புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

கால் கிலோ காதல் என்ன விலை? -3

அத்தியாயம்-3

  சந்திரிகா மகளை மூக்கு முட்ட முறைத்திட, அஞ்சனா சிரித்தபடி, “சரி விடுமா. அவ வேண்டுமின்னு செய்தாலோ, வேண்டாம்னு செய்தாலோ? இப்ப திட்டினேனு வையு. அப்பா என்ன இங்குட்டு சத்தம்னு எட்டி பார்த்துடுவார்.
  
   பிறகு பொண்ணு என்ன சேலை எடுத்து வச்சிருக்கான்னு கூட கவனிக்கலையா கூறுகெட்ட கழுதைனு என் வீட்டுக்காரர் முன்ன உன்னை திட்டுவார்.

   எங்க அத்தை மாமா வேற ‘ சம்பந்தி சின்ன பொண்ணுக்கு கல்யாணம் பிடிக்கலையா? அதான் இப்படி சேட்டை பண்ணிட்டு திரியுதா’னு கேட்டு ஏழரையை ஆரம்பிப்பாங்க. அப்பறம் பதில் சொல்லி மாளாது.

   அதுக்கு இந்த சேலையே பரவாயில்லை. கேட்டா என் பொண்ணு சிம்பிளா தான் விரும்புவா. அதனால தான் மளிகைக்கடைக்காரனா இருந்தாலும் சம்மதித்தானு ஒரு பிட்டு போடு. பையனோட அம்மா உச்சி குளிரட்டும்” என்று பேசினாள்.

  அக்கா அஞ்சனா பேச பேச அமிழ்தினிக்கு கோபம் வந்தது. அமிழ்தினி சிம்பிளாக இருக்கட்டும் என்று தான் சேலையை எடுத்து வைத்தாள். ஆனால் அதையே அக்கா ஒரு மார்க்கமாக கூறவே ஏற்றிவிட்டு குளிர்காய்வதாக தெரிந்தது.

   ஆனால் இங்கு தன் வீடு போல அக்காவிடம் சண்டை வலுக்க முடியாது. இது அவளின் புகுந்த வீடு. அதனால் அமைதி காத்தாள்.

  “என்னவோடி அட்லீஸ்ட் நல்லா தலைவாறி நகையை போட்டுவிடு. நல்லவேளை நகையை நான் கொண்டாந்தேன். இல்லைனா கவரிங்கை தூக்கி கழுத்துல மாட்டிட்டு அவ அப்பாவிடம் என்னை நல்லா மாட்டிவிட்டுயிருப்பா” என்று சந்திரிகா நகையை எடுக்க சென்றார்.

  அமிழ்தினியோ “எதுக்கு என்னை அம்மாவிடம் ஏத்திவிட பார்க்கற?” என்று சண்டைக்கு நின்றாள்.

  “நான் எங்கடி ஏத்திவிட்டேன்?” என்று ஒன்றும் தெரியாதவள் போல கண் சிமிட்டினாள்.

  “ஏத்தி விடலையா? அம்மாகிட்ட என்ன சொன்ன? அவ வேண்டுமின்னு செய்தாலோ வேண்டாம்னு செய்தாலோன் ராகம் பாடுற?
   வேண்டுமின்னே சேலை எடுத்து வச்ச மாதிரியும், அந்த மளிகைக்கடைக்காரனை வேண்டாம்னு செய்த மாதிரியும் இசைக்கட்டு கட்டற?

  இதுல நைஸா அப்பா உன்னை கூறுகெட்ட கழுதைனு உன் புகுந்த வீட்டு ஆட்கள் முன்னாடி ஏச இவ காரணமாகிடுவான்னு என்னை போட்டு தர்ற?
    இந்த உள்குத்து பேச்செல்லாம் என்கிட்ட வச்சிக்காத. இங்க உன் அத்தை என்னிடம் ஏதாவது பேசி, நான் முகம் திருப்பிட்டு போனாலும் அந்த கணக்கு உன்னை தான் சேரும். ஜாக்கிரதை இந்த அம்முகிட்ட வச்சிக்காத” என்று மிரட்டினாள்.

  என்னவோ உளறிக்கொள் என்று அஞ்சனா நினைத்தாள்.

    பதட்டமாய் சந்திரிகா வந்து, “அடியேய் தங்க நகையை வீட்ல பூஜை ரூம்ல வச்சிட்டேன்.” என்று கையை பிசைந்து நின்றார்.

  “என்னம்மா சொல்லற? இவ இன்னிக்கு பார்த்து கழுத்துல ஒத்த பவுன் கூட போடலை” என்று தங்கையை அலசினாள்.

   “உன் நகையை போட்டு அட்ஜஸ்ட் பண்ணிடலாமா?” என்று கேட்டார் சந்திரிகா.

   “சீ எனக்கு இவளோடது எதுவும் வேண்டாம். அப்பா எனக்கு வாங்கியது தான் நான் போடுவேன். எதுவும் இல்லைனா கூட பரவாயில்லை.” என்று அமிழ்தினி மறுத்தாள்.
 
  சந்திரிகாவோ “வாயை மூடுடி” என்று அதட்டினார்.

  “அம்மா எங்கத்தை எல்லாத்தையும் பேங்க்ல வச்சிருக்கு. இதோ இப்ப கழுத்துல போட்டது மட்டும் தான் கொண்டாந்திருக்காங்க. அதுக்கூட அம்முவோட பொண்ணு பார்க்க என்றதால எடுத்தாந்தது.” என்று தலையை சொரிந்தாள் அஞ்சனா.

   “அய்யோ இப்ப அந்த மனுஷன் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பாரே.” என்று சந்திரிகா பயந்தார்.

    வேற எந்த கவரிங் நகையும் இல்லையாடி” என்று சந்திரிகா கவலையாக கேட்டார்.

  “எனக்கு தான் கவரிங் போட்டா அடுத்த பத்து நிமிஷத்துல கழுத்துல அரிக்க ஆரம்பிச்சிடும். காதுல புண்ணு வந்துடும். அதனால நான் ஏன்மா கவரிங் நகை வாங்கப்போறேன்.” என்று நகம் கடித்தாள்.

   “ரொம்ப பதறாதிங்க
என்கிட்ட பிளாக் மெட்டல் ஜிவல்ஸ் செட் இருக்கு. அந்த சேரிக்கு அதுவே மேட்சிங்கா இருக்கும். நான் அதையே போட்டுக்கறேன். எனக்கு எந்த கம்மலும் புண்ணாகுது. அரிப்பை ஏற்படுத்ததாது.” என்று வியாக்கானம் பேசி தன் ஹான்ட்பேக்கை துழாவினாள்.

   “சந்திரிகா பொண்ணு ரெடியா. கிளம்பலாமா? சம்பந்தி கூப்பிடறாங்க பாரு” என்று தேவராஜ் குரல் கொடுக்க, “என்னவோ சீக்கிரமா சேலைக்கட்டி என்னத்தையோ போட்டுட்டு வாங்க. முதல்ல கிளம்புவோம்.” என்று சந்திரிகா சம்பந்தியை தேடி ஓடினார்.
 
   அமிழ்தினி அக்காவையும் வெளியே துரத்திவிட்டு சேலை அணிந்து தன் ஹாண்ட்பேக்கில் கொண்டு வந்த மேக்-அப் கிட்டால் அழகுப்படுத்திக்கொண்டாள்.
    பிளாக் மெட்டல் தொங்கட்டானும் செயினும், கவர் கூட பிரிக்காமல் இருக்க அதனை எடுத்து கழுத்திற்கு அணிந்தாள்.

   முழு மேக்அப் முடிந்து லேசான லிப்ஸ்டிக் பூசும் நேரம் கதவை யாரோ தட்டும் சப்தம் கேட்டது.

