அத்தியாயம்-2
சத்ரியனை சுற்றி அவன் விசுவாசிகள் வந்து சேரவும், “வினோத்.. வக்கில் திவாகருக்கு அவர் கேட்ட பணம், வீட்டு பத்திரம், அவர் பொண்ணுக்கு அவர் கேட்ட காலேஜ்ல சீட் எல்லாம் முடிந்ததா?” என்றான்.
“எல்லாமே பக்கா சார். அவருக்கு பேசிய பணம் அவர் பேங்க் பேலன்ஸில் போட்டாச்சு சார். வீட்டுப்பத்திரம்” என்று பத்திரத்தை நீட்டினான் வினோத். அதை திவாகர் வாங்கினார்.
சத்ரியனின் பி.ஏ. வினோத் வராததிலேயே வேறேதேனும் சூழ்ச்சி இருக்குமோ என்று யோசித்திருக்க வேண்டும். ஆனால் திவாகரிடம் வழக்கு சென்றதில் தோற்றுவிட்டால் மேலிடத்தில் பேசுவதற்கு வினோத் அலைவதாக அல்லவா ராகவன் தவறாக கணக்கிட்டுவிட்டார்.
சத்ரியனுக்கு மேலாக எந்த மேலிடம் உள்ளதென்று மறந்துவிட்டார்.
திவாகரும் போனில் கோடிக்கணக்கில் பணம் வந்து சேர்வதாக காட்டியதும், பேச்சிழந்தவராக நின்றார்.
இத்தனை காலம் பிழைக்க தெரியாத மனிதன் என்றல்லவா இந்த கோர்ட் வளாகத்தில் பேச்சு வாங்கினார். இன்று இந்த இடத்திலேயே அதிக வருமானம் ஈட்டி, பிழைக்க தெரிந்தவராக காட்டிக்கொண்டார்.
வீட்டு பத்திரத்தை மட்டும் வாங்கி வைத்தபடி, “என் பொண்ணு ஷ்ரத்தாவுக்கு அதே காலேஜ்ல மெடிக்கல் சீட் வாங்கியிருக்கிங்களா?” என்று சந்தேகமாய் கேட்க, “பச் சார்… இன்னும் சில நாள்ல மெடிக்கல் காலேஜ் ஓபன் பண்ணறாங்க. உங்க பொண்ணு வெள்ளை கோர்ட், ஸ்டதஸ்கோப் மாட்டி படிக்க போறது உறுதி. சத்ரியன் சார் ரெகமண்டேஷன் இருக்கும் போது, கவலைப்பட வேண்டாம்” என்று வினோத் தான் கூறினான்.
சத்ரியனோ, இங்கு வழக்கு முடிந்தது, தனக்காக வாதாடிய வழக்கறிஞருக்கு பீஸாக பணமும் அவர் கேட்டதும் தந்துவிட்டாயிற்று, கூடுதலாக தன் கூடவே இருந்து விசுவாசத்தில் நெஞ்சை நக்கியவர்கள் துரோகியாக மாறியவர்களை வதம் செய்தும் முடித்த மமதையில் அவனது காரில் ஏற சென்றான்.
ஏற்கனவே வினோத் மற்ற பார்மலிடிஸ் முடித்திருக்க, சத்ரியன் அவனது விலையுயர்ந்த காரில் பயணமானான்.
இங்கு அவனது எதிரிகள் ஒன்றிணைந்த கும்பலில், “நான் அப்பவே சொன்னேன். அவனை எல்லாம் சிம்பிளா நிதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கி தரமுடியாதுனு. நீங்க தான் என் பேச்சை கேட்கலை.
அவன் என்ன மடுவா? பெரிய மலை… அவனோட மோதணும்னா.. நமக்கு இன்னமும் பவரான ஆட்கள் தேவை.
அங்கங்க பதிவில இருக்கற பெரிய கைகள் எல்லாம் சத்ரியன் கண் பார்வைக்கு அடங்கறாங்க. ஆப்ட்ரால் திவாகரை வச்சி கோர்ட்லயே முடிக்கலாம்னு போட்ட திட்டமெல்லாம் வேஸ்ட்.
