Skip to content
Home » MM 4

MM 4

வாழ்க்கை ஒரு ரோலர்ஸ்கோஸ்டர் ரைட் மதிரி… உச்சத்துல இருக்குறதா நம்ம குதூகலிக்குற ஃப்ராக்சன் ஆப் செகண்ட்ஸ்ல நம்மளை குப்புறத் தள்ளி கீழ கொண்டு வந்துடும்… உயர உயர பறக்குறப்ப வர்ற உற்சாகம் எல்லாம் சரி தான்…. ஆனா உச்சத்துக்குப் போனதும் ஐயோ இன்னும் கொஞ்சநேரத்துல நம்ம கீழ போவோம், அதுக்கான ப்ரிகாசன்சை எடுத்துப்போம்னு யார் ஒருத்தர் சுதாரிக்கிறாங்களோ அவங்க கீழ போனாலும் போன வேகத்துல மறுபடி மேல வந்துடுவாங்க… அதை பத்திலாம் கவலைப்படாம நான் மேல வந்துட்டேன், இது எனக்கு நிரந்தரம்னு யோசிக்குற சில்லி பொட்டட்டோஸ் கீழ வர்றப்ப தலை கிறுகிறுத்து தடுமாறி உருண்டு விழுந்து எழுந்திருக்க முடியாம தரையோட தரையா போயிடுவாங்க… எப்பவுமே நம்ம இருக்குற உயரம் குடுக்குற மயக்கம் நம்மளை தலை சுத்த வச்சுடக்கூடாதுங்கிறதை சிம்பாலிக்கா நமக்குச் சொல்லும் இந்த ரோலர்கோஸ்டர் ரைட்”

                                                                          -மேகா

வீட்டுக்கு வந்த பிறகும் முகிலனின் முகத்தில் சுரத்தில்லை. அவனைக் கைது செய்த காவல்துறையினர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது ராம் அவர்களின் வழக்கறிஞர் மனுவேந்தனோடு வந்து அவனை ஜாமினில் எடுத்துவிட்டான்.

முகிலன் ஒன்றும் சமூகவிரோதி இல்லையே! கூடவே அவனுடைய யூடியூப் சேனல் ஹேக் பண்ணப்பட்ட விவகாரத்தைச் சுட்டிக்காட்டி அதனால் நேரிட்ட தவறாக இருக்கலாம் என்றும் அந்த வீடியோவில் இருந்தவன் முகிலன் இல்லை என்பதை நிரூபிக்க கால அவகாசம் வாங்கினார் மனுவேந்தன்.

மாஜிஸ்திரேட்டும் முகிலனை ஜாமினில் விடுவித்தார். ஆனால் வழக்கு முடியும் வரை வெளிநாட்டுப்பயணம் எதுவும் மேற்கொள்ளக்கூடாதென கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

வீட்டுக்கு அவன் வந்ததும் ரஞ்சனா மகனைக் கட்டிக்கொண்டு அழ பாரிவேந்தனோ இறுகிய முகத்தோடு அமைதியாக ஒதுங்கிக்கொண்டார்.

முகிலனுக்கு அன்னையின் அழுகையை விட தந்தையின் ஒதுக்கம் இன்னும் வேதனையைக் கொடுத்தது.

“எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லம்மா… இனிமே எல்லாத்தையும் லாயர் பாத்துப்பார்” என அன்னைக்கு ஆறுதல் சொல்லிவிட்டுத் தந்தையின் அறைக்குச் சென்றான் அவன்.

அங்கேயோ பாரிவேந்தன் கொதித்துப் போயிருந்தார். மைந்தனைக் கண்டதும் வெடிக்க ஆரம்பித்துவிட்டார்.

