Skip to content
Home » இறைமாட்சி-39

இறைமாட்சி-39

பொருட்பால் | அரசியல் | இறைமாட்சி-39

குறள்:381

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு

படை குடி கூழ்‌ அமைச்சு நட்பு அரண்‌ என்று கூறப்படும்‌ ஆறு அங்கங்களையும்‌ உடையவனே அரசருள்‌ ஆண்‌ சிங்கம்‌ போன்றவன்‌.

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

குறள்:382

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு

அஞ்சாமை, ஈகை, அறிவுடைமை, ஊக்கமுடைமை ஆகிய இந்த நான்கு பண்புகளும்‌ குறைவுபடாமல்‌ இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்‌.

குறள்:383

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு

காலம்‌ தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை ஆகிய இந்த மூன்று பண்புகளும்‌ நிலத்தை ஆளும்‌ அரசனுக்கு நீங்காமல்‌ இருக்க வேண்டியவை.

குறள்:384

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு

ஆட்சி முறைக்கு உரிய அறத்தில்‌ தவறாமல்‌, அறமல்லாதவற்றை நீக்கி, வீரத்தில்‌ குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன்‌ ஆவான்‌.

குறள்:385

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு

பொருள்‌ வரும்‌ வழிகளை மேன்மேலும்‌ இயற்றலும்‌ வந்த பொருள்களைச்‌ சேர்த்தலும்‌, காத்தலு காத்தவற்றை வகுத்துச்‌ செலவு செய்தலும்‌ வல்லவன்‌ அரசன்‌.

குறள்:386

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம

காண்பதற்கு எளியவனாய்‌, கடுஞ்சொல்‌ கூறாதவனாய்‌ இருந்தால்‌, அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம்‌ புகழும்‌.

குறள்:387

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு

இனிய சொற்களுடன்‌ தக்கவர்க்குப்‌ பொருளை உதவிக்‌ காக்கவல்ல அரசனுக்கு இவ்வுலகம்‌ தன்‌ புகழோடு தான்‌ கருதியபடி அமைவதாகும்‌.

குறள்:388

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்

நீதிமுறை செய்து குடிமக்களைக்‌ காப்பாற்றும்‌ மன்னவன்‌, மக்களுக்குத்‌ தலைவன்‌ என்று தனியே கருதி மதிக்கப்படுவான்‌.

குறள்:389

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு

குறைகூறுவோரின்‌ சொற்களைச்‌ செவி கைக்கும்‌ நிலையிலும்‌ பொறுக்கின்ற பண்பு உடைய அரசனது குடைநிழலில்‌ உலகம்‌ தங்கும்‌.

குறள்:390

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி

கொடை, அருள்‌, செங்கோல்முறை, தளர்ந்த குடிகளைக்‌ காத்தல்‌ ஆகிய நான்கும்‌ உடைய அரசன்‌, அரசர்க்கெல்லாம்‌ விளக்குப்‌ போன்றவன்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!