  “என்ன?” என்று அமிழ்தினி கேட்க, “எவ்ளோ நேரம்?” என்று தன் அக்கா அஞ்சனா குரல் கேட்டதும் வர்றேன் வர்றேன்.” என்று உதட்டை மூடி கண்ணாடியில் ஒருமுறைக்கு இரண்டு முறை பார்த்துவிட்டு, இதே நல்லா தான் இருக்கு. இந்த அழகு கண்ணுக்கு தெரியாம, பட்டு சேலையும், தங்க நகையும் தேடினா நான் ஒன்னும் பண்ண முடியாது.’ என்று கதவை திறந்தாள்.
  
   அஞ்சனா கதவை திறந்தவளை கண்டு “அழகாயிருக்க” என்று முடிக்கவில்லை.
   
   “இதென்ன பட்டு சேலை உடுத்தலையா? காதுல கழுத்துல ஒன்னும் மின்னலை?” என்று தன் கண்ணாடியை துடைத்து போட்டு கண்கள் சுருங்க கேட்டார் அஞ்சனாவின் அத்தை சுலோச்சனா.

   தேவராஜோ சந்திரிகாவை ஒரு பார்வை பார்த்து முடிக்க, வெடவெடத்து வாய் திறக்கும் நேரம், அம்முவே, “நகையும் சேலையும் அம்மா எடுத்து தந்ததை நான் தான் நம்ம வீட்ல மறந்து வச்சிட்டேன். இப்ப போய் எடுத்தார முடியுமா? அதோட நகையெல்லாம் இப்பவே போட்டா அக்காவை விட சவரன் அதிகமா கேட்டுடுவாங்க. எதுக்கு வம்பு. இது போதும்.” என்று கூறவும் சுலோச்சனாவோ அதிருப்தியாக, “என்னமோ சொல்லற. கண்ணுக்கு லட்சணமா இருந்தாலும் கழுத்துல ஏதாவது மின்னனும். அப்ப தான் கௌவுரவம்.

   உன் அக்கா ஊறுகா ஜாடியில எண்ணெய்யை துடைச்சு வைக்க தெரியலை. உனக்கு எங்க எப்படி உடுத்தணும்னு தெரியலை. இதுல கல்யாணம் கட்டிட்டு புகுந்த வீட்ல மகனை பெத்தவங்க உசிரை எடுக்க கிளம்பறிங்க. என்னவோ பார்த்து போங்க. ஏன் அஞ்சனா நகையை  ஜாக்கெட்டோட பின் குத்தினியா?” என்று அவள் அத்தை அதட்டவும் “குத்தியிருக்கு அத்தை” என்று பம்வியமான மருமகளாக பதில் தந்தாள்.

  சரவணன் அன்னையை கண்டு அமைதியாக அப்பிராணியாக நின்றான். அவன் தந்தை ஞானவேல் அதற்கு மேல் சுவாரசியமாக தேவராஜிடம் பேசிக்கொண்டிருந்தார். சந்திரிகா சம்பந்தி அம்மா பேசுவதை கேட்டு அமைதிக்காத்தார்.
  
  “நீயும் பையனும் பொண்ணு பார்த்துட்டு இப்படியே தானே வண்டி ஏறுவிங்க. உங்கம்மா வீட்டுக்கு போகலையே. இங்க வேலை நிரம்ப கிடக்கு” என்று கூறிவிட, “இல்லைங்க அத்தை நம்ம வீட்டுக்கு வந்துடுவேன்.” என்றதும் சரி போயிட்டு வாங்க” என்று வழியனுப்பினார்.

    தேவராஜ்-சந்திரிகா இருவரும் “வர்றோம் சம்பந்தி” என்று விடைப்பெற்றார்கள்

   முதலில் அவர்களையும் கூப்பிட்டார்கள். ஆனால் கோவிலில் தானே நடக்கின்றது. முடிவானால் பார்ப்போம் என்று உடல்நிலையை காரணம் காட்டி தவிர்த்து கொண்டார்கள்.
 