“வாங்க துரை! குடும்ப மானத்தைச் சந்தி சிரிக்க வச்சிட்டிங்க… இப்ப சந்தோசமா இருக்கா உங்களுக்கு? தலை தலையா அடிச்சிக்கிட்டேன், உனக்கு வேணுங்கிற அளவுக்கு நான் பணம் சேர்த்து வச்சிட்டேன், கௌரவமா கிடைச்ச வேலைய பாருடானு.. கேட்டியா? ஊர் சுத்துறேன், செடி வளக்குறேன்னு இன்னைக்கு எல்லாத்தையும் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிட்ட… ஜாமீன் பத்தி பேச போலீஸ் ஸ்டேசனுக்குப் போனா அங்க உள்ள கான்ஸ்டபிள் சிரிக்குறார்டா… உங்க மகன் கமெண்ட்லயே பொண்ணுங்க கிட்ட அப்பிடி பேசுவான், அவன் இந்த மாதிரி செய்யலனா தான் அதிசயம்னு அசிங்கமா பேசுனார்டா… இதெல்லாம் எனக்குத் தேவையா? நான் சர்வீஸ்ல இருந்தப்ப பாரிவேந்தன்னாலே பயந்து நடுங்குனவங்கல்லாம் உன்னால போன் பண்ணி நக்கலடிக்குறாங்க… வீடியோல வந்த பொண்ணோட குடும்பத்து கிட்ட பேசலாம்னு போனா அவங்கப்பா முகம் குடுத்துப் பேச தயாரா இல்ல… உன்னால சென்னைக்கும் கோயம்புத்தூருக்கும் அலைஞ்சு திரிஞ்சது தான்டா மிச்சம்”

முகிலன் அமைதியாக அவர் திட்டிய வார்த்தைகள் அனைத்தையும் கேட்டுக்கொண்டான். அவரது வயதுக்கு இப்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியினால் நிகழும் அனர்த்தங்களைச் சொன்னாலும் புரிந்துகொள்ள முடியாதென முகிலனுக்குத் தெரியும்.

வழக்கறிஞர் மனுவேந்தன் தலைசிறந்த ஹேக்கர் ஒருவரின் துணை கொண்டு அந்த வீடியோ டீப்ஃபேக் தொழில்நுட்பம் மூலம் மாற்றியமைக்கப்பட்டதை நிரூபித்துவிடலாமென உறுதியாய்க் கூறினார்.

வேறு யாரோ இருக்கும் இடத்தில் முகிலனின் முகத்தை இணைத்து இப்படி ஒரு ஆபாச வீடியோவை அவனது சேனலில் பதிவேற்ற வேண்டிய தேவை யாருக்கு இருக்கிறதென விசாரித்தவரிடம் சில மாதங்களாகவே தனக்குத் தொடர்ந்து வந்த தொந்தரவான மின்னஞ்சல்கள் குறித்து விளக்கமளித்ததை தந்தையிடம் கூறினான் அவன்.

அவருக்கு இன்னும் புரியவில்லை. உடனே முகிலன் நடந்ததை அவரிடம் விலாவரியாகக் கூற ஆரம்பித்தான்.

“நான் யூடியூபரா ஆன நாள்ல இருந்து எனக்கான வேலை எல்லாத்தையும் இண்டிவிஜுவல் கிரியேட்டரா நான் தான் பண்ணிட்டிருக்கேன்பா… ரெண்டு சேனலையும் நான் தான் மேனேஜ் பண்ணிட்டிருக்கேன்… மூனு மாசத்துக்கு முன்னாடி ‘பர்பிள் ஸ்கை நெட்வொர்க்’னு ஒரு எம்.சி.என் கம்பெனி என்னை கான்டாக்ட் பண்ணுனாங்க… அவங்க எம்.சி.என்ல இப்ப நிறைய தமிழ் கபிள் வ்ளாகர்ஸ், யூடியூப் வ்ளாகர்ஸ்லாம் சேர்ந்துட்டதா சொன்னாங்க… நானும் அவங்க கூட சேர்ந்தா இப்ப உள்ளதைவிட நல்ல குவாலிட்டியான கண்டெண்ட் ரெடி பண்ணலாம், நிறைய பணம் சம்பாதிக்கலாம்னு ஆசை காட்டுனாங்க… அவங்க கூட சேர்ந்துட்டா யூடியூபுக்காக நான் எந்த வேலையும் செய்ய வேண்டாம்.. கேமராமேன், எடிட்டர், டிசைனர் எல்லாம் அவங்களே பாத்துப்பாங்க… நான் ஜஸ்ட் ட்ராவல் வ்ளாக், கார்டன் வ்ளாக்ல நடிச்சா மட்டும் போதும்னு சொன்னாங்க… அவங்க கிட்ட இருக்குற டெக்னாலஜிய வச்சு இப்ப உள்ள சப்ஸ்கிரைபர்ஸ், வியூஸை விட பல மடங்கு வியூஸும் சப்ஸ்க்ரைபர்சும் உண்டாக்கி தர முடியும்னு என் கிட்ட பேரம் பேசுனாங்க… வர்ற வருமானத்துல அவங்களோட கமிசன் போக மீதி எல்லா பணமும் எனக்குத் தான்னு ஆசை காட்டுனாங்க… ஒரு இன்டிவிஜூவல் கிரியேட்டரா சுதந்திரமா வ்ளாக் எடுத்துப் பழகுன எனக்கு கார்பரேட் எம்.சி.என்னுக்குக் கீழ வேலை பாக்க பிடிக்கல… அதனால அவங்க ஆஃபரை நான் ஒத்துக்கல… தொடர்ந்து எனக்கு ஒவ்வொரு விதத்துலயும் தொந்தரவு குடுத்துட்டே இருந்தாங்க… ஒரு கட்டத்துல சம்பந்தப்பட்ட ஆபிசர் கிட்ட நான் கொஞ்சம் ஹார்ஷா பேசிட்டேன்பா… அதை மனசுல வச்சு அவங்க தான் இதை செஞ்சிருப்பாங்களோனு சந்தேகமா இருக்கு”