இதுல, அந்த ஆறு பேரை திவாகர் துப்பாக்கியாலேயே தீர்த்துட்டான். பைரவன் நிலைமை? சிறையில கைதிகளா அவனோட எதிரியே உள்ள போயிருக்காங்க. பைரவன் உயிரும் போச்சு.
இந்த திவாகர்… அவனை விட்டு வைப்பானா?” என்று கேட்டார் நகைகளை எல்லாம் இல்லீகளா வாங்கி நகைக்கடை நடத்தும் தொழிலதிபர் மல்கோத்ரா.
“திவாகரை எல்லாம் விட்டுடுவான். அரசாங்க வேலையில் இருக்கானே.” என்று கள்ள நேட்டை கைமாற்றும் தனஞ்செயன் கூறினான்.
“உங்களுக்கு சத்ரியனை பத்தி சரியா தெரியலை. அவன் கோர்ட் வரை வந்ததே, யாரந்த துரோகின்னு கண்டுபிடிக்க தான். ஆறு பேரை கையால சுட்டு தள்ளியிருக்கான் பைரவனை இன்னிக்கு நைட்டுக்குள்ள செத்துட்டதா நியூஸ் வரும் பாருங்க. எதுக்கும் ராகவனை கேர்புல்லா இருக்க சொல்லுங்க…” என்று மதுவை நிரப்பிவிட்டு, புகையை ஊதியபடி உரைத்தான் ரிதுராஜ். எல்லாம் சத்ரியனுடன் புழங்கும் கூட்டாளிகள் தான். சத்ரியனின் எல்லாவிதமான பிஸினஸ் கூட்டத்திலும் அவனே தலைமை என்று வரும் புகைச்சல் இது.
திவாகர் சத்ரியனை காப்பாற்றகயவரோ… அவருக்குண்டான ஆபத்து வருவது தெரியாமல், தன் மகளுக்கு போனில் அழைத்தார். ஷ்ரத்தா திவாகரின் மகள். மெடிக்கல் கல்லூரியில் தனக்கு இடம் கிடைக்காதென்று ஆர்ட்ஸ் அண்ட் காலேஜில் சீட்டு போடுவதற்கு வந்திருந்தாள். அவள் பி.எஸ்.சி. பயோலஜி படிப்புக்கு விண்ணப்பித்து விட்டு, அதே காலேஜில் கேன்டீனில் உட்கார்ந்திருந்தாள்.
அவள் தோழியும் அவளோடு வந்து பேசிக்கொண்டிருந்தாள்.
“உன் அப்பா எப்பவும் கோர்ட், கோர்ட்-ன்னு இருக்கார். இன்னிக்கு ஏதோ முக்கியமான கேஸ் வாதாடுவதா சொன்ன?”
ஷ்ரத்தா முகமலர்ந்து “அப்பா எப்பவும் அப்படித்தான். அவருக்கு நானும் சட்டமும் தான் அவரோட உலகம்..” என்றாள்.
அவளுக்கு தெரியாது,
அந்த உலகம் இப்ப ஒரு இருட்டு மனிதனோட பாதையில் நுழைந்துவிட்டதால் அவரது வாழ்வும் இருள துவங்குவதை அறியாமல் மகளிடம் போனில் பேச அழைத்துவிட்டார்.
“அப்பாவுக்கு நூறு ஆயுசு. இப்ப தான் நினைச்சேன். கால் பண்ணிட்டார் பாரு” என்று தோழி மனிஷாவிடம் உரைத்தாள்.
“அப்பா… இன்னிக்கு கோர்ட் கேஸ் எப்படி போச்சு.” என்று அவள் கேட்டாள்.
“முடிஞ்சிடுச்சு கண்ணா… அப்பா என்னைக்கு தோற்றுயிருக்கேன்.” என்றார்.
“எஸ்.. அப்பா, எப்பவும் நீதி நேர்மை தோற்காது.” என்றாள் ஷ்ரத்தா.
திவாகருக்கு மகளது பேச்சில் நெருஞ்சிமுள் தைத்தது.
இன்று அவரது வெற்றி அறத்தை சார்ந்து வெற்றியடையவில்லையே. மாறாக ஒரு நல்ல டிரைவரை, அப்ருவராக மாறியவனை தண்டனைக்கு அனுப்பியதில், வருத்தம் கொண்டார். தண்டனை மட்டுமா? அவன் உயிரையும் சத்ரியன் உருவிடுவான்.
