Skip to content

The leader-27

64 / 100 SEO Score

The leader-27

அத்தியாயம்-27

சத்ரியன் ஷ்ரத்தா இருவரும் பேசிய அந்த இரவு, அவர்கள் சந்திப்பின் பின் பங்களா முழுவதும் அமைதியாக இருந்தது.‌

அந்த அமைதிக்குள் இரண்டு பேருக்கும் மட்டும் தூக்கம் வரவில்லை.

 

சத்ரியன் தனது அறையில் படுக்கையில் சாய்ந்திருந்தான்.

ஏசியின் குளிர் அறை முழுக்க பரவியிருந்தாலும், உடலுக்குள் ஏதோ வெப்பம் சுழன்றது.

வயிற்றில் குண்டு காயம் இழுத்தது.

டாக்டர் வேஷத்தில் வந்த மைக்கேலை கொன்றபோது ஏற்பட்ட அழுத்தம்.

பாருக்கு போய் சிசிடிவி ஆளை சாகடிக்க வேண்டிய சூழ்நிலை.

இதையெல்லாம் தாண்டியும்…

அவனது மூளை ஒரே இடத்தில் தான் சிக்கியிருந்தது.

ஷ்ரத்தா.

 

அவள் இவனது எதிர்பார்ப்பை கேட்டும் தலையாட்டியது. அந்த காட்சி மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தது. சத்ரியன் கண்களை மூடினான்.

‘நிஜமாவே சம்மதிச்சிட்டாளா…?’

அடுத்த நொடியே அவனுக்கே சிரிப்பு வந்தது.

“ச்ச்…” என்று மெதுவாக சிரித்தவன் நெற்றியை அழுத்தினான்.

 

“இல்ல…” அவன் மெதுவாக நேராக அமர்ந்தான். அவளெதிரே குண்டடி பட்டு நான் சரிந்தது. காலையில் மைக்கேலை கொன்றதும் ரத்தத்தை பார்த்து மயங்கினாள்.

தன்னை அதற்கு பிறகு பேயை பார்த்தது போல பயந்தாள்.

தந்தையை யார் கொன்றார்கள் என்று உடைந்து நின்றாள்.

அந்த நிலையில தான் கேட்டதை முழுதாக புரிந்து கொள்ளாது குழந்தையை போல தலையாட்டி இருப்பாள். அவள் அப்போ முழுதாக உடைந்து இருந்தாள். அவளிருந்ந அந்த நிலையில நான் அப்படி கேட்டிருக்க கூடாது.

 

அதை புரிந்துகொண்டதும் சத்ரியனுக்கு ஏதோ விசித்திரமான உணர்வு.

ஏமாற்றமா?

வருத்தமா? தான் என்ன பேசினோமென்று அறியாமலே தலையாட்டியவளை கண்டு ஒருவிதமான உணர்வை தோன்ற

அவன் தலையை பின்னால் சாய்த்தான்.

 

 

அதே நேரம்… ஷ்ரத்தா தனக்கு தந்த அறையில் படுத்திருந்தாள்.

விளக்கு அணைக்கப்பட்டிருந்தது. கண்களை மட்டும் மூட முடியவில்லை. அவள் மெதுவாக திரும்பினாள். புரண்டு புரண்டு பார்த்தும் தூக்கம் வரவில்லை.

அவளது மனசு ஒரே கேள்வியை தான் கேட்டு கொண்டிருந்தது.

‘நான் ஏன் அவன் கேட்டதற்கு தலையாட்டினேன்…?’ அவள் கண்களை இறுக்கமாக மூடினாள்.

சத்ரியன் என்ன செய்தான்? தன்னை மிரட்டினானா?

இல்ல கட்டாயப்படுத்தினானா?

எதுவும் இல்லை. அப்படியிருக்க…

ஏன்? “ச்சே…” என்று எரிச்சலுடன் முகத்தை மூடினாள்.

‘நான் லூசா…?’ அவளுக்கே கோபம் வந்தது. அவன் ஒரு கொலைகாரன். கெட்டவன், என்று தன் கண்ணாலே ரத்தத்தில் நின்றவனை பார்த்தாள்.