முகிலன் கொடுத்த விளக்கம் பாரிவேந்தனுக்குப் புரிந்துபோனது.

“சரி! இப்ப என்ன செய்யலாம்னு இருக்க?”

“லாயர் சார் ஒரு எதிக்கல் ஹேக்கர் கிட்ட பேசி அந்த வீடியோ டீப் ஃபேக் டெக்னாலஜில உருவானதுனு ப்ரூவ் பண்ணிடலாம்னு சொல்லிருக்கார்பா”

“எப்ப? உனக்குப் பேரன் பிறந்ததுக்கு அப்புறமா?”

“ப்பா”

“என்னடா அப்பா? கோர்ட்டு கேஸ்னு அலைஞ்சோம்னா உன் வருங்காலம் என்னாகுறது? நீ என்ன செய்வியோ எனக்குத் தெரியாது… சீக்கிரம் இந்தக் கேஸை ஒரு முடிவுக்குக் கொண்டு வர என்ன வழியோ அதை செய்… இல்லனா நான் என்னோட வழில போய் எல்லாத்தையும் சரிகட்ட வேண்டியதா இருக்கும்”

கறாராகச் சொன்னவர் அவனைப் போகும்படி சைகை காட்டினார். முகிலன் அசையாமல் நின்றான். அதை அவரது மனம் திமிரென எண்ணிக்கொண்டது தான் சோகம்.

“என்னடா ரோஷம் பொத்துக்கிட்டு வருதோ? உன்னோட ஜென்ரேசனுக்குப் பணம் ஈசியா கிடைச்சிடுறதால உங்களுக்கு மானம் மரியாதைய பத்தி கவலை இல்லாம போயிடுச்சுல்ல… கால் ரூபா சம்பாதிச்சாலும் கௌரவமா சம்பாதிக்கணும்ங்கிற எண்ணமெல்லாம் உங்க யாருக்கு இருக்கு? பைத்தியக்காரன் மாதிரி பேசி யூடியூப்ல ஒருத்தன் வீடியோ போட்டான்னா அவனைத் திட்டுறேன்ங்கிற பேருல ரெண்டு லட்சம் மூனு லட்சம் பேரு பார்த்து வைப்பான்… ஐயோ இப்பிடி திட்டுறாங்களேனு யோசிச்சு ஒழுங்கா வாழணும்ங்கிற புத்தி உன் தலைமுறைக்கு வராது… என்னைத் திட்டவா செய்யுற, இன்னும் கேவலமா எப்பிடி வீடியோ போடுறேன் பாருனு தான் கிளம்புறானுங்க… அவனுங்க கூட உன்னை கம்பேர் பண்ணல… ஆனா சமுதாயம் என்ன பேசுனாலும் கொஞ்சம் கூட சுயமரியாதைய பத்தி கவலைப்படாம காசே குறியா அவனுங்க வாழுற மாதிரி நீ மாறிடக்கூடாதுங்கிற கவலை எனக்கு இருக்கு… அப்பா இப்பிடி பேசுறார் இன்னும் ஏன் இவரோட கண்ட்ரோல்ல இருக்கணும்னு யோசிக்குறியா? அப்பிடி எந்த யோசனையும் இருந்தா இப்பவே வீட்டை விட்டுப் போயிடு… இருவத்தஞ்சு வயசுல கை நிறைய சம்பாதிச்சு ஜேஜேனு வாழுறதால பேரண்ட்சை தூக்கியெறிஞ்சிட்டுப் போகலாம்னு தோணுதா? ஒன்னு மட்டும் கேட்டுக்க, இந்த சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர் தொழில் இப்ப ஓஹோனு இருக்கலாம்… இது வருங்காலத்துலயும் இதே போல பணங்கொட்டுற தொழிலா இருக்கும்னு என்ன கேரண்டி? ட்ரெண்ட் ட்ரெண்டுனு அடிக்கடி சொல்லுவியே, இந்த ட்ரெண்ட் என்னைக்கு வேணாலும் மாறும்… இதை மனசுல வச்சுக்க”