“சரிம்மா.. அப்பாவுக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. நைட் லேட்டா தான் வருவேன். உன்னோட மெடிக்கல் காலேஜ் படிக்கற விஷயமா தான் போறேன். நீ டாக்டரா மாறுவது தான் அப்பாவோட ஆசை. அதனால அப்பாவை எதிர்பார்க்காம நீ பத்திரமா பாதுகாப்பா தூங்கு.” என்றார்.
“அப்பா… மெடிக்கல் சீட் கிடைக்கப்போகுதா?” என்று குதூகலமாக கேட்டவள் தோழி மனிஷாவிடமும் பார்த்து ஆனந்தமடைந்தாள்.
அந்த குரலில் இருந்த ஆனந்தமே திவாகர் செய்த செயலை மறக்கடிக்க வைத்தது. மகளுக்காக செய்த எதுவும் தவறில்லை என்று முடிவெடுத்தார். “ஆமாடா என் மக இந்த உலகத்தில் அவ கண் எதிர்ல ஒரு உயிர் துடிச்சா அந்த உயிரை காப்பாற்ற பிறந்த தேவதலயா தான் இருப்ப. டாக்டர் சீட் கிடைச்சிடுச்சு. நீ ஜாக்கிரதையா இரு” என்று தந்தை பாதுகாப்பா இருக்க கூற, அவளோ “சரிப்பா.. குயிக்கா வாங்க.” என்றாள்.
மகளை பாதுகாப்பாக இருக்க கூறியவருக்கு தெரியவில்லை, அவரது பாதுகாப்பு இங்கே கேள்விக்குறி ஆகுமென்று.
கூடுதலாக மகளின் எதிர்கால பாதுகாப்பும் சரியில்லாமல் போகுமென்று அறியாமல் போனார்.
அதீத பணம், மறுபுறம் தேவைகள் இருக்க, அதை நிவர்த்தி செய்ய திவாகர் பயணமானார்.
மகளுக்கு மெடிக்கல் சீட் ஊர்ஜிதமானதை நேரில் பார்த்து அறிந்து நிறைவோடு திரும்பினார்.
வீடு திரும்ப வந்தவரின் கார் ஹெட்லைட் இருட்டை கிழித்தது.
திவாகர் காரை ஒரு சாலையில் செலுத்த, அவரை கர்மாவின் நிழல் துரத்தியது.
ஒரு முடிவு நேரும் நேரம், சில வெற்றிகள் குவியலாம். அந்த வெற்றிக்கு பின் சாவும் நிச்சயமாக துணைக்கு வருவதை அவரால் தவிர்க்கமுடியவில்லை.
திவாகரை பெரிய வேன் வந்து மோதியது. திவாகரின் கார் ஹைவேஸிலிருந்து கீழே சாலையில் விழுந்து அதில் மற்றொரு வண்டி இடிக்க, பள்ளத்தில் உருண்டது.
மேலே மின்னல் வேகத்தில் இடித்து தள்ளிய வேனோ ஓரமாய் நின்று திவாகர் காரை வெறித்தது.
திவாகர் கீழே செல்லும் சாலையில் மற்றொரு வண்டியிலும் மோதியபடி, காரிலிருந்து முன் பக்க கதவு திறந்து மல்லாந்து கிடக்க, அங்கே கூட்டம் கூடியது.
திவாகர் ரத்த வெள்ளத்தில் மிதந்து உயிருக்கு போராட, அங்கேயிருந்தவர்களில் ஒருவர் ஆம்புலன்ஸிற்கு அழைத்தார்கள்.
பக்கத்தில் தான் மருத்துவமனை என்று ஆம்புலன்ஸும் வந்து சேர, அதில் ஏறியமர்ந்தவர், உயிருக்கு போராடினார்.
அந்த நிலையில் தன் உயிர் செல்வதை கணித்திருக்க, தன் மகள் ஷ்ரத்தாவை அனாதையாக விட்டு சொல்வதே மனதில் வலியை தந்தது.
மயங்கி படுத்திருந்த பொழுதும் போனை தேடினார்
ஆம்புலன்ஸில் இருந்த நர்ஸோ, “என்ன பண்ணுது சார்? என்ன சார் வேண்டும்?” என்று கேட்க போன் என்று செய்கையில் காட்டினார். மேற்பாக்கெட்டில் இல்லாமல் போக காற்சட்டையில் இருந்து நர்ஸ் எடுத்து காட்ட, நெருங்கிய உறவினருக்கு தான் தகவல் தெரிவிக்க போகின்றாரென எண்ணி “யாருக்கு சார் சொல்ல?” என்றார் நர்ஸ்.
“ச..சத்..த்ரியன்” என்றதும் இதற்கு முன் பேசப்பட்ட அழைப்பில் சத்ரியன் பெயர் இருக்க நர்ஸும் அழைத்தார்.
மறுபக்கம் வினோத் தான் எடுத்தான். “சொல்லுங்க சார். சார் எல்லாம் பைசல் பண்ணிட்டாரே.” என்று கேட்க, “ச..சத்ரியனிடம் பேசணும்” என்றார்.
நர்ஸோ “சார் ஆக்சிடெண்ட் ஆனதை சொல்லுங்க.” என்று கூற, வினோத்தோ சத்ரியனிடம், “பாஸ்.. திவாகர் ஏதோ பேசணுமாம். பக்கத்துல ஒரு பொண்ணு ஆக்சிடெண்ட் சொல்லுங்கனு சொல்லுது.” என்றதும் சலிப்புடன் போனை வாங்கிய சத்ரியனோ, “லுக் மிஸ்டர் திவாகர்.. நீங்க கேட்ட தொகையை விட அள்ளி தந்திருக்கேன். என்னோட உங்க டீல் முடிந்தது. இந்த போன் நம்பருக்கு தேவைக்கு மீறி அழைக்காதிங்க” என்று கூற, நர்ஸோ “சார் அவர் உயிருக்கு போராடிட்டு இருக்கார். உங்களிடம் கூப்பிட்டார். ஏதோ பேசணுமாம்.” என்றதும், “வாட் என்னாச்சு?” என்று கேட்டான் சத்ரியன்.
திவாகரோ, “இத்தனை நாள் நான் வாதாடி ஜெயித்த கேஸ் எதுவும் என்னை துரத்தலை. ஏன்னா அதெல்லாம் நியாயமானதா வெற்றியடைந்தேன். ஆனா இன்னிக்கு அநியாயமா உன்னை காப்பாத்திட்டு, மத்தவங்க உயிரை எமனுக்கு தூக்கி தந்துட்டேன். அதோட விதி… என்னையும் சாகடிக்க வந்துடுச்சு…” என்றவர் சிலதை சத்ரியனிடம் பகிர, சத்ரியன் தலையில் அடித்தான்.
”எனக்கு ஏதாவது நடந்தா… என் மகளை.. படிக்க வை. அவளை…” என்று கூறும் போதே சடலமாய் மாறினார்.
நர்ஸ் பெண்ணோ.. “சார் அவர் பேசிட்டு இருக்கும் போதே செத்துட்டார்” என்றுரைத்தாள்.
ஆம்புலன்ஸ் ஓட்டுபவரிடமும் தெரிவிக்க, பிறகு சத்ரியன் வினோத்திடம் “திவாகர் இறந்துட்டார். மற்ற காரியத்தை பார்த்துக்கோ.. ஆங்.. அவர் பொண்ணை நல்லா படிக்க வைக்க சொன்னார். அதுக்கான வேலையில் எந்த தடையும் இல்லாம பாரு.” என்று கூறிவிட்டு இன்று தான் திரும்பி வந்ததில் பல பணக்கார முதலாளிக்கு விருந்து வைத்திருந்தான்.
அதன் கேளிக்கை கொண்டாட்டத்தில் மூழ்க சத்ரியன் நறுமணம் வீசும் பெர்ஃப்யூமை அடித்து, கிளம்ப ஆயத்தமானான். அவனை காப்பாற்றிய திவாகர் இறப்பிற்கு எல்லாம் அஞ்சலி செலுத்தவும் நேரமின்றி விரைந்தான்.
