Skip to content
Home » அறிவுடைமை-43

அறிவுடைமை-43

பொருட்பால் | அரசியல் | அறிவுடைமை-43

குறள்:421

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்

அறிவு, அழிவு வராமல்‌ காக்கும்‌ கருவியாகும்‌; அன்றியும்‌ பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும்‌ அழிக்க முடியாத உள்ளரணும்‌ ஆகும்‌.

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

குறள்:422

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு

மனத்தைச்‌ சென்ற இடத்தில்‌ செல்லவிடாமல்‌, தீமையானதிலிருந்து நீக்கிக்‌ காத்து நன்மையானதில்‌ செல்லவிடுவதே அறிவாகும்‌.

குறள்:423

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

எப்பொருளை யார்‌ யாரிடம்‌ கேட்டாலும்‌ (கேட்டவாறே கொள்ளாமல்‌) அப்பொருளின்‌ மெய்யான பொருளைக்‌ காண்பதே அறிவாகும்‌.

குறள்:424

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு

தான்‌ சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப்‌ பதியுமாறு சொல்லித்‌, தான்‌ பிறரிடம்‌ கேட்பவற்றின்‌ நுட்பமான பொருளையும்‌ ஆராய்ந்து காண்பது அறிவாகும்‌.

குறள்:425

உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு

உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கிக்கொள்வது சிறந்த அறிவு; முன்னே மகிழ்ந்து விரிதலும்‌ பின்னே வருந்திக்‌ குவிதலும்‌ இல்லாதது அறிவு.

குறள்:426

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு

உலகம்‌ எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில்‌ தானும்‌ அவ்வாறு நடப்பதே அறிவாகும்‌.

குறள்:427

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்

அறிவுடையவர்‌ எதிர்காலத்தில்‌ நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார்‌; அறிவில்லாதவர்‌ அதனை அறிய முடியாதவர்‌.

குறள்:428

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்

அஞ்சத்தக்கதைக்‌ கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும்‌; அஞ்சத்தக்கதைக்‌ கண்டு அஞ்சுவதே அறிவுடைவரின்‌ தொழிலாகும்‌.

குறள்:429

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்

வரப்போவதை முன்னே அறிந்து காத்துக்‌ கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர்‌ நடுஙகும்படியாக வரக்கூடிய துன்பம்‌ ஒன்றும்‌ இல்லை.

குறள்:430

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்

அறிவுடையவர்‌ (வேறொன்றும்‌ இல்லாதிருப்பினும்‌) எல்லாம்‌ உடையவரே ஆவர்‌; அறிவில்லாதவர்‌ வேறு என்ன உடையவராக இருப்பினும்‌ ஒன்றும்‌ இல்லாதவரே ஆவர்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!