ஒரு தந்தையாகத் தனது மனக்குமுறலைக் கொட்டித் தீர்த்த தந்தையிடம் என்ன பேசவேண்டுமெனத் தெரியவில்லை முகிலனுக்கு.

ஆனால் வழக்கறிஞர் மனுவேந்தன் வேகமாகச் செயலாற்றினார். சொன்னபடியே திறமையான எதிக்கல் ஹேக்கர் ஒருவரை வைத்து முகிலனின் சேனலில் பதிவேற்றப்பட்ட ஆபாச வீடியோ டீப் ஃபேக் தொழில்நுட்பம் மூலம் முகிலனின் முகத்தை வைத்து மாற்றியமைக்கப்பட்டதென வழக்கின் முதல் ஹியரிங்கிலேயே நிரூபித்தார்.

சம்பந்தப்பட்ட பெண்ணும் தற்கொலை முயற்சிக்குப் பிறகு கொடுத்த வாக்குமூலத்தில் தானும் காதலனும் ஒன்றாக இருந்த வீடியோவை யாரோ மாற்றியமைத்து முகிலனின் யூடியூப் சேனலில் பதிவேற்றியிருக்கிறார்கள் என்று கூறிவிட முகிலன் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

முகிலனின் யூடியூப் சேனலில் வீடியோவைப் பதிவேற்றிய நபர் யாரென்று கண்டறியும்படி காவல்துறைக்கு ஆணையிட்டு முகிலனை விடுவித்தார் நீதிபதி.

வாழ்நாள் முழுக்க நீளுமோ என்று பாரிவேந்தன் பயந்தபடி இல்லாமல் ஒருவாரத்தில் வழக்கு முடிவுக்கு வந்ததற்காக ரஞ்சனா எல்லா குலதெய்வத்துக்கும் பொங்கல் வைக்க கால அட்டவணை தயாரிக்க ஆரம்பித்தார்.

பாரிவேந்தனோ ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு மனைவியிடம் தன் முடிவைத் தெரிவித்தார். அதைக் கேட்டதும் ஐயோவென அலறியவன் முகிலன் மட்டுமே!

அவர் அதிர்ச்சியூட்டும் விதமாக எதையும் சொல்லவில்லை.

“வயசுக்கு அதிகமா சம்பாதிக்குறான்.. இவன் சார்ந்திருக்குற தொழிலும் கொஞ்சம் டேஞ்சரானது ரஞ்சி… இப்பிடியே விட்டா பையன் நம்ம கைய மீறி போயிடுவான்… இந்த ஒரு கேசுக்கே நம்ம ஊருக்குப் போனோம்னா சொந்தக்காரன்லாம் என்ன பேச்சு பேசுவானோனு நொந்துக்கிட்டிருக்கேன் நான்… இவனை இப்பிடி ஃப்ரீயா விட்டோம்னா இன்னும் ஏதாச்சும் பிரச்சனைல சிக்கி வைப்பான்… அதனால முகிலனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிடலாம்னு முடிவு பண்ணிருக்கேன்”

அவர் சொன்னதில் ரஞ்சனாவுக்கு மறுப்பேதும் இல்லை. ஆனால் முகிலனுக்கோ இப்போது திருமணம் செய்துகொள்வதில் சிறிதும் உடன்பாடில்லை. அதை வெளிப்படையாகவேச் சொல்லிவிட்டான்.

