அத்தியாயம்-7
அதிகாலை ஒளி மெதுவாக ஹாஸ்டல் ஜன்னல் கம்பிகளைக் கடந்து அறைக்குள் நுழைந்தது.
இன்று ஷ்ரத்தாவுக்கு முதல் நாள் காலேஜ். சாதாரண நாளை போல கடந்திட இயலாத நாள்.
ஆனால் தந்தை மரணத்துக்கு பிறகு, பயம், கோபம், அவமானம் எல்லாம் சுமந்த ஒரு பெண்
மருத்துவ உலகில் காலடி எடுத்து வைக்கும் தருணம் சாதாரணமாக தான் அமைந்தது.
ஷ்ரத்தா கண் மூடியே இருந்தாள். தூக்கம் இல்லாமல் இமை மட்டும் மூடியிருந்தது. மனதில் இரவு முழுக்க தந்தையின் குரலும்,
சத்ரியனின் குரலும் மாறி மாறி அவளை இம்சித்தது.
‘வெளியே போய் எவன் கொல்ல வந்தானோ அவன் கையால சாவுடி’ என்ற சத்ரியன் வார்த்தையும், தந்தை ‘உனக்கு மெடிக்கல் காலேஜில் அப்பா சீட் வாங்கிட்டேன். நீ இனி டாக்டருக்கு படிக்க போற ஷ்ரத்தா’ என்ற வார்த்தையும் அவளை அடுத்த வேலையை கூட செய்யவிடவில்லை
ஆனால் நேரம் நகரவும் மெதுவாக கண் திறந்தாள்.
சுவர் மீது தொங்கியிருந்த தந்தையின் புகைப்படத்தை காணவும், அழுகை பீறிட்டது அவரோ புகைப்படத்தில்
சிரித்துக் கொண்டிருந்தார்.
“நான் உங்களுக்காக படிக்கணும் அப்பா” என்று உதடுகள் மட்டும் உரைத்தது.
அதன் காரணமாக கண்ணீரை துடைத்துவிட்டு புறப்பட தயாரானாள்.
சலனமேயின்றி முதல் நாள் வகுப்பிற்கு செல்வது கூட அழுத்தம் கூட்டியது.
எத்தனை வருடக் கனவு. கல்லூரிக்கு முதல் நாள் இந்த கலர் உடையில், இப்படி செல்ல வேண்டுமென்று தந்தையிடமும் மனிஷாவிடம் எத்தனை முறை கதை அளந்தது.
இன்று… எண்ணிப் பார்த்தவளுக்கு முனுக்கென்று கண்ணீர் எட்டிப்பார்த்திட, கண்ணீரை ஏறக்கட்டினாள். தந்தையை இறைவன் அழைத்துக் கொண்டப்பின், இறைவனை வேண்டுவதற்கு கூட மனம் லயித்திடவில்லை. சாமியாவது பூதமாவது என்று தந்தை புகைப்படத்தை தொட்டு மனதில் சபதமிட்டு அவள் புறப்பட்டாள்.
கல்லூரி வளாகத்திற்கு நடந்தே வந்திடும் தூரம். மற்ற நேரமென்றால் அய்யோ அம்மா கால் வலி என்று ஒய்ந்திருப்பாள். மனதில் ரணமிருக்க வலி எதுவும் தெரியவில்லை.
கல்லூரியில் பெரிய கேட்டில், தங்க நிற எழுத்துகளில் கல்லூரி பெயர்.
கல்லூரிக்கு உள்ளே செல்வோர் எல்லாரும் புதிய கனவுகளோடு. நடமாடுவது கருத்தில் பதிந்தது.
சிலர் செல்ஃபி கூட எடுத்து கொண்டனர். சிலர் பெற்றோரின் கையை இறுக்கமாக பிடித்திருந்தனர். சிலர் பெருமையோடு சுற்றி பார்த்தனர்.
அங்கே ஷ்ரத்தா மட்டும்
எந்த உணர்ச்சியும் வெளியில் காட்டவில்லை.
ஷ்ரத்தா காலடி முதல் முறையாக அந்த நிலத்தை தொட்டது. அவள் மனதில் ஒரு விசித்திரமான உணர்வு.
‘இந்த சீட்டுக்கு விலை என் அப்பாவோட உயிர்.’ என்ற அவ்வெண்ணமே அவளை உலுக்கியது. அட்மின் ப்ளாக்கில் கூட்டம் வழிய ஆவணங்கள் சரிபார்த்து, கையெழுத்து. புகைப்படம், அடையாள அட்டை. எல்லாம் தரப்பட்டது.
அங்கிருந்தவர்களில்
“வாட்ஸ் யுவர் நேம்?” என்றார்.
