Skip to content
Home » ஈகை-23

ஈகை-23

திருக்குறள் | இல்லறவியல் | ஈகை-23

குறள்:221

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து

வறியவர்க்கு ஒரு பொருளைக்‌ கொடுப்பதே ஈகை எனப்படுவது. மற்றவர்க்குக்‌ கொடுப்பதெல்லாம்‌ பயனை எதிர்பார்த்துக்‌ கொடுக்கும்‌ தன்மை உடையது.

  • Thank you for reading this post, provide your thoughts and give encouragement. 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  
குறள்:222

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று

பிறரிடமிருந்து பொருள்‌ பெற்றுக்‌ கொள்ளுதல்‌ நல்ல நெறி என்றாலும்‌ கொள்ளல்‌ தீமையானது. மேலுலகம்‌ இல்லையென்றாலும்‌ பிறர்க்குக்‌ கொடுப்பதே நல்லது.

குறள்:223

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள

யான்‌ வறியவன்‌’ என்னும்‌ துன்பச்‌ சொல்லை ஒருவன்‌ உரைப்பதற்கு முன்‌ அவனுக்கு கொடுக்கும்‌ தன்மை, நல்ல குடிப்பிறப்பு உடையவனிடம்‌ உண்டு.

குறள்:224

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு

பொருள்‌ வேண்டும்‌ என்று இரந்தவரின்‌ மகிழ்ந்த முகத்தைக்‌ காணும்‌ வரைக்கும்‌ (இரத்தலைப்‌ போலவே, இரந்து கேட்கப்படுதலும்‌ துன்பமானது.

குறள்:225

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்

தவ வலிமை உடையவரின்‌ வலிமை பசியைப்‌ பொறுத்துக்‌ கொள்ளலாகும்‌. அதுவும்‌ அப்பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின்‌ ஆற்றலுக்குப்‌ பிற்பட்டதாகும்‌.

குறள்:226

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி

வறியவரின்‌ கடும்பசியைத்‌ தீர்க்கவேண்டும்‌; அதுவே பொருள்‌ பெற்ற ஒருவன்‌ அப்பொருளைத்‌ தனக்குப்‌ பிற்காலத்தில்‌ உதவுமாறு சேர்த்து வைக்கும்‌ இடமாகும்‌.

குறள்:227

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது

தான்‌ பெற்ற உணவைப்‌ பலரோடும்‌ பகுத்து உண்ணும்‌ பழக்கம்‌ உடையவனைப்‌ பசி என்று கூறப்படும்‌ தீய நோய்‌ அணுகுதல்‌ இல்லை.

குறள்:228

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்

தாம்‌ சேர்த்துள்ள பொருளைப்‌ பிறர்க்குக்‌ கொடுக்காமல்‌ வைத்திருந்து பின்‌ இழந்துவிடும்‌ வன்கண்மை உடையவர்‌ பிறர்க்குக்‌ கொடுத்து மகிழும்‌ மகிழ்ச்சியை அறியாரோ?

குறள்:229

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்

பொருளின்‌ குறைபாட்டை நிரப்புவதற்காக உள்ளதைப்‌ பிறர்க்கு ஈயாமல்‌ தாமே தமியராய்‌ உண்பது வறுமையால்‌ இரப்பதைவிடத்‌ துன்பமானது.

குறள்:230

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை

சாவதைவிடத்‌ துன்பமானது வேறொன்றும்‌ இல்லை. ஆனால்‌ வறியவர்க்கு ஒரு பொருள்‌ கொடுக்க முடியாத நிலை வந்தபோது அச்சாதலும்‌ இனியதே ஆகும்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *