Skip to content
Home » தவம்-27

தவம்-27

அறத்துபால் | துறவறவியல்| தவம்-27

குறள்: 261

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு

தான்‌ பெற்ற துன்பத்தைப்‌ பொறுத்தலும்‌ மற்ற உயிர்களுக்குத்‌ துன்பம்‌ செய்யாதிருத்தலும்‌ ஆகியவைகளே தவத்திற்கு வடிவமாகும்‌.

  •  🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  
குறள்: 262

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது

தவக்கோலமும்‌ தவஒழுக்கம்‌ உடையவர்க்கே பொருத்தமாகும்‌; அக்கோலத்தைத்‌ தவஒழுக்கம்‌ இல்லாதவர்‌ மேற்கொள்வது வீண்முயற்சியாகும்‌.

குறள்: 263

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்

துறந்தவர்க்கு உணவு முதலியவை கொடுத்து உதவ வேண்டும்‌ என விரும்பி மற்றவர்கள்‌ (இல்லறத்தினர்‌) தவம்‌ செய்வதை மறந்தார்களோ?

குறள்: 264

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்

தீமை செய்யும்‌ பகைவரை அடக்குதலும்‌, நன்மை செய்யும்‌ நண்பரை உயர்த்துதலும்‌ நினைத்த அளவில்‌ தவத்தின்‌ வலிமையால்‌ உண்டாகும்‌.

குறள்: 265

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்

விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால்‌ செய்யத்தக்க தவம்‌ இந்நிலையிலும்‌ (இல்லற வாழ்க்கையிலும்‌) முயன்று செய்யப்படும்‌.

குறள்: 266

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு

தவம்‌ செய்கின்றவரே தமக்குரிய கடமைகளைச்‌ செய்கின்றவர்‌ ஆவர்‌; அவர்‌ அல்லாத மற்றவர்‌ ஆசை வலையில்‌ அகப்பட்டு வீண்முயற்சி செய்கின்றவரே.

குறள்: 267

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு

புடமிட்டுச்‌ சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப்‌ போல்‌, தவம்‌ செய்கின்றவரைத்‌ துன்பம்‌ வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்‌.

குறள்: 268

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்

தவவலிமையால்‌ தன்னுடைய உயிர்‌ தான்‌ என்னும்‌ பற்று நீங்கப்பெற்றவனை மற்ற உயிர்கள்‌ எல்லாம்‌ (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்‌.

குறள்: 269

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு

தவம்‌ செய்வதால்‌ பெறத்தக்க ஆற்றலைப்‌ பெற்றவர்க்கு (ஓர்‌ இடையூறும்‌ இல்லையாகையால்‌) யமனை வெல்லுதலும்‌ கைகூடும்‌.

குறள்: 270

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்

ஆற்றல்‌ இல்லாதவர்‌ பலராக உலகில்‌ இருப்பதற்குக்‌ காரணம்‌, தவம்‌ செய்கின்றவர்‌ சிலராகவும்‌ செய்யாதவர்‌ பலராகவும்‌ இருப்பதே ஆகும்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *