Skip to content
Home » துறவு-35

துறவு-35

 அறத்துபால் | துறவறவியல்|துறவு-35

குறள்:341

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

ஒருவன்‌ எந்தப்‌ பொருளிலிருந்து, பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப்‌ பொருளால்‌ அவன்‌ துன்பம்‌ அடைவதில்லை.

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

குறள்:342

வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல

துன்பமில்லாத நிலைமை வேண்டுமானால்‌, எல்லாப்‌ பொருள்களும்‌ உள்ள காலத்திலேயே துறக்க வேண்டும. துறந்தபின்‌ இங்குப்‌ பெறக்கூடும்‌ இன்பங்கள்‌ பல.

குறள்:343

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு

ஐம்பொறிகளுக்கு உரிய ஐந்து புலன்களின்‌ ஆசையையும்‌ வெல்லுதல்‌ வேண்டும்‌. அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம்‌ ஒரு சேர விடல்‌ வேண்டும்‌.

குறள்:344

இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து

தவம்‌ செய்வதற்கு ஒரு பற்றும்‌ இல்லாதிருத்தல்‌ இயல்பாகும்‌; பற்று உடையவராக இருத்தல்‌ மீண்டும்‌ மயங்குதற்கு வழியாகும்‌.

குறள்:345

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை

பிறவித்‌ துன்பத்தைப்‌ போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும்‌ மிகையான பொருள்‌; ஆகையால்‌ அதற்குமேல்‌ வேறு தொடர்பு கொள்வது ஏனோ?

குறள்:346

யான்எனது என்னும்செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்

உடம்பை யான்‌ எனக்‌ கருதலும்‌ தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்‌ கருதலுமாகிய மயக்கத்தைப்‌ போக்குகின்றவன்‌, தேவர்க்கும்‌ எட்டாத உயர்ந்த நிலை அடைவான்‌.

குறள்:347

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு

யான்‌ எனது என்னும்‌ இருவகைப்‌ பற்றுக்களையும்‌ பற்றிக்‌ கொண்டு விடாதவரை, துன்பங்களும்‌ விடாமல்‌ பற்றிக்‌ கொள்கின்றன.

குறள்:348

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்

முற்றத்‌ துறந்தவரே உயர்ந்த நிலையினர்‌ ஆவர்‌. அவ்வாறு துறக்காத மற்றவர்‌, அறியாமையாகிய வலையில்‌ அகப்பட்டவர்‌ ஆவர்‌.

குறள்:349

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்

இருவகைப்‌ பற்றும்‌ அற்றபொழுதே அந்நிலை பிறவித்‌ துன்பத்தை ஒழிக்கும்‌; இல்லையானால்‌ (பிறவித்துன்பம்‌ மாறி மாறி வந்து நிலையாமை காணப்படும்‌.

குறள்:350

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு

பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும்‌ பற்றிக்‌ கொள்ள வேண்டும்‌; உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப்பற்றைப்‌ பற்ற வேண்டும்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!