Skip to content
Home » கல்லாமை-41

கல்லாமை-41

பொருட்பால் | அரசியல் |கல்லாமை-41

குறள்:401

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்

அறிவு நிரம்புவதற்குக்‌ காரணமான நூல்களைக்‌ கற்காமல்‌ கற்றவரிடம்‌ சென்று பேசுதல்‌, சூதாடும்‌ அரங்கு இழைக்காமல்‌ வட்டுக்காயை உருட்டி ஆடினாற்‌ போன்றது.

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

குறள்:402

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று

(கற்றவரின்‌ அவையில்‌) கல்லாதவன்‌ ஒன்றைச்‌ சொல்ல விரும்புதல்‌, முலை இரண்டும்‌ இல்லாதவள்‌ பெண்‌ தன்மையை விரும்பினாற்‌ போன்றது.

குறள்:403

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்

கற்றவரின்‌ முன்னிலையில்‌ ஒன்றையும்‌ சொல்லாமல்‌ அமைதியாக இருக்கப்பெற்றால்‌, கல்லாதவர்களும்‌ மிகவும்‌ நல்லவரே ஆவர்‌.

குறள்:404

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்

கல்லாதவனுடைய அறிவுடைமை ஒருகால்‌ மிக நன்றாக இருந்தாலும்‌ அறிவுடையோர்‌ அதனை அறிவின்‌ பகுதியாக ஏற்றுக்‌ கொள்ளமாட்டார்‌.

குறள்:405

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்

கல்லாத ஒருவன்‌ தன்னைத்‌ தான்‌ மதித்துக்‌ கொள்ளும்‌ மதிப்பு (கற்றவரிடம்‌) கூடிப்‌ பேசும்போது அப்பேச்சினால்‌ கெடும்‌.

குறள்:406

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்

கல்லாதவர்‌ உயிரோடிருக்கின்றனர்‌ என்று சொல்லப்‌ படும்‌ அளவினரே அல்லாமல்‌, ஒன்றும்‌ விளையாத களர்நிலத்திற்கு ஒப்பாவர்‌.

குறள்:407

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று

நுட்பமானதாய்‌ மாட்சியுடையதாய்‌ ஆராயவல்லதான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு, மண்ணால்‌ சிறப்பாகப்‌ புனையப்பட்ட பாவை போன்றது.

குறள்:408

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு

கல்லாதவரிடம்‌ சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம்‌ உள்ள வறுமையைவிட மிகத்‌ துன்பம்‌ செய்வதாகும்‌.

குறள்:409

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு

கல்லாதவர்‌ உயர்ந்த குடியில்‌ பிறந்தவராக இருப்பினும்‌ தாழ்ந்த குடியில்‌ பிறந்திருந்தும்‌ கல்வி கற்றவரைப்‌ போன்ற பெருமை இல்லாதவரே.

குறள்:410

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்

அறிவு விளங்குவதற்குக்‌ காரணமான நூல்களைக்‌ கற்றவரோடு கல்லாதவர்‌, மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!