   சந்திரிகாவும் பெரிதாக சம்பந்தியை நச்சரிக்கவில்லை. அவர்கள் வராவிட்டாலே கொஞ்சம் நிம்மதியாக இருக்கும். இல்லையேல் ஞானவேல் சுலோச்சனா முன்னால் சகஜமாக பேசி உரையாடுவது கூட தடைப்படும்.
  மாப்பிள்ளை மட்டும் எப்படியாவது கணவரோடு ஒன்றிக்கொள்வார். அதனால் அஞ்சனா சரவணன் கூடவே அமிழ்தினி மற்றும் அவள் பெற்றோர் விடைப்பெற்று மாப்பிள்ளை பார்க்க புறப்பட்டனர்.

   பேருந்து பயணம் மூன்று பேர் கொண்ட இருக்கையில் அம்மா மகள்கள் இருவரும் அமர, இருவர் இருக்கையில் சரவணன் தேவராஜ் அமர்ந்தனர்.

  “பேச்செல்லாம் என்னிடம் மட்டும் தானா? உங்கத்தையிடம் சரிங்கத்தைனு பவ்யமா பேசற?” என்று தங்கை அம்மு கேட்க அஞ்சனாவோ, “நீ என் தங்கச்சி உன்னிடம் என்னவேண்ணா பேசலாம். இது பேசலாமா வேண்டாமானு நான் யோசிக்க வேண்டியதில்லை. நல்லவாளா நடக்கணுமா கெட்டவளா நடக்கணுமானு இல்லாம நாம அடிச்சிப்போம். கொஞ்ச நேரத்துல கூடிப்போம். அங்க அப்படியா? கெட்டவளா ஒத்த வார்த்தை போனாலும் பையனிடம் நூறு மடங்கா குதிப்பாங்க. அவர் என்னை கரிச்சிக் கொட்டுவார். அதுக்கு சரிசரின்னு சொல்லிட்டு வாயை மூடிடலாம்.” என்று அஞ்சனா தன் அனுபவத்தை பகிர்ந்தாள்.

  “இட்ஸ் ஓகே அஞ்சனா பேபி.” என்றதும் தான் அஞ்சனா முகமே தெளிந்தது.

   சந்திரிகாவோ டென்ஷனாக தவித்தார். தண்ணீரை குடிக்க அது சிதறியது.

  “இந்தம்மா ஏன் இப்படி பதறுது. இவங்களையா பொண்ணு பார்க்க போறாங்க. என்னை தானே? நானே எந்த கவலையும் இல்லாம வர்றேன்” என்று அமிழ்தினி கேலிசெய்ய, “பேசுவடி பேசுவ? உங்கப்பா என்னை முறைக்கிற முறைப்புக்கு திருவண்ணாமலைக்கு போனதும் மலையேற போறார்.
  உன்னால நான் என்னலாம் அவஸ்தைபடணுமோ? இதுல நக்கல் நையாண்டி வேற” என்று புலம்பினார்.
  
  என்ன தான் கேலி செய்தாலும் கொஞ்ச நேரத்தில் அன்னை தோளில் சாய்ந்து கொண்டு உறங்கி வழிந்தாள்.

   மதியம் சாப்பிட்டதும் கிளம்பியதால் உண்ட மயக்கம் அமிழ்தினிக்கு இருந்தது.

   திருமணி, முனுக்கப்பட்டு, அன்மருதை ஊர்களை தாண்டியதும் மகளை எழுப்ப தேவராஜ் குரல் கொடுக்க சந்திரிகா மகள் தோளில் தட்டி எழுப்பினார். செய்யாறு பாலம் தாண்டவும் கொட்டாவி விட்டு கண்ணை கசக்கினாள்.
  ஆவனியாபுரம் வந்து சேரவே மணி மூன்றரை ஆனது.

