாய்ந்த காரின் வேகம் தீரனின் கோபத்தை காட்டியது. வேகமாக காரை ஓட்டி சென்ற ஆதீரன் காரை நிறுத்தி விட்டு அபூர்வாவை தூக்கிக் கொண்டு வேகமாக தென்றல் ஃப்ளாட் உள்ளே நுழைய பின்னால் வந்த தென்றலை பார்த்து தன் அழுகையை நிறுத்திய பொன்னி ஓடிச் சென்று ஆதீரனிடம் இருந்த குழந்தையை வாங்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டு இறக்கி விட்டவர் தென்றல் அருகில் வந்து பளார் என்று ஒரு அறை விட நிலை குலைந்து போன தென்றல் கீழே விழப்போக சரியாக அந்த நேரம் உள்ளே வந்த சித்ரா பிடித்துக் கொண்டாள் தென்றலை…

“அம்மா என்ன மா இது… பொறுமையா பேசுங்க எதுவா இருந்தாலும்…” என்று சித்ரா சொல்ல

“என்னமா பொறுமையா பேசுறது… இத்தனை நாள் இவ சொன்னதை கேட்டு தலையாட்டிட்டு அமைதியா இருந்தது பத்தாதா? இவளோட இவ பொண்ணோட எதிர்காலத்துக்காக தானே நாம எல்லாரும் சொல்றோம்.  கொஞ்சம் கூட காதுல வாங்காம இருந்தா சரி… போகப்போக மாறிடுவா னு அமைதியா இருந்தா சொல்லாம கொள்ளாம பிள்ளையை தூக்கிட்டு வீட்டை விட்டு போயிருக்கா” என்று பொன்னி கோபமாக கத்திக் கொண்டு இருக்க குமாரும் ரூபிணியும் வர குமார் சொல்ல இயலாத வேதனை படிந்த முகத்துடன் இருக்க ரூபியும் கோபத்துடன் தான் இருந்தாள்.

தென்றல் தலைகுனிந்து நிற்க “ஏன் தென்றல் இப்படி பண்ண? ஏன்டா… இவ்வளவு நாள் கூட இருந்த நாங்க கூட வேண்டாமா உனக்கு? அன்னைக்கு தானே அவ்வளவு சொன்னேன் உனக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பு தர குடும்பத்தால மட்டும் தான் முடியும்.” என்று குமார் பொறுமையாக எடுத்துக் கூற

“என்னை தப்பா நினைச்சுக்காத அண்ணா.. என்னால… என்னால முடியல ண்ணா மூச்சு முட்டுது… இவனால… இவனால தான் என் அப்பாவை நானே கொன்னுட்டேன் னு இத்தனை வருஷம் மனசுக்குள்ள புலுங்கிட்டு இருக்கேன். இன்னைக்கு இவன் என் கண்ணு முன்னாடி.. எனக்கு ஆதரவா இருந்த எல்லாரும் இவனோட சேர்ந்து வாழ சொல்றீங்க… என் பொண்ணு கூட இன்னைக்கு எப்ப பார்த்தாலும் இவனை அப்பா அப்பா னு சொல்லிட்டு இவன் பின்னாடி மட்டுமே சுத்திட்டு இருக்கா.. என் கை விட்டு எல்லாமே போன மாதிரி எனக்கு ஒரு மாதிரி இருந்தது அண்ணா…

செத்துடுவேனோ னு பயம்.. அதான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன்…”  என்று கூறிய தென்றல் மடங்கி அமர்ந்து அழ என்ன சொல்லி இவளை தேற்ற என்று தெரியாது முழித்தனர் அனைவரும்..

“ஏய்… அதுக்காக இப்படி எங்களை விட்டு ஓடி போனா எல்லாம் சரியாப்போச்சா? தனியா குழந்தையோட போய் என்னடி செய்வ?” என்று ரூபா கோபமாக கேட்க

“எனக்கு இவன் இருக்கிற இடத்தில இருக்க கூடாது. உங்ககிட்ட இதை நான் சொல்லிருக்கலாம்… ஆனா அப்படி சொன்னா என்னோட மனசை மாத்த தானே வழி தேடுவீங்க… என்னால இதுக்கு மேல சகிச்சுக்க முடியாது ரூபா..” என்று வெறுப்பாக சொல்ல

“இப்போ என்ன உனக்கு? உன் கண்ணு முன்னாடி நான் இருக்க கூடாது அவ்வளவு தானே? இனி நான் உன் முன்னாடி வர மாட்டேன் தென்றல்… குமார் சொன்ன மாதிரி உனக்கும் குழந்தைக்கும் இங்கே இருக்கிறது தான் பாதுகாப்பு… அதனால நீங்க எங்கேயும் போக வேண்டாம்… இன்னொரு தடவை உங்களை எங்க இருக்கீங்க னு தெரியாம தொலைச்சிட்டு எப்படி இருக்கீங்க என்ன ஏதுன்னு புரியாம ஒவ்வொரு நிமிஷமும் செத்து பிழைக்க நான் தயாரா இல்ல…” ஆதீரன் பேச பேச அவனை தென்றல் புரியாமல் பார்க்க

“ஆமா… நான் போறேன்… நான் உன்னோட கண்லயே படாத தூரத்துக்கு போயிடுறேன் தென்றல். ப்ளீஸ் நான் சொல்றது இதையாவது ஏத்துக்கோ… நான் எங்கயாவது போயிடுறேன் நீ குழந்தையை பத்திரமா பாத்துக்கோ… இனி உங்க யார் முன்னவும் வந்து நின்னு உங்க யாரையும் தொந்தரவு செய்ய மாட்டேன்..” என்று ஆதீரன் தீர்க்கமாக கூற தென்றல் இன்னும் என்ன சொல்கிறான் என்று பார்க்க பொன்னி ரூபிணி குமார் சித்ரா அதிர்ந்தனர்.

  • தொடரும்…
  • நன்றியுடன் DP ✍️

1 thought on “தீரனின் தென்றல்-38”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *