திருக்குறள்| அறத்து பால் | இல்லறவியல்| பயனில சொல்லாமை
குறள்:191
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்
கேட்டவர் பலரும் வெறுக்கும்படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லோராலும் இகழப்படுவான்.
- Thank you for reading this post, provide your thoughts and give encouragement. 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
குறள்:192
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது
பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லாத செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.
குறள்:193
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை
ஒருவன் பயனில்லாத பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.
குறள்:194
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து
பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்.
குறள்:195
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்
பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.
குறள்:196
பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்
பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது; மக்களுள் பதர் என்றே சொல்ல வேண்டும்.
குறள்:197
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று
அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம்; சான்றோர் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்.
குறள்:198
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்
அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.
குறள்:199
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்
மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.
குறள்:200
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்
சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும்; பயன் இல்லாதவைகளாகிய சொற்களைச் சொல்லவேகூடாது.