அப்படி இருக்க.. ஏன்? அந்த கேள்வி மீண்டும் வந்து தொக்கி நின்றது.

அவள் தலையை பிடித்தாள், பாரமேறிய உணர்வு.

 

அதன் பிறகு மற்றொரு விஷயம் நினைவுக்கு வந்தது. எக்ஸ்.

அவளது மூச்சு லேசாக நின்றது.

‘அந்த போன்…’ அவள் உடனே எழுந்து அமர்ந்தாள்.

சத்ரியன் போனை வாங்கினான்.

நம்பர் பார்த்தான். கண்டுபிடிக்க முயற்சி பண்ணுவேன் என்றான்.

ஒருவேளை… எக்ஸ் யார்னு தெரிஞ்சிட்டா சத்ரியன் அவனை கொன்றுடுவானா? ஒருவேளை…

அவன் அப்பாவை கொன்றவனே இல்லையென்றால்?

ஷ்ரத்தாவுக்கு மீண்டும் குழப்பம்.

 

அந்த நேரம்… கதவு மெதுவாக தட்டப்பட்டது. ஷ்ரத்தா திடுக்கிட்டாள்.

“யாரு?”

“நான் தான் மேடம்.” யோகேஷின் குரல். அவள் மெதுவாக கதவை திறந்தாள்.

யோகேஷ் கையில் போன். உங்க போன். பாஸ் தர சொல்லிட்டார்.” என்றதும் ஷ்ரத்தா உடனே வாங்கினாள்.

 

“அ… அந்த நம்பர்…?”

யோகேஷ் சில விநாடிகள் அமைதியாக இருந்தான்.

 

“சார் ஹாஸ்டல் போய் போனை கொண்டு வர சொன்னார். ஹாஸ்டல் போயிட்டு பார்த்தேன். உங்க ரூமை யாரோ புரட்டி போட்டிருக்காங்க.” ஷ்ரத்தா அதிர்ந்தாள்.

 

“நான் போறதுக்கு முன்னவே போனை யாரோ எடுத்துட்டு போயிருக்காங்க. சிசிடிவி ஜாமர் வச்சி வெல் பிளானோட எடுத்திட்டாங்க” என்று கூறினாள்.

 

“இல்லை… என் புக்கோட ரைட் கப்போர்ட்ல போன் மறைச்சி வச்சேன். போன் அங்க தான் இருக்கும். புக் மெத்தட்ல இருக்கற பாக்ஸ் அது. நீங்க புக்னு நினைச்சி கவனிக்காம இருக்கலாம்” என்று கூறினாள்.

 

சத்ரியன் வெற்று மார்புடன் ஷ்ரத்தா சொன்ன புத்தகத்தை சுற்றியபடி வந்தான்.

 

சத்ரியன் வரவும் ஷ்ரத்தா வாயை மூடிக்கொண்டாள்.

 

”எதையும் சட்டுனு நம்ப மாட்டனு தெரியும். அதுக்கு தான் இந்த பாக்ஸை கொண்டு வர சொன்னது.” என்று ஷ்ரத்தா பார்வையில் படுமாறு வைத்துவிட்டு, அவளது அறையை யோகேஷ் புகைப்படம் எடுத்திருக்க அதையும் காட்டினான்.

 

யோகேஷ் சத்தமின்றி வெளியேறியிருக்க, “நான் எங்க வீட்டுக்கு போயிடறேன். இங்க இருக்க பிடிக்கலை.” என்றாள்‌.

 

சத்ரியன் நிதானமாக, “ஒன்னு… உங்கப்பாவை யார் கொன்றாங்கனு தெரிய வந்து உன்னிடம் அதை பகிர்ந்துட்டா போ. இல்லை… உன்னை யார் கொல்ல துடிக்கறாங்கனு தெரிந்து அவங்களை நான் சாகடிச்சிட்டா, என்னிடம் சொல்லாம கூட நீ கிளம்பலாம். இதுக்கெல்லாம் காலம் கடத்தும்னு நினைச்சா… சிம்பிள்..

என்னோட ஆசையை தீர்த்து வச்சிட்டு கிளம்பு.” என்றான்.