   பேருந்துநிறுத்தம் வரவும் சரவணன் இறங்க, அஞ்சனா இறங்கியதும் சந்திரிகா இறங்கினார்.
  அடுத்து நீயா நானா என்று அமிழ்தினியும் தேவராஜும் ஒரே சமயத்தில் படிக்கட்டில் நடனமாட, “ஏ கழுதை என்ன அதுப்பா, இறங்கி தொலை.” என்று திட்டினார்.

   யாரோயோ திட்டுவதாக அமிழ்தினி இறங்கவும் “வேண்டுமின்னே பட்டுசேலை போடாம நகைப்போடாம வர்ற. பொண்ணுப் பார்க்க இப்படி தான் தேமேனு வருவாங்களா? கஷ்டப்பட்டு காலேஜ் படிக்க வச்சி, சொந்த வீடு கட்டி, நகை வாங்கி உங்களை அழகுப்பார்க்க ஆசைப்பட்டா கிறுக்குத்தனம் பண்ணிட்டு இருக்கறது. நீ வீட்டுக்கு வா தோலை உறிக்கறேன்.” என்று கண்டித்தார்.

  “அப்பா… உணர்ச்சி வசத்துல என்னை காலேஜ் படிக்க வச்சதை சொல்லிக் காட்டறிங்க. ஆக்சுவலா, நான் பிளஸ் டூ படிச்ச பொண்ணு” என்று தந்தையையும் கேலி செய்தாள்.

   “அமிழ்தினி சும்மாயிருக்க மாட்ட.” என்று சரவணன் கொழுந்தியாளை அதட்டவும் அஞ்சனாவை கண்டு அமைதியானாள்.

  தேவராஜன் தரகருக்கு போனை போட்டு “பஸ் ஸ்டாபுக்கு வந்துட்டோம். நீ எங்க இருக்க மூர்த்தி?” என்று கேட்க அவர் சொல்லவும் “சரி சரி  கோவிலுக்கு போயிட்டு அங்க கும்பிட்டு உட்கார்ந்திருக்கோம். நீங்க மாப்பிள்ளை வீட்டுல சொல்லி கூட்டிட்டு வாங்க” என்று தேவராஜன் கைப்பேசியை அணைத்தார்.

     மெதுவாக கோவிலுக்கு நடந்தார்கள்.
   அமிழ்தினி அக்கா ஊருக்கு போகும் போதும் வரும் போதும் இந்த ஊரை கடந்து சென்றிருக்கின்றாள்.
   அப்பொழுது எல்லாம் இந்த ஊரில், இப்படி மாப்பிள்ளை பார்க்க வருவாளென்று கனவிலும் நினைத்ததில்லை.

  நவநரசிம்ம ஸ்தலம் சிறிய மலை மேல் உள்ளது. சிங்க முகத்துடன் நரசிம்மன் அருள்பாலிப்பதால் ஆவணி நாராயணபுரம் என்ற சொல் மருவி ஆவணியாபுரம் என்று பெயர் மாறியது.

   வழிநெடுக அமிழ்தினியை அச்சுறுத்தும் விதமாக குட்டி குட்டி குரங்குகள் இருந்தன. பஸ்ஸில் போகும் போது பார்த்திருந்தாலும் இறங்கி நேரில் பார்ப்பது அதுவும் குரங்குகளை மிக நெருக்கத்தில் பார்ப்பது இதுவே முதல் முறை.

  பஞ்ச திருப்பதி என்று செல்லப்பெயரால் ஆவணியாபுரம் அழைக்கப்படுகிறது.
   காரணம் திருப்பதி வெங்கடாஜலபதி, திருவரங்கம் அரங்கநாதர், சோளிங்கர் யோக நரசிம்மர், காஞ்சிபுரம் வரதராஜபெருமாள், ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் என்று ஐவரும் அருள்பாலிக்கும் இடமாக இருந்தது.
மலை உச்சியில் ஸ்ரீரங்கநாதரும்,  ஸ்ரீவெங்கடாஜலபதியும்,  ஸ்ரீவரதராஜபெருமாளும், ஸ்ரீயோக நரசிம்மரும் காட்சிக்கு நிறைந்தனர்.