“ஷ்ரத்தா திவாகர்” என்று தந்தையின் பெயரை சொல்லும் போது குரல் ஒரு நொடி தடுமாறியது. அவர் தான் இன்று இதை கேட்க உயிரோடு இல்லையே.
“கார்டியன்?” என்று அந்த பெயரை பார்த்து, அவளை ஏறிட மனிஷாவின் தந்தையின் பெயரை ஷ்ரத்தா சொல்ல வந்தாள்.
அதன் பிறகே இந்த மெடிக்கல் சீட்டு வாங்கும் பொழுது தந்தை இருந்தாரே? அப்பா பெயரை கேட்கவில்லையா? என்று புருவம் சுருக்கி பார்க்க,
“கார்டியன்ல சத்ரியன்னு நேம் போட்டிருக்கு” என்று கேட்டார்.
ஷ்ரத்தாவோ வெட்டும் பார்வையில் அந்த கார்டியன் பெயர் இருக்கும் இடத்தை வேகமாய் கவனித்தாள்.
அந்த வார்த்தை ‘கார்டியன்’ என்ற இடத்திற்கு நேராக ‘சத்ரியன்’ என்று இருந்தது.
அவளுக்கு உள்ளே ஒரு வெறுமையை உருவாக்கியது.
இதென்ன இவன் பெயர்? என்ற திடுக்கிட்டாள்.
“ஓ.. தொழிலதிபர் சத்ரியன் மூலமாக, படிக்க வந்த பொண்ணா?” என்று கேட்டுவிட்டு பக்கத்திலிருந்தவரிடம் கிசுகிசுத்து, மடமடவென அவளை அனுப்பவும் செய்தனர்.
ஓரியன்டேஷனல் ஹாலில் வந்து சேர்ந்தாள்.
புதிய மாணவர்களின் பேச்சும் சிரிப்பு, கூடுதலாக கிசுகிசுக்கவே ஆர்வமாக இருந்தனர்.
ஷ்ரத்தா கடைசி வரிசையில் அமர்ந்தாள்.
அப்பொழுது அம்மேடையில் கல்லூரியின் டீன் பேசினார்.
“இங்கே மெடிக்கல் சீட் வாங்கி வர்றது மட்டும் போதாது. ஒரு நல்ல மருத்துவராக மனசு இருக்கணும்.” என்று பேசவும் ஷ்ரத்தா மனதில் நேராக விழுந்தது.
‘மனசா? என் மனசு இப்போ செத்து போயிருக்கே.? மரத்துடுச்சே.
அதுல பயம், கோபம், சந்தேகம், பழிவாங்கும் எண்ணம் தான் நிறைந்திருக்கு.’ இதுல… இங்க அவன் கார்டியன் என்று போட்டிருக்க, நான் படிக்க வந்தது சரியா?’ என்று அவள் தன்னையே கேட்டாள்.
‘நான் மருத்துவரா ஆக போறேனா?
அல்லது அப்பாவை கொன்றவனை பழிக்குபழிவாங்க தேடி போறேனா?’ என்று தான் அவள் மனம் கேட்டது.
அங்கே டீன் பேசியது கைதட்டியது, அவர் அந்த ஹாலிலிருந்து சென்றது எல்லாம் ஷ்ரத்தா கவனத்தில் இல்லை.
மற்ற மாணவர்கள் கூட நட்பாக பேசி, கை குலுக்கி பேசி சிரிப்பதும் அவள் கவனத்தில் பதியாமல் இருந்தாள்.
அருகே இருந்த பெண் தான், “ஏய் ஹாய்… ஐ அம் கனிமொழி. டீன் பேசி கிளம்பிட்டார். மத்த ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் பிரெண்ட்லியா பேசி சிரிக்கறாங்க. நீ என்ன கற்சிலை போல இருக்க?” என்று கேட்டதற்கு, “டீன் போயிட்டாரா?” என்று கேட்டாள் ஷ்ரத்தா.
“ம்ம்ம்.. அது கூட தெரியலையா? ஓகே… நாம கேன்டீன் போகலாமா?” என்று கேட்க, மனதிற்கும் வயிற்றிற்கும் பசியுணர்வு அப்பொழுது தான் வந்தது.
ஷ்ரத்தா தலையாட்டி கனிமொழி கூடவே வந்தாள்.
அவர்கள் நடந்து செல்லும் பொழுது ஒரு ஸ்டக்சரில் பிணத்தை மூடி, ஒரு வார்ட் பாய் குறுக்கே எடுத்து சென்றார்.
‘மரணம் இவ்வளவு சத்தமில்லாம இருக்குமா” கனிமொழி அவ்வுடலை காட்ட, ஷ்ரத்தா அப்பிணத்தை உற்று நோக்கினாள்.