 

ஷ்ரத்தா பல்லை கடித்து நிற்க, சத்ரியன் இடத்தை ஆராய்ந்தவாறு கிளம்பினான்.

 

ஷ்ரத்தாவுக்குள் சோர்வு அப்பட்டமாய் தெரிய கதவை தாழிட்டு படுத்தாள்.

 

இந்த வாழ்க்கை என்ன இத்தனை பயத்தையும் நடுக்கத்தையும் தந்துவிடுகின்றது.

 

தாயற்ற பெண்ணாக, அவளும் தந்தையும் வாழ்ந்த வாழ்வில், பெரிதாக திருப்பமோ, அதிர்ச்சியோ கூட இருக்காது.

மெதுவாக ஓடும் ஓடத்தின் தண்ணீர் போல அமைதியான வாழ்க்கை.

 

தந்தை அதிகளவு பணம் வசதி இல்லாதவராக இருந்தாலும், நல்ல பெயரையும், நேர்மையானவராக பிழைக்க தெரியாதவராக இருந்தார். தந்தையுடனான பயணத்தில் பள்ளிக்கு தினம் சென்று வருவதும், படிப்பதும் எழுதுவதும், அப்பாவோடு சமைப்பதும், விடுமுறை நாளில் எங்கயாவது சேர்ந்து சென்று ஊர் சுற்றி சாப்பிட்டு வருவாள். மற்றபடி பெரிதாக நிகழ்வுகள் இல்லாவிட்டாலும் நிறைவு இருக்கும்.

தந்தை உயிரோடு இருந்தால் இதே ஆர்ட்ஸ் கல்லூரியில் ஏதேனும் ஒரு டிகிரியில் மனிஷாவோடு பயின்று இருப்பாள்.

இந்த ஆக்ஷன் அட்வென்ஞர் எல்லாம் படத்தில் கேள்விப்பட்டத்தோடு இருந்திருப்பாள்.

 

இன்று சத்ரியன் கேஸில் தந்தை ஆஜராகி இதோ அவர் உயிரிழந்தப்பின், தினம் தினம் தனது வாழ்வில் பல திருப்பங்கள்.

 

தந்தை இறப்பு, மெடிக்கல் கல்லூரியில் மாற்றம், சத்ரியன் என்ற கிங்பின்னின் அறிமுகமும் அவனது அருகே தனது வாழ்வும்.

 

இதில் நேரில் காணவே முடியாத துப்பாக்கியை இரண்டு மூன்று முறை ஷ்ரத்தா கைகளில் தவழ்ந்துவிட்டது. இதில் சுடவும் செய்துவிட்டாள்.

போதாத குறைக்கு தன் கண் எதிரில் துப்பாக்கி தோட்டா துளைத்த சத்ரியன். மரணத்தோடு யார் நெருங்கினாலும் யாரையும் நிழலை கூட மிதிக்க விடாதவன், தன் நிழலையே பின் தொடர்கின்றான்.

இதில் தன்னை அவன் தேக தேவைக்கு அடிப்பணிய தானே முன்வர காத்திருக்கின்றான்.

 

இதில் முகமறியாத நபரின் போன் கால், தன்னையே ஒரு கொலைக்காரியாக மாற்ற பேரம் நடத்திய பேச்சு. கண் எதிரில் கொலை வேறு.

இத்தனைக்கும் தான் உண்டு தன் வேலையுண்டு என்று சென்றும் தன்னை கொல்ல ஆட்கள் வேறு.

தந்தையை கொல்வதற்கு கூட காரணம் சத்ரியனை காப்பாற்றியதால் சத்ரியனின் எதிரிகூட செய்திருக்கலாம். தன்னை ஏன் துரத்துகின்றனர் என்ற காரணம் பிடிபடவில்லை.

 

தந்தையை எண்ணி எண்ணி அழுது கரைந்து உறங்கிட, அதிகாலை நேரம் கழித்தே விழித்தாள்.

 

பத்து பத்திற்கு எழுந்தவள் இடத்தை ஆராய்ந்து பல் விலக்கி குளித்து முடித்து வர, வினோத் சுவைப் பார்த்து முடிக்க சத்ரியன் உணவை விழுங்குவதை கண்டாள்.

 

”நான் காலேஜ் போகணும். இங்கயே இருந்தா பைத்தியம் பிடிச்சிடும். அதோட பாடம் வேற நடத்திட்டா புரியாது. இது மெடிக்கல் பீல்ட்‌. தயவு செய்து நான் போறேன்” என்றாள்.

 

சத்ரியன் போர்க்கில் உணவை விழுங்கியவனாக, “சரி போ… பட் ரிட்டர்ன் நீ இங்க தான் வரணும்” என்று கட்டளையிட்டான்.

 

“ஹாஸ்டலுக்கே போறேன்” என்று மறுத்தாள்.

 

“அங்க நேத்தே போனை தேடி வந்த உன்னோட எக்ஸ் இடத்தை எப்படி வஞ்சியிருக்கான் பார்த்தியா. என்னை மட்டுமில்லை.. அவனும் உன் ரூமுக்கு எளிதா வர்றான். அது சரியில்லை நல்லதில்லை‌. சோ.. நீ இங்க வருவதாக இருந்தா போ” என்றான் சத்ரியன்.

 

முதலில் மறுக்க நினைத்த ஷ்ரத்தா இங்கிருந்தால் பைத்தியமே பிடித்திடுமென்று கல்லூரிக்கு கிளம்பினாள்.

 

சத்ரியன் கண் காட்ட, யோகேஷ் பின் தொடர்ந்தான்.

 

“இவன் எதுக்கு?” என்று அலறாத குறையாக குறைப்பட, “பச்… என்னை ரொம்ப பேச வைக்கிற. யோகேஷ் இல்லாம நீ இனி வெளியே போக முடியாது. அவன் உன் நிழலா தொடர்வான். நீ ஏதாவது சாப்பிட விரும்பினா அவனை முதல்ல சாப்பிட் செக் பண்ணுவான்.

யோகேஷ் புரியவை.” என்று அலுத்துக் கொண்டு விலையுயர்ந்த சிகரெட்டை பற்ற வைத்தான் சத்ரியன்.

 

இங்கிருந்து சிகரெட் வாடை குமட்டுமென, வேகமாய் கீழே வந்தாள். காரில் ஷ்ரத்தா ஏற பாடிகார்ட்ஸுடன், யோகேஷும் வந்து சேர்ந்தார்கள்.

 

நான்கு பேர் துணைக்கு வந்து கல்லூரியில் நுழைவதே அதிகப்படியாக இருந்தது. இதில் வகுப்புக்கு வெளியே காத்திருக்க, ஷ்ரத்தாவை புதிதாக பார்வையிட்டனர்.

 

இதில் கல்லூரியில் பாடம் நடத்துபவர்கள் கூட ஒரு வார்த்தை வினாத் தொடுக்கவில்லை.

 

கனிமொழியோ ‘முதல் முறை உன்னை பார்த்து பேசி ஏன் பிரெண்ட்ஸ் ஆனோம்னு பீல் பண்ணறேன். ஷ்ரத்தா… எப்பவுமே இனி இவங்க எல்லாம் கூட தான் நிற்பாங்களா?” என்று யோகேஷுடன் மற்ற மூவர் நிற்பதை கண்டு கேட்டாள்.

 

ஷ்ரத்தாவோ “நம்புவியா தெரியல… ஆனா நான் பார்த்ததை இன்னும் ப்ராஸஸ் பண்ண முடியல…

நான் இப்ப எல்லாம் எந்த ரூம்ல அதிகம் இருக்கேன் தெரியுமா? பாத்ரூம்ல. ஏன்னா அங்க தான் தனியா என்னால இருக்க முடியுது. எங்க போனாலும் இவனுங்க சூழ்ந்து நிற்கறாங்க.” என்று குறைப்பட்டாள்.

 

கனிமொழியோ “பச்.. பிடிச்ச ரூம் பிடிச்ச பிளேஸ்னா பாத்ரூம்னு சொல்வப் போலயே?” என்று சிரித்தாள்.