   கீழே குகை போன்றதில் கர்ப்பகத்தில் ஸ்ரீலட்சுமிநரசிம்மர் அமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அவரது இடதுபுறம் எழுந்தருளியுள்ள தாயாருக்கும் சிம்மமுகம் இருக்கும். உற்சவருக்கோ நின்ற திருக்கோலத்தில் சிம்மமுகத்துடன் இருப்பர்.

சன்னதிக்கு எதிரில்  கருடாழ்வாருக்கும் சிம்ம முகம் இருக்கும் இச்சிறப்பு வேறு எங்கும் காணக் கிடைக்காதது.

நவநரசிம்மரை சேவித்த பலனை இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெறுகின்றனர்

ஒவ்வொரு ஸ்தலமாக சென்று இறைவனை தரிசிக்க, அப்பொழுது தான் தேவராஜ் போன் ஒலித்தது.

   தரகர் மூர்த்தி தான் அழைத்தார்.
  “சார் மாப்பிள்ளை வீட்ல ஏற்கனவே கோவில்ல தான் இருக்காங்களாம். நான் இதோ வந்துட்டு இருக்கேன்.” என்று வைத்தார்.
 
  தேவராஜோ மகளை பார்த்து, மாப்பிள்ளை வீட்ல இங்க தான் இருக்காங்களாம். உன் பொண்ணை பொண்ணா லட்சணமா இருக்க சொல்லு.” என்று சுற்றி முற்றி பார்த்தார்.

அமிழ்தினிக்கு ‘ம்கும்’ என்று முனங்கல் இருந்தது. சந்திரிகா அஞ்சனா சரவணன் எல்லாம், யாராவது பெண் பார்க்கும் படலமாய் கும்பலாய் வந்திருக்கும் நபர்களை ஏறிட்டனர்.
 
   ஆளாளுக்கு இவர்களா அவர்கள்? அவர்களா தாங்கள் சந்திக்க வேண்டியவர்கள் என்று குழம்பி பார்த்தனர்.

   மேல் மலையில் எதற்கும் ஒரிடமாக அமர்ந்துக் கொண்டார்கள்  அமிழ்தினியோ அக்காவுடன் சேர்ந்து சுண்டல் சாப்பிட தன்னை ஒருவன் கைதி பட அர்ஜூன்தாஸ் பாணியில் ஒருவன் குறுகுறுவென பார்க்க, உதடு முனுமுனுக்க சத்தமின்றி திட்டினாள்.

   தான் பார்க்க போகும் பெண் இப்படி இருந்தால் நன்றாகயிருக்குமென அவளை அப்பொழுது தான் பார்த்த அர்ஜூனிற்கு அமிழ்தினி செய்கையால், சற்று எரிச்சல் உண்டானது.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

20 thoughts on “கால் கிலோ காதல் என்ன விலை? -3”

  1. ஆஹா…ஆஹா…! நீ நினைச்சுட்டேல்ல அர்ஜூன் அப்ப அவளேத்தான் உன் பொண்டாட்டி. நான் கூட நீ விட்டேத்தியா இருக்கிறதை பார்த்து, உனக்கு இந்த லவ்வு, ரொமான்சு எல்லாம் செட்டாகதோன்னு நினைச்சிட்டேன். நல்லவேளை, அம்மு புழைச்சா…!

  2. இருந்தாலும் அம்முவோட அப்பா ரொம்பவே நச்சு பிடிச்சவரா இருக்காரு, அவருதான் அப்படின்னு பார்த்தா அவர் பெரிய பொண்ண கொடுத்த இடம் இவருக்கு மேல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!