வினோத்தும் “ஓகே பாஸ்” என்று வழியனுப்பிவிட்டு திவாகரின் இறப்பை அவரது மகளுக்கு கூற சென்றான். பின்னர் பிணத்தை வாங்கி சேர்க்கும் இத்யாதி கடமையில் அவனுக்கு கீழ் பணிப்புரியும் ஆட்களிடம் பணித்தான்.
வினோத்தும் நேரிடையாக ஷ்ரத்தாவை பார்த்து பேசவோ, உதவவோ செல்லவில்லை.
தன் தந்தை தனக்கு மெடிக்கல் படிக்க எல்லா ஏற்பாடும் செய்து விட்டு வருவதால், தந்தைக்காக தூங்காமல் காத்திருக்க, தந்தை காருக்கு பதிலாக ஆம்புலன்ஸ் தான் வீட்டை வந்தடைத்தது.
ஷ்ரத்தா ஒரே நாளில் அனாதையாக நின்ற தருணம். தந்தை உடலை கண்டு கதறி அழுது துடிக்க, பார்ப்பவர்களின் கண்கள் கலங்கியது.
இரவெல்லாம் சோர்ந்து போய் அழுதவள், அடுத்த நாள் காலையில் வக்கீல், நீதிபதி என்று ஒவ்வொருத்தராக வந்து தந்தை உடலுக்கு மாலை வைத்து செல்ல, சடலமாக சாய்ந்திருந்தாள் ஷ்ரத்தா.
அதிலும் பலரும் ‘சத்ரியன் கேஸ் வாதாடறப்பவே இந்த நிலை வந்திருக்கும்’னு சொல்ல, ஷ்ரத்தா புரியாமல் குழம்பினாள்.
தந்தை பேங்க் பேலன்ஸ் கூடியிருந்தது. தந்தை வாங்குவதாக சொல்லிக் கொண்டிருந்த வீட்டு பத்திரம் வீடு தேடி வந்தடைந்தது.
இதில் மருத்துவத்தில் சேர்வதற்கான கன்பர்மேஷன் காலும் வந்து சேர, ஷ்ரத்தாவுக்கு எதுவும் கருத்தில் பதியவில்லை.
தந்தை உடலை கண்டு கதறி அழுதழுது, உடல் சோர்ந்தவளாக மாறி தனித்து நிற்கின்றாள்.
பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்து கல்லூரிக்கு செல்லும் கனவோடு இருந்தவளது வாழ்க்கை, தந்தையோடு எல்லா ஆனந்தமும் சென்றதில் மனதால் வலுவற்று நின்றாள்.
இதில் தந்தை போனில் உயிருக்கு போரடும் தருணம் சத்ரியன் என்பவனிடம் பேசியுள்ளதை அறிந்து, ‘யாரிவன்? அவனால் தான் தந்தை உயிர் போனதாக பேசப்படுகின்றது. அவனால் தான் தந்தை நீதி நேர்மை என்றதை தாண்டி அநியாயமாக வழக்கில் வாதாடியுள்ளதாகவும் கேள்விப்பட, சத்ரியன் என்பவனை மனதால் கோபம் தீர திட்டினாள்.
தந்தை தன்னை விட்டு சென்றதால் அவரது புகைப்படத்தின் முன் சப்தமின்றி அழுதாள். இதோ கடந்த மூன்று நாட்கள் மனிஷா இருந்ததால் தந்தை இழப்பை சொல்லி சொல்லி அழுது நடமாடினாள்.
மனிஷாவும் இன்று சென்றப்பின் நடைப்பிணமாக தரையில் கண்ணீர் உகுத்தியிருந்தாள்.
-தொடரும்.
கதைகளின் அப்டேட் உடனுக்குடன் அறிய
Join the My Facebook Group Link👇🏻
https://www.facebook.com/share/g/1E7BPBX5QX/
Follow the Praveena Thangaraj Novels channel on WhatsApp 👇🏻 https://whatsapp.com/channel/0029VaLzctl8qIzyMR16cq0m

So sad. Sharatha nice name sis. Chathrian who is he? Very intresting sis.
Super sis nice epi 👌😍❤️ ore naal la eppdi thaniya nikka vendiyadha poche🥺🙄 evanuku avarukaga anjali kooda selutha mudiyadha enna manushano🤔🧐