 

ஷ்ரத்தா சோகமாய், “அப்படி மாற கூட வாய்ப்புண்டு கனி. வோட் போட்டுட்டு நிம்மதியா வீட்டுக்கு வந்தா ஹாயா தூங்கி எந்திரிச்சு மேகி சாப்பிட ஆசைப்பட்டேன். ஆனா இந்த சத்ரியனை புல்லட்டை வயிற்றுல வாங்கிட்டு என் மேலயே விழவும், வயிற்றுல இருந்து ரத்தம் வெளியேறியதை பார்க்க, சாப்பிடற ஆசையே போயிடுச்சு. ஏதோ புது உலகத்துல போன மாதிரி பீல்.

 

சத்ரியன் வீடுனு சொல்ல முடியாது. அது பங்களா. அவன் ஒரு ஆள்… ஆனா எத்தனை விதமான ரூம் தெரியுமா? இதுல வீட்டை சுத்தி யூனிபார்ம்ல பாடிகார்ட்ஸ்.

இங்க நிற்காதிங்க, அங்க போங்க, இதை தொடாதிங்க. அதை சாப்பிடுங்க. ஸப்பா… முடியலை.

இத்தனை நாள் எப்படி அங்க இருந்தேன்னு தெரியலை. நார்மல் லைப் என்னை விட்டு தூரமா போன மாதிரி இருக்கு.” என்றாள்.

 

கனியிடம் இம்முறை அனைத்தையும் பகிர்ந்திருந்தாள். எக்ஸ் கொடுத்த மோதிரம், போன் சத்ரியனை கொல்ல பேரம் பேசியது முதல், ஹாஸ்டல் அறையே புரட்டி போட்டு அதே போனை எக்ஸ் எடுத்து சென்றது வரை முகம் தெரியாத எதிரியை பற்றியும். சத்ரியன் வயிற்றில் தோட்டா இறங்கியதையும், அவன் ஒரு டாக்டரை கழுத்தறுத்து கொன்றதையும் கதை கதையாக உரைத்தாள்.

 

இதில் சத்ரியனின் பார் வீடு என்று விலாவரியாக கதையளக்க, கனிமொழி வாயை பிளந்து உறைந்தவளாக கேட்டுக் கொண்டிருந்தாள்.

 

யோகேஷிற்கு ஷ்ரத்தா அதிகப்படியாக தகவலை, கனிமொழியிடம் விவரிப்பதை விரும்பாமல், பேச்சுக்கு நடுவே வந்தான். ஆனால் பேச்சை தடுக்க நேருமோ என்றால் அதற்கும் சத்ரியனிடம் திட்டு வாங்க நேருமென அமைதியானான்.

 

இதில் கேன்டீனில் ஆர்டர் தந்த உணவை முதலில் யோகேஷின் மேற்பார்வையில் மற்றொரு பாடிகார்ட் சுவை பார்க்க, “ஏய்… என் புட்ல எச்சி வைக்கறிங்க. இதெல்லாம் அந்த ரௌடியிடம் வச்சிக்குங்க.” என்று கத்தினாள்.

அவள் கத்தலை பொருட்படுத்தாமல் யோகேஷ் சொன்ன வேலையை மற்ற பாடிகாட்ர்ஸ் செய்து சுவைத்துவிட்டு, பத்து நிமிடம் ஆனதும், சாப்பிட கூறினான்.

 

யோகேஷ் நிதானமாக கனிமொழியை கிளம்ப கூறிவிட்டு, ஷ்ரத்தாவிடம் பேச காத்திருந்தான்.

 

”ஏன் என்‌ பிரெண்ட்டை அனுப்பற” என்று கத்த யோகேஷோ “மேம் நீங்க சத்ரியன் பாஸை இன்னும் சாதாரணமா நினைச்சிட்டு இருக்கிங்க மேடம்…” என்று ஆரம்பித்தான்.

 

“கிங்பின் என்றால் என்ன தெரியுமா மேம்?” என்றதும் ஷ்ரத்தா அமைதியாக அவனை பார்த்தாள். ஏதோ கூட்டத்திற்கு தலைவன் ரௌடி என்று எண்ணினாள்.

 

யோகேஷ் எதிரே அமர்ந்தவாறு பேச ஆரம்பித்தான். “தெருவுல நின்னு கத்தி தூக்கி வெட்டுறவன் ரௌடி மேடம்… ஆனா கிங்பின் அப்படியில்லை. சத்ரியன் பாஸ் கைல கத்தி துப்பாக்கி  இருக்கணும்னு அவசியமில்லை. அவர் ஒரு வார்த்தை பேசினா போதும்… நூறு கத்தியும், துப்பாக்கி ஏந்தி உயிர் பயத்தை தூக்கிப் போட்டுட்டு எங்களை மாதிரி ஆட்கள் கிளம்பிடுவோம்.” என்றான் ஷ்ரத்தா அமைதியாக கேட்டாள்.

 

“நீங்க சத்ரியன் பாஸை பார்க்கறது இந்த வீட்ல பாடிகார்ட்ஸ் கூட… பார்ல… பணம் வசதிக்கு குறைவில்லாத இடங்களா…, இதெல்லாம்.. மேலோட்டம் தான். இதை தாண்டி, பாஸ், ரியல் எஸ்டேட்ல பெரிய பெரிய நில விவகாரம், கட்டுமான டீல்ஸ், அரசியல் பக்கத்து செட்டிங்ஸ், எந்த கட்சி ஆட்சி வந்தாலும் தன்னோட டீலிங் பாதிக்காம பார்த்துக்கற பவர், எந்த இலக்காவிலும், ஐ மீன் போலீஸ் மற்ற அதிகாரிகள், ஆள்பலம், பணபலம், எதிரிகள் கூட நிறைய,  எல்லாத்துலயும் கால் பதிச்சிருக்கணும்.

யாராவது விஐபி செலிபிரிட்டி இவங்க பெரிய பிரச்சனையில மாட்டினா, சில பேருக்கு போலீஸ்க்கு முன்னாடி நினைவுக்கு வர்ற பேர் சத்ரியன் பாஸ். அதுக்காக அவரிடம் பணமேயில்லாம யார் முன்ன வந்துட்டு பிரச்சனையை தீர்க்க சென்னாலும், நியாயம் அநியாயம் இரண்டை தாண்டி அவர் கூட இருப்பது தான் வெற்றினு புரிய வச்சவர்.” ஷ்ரத்தாவின் புருவம் மெதுவாக சுருங்கியது.

யோகேஷ் தொடர்ந்து,

“பாஸ் யாரை அடிக்கணும், யாரை காப்பாத்தணும், யாரை மேலே தூக்கணும், யாரை கீழே தள்ளணும்னு முடிவு பண்ணுறவர்.

 

பாஸ் வெளியே போய் எந்த வேலையும் செய்ய வேண்டிய அவசியமே இல்ல. அவருக்கு கீழ வேலை செய்யறவங்க ஆயிரம் பேர் இருப்பாங்க தெரியுமா.

 

அதுல பாதி பேர் அவரோட எதிரிகளா கூட இருக்கலாம். சத்ரியன் பாஸுக்கு அதை பத்தி கவலை இல்லை. எந்த நேரமும் உயிர் உருவ ஆட்கள் சுத்தலாம். உயிர் பயமில்லாதவர். உயிரை எடுக்கவும் தயங்காதவர் அவர் பெயருக்கே பவர் உண்டு” என்று புகழ்ந்து தள்ளினான்.

 

“அதான் உங்க பாஸ் ரத்தம் சொட்ட சொட்ட சாகடிச்சவனை பார்த்தேனே” என்றாள் நக்கலாக. அந்த கொலையை பார்த்து பயந்து போயிருந்தாளே.

 

சில நொடிகள் அமைதியாக இருந்த யோகேஷ் ஷ்ரத்தாவை பார்த்தான்.

“அதனால தான் சொல்றேன் மேடம்… சத்ரியன் சாரை சாதாரண மனுஷனா நினைச்சு புரிஞ்சிக்க முயற்சி பண்ணாதிங்க. அவர் வாழ்ற உலகமே வேற. அந்த உலகத்துல நீங்க ஸ்பெஷலா தெரியறிங்களா? இல்லை… நார்மலானு கொஞ்சம் யோசிங்க‌. எனக்கு தெரிந்து பாஸ் உங்களை இரண்டு முறை தனியா உயிரை கூட பொருட்படுத்தாம, பாடிகார்ட்ஸுக்கு தெரியாம சந்திச்சிருக்கார்.

இதெல்லாம் அவரோட வாழ்வில் வித்தியாசமானது தெரியுமா? அவரை கண்டு அஞ்சறவங்க, அவரை பார்த்து பேசவே யோசிக்கறவங்க, இந்த கிங்பிங் வாழ்வில் அவருக்கான தேவைகளை பார்த்து பணத்தையும் ஆள்பலம், அதிகார பலம், பணபலத்தை வளர்த்திட்டு இருந்தவர். உங்க பின்னால ஏன்‌ சுத்தறார்னு யோசிங்க. அட்லீஸ்ட் அவரை யோசிக்காவிட்டாலும் கூட பரவாயில்லை. அவரோட வார்

த்தைக்கு மதிப்பு தாங்க.” என்றான். யோகேஷ் பேசிவிட்டு சற்று தள்ளி சென்றான்.

 

ஷ்ரத்தா யோகேஷ் சொன்னதை யோசித்தவளாக வகுப்புக்கு கூட செல்லாமல் இருந்தாள்.

 

-தொடரும்.

 

 

 

 

5 thoughts on “The leader-27”

  1. தீ லீடர்…!!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 27)

    இப்ப யோகேஷ் சொன்னதை யோசிச்சு அவ என்ன பண்ணப் போறாள் ? கிங்பின்னோட லைஃப் ஸ்டைல் தெரிஞ்சு வைச்சுக்கிட்டும் அவள் என்ன செய்யப் போறாள்…? ஷ்ரத்தா ஒரு சாதாரண மிடில் க்ளாஸ் பொண்ணு, அதுக்குள்ளத் தானே அவளோட வாழ்க்கை இருக்கணும்ன்னு நினைப்பாள், யோசிப்பாள். இப்ப சத்ரியனோட வாழ்க்கை வரலாறு தெரிஞ்சதால அவனோட வாழவாத் தோணும் ? அவனோட வாழ்க்கையே நித்ய கண்டம், பூர்ண ஆயுசு என்கிற மாதிரி இழுத்துக்கோ, பறிச்சுக்கோன்னு இருக்குது. எப்ப வந்து, எந்த நேரத்துல, எந்த மூலையிலிருந்து.. துப்பாக்கியை வைச்சு சுடுவானா, கத்தியை கொண்டு குத்துவானா, சாப்பாட்டுல பாய்சன் கலந்துடுவானான்னு
    பயந்துக்கிட்டே வாழற வாழ்க்கை அவனோடது. பாத்ரூம்க்கு போனாலும் பாடி கார்ட்ஸ் இல்லாமல் போக முடியாத கச்சாட வாழ்க்கை. இதுல அவனைப்பத்தி எதுக்கு யோசிக்கணும்…?

    அவளோட அப்பா மட்டும் அவனுக்காக வாதாடாமல் இருந்திருந்தாலே அவ வாழ்க்கை நிம்மதியா அமைஞ்சிருக்குமோ என்னவோ ? ஆனா, எப்படியும் அவர் உயிர் அப்ப சத்ரியனாலேயே போயிருக்கும். அப்படி போயிருந்தாலும் பிரச்சினை இவளுக்கு இருந்திருக்காது, இப்ப பாருங்க ஒரு கெட்டவனுக்கு துணைக்குப் போய், இன்னைக்கு அவரோட பொண்ணோட உயிரும் மானமும் ஊசாலாடிக்கிட்டிருக்கு… இந்த அவஸ்தை அவளுக்குத் தேவையா ? இல்ல கிங்பின்னுக்கு வாழ்க்கைப் பட்டுட்டா மட்டும் அவ நிம்மதியா வாழ்ந்துட முடியுமா..? எப்படியும் அவளுக்கும் அந்த தலைக்கு மேல கத்திங்கிற வாழ்வா, சாவா என்கிற வாழ்க்கைத்தான். இதுல என்னாத்தை யோசிச்சு முடிவெடுக்கிறதாம்…?
    இனி எப்படியும் உயிர் பயத்தோடத்தான் வாழணும் போல.

    😀😀😀
    CRVS (or) CRVS2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!