Skip to content
Home » நிலையாமை-34

நிலையாமை-34

அறத்துபால் | துறவறவியல்|நிலையாமை

குறள்:331

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை

நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும்‌ புல்லறிவு உடையவராக இருத்தல்‌ வாழ்க்கையில்‌ இழிந்த நிலையாகும்‌.

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

குறள்:332

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று

பெரிய செல்வம்‌ வந்து சேர்தல்‌, கூத்தாடுமிடத்தில்‌ கூட்டம்‌ சேர்வதைப்‌ போன்றது; அது நீங்கிப்‌ போதலும்‌ கூத்து முடிந்ததும்‌ கூட்டம்‌ கலைவதைப்‌ போன்றது.

குறள்:333

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்

செல்வம்‌ நிலைக்காத இயல்பை உடையது; அத்தகைய செல்வத்தைப்‌ பெற்றால்‌, பெற்ற அப்பொழுதே நிலையான அறங்களைச்‌ செய்ய வேண்டும்‌.

குறள்:334

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்

வாழ்க்கையை ஆராய்ந்து உணர்வாரைப்‌ பெற்றால்‌, நாள்‌ என்பது ஒரு கால அளவுபோல்‌ காட்டி, உயிரை உடம்பிலிருந்து பிரித்து அறுக்கும்‌ வாளாக உள்ளது.

குறள்:335

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும

நாவை அடக்கி விக்கல்‌ மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்குமுன்‌) நல்ல அறச்செயல்‌ விரைந்து செய்யத்தக்கதாகும்‌.

குறள்:336

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு

நேற்று இருந்தவன்‌ ஒருவன்‌, இன்று இல்லாமல்‌ இறந்து போனான்‌ என்று சொல்லப்படும்‌ நிலையாமை ஆகிய பெருமை உடையது இவ்வுலகம்‌.

குறள்:337

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல

அறிவில்லாதவர்‌ ஒருவேளையாவது வாழ்க்கையின்‌ தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை; ஆனால்‌ வீணில்‌ எண்ணுவனவோ ஒரு கோடியும்‌ அல்ல; மிகப்‌ பல எண்ணங்கள்‌.

குறள்:338

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு

உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான்‌ இருந்த கூடு தனியே இருக்க அதைவிட்டு வேறிடத்திற்குப்‌ பறவை பறந்தாற்‌ போன்றது.

குறள்:339

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு

இறப்பு எனப்படுவது ஒருவனுக்கு உறக்கம்‌ வருதலைப்‌ போன்றது; பிறப்பு எனப்படுவது உறக்கம்‌ நீங்கி விழித்துக்‌ கொள்வதைப்‌ போன்றது.

குறள்:340

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு

(நோய்களுக்கு இடமாகிய) உடம்பில்‌ ஒரு மூலையில்‌ குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப்‌ புகுந்திருக்கும்‌ வீடு இதுவரையில்‌ அமையவில்லையோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!