Skip to content
Home » பொறையுடைமை-16

பொறையுடைமை-16

திருக்குறள்- அறத்துப்பால் | இல்லறவியல்

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

பொறையுடைமை

குறள்:151

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை

தன்னை வெட்டுவோரையும்‌ விழாமல்‌ தாங்குகின்ற நிலம்போல்‌, தம்மை இகழ்வாரையும்‌ பொறுப்பதே தலையான பண்பாகும்‌.

குறள்:152

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று

வரம்பு கடந்து பிறர்‌ செய்த தீங்கை எப்போதும்‌ பொறுக்க வேண்டும்‌. அத்தீங்கை நினைவிலும்‌ கொள்ளாமல்‌ மறந்துவிடுதல்‌ பொறுத்தலைவிட நல்லது.

குறள்:153

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை

வறுமையுள்‌ வறுமை, விருந்தினரைப்‌ போற்றாமல்‌ நீக்குதல்‌; வல்லமையுள்‌ வல்லமை என்பது அறிவிலார்‌ தீங்கு செய்தலைப்‌ பொறுத்தலாகும்‌.

குறள்:154

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்

நிறை உடையவனாக இருக்கும்‌ தன்மை தன்னை விட்டு நீங்காமலிருக்க வேண்டினால்‌, பொறுமையைப்‌ போற்றி ஒழுக வேண்டும்‌.

குறள்:155

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து

(தீங்கு செய்தவரைப்‌) பொறுக்காமல்‌ வருத்தினவரை உலகத்தார்‌ ஒரு பொருளாக மதியார்‌; ஆனால்‌ பொறுத்தவரைப்‌ பொன்போல்‌ மனத்துள்‌ வைத்து மதிப்பர்‌.

குறள்:156

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்

தீங்கு செய்தவரைப்‌ பொறுக்காமல்‌ வருத்தினவர்க்கு ஒருநாள்‌ இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம்‌ அழியும்‌ வரைக்கும்‌ புகழ்‌ உண்டு.

குறள்:157

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று

தகுதி அல்லாதவைகளைத்‌ தனக்குப்‌ பிறர்‌ செய்த போதிலும்‌, அதனால்‌ அவர்க்கு வரும்‌ துன்பத்திற்காக நொந்து அறம்‌ அல்லாதவற்றைச்‌ செய்யாதிருத்தல்‌ நல்லது.

குறள்:158

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்

செருக்கினால்‌ தீங்கானவற்றைச்‌ செய்தவரைத்‌ தாம்‌ தம்முடைய பொறுமைப்‌ பண்பினால்‌ பொறுத்து வென்றுவிட வேண்டும்‌.

குறள்:159

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்

வரம்பு கடந்து நடப்பவரின்‌ வாயில்‌ பிறக்கும்‌ கொடுஞ்‌ சொற்களைப்‌ பொறுத்துக்‌ கொள்பவர்‌ துறந்தவரைப்‌ போலத்‌ தூய்மையானவர்‌ ஆவர்‌.

குறள்:160

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்

உணவு உண்ணாமல்‌ நோன்பு கிடப்பவர்‌, பிறர்‌ சொல்லும்‌ கொடுஞ்‌ சொற்களைப்‌ பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான்‌ பெரியவர்‌ ஆவர்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!