அவள் தந்தையின் உடல் நினைவுக்கு வந்தது.
விபத்து என்று சொன்னார்கள்.
ஆனா அது உண்மையில்லையே.
‘நான் மனித உடலுக்கு தேவையான உயிரை காக்கும் வித்தை மட்டும் கத்துக்க மாட்டேன். மரணத்தின் காரணத்தையும் கத்துக்கப் போறேன். அப்படி மரணத்தை தர்ற யுக்தி மட்டும் தெரிந்து என் தந்தையை கொன்றவங்க யாருனு தெரிந்தா… நான் அவங்களை கொன்று சம்ஹாரம் செய்வேன்’ என்று அந்த நொடியிலே காளி தேவி போல மனதிற்குள் சபதம் எடுத்தாள்.
இப்படியாக…. முதல் நாள் முடிந்து, முதல் வாரத்தின் மூன்றாவது நாள்.
ஷ்ரத்தா தியரியை வகுப்பு முடித்து வெளியே வந்தாள்.
மனசு இன்னும் அவளுக்கு இயல்பாகவில்லை.
அன்று.. கல்லூரி கட்டிடத்தின் பின்புற காரிடாரில் கூட்டம் குறைவான இடம்.
கல்லூரி ராகிங்கிற்கு பெயர் போன ஆட்கள் குழுமியிருந்தனர்.
“ஏய்… பஸ்ட் இயர். கம் இயர்” என்று அழைக்க ஷ்ரத்தா வந்து நின்றாள்.
அங்கே மூன்று பெண்கள்.
இரண்டு ஆண்கள் எல்லாம் நான்காம் வருடம் படிப்பதாக தெரிந்தது.
அதில் முன்னே வந்தாள் ஒரு உயரமான பெண். அவள் முடி போனிடெயிலில் ஆடியது.
கண்களில் அத்தனை கர்வம் மிளிர, “வாட் இஸ் யுவர் நேம்?” என்றாள்.
“ஷ்ரத்தா” என்றாள்.
“ஃபுல் நேம் சொல்லு?” என்றாள்.
“ஷ்ரத்தா திவாகர்.” என்றாள் நாயகி.
“அப்பா என்ன பிசினஸ் பார்க்கறாரா?” என்று ஆரம்பிக்க, தலையை மறுப்பாக அசைத்து, “லாயர்.. ஆனா இப்ப உயிரோட இல்லை சமீபத்துல நடந்த விபத்துல….. ஆங்.. விபத்துல இறந்துட்டார்” என்றாள் குரல் தோய்ந்து.
அங்கே நின்றியிருந்தவர்கள் உச்சுக்கொட்டிட, ஒருவனின் கண்கள் ஒரு நொடி கூர்மையானது.
“ஏய்… லாயர் திவாகர்.. தொழிலதிபர் சத்ரியன் கேஸ் ஹாண்டில் செய்தவர்?” என்றதும் ஷ்ரத்தா உள்ளுக்குள் திடுக்கிட்டாள்.
ஆனா வெளியில் அமைதியுடன் “ஆமா.” என்றாள்.
அந்த ஆண் லேசாக ஏளனமாய் சிரித்தான்.
“ஓ… நீ தான் அந்த பொண்ணா? மச்சான்… நான் சொன்னேனே… மெடிக்கல் சீட் இரண்டு தான் கடைசியா இருந்தது. என் ரிலேட்டிவ் பையனுக்கு கொடுக்கலாம்னு அப்பாவிடம் லாக்ஸ் கணக்குல பேமெண்ட் வாங்க இருந்தார். கடைசி நிமிஷத்துல மெடிக்கல் சீட் எவ்ளோ பணம் தந்தாலும் கிடைக்காதுனு மறுத்துட்டாங்க. விசாரிச்சப்ப.. தி கிரேட் லீடர் சத்ரியன் அவரை காப்பாத்திய லாயரோட பொண்ணுக்கு அந்த மெடிக்கல் சீட் போகப்போகுதுனு பேசிக்கிட்டாங்க.
அந்த பொண்ணு இவ தான்டா.” என்று அறிமுகப்படுத்தினான்.
இதில் ஷ்ரத்தாவிடம், “ஏய் நீ சத்ரியன் வீட்ல ஒன்நைட் ஸ்டே பண்ணியதா நியூஸ் வந்துச்சு. ரூமரா? ட்ரூவா?” என்று விசாரித்தான்.
ஷ்ரத்தா அவனை எரிக்கும் விதமாக தைரியமாக தான் பார்த்தாள்.
