Skip to content
Home » கள்ளாமை-29

கள்ளாமை-29

அறத்துபால் | துறவறவியல் | கள்ளாமை-29

குறள்: 281

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு

பிறரால்‌ இகழப்படாமல்‌ வாழ விரும்புகின்றவன்‌, எத்தன்மையான பொருளையும்‌ பிறரிடமிருந்து வஞ்சித்துக்‌ கொள்ள எண்ணாதபடி தன்‌ நெஞ்சைக்‌ காக்கவேண்டும்‌.

  •  🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  
குறள்: 282

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்

குற்றமானதை உள்ளத்தால்‌ எண்ணுவதும்‌ குற்றமே; அதனால்‌ பிறன்‌ பொருளை அவன்‌ அறியாத வகையால்‌, வஞ்சித்துக்‌ கொள்வோம்‌’ என்று எண்ணாதிருக்க வேண்டும்‌.

குறள்: 283

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்

களவு செய்து பொருள்‌ கொள்வதால்‌ உண்டாகிய ஆக்கம்‌ பெருகுவதுபோல தோன்றி, இயல்பாக இருக்க வேண்டிய அளவையும்‌ கடந்து கெட்டுவிடும்‌.

குறள்: 284

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்

களவுசெய்து பிறர்பொருள்‌ கொள்ளுதலின்‌ ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம்‌, பயன்‌ விளையும்போது தொலையாத துன்பத்தைத்‌ தரும்‌.

குறள்: 285

அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்

அருளைப்‌ பெரிதாகக்‌ கருதி அன்பு உடையவராய்‌ நடத்தல்‌, பிறருடைய பொருளைக்‌ கவர எண்ணி அவர்‌ சோர்ந்திருக்கும்‌ நிலையைப்‌ பார்ப்பவரிடத்தில்‌ இல்லை.

குறள்: 286

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்

களவு செய்து பிறர்பொருள்‌ கொள்ளுதலின்‌ மிக்க விருப்பம்‌ உடையவர்‌, அளவு (சிக்கனம்‌) போற்றி வாழும்‌ நெறியில்‌ நின்று ஒழுக மாட்டார்‌.

குறள்: 287

களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்

களவு என்பதற்குக்‌ காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல்‌, அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில்‌ இல்லை.

குறள்: 288

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு

அளவறிந்து வாழ்கின்றவரின்‌ நெஞ்சில்‌ நிற்கும்‌ அறம்போல்‌, களவுசெய்து பழகி அறிந்தவரின்‌ நெஞ்சில்‌ வஞ்சம்‌ நிற்கும்‌.

குறள்: 289

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்

களவு செய்தல்‌ தவிர மற்ற நல்லவழிகளை நம்பித்‌ தெளியாதவர்‌, அளவு அல்லாத செயல்களைச்‌ செய்து அப்போதே கெட்டழிவர்‌.

குறள்: 290

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு

களவு செய்வார்க்கு உடலில்‌ உயிர்வாழும்‌ வாழ்வும்‌ தவறிப்போகும்‌. களவு செய்யாமல்‌ வாழ்வோர்க்குத்‌ தேவருலகம்‌ வாய்க்கத்‌ தவறாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *