Skip to content
Home » பெரியாரைத் துணைக்கோடல்-45

பெரியாரைத் துணைக்கோடல்-45

பொருட்பால் | அரசியல்| பெரியாரைத் துணைக்கோடல்-45

குறள்:441

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்

அறம்‌ உணர்ந்தவராய்த்‌ தன்னைவிட மூத்தவராய்‌ உள்ள அறிவுடையவரின்‌ நட்பைக்‌, கொள்ளும்‌ வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்‌.

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

குறள்:442

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்

வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித்‌ துன்பம்‌ வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப்‌ போற்றி நட்புக்‌ கொள்ள வேண்டும்‌.

குறள்:443

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்

பெரியாரைப்‌ போற்றித்‌ தமக்குச்‌ சுற்றத்தாராக்கிக்‌ கொள்ளுதல்‌ பெறத்தக்க அரிய பேறுகள்‌ எல்லாவற்றிலும்‌ அருமையானதாகும்‌.

குறள்:444

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை

தம்மை விட, ( அறிவு முதலியவற்றால்‌ ) பெரியவர்‌ தமக்குச்‌ சுற்றத்தாராகுமாறு நடத்தல்‌, வல்லமை எல்லாவற்றிலும்‌ சிறந்ததாகும்‌.

குறள்:445

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்

தக்க வழிகளை ஆராய்ந்து கூறும்‌ அறிஞரையே உலகம்‌ கண்ணாகக்‌ கொண்டு நடத்தலால்‌, மன்னவனும்‌ அத்தகையாரை ஆராய்ந்து நட்புக்‌ கொள்ள வேண்டும்‌.

குறள்:446

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்

தக்க பெரியாரின்‌ கூட்டத்தில்‌ உள்ளவனாய்‌ நடக்கவல்ல ஒருவனுக்கு அவனுடைய பகைவர்‌ செய்யக்கூடிய தீங்கு ஒன்றும்‌ இல்லை.

குறள்:447

இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்

கடிந்து அறிவுரை கூறவல்ல பெரியாரின்‌ துணை கொண்டு நடப்பவரைக்‌ கெடுக்கும்‌ ஆற்றல்‌ உடையவர்‌ யார்‌ இருக்கின்றனர்‌?

குறள்:448

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்

கடிந்து அறிவுரை கூறும்‌ பெரியாரின்‌ துணை இல்லாத காவலற்ற அரசன்‌ தன்னைக்‌ கெடுக்கும்‌ பகைவர்‌ எவரும்‌ இல்லாவிட்டாலும்‌ கெடுவான்‌.

குறள்:449

முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை

முதல்‌ இல்லாத வணிகர்க்கு அதனால்‌ வரும்‌ ஊதியம்‌ இல்லை; அது போல்‌ தம்மைத்‌ தாங்கிக்‌ காப்பாற்றும்‌ துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.

குறள்:450

பல்லார் பகைகொளவிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்

நல்லவராகிய பெரியாரின்‌ தொடர்பைக்‌ கைவிடுதல்‌ பலருடைய பகையைத்‌ தேடிக்கொள்வதைவிடப்‌ பத்து மடங்கு தீமை உடையதாகும்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!