“சத்ரியனோட எல்லாம் ஸ்டே பண்ணியிருக்க… அப்போ உனக்கு இந்த தைரியம் தேவை தான்.” என்று சீனியர் அவனோ கேலி செய்திட, மற்றவர்கள் சிரித்தனர்.
“ரேகிங்னு நினைக்காதே. இன்ட்ரக்ஸன் டாக்டர் ஆகணும்னா இந்த தைரியமெல்லாம் கண்டிப்பா வேணும்” என்று மார்க்கமாக பேசினான்.
முதலில் அழைத்த பெண்ணோ இவன் பேசியதன் வீரியம் புரிந்து, “ஷட் அப் ஜான். இது ராகிங் மட்டும் தான்” என்று அடக்கினாள்.
“ஷ்ரத்தா.. ஜஸ்ட் க்ரை. அழுது காட்டு” என்று அப்பெண் கூற ஷ்ரத்தா புரியாமல் பார்த்தாள். சுற்றி நின்றவர்கள் கை கட்டி பார்த்தனர்.
ஒரு பெண் ஏற்கனவே கண் கலங்கினாள். அழவைக்காமல் நகர விடமாட்டோம் என்ற ரீதியில் இருந்தனர் போல.
ஷ்ரத்தாவோ “நீங்க எல்லாரும் டாக்டராக ஆக வர்றீங்க. அப்ப பேஷண்ட் அழலாம். ரிலேட்டிவ் அழலாம். அவர்களை தான் ஹாண்டில் செய்து அழவிடாம பண்ணணும். அதை தவிர நாம அழக்கூடாது… அழமாட்டேன்.
ஆல்ரெடி… என் அப்பா சில நாட்களுக்கு முன்னாடி இறந்துட்டார்ல…
அவரோட டெட்பாடி பாத்துட்டு வந்தேன். அதுக்கப்புறம் எனக்கு பப்ளிக்ல அழவே தோணலை.” என்றாள்.
ஒரு நொடி அந்த இடத்தில் சத்தமே இல்லாமல் போனது.
முதலில் பேசிய சீனியர் ஜான் சிரிக்க முயன்றான்.
“ஏ.. டிராமா குயின்.” என்று கேலி செய்தான் அவன்.
ஷ்ரத்தா அவனை நேராக பார்த்தாள்.
அவனோ “ஆட்டிடியூட் அதிகமா இருக்கு போல.” என்று கேட்க,
“இல்லை… இதுக்கு பேரு செல்ப் ரெஸ்பெக்ட்.
உங்களை மாதிரி ஆட்களை கண்டா முதுகொடிந்து போகாம எதிர்த்து பேசற செல்ப் ரெஸ்பெக்ட் குணம் அதிகமா இருக்கு.” என்றாள்.
“கார்டியன் என்ற இடத்துல சத்ரியன் என்ற பெயர் இருக்குல.. இதுவும் பேசுவ. இன்னமும் பேசுவ.
பச் என் சொந்தக்காரன் பையனா இருந்ததுக்கு பதிலா பொண்ணா இருந்தா, இந்நேரம் அவனும் சத்ரியன் கூட ஒன்நைட் ஸ்டே பண்ணியிருந்து, இப்ப இந்த இடத்துல உன்னை மாதிரி ஒன்னும் தெரியாதவளா, தைரியமா தான் பேசுவான். என்ன செய்ய அவன் பையனா போயிட்டான். நீ பொண்ணா இருந்ததால் சத்ரியன் பவர் பேசுது” என்று மீண்டும் இகழ்ந்துவிட்டு அவளது மேனியை ஊடுருவி பார்த்துச் சென்றான்.
ஷ்ரத்தாவிற்கு ‘கார்டியன் என்ற பெயரில் ஏன் அவன் பெயர்?’ என்று சிந்தித்தாள்.
தந்தை சொன்னதற்காக தன்னை பாதுக்காக்கின்றானா? என்று இகழ்ச்சியாக தோன்றியது. இதில் இந்த கூட்டத்தில் ஏதோ அவனுடன் உறவாடியதாக பேசி பேசி தன்னை பார்க்க, அவமானமாய் உணர்ந்தாள். அங்கே அவன் உயிரை காப்பாற்று என்று கெஞ்சினாலுமா செத்து போ’ என்கின்றான். இங்கே இவர்களோ அவனுடன் உறவாடியதாக தவறாக நினைக்கின்றார்களே.
எல்லாரிடமும் எல்லாவற்றையும் சொன்னால் நம்பக்கூடிய சூழ்நிலையா வாழ்வில் நடந்தது. யாரும் நம்பாத அளவிற்கு தான் வாழ்க்கை புரட்டி போட்டுள்ளதே!
-தொடரும்.