“இந்தக் கேசுக்கும் கல்யாணத்துக்கும் என்னப்பா சம்பந்தம்? இன்னும் நாலு வருசம் போகட்டும்” என அவன் மெதுவாக ஆரம்பிக்கவும்

“என் முடிவை ஏத்துக்காதவங்க இப்பவே வீட்டை விட்டுப் போகலாம்… இன்னொரு தடவை நம்ம குடும்பத்தோட மானமரியாதை மீடியால போறதை என்னால பொறுத்துக்க முடியாது ரஞ்சி” என்று பிடிவாதமாக அவர் பேசியதில் மனைவி மகன் இருவரும் கப்சிப்.

மகன் அங்கிருந்து போனதும் மனைவியிடம் தன் முடிவு குறித்து வருத்தமா என வினவினார் பாரிவேந்தன்.

“அதுல்லாம் இல்லங்க… நம்ம முகில் ரொம்ப விளையாட்டுப்பையனா இருக்கான்னு போன வாரம் கால் பண்ணுனப்பவே என் தங்கச்சி சொன்னா… சவிக்குட்டி இவனோட இன்ஸ்டா கமெண்டை பாத்துட்டு அவ கிட்ட அண்ணா ப்ளேபாய் ஆகிட்டான்னு சொல்லி சிரிக்குதாம்… இப்ப திருஷ்டி கழிப்பு மாதிரி இந்தக் கேஸ் வேற… நமக்கு நம்ம புள்ளைய பத்தி தெரியும்… ஆனா சொந்தக்காரங்க வாய் சும்மா இருக்காதுங்க… அவன் விசயத்துல நீங்க என்ன செஞ்சாலும் எனக்குச் சம்மதம்”

அவர்களின் அறையிலிருந்து வெளியே வந்து ஈடனில் தஞ்சமடைந்த முகிலனுக்கோ தலையை எங்கே முட்டிக்கொள்ளலாமென்ற மனநிலை.

அவன் மனதளவில் அதிர்ந்து போயிருந்தான். காவல்நிலையம், நீதிமன்றம் என பொய்யான பழிக்காக அலைந்ததால் உண்டான அதிர்ச்சி அல்ல அது!

தனது சேனலில் பதிவேறியிருந்த ஆபாச வீடியோவில் யாரோ ஓரு பெண்ணுடன் இணைந்திருக்கும் ஆண்மகனின் முகத்திற்கு பதில் தன் முகத்தைக் கண்டதும் வந்த அதிர்ச்சி அது!

எல்லா ஆண்மகன்களும் காணும் பெண்களை எல்லாம் படுக்கையில் எப்படி இருப்பாள் என யோசிப்பவர்கள் அல்ல!

விரும்பிய பெண்ணோடு இணையும் முதல் தருணம் ஆண்களுக்கும் பொக்கிஷம் போல தான்!

முகிலனின் மனதிலும் வயதுக்கே உரித்தான ஆசைகள் உண்டு! தனக்கானவளுக்கான சில கனவுகள் உண்டு!

அது எல்லாவற்றையும் சுத்தமாகத் துடைத்துப் போட்டுவிட்டது யாரோ ஒரு பெண்ணுடன் அவன் இருப்பது போல சித்தரிக்கப்பட்ட அந்த ஆபாச வீடியோ. ஏனோ கண்ணை மூடினாலே அந்த வீடியோ தான் நினைவுக்கு வந்தது அவனுக்கு.

அந்த நினைவு வந்தாலே அருவருப்பு கூடிப்போனது. அன்னையைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்கவே தயங்கினான் எனலாம்.

இப்படிப்பட்ட மனநிலையில் இருப்பவன் கல்யாணம் என்றால் குதிக்கவா செய்வான்? அதிரத் தானே செய்வான்! கவலையோடு ஈடனின் வடக்கு பக்கம் மலர்ந்த பியோனி மலர்களைப் பார்த்தவண்ணம் நின்றான் அவன்.

அதே நேரம் மேகவர்ஷிணியோ முகிலனின் மீது எந்தத் தவறுமில்லை என மாவட்ட நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு சம்பந்தப்பட்ட செய்தி வீடியோவைத் தந்தையிடம் காட்டிக்கொண்டிருந்தாள்.

அவரும் அதைக் கேட்டுவிட்டு “இந்தக் காலத்துல பொண்ணுங்க மட்டுமில்ல பசங்களும் கவனமா தான் இருக்கணும்… இல்லனா அவங்களையும் இப்பிடி கோர்ட் கேசுனு இழுத்தடிச்சு கௌரவத்தைச் சிதைச்சிடுவாங்க… பாவம் அந்தப் பையன்” என்று முகிலனுக்காகக் கவலைப்பட்டுவிட்டு அடுத்த வேலையைக் கவனிக்கப் போய்விட்டார்.

மேகவர்ஷிணி செய்த அடுத்த காரியம் அந்த செய்தி இணைப்பை அவளது தோழிக்கு வாட்சப்பில் அனுப்பியது தான்.

“நீ தான் அந்த க்ளவுட்மேனை மெச்சிக்கணும் மேகா… அவன் சரியான ஃப்ளர்ட்… பொண்ணுங்க கமெண்டுக்கு மட்டும் வழிய வந்து ரிப்ளை பண்ணுவான்… சரியான ஜொள்ளு… அவன் கட்டாயம் ரூம் போட்டு இந்தக் காரியத்தைச் செஞ்சிருப்பான்… அவன் ஃபேன்ஸ் மீட்-அப் வைக்குறப்ப எவளுக்கோ ரோஸ் செடி குடுக்குறதா சொன்னானாம்… இவளுக்குப் பிள்ளை குடுக்குறதா சொல்லிருப்பான் போல… அதான் ரூமுக்குக் கூட்டிட்டுப் போய் காரியத்தை முடிச்சிருக்கான்” என்று முகிலன் கைதான தினத்திலிருந்து அவனைப் பற்றி அவதூறாகப் பேசினாள் அந்தப் பெண்.

“அடியே தர்ஷா! இப்ப என்னடி சொல்லுற? முகில் மேல எந்தத் தப்புமில்ல… அது டீப் ஃபேக் டெக்னாலஜில எடிட் பண்ணுன வீடியோ… தேவையில்லாம அவனைக் காமக்கொடூரன், கேசனோவா ரேஞ்சுக்கு பழிச்சு பேசுனல்ல… இப்ப மரியாதையா என் கிட்ட சாரி கேளு” என்று தட்டச்சு செய்து அவள் அனுப்ப

“சரிடி நல்லவளே! நான் தெரியாம அவனைத் தப்பா பேசிட்டேன்… நீயே சொல்லு, ஒருத்தன் பப்ளிக் கமெண்ட்ல பொண்ணுங்க கிட்ட இவ்ளோ உருகி உருகி ஃப்ளர்ட் பண்ணுனான்னா அவனை எப்பிடி நம்ப முடியும்? நீ நம்புவியாடி அவனை?” என்று மன்னிப்பு கேட்டாலும் தன் கெத்தை விட்டுக்கொடுக்காமல் பேசினாள் அந்த தர்ஷா.

உடனே வீறுகொண்டு தட்டச்சு செய்ய ஆரம்பித்தாள் மேகவர்ஷிணி.

“கட்டாயம் நம்புவேன்டி.. ஓப்பனா ஃப்ளர்ட் பண்ணுறவன்லாம் மோசமானவனா இருக்கணும்னு என்ன கட்டாயம்? கமெண்ட்ல ரொம்ப மரியாதையா பேசிட்டு இன்பாக்ஸ்ல இண்டிமேட் டாக்ஸ் பேசுறவனுங்க, செக்ஸ் சாட்டுக்குக் கூப்பிடுறவனுங்க எத்தனை பேர் இருக்கானுங்க தெரியுமா? சும்மா நீ முகிலைக் குறை சொல்லாத… ஒழுங்கா மனப்பூர்வமா மன்னிப்பு கேளு”

தர்ஷா மன்னிப்பு கேட்கும் வரை விடவில்லை அவள். அவளிடம் பேசிய பிறகு சந்தோசமாகவும் உணர்ந்தாள். இந்த ஏழு நாட்களில் முகிலன் கைதான தினத்திலிருந்து அவள் மனம் சோகத்தில் மூழ்கியிருந்ததை அவளும் மோகனரங்கமும் மட்டுமே அறிவார்கள்!

அந்த ஆபாச வீடியோவை வைத்து வந்த ட்ரால்களை முகிலன் எப்படி எதிர்கொள்வானோ என்ற கவலையும் அவளுக்கு இருந்தது. அவன் தகுந்த தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியோடு அனைத்து பழிகளையும் உடைத்தெறிந்ததில் நிம்மதியடைந்தவள் இனி ட்ரால் சேனல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வண்ணம் முகிலன் என்ன செய்வானென காத்திருக்க ஆரம்பித்தாள்.

அவன் மீதான அபிமானம் மேகவர்ஷிணிக்கு இப்போதும் குறையவில்லை என்பது தான் இங்கே ஆச்சரியம். கூடவே அவன் மீது நம்பிக்கையும் உண்டானது.

யாரோ ஒருவன்! ஒரே ஒரு முறை பார்த்திருக்கிறாள்! அவனது பேச்சு அவளது உயிரைக் காப்பாற்றியிருக்கிறது! அதற்காக இவ்வளவு நம்பிக்கையா என நீங்கள் கேட்கலாம்!

சில அபிமானங்களுக்குக் காரணங்கள் தேவையில்லை. சில நம்பிக்கைகளுக்குத் தர்க்கரீதியான விளக்கங்கள் அவசியமில்லை.

கட்டாந்தரையாக கிடக்கும் இடத்தில் மழை பெய்ததும், அங்கே இயற்கையாக செடிகளும் புல்லும் முளைக்குமே அப்படி தான் இந்த அபிமானங்களும் நம்பிக்கையும். சிலர் மீது மட்டும் இயற்கையாகவே தோன்றும். எளிதாகப் புரியும்படி சொல்லவேண்டும் என்றால் ‘ஆர்கானிக்’காகத் தோன்றும். அப்படிப்பட்டது தான் முகிலன் மீதான மேகவர்ஷிணியின் நம்பிக்கையும் அபிமானமும்.

20 thoughts on “MM 4”

  1. M. Sarathi Rio

    மேகத்தின் மோனம்..!
    (அத்தியாயம் – 4)

    ஓ மை காட்…! இந்த சோஷியல் மீடியாவுக்குத் தான் என்னவொரு ஜெனரஸ் மைண்ட் பாருங்க. இதுல மட்டும் தான், எந்தவொரு விஷயமா இருந்தாலும் ஆண் பெண்ங்கிற பார்ஷியாலிட்டியே காட்டாம
    கிபி கிழின்னு வைச்சு கிழிச்சுடறாங்கப்பா. பாவம், இதுல மாட்டிக்கிட்டவங்க பாடு தான், பெரும்பாடு.

    நல்லவேளே, நம்ம முகிலன்
    இதுல இருந்து தப்பிச்சு எப்படியோ வெளியே வந்திருந்தாலும், அவங்கப்பா
    சொல்றமாதிரி, ஒருத்தடவைன்னாலும் பலதடவைன்னாலும் பேரு கெட்டது, கெட்டது தானே…?
    ஆனா, மேகாவோட நம்பிக்கைக்கு இந்தளவுக்கு பாத்திரமாவான்னு அவனே எதிர்பார்த்திருக்க மாட்டான்.
    அவளோட இந்த அபரித நம்பிக்கை முகிலனுக்கு தெரிய வருமா..? தெரிஞ்சாலும் நம்புவானா…? இல்லை அதிர்ச்சி அடைவானா…?

    CRVS (or) CRVS 2797

  2. Avatar

    Mohanarangan sonnathu pola ippo iruku ah kalam ponnu paiyan nu endha difference um illama indha mathiri prachanai vara than seiyuthu nalla vela mugilan.sikiram indha prachanai la irundhu veliya vandhutan aana avan manasum.avolo sikkiram ah veliya vandha ok

  3. Kalidevi

    Super super epi ellathaium kandu pidichi veliya vanthalum avan ninaikira mari aanukum oru manasu iruke athula kattitu vazha pora ponnu kuda iruka mari pota kastam tha. Paravala mega purinjitu iruka.

  4. Avatar

    சூப்பர்👌👌👌 இந்த காலத்தில் பையன் களும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டி தான் இருக்கு. ஒருவழியா இவன் மேல தப்பில்லை ன்னு நிரூபிச்சிட்டாலும் மனசளவுல அவனுக்கு ஒரு உறுத்தல் இருந்துண்டே தான் இருக்கும்

  5. Avatar

    Super sis nice epi 👌👍😍 social media la oruthana enna venumnalum pannidranga pa pinnadi avanga enna kashta paduvaanga nu yosikiradhe Ella🙄

  6. Avatar

    ஆனாலும் அதிகம் பழகாத முகி மேல மேகாவோட என்னை நம்பிக்கை வேற லெவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *