Skip to content
Home » MM 6

MM 6

ஒருத்தரைக் காதலிக்க பெருசா காரணம் எதுவும் தேவை இல்லனு பொதுவா சொல்லுவாங்க… என்னைக் கேட்டா காரண காரியம் இல்லாம நம்ம வாழ்க்கைல எதுவுமே நடக்குறதில்ல, அப்ப காதல் மட்டும் காரணமில்லாம வந்துடுமானு பதிலுக்குக் கேள்வி கேப்பேன்… அம்மா அப்பாவ தவிர வேற ஒரு நபரை நமக்குப் பிடிக்கணும்னு ஸ்ட்ராங்கான காரணம் இருக்கணும்… எனக்கு முகிலை இந்தளவுக்குப் பிடிச்சிருக்குறதுக்குக் காரணம் அன்னைக்கு அவனோட குரல் சரியான நேரத்துல என் காதுல விழலனா இன்னைக்கு நான் உயிரோட இருந்திருக்கமாட்டேன்… காலம் முழுக்க என் அப்பா தனிமைல வாடுறதுக்குக் காரணமாவும் ஆகிருப்பேன்… அப்பிடி ஒரு அனர்த்தம் நடக்க விடாம தடுத்தவனை நான் காதலிக்குறதுல தப்பு எதுவும் இல்லை தானே?

                                                                 -மேகா

மேகவர்ஷிணி குதூகலத்தின் உச்சத்தில் இருந்தாள். காஷ்மீரில் தூரத்தில் பார்த்த வதனம் மிகவும் அண்மையில்! இத்தனை ஆண்டுகள் மொபைலின் தொடுதிரையில் மட்டும் கண்டுகழித்தவனை இப்போது வெகு அருகில் பார்க்கிறாள்.

அதுவும் இருவரது தோள்களும் உரசும் அளவுக்கு அருகருகே அமர்ந்து ஒரே காரில் செல்வது எல்லாம் மேகவர்ஷிணி கனவில் கூட நினைத்துப் பார்த்திடாத தருணம்!

அவளது குதூகல மனநிலைக்கு மாறாக முகிலனின் மனம் குழம்பிய குட்டையாய்க் கிடந்தது.

இருக்கிற பிரச்சனை, மனவுளைச்சல் போதாதென புதிதாய் வந்து காதலைச் சொன்னவள் அவனுக்கு இன்னொரு பிரச்சனையாகத் தெரிந்தாள்.

“ஐ லவ் யூ முகில்… என் மனசு ஃபுல்லா இப்ப நிரம்பியிருக்குற லவ்வை உனக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணி அதை நீ ஃபீல் பண்ணுறதை லைஃப் லாங் உன் கூட இருந்து பாக்கணும்னு ஆசையா இருக்கு… நீ கொஞ்சநேரம் முன்னாடி சொன்னியே, என்னால ஒரு பொண்ணைக் காதலோட பாக்க முடியுமானு சந்தேகமா இருக்குனு… அந்த வார்த்தைய பொய்யாக்கணும்னு எனக்குள்ள ஏதோ ஒன்னு துடிக்குது முகில்… ஐ திங் ஐ அம் மேட்லி இன் லவ் வித் யூ”

அவள் சொன்ன கணத்தில் அதிர்ந்தவன் தான்! ஆனால் அதிர்ந்தே இருக்க முடியாத சூழல். எனவே சமாளித்து இலகுவாகச் சிரிப்பொன்றை உதிர்த்தவன் நவநாகரிகயுவனாக எழுந்து நின்று இடை வரை குனிந்து “தட்ஸ் மை ப்ளஷர் ப்ரின்சஸ்” என்றான். இதெல்லாம் அனிச்சை செயல் போல தானாய் வந்து தொலைத்தது அவனுக்கு.

மனம் என்னவோ “அடேய் அடுத்த வைரல் வீடியோக்கு ரெடியாகுறியாடா? நமக்கு எதுக்கு முகிலு இந்தக் காதல் கீதல் எல்லாம்?” என்று அறிவுரை சொன்னது.

அவனது பதிலில் வந்திருந்த அவனது விசிறிகளோடு ரம்யாவும் சிரிக்க காதலைச் சொன்ன மேகவர்ஷிணியோ மேகக்கூட்டங்களின் நடுவே மிதப்பது போல உணர்ந்தாள்.

ஒருவித அசௌகரியமான சூழல் அங்கே நிலவ, ரம்யா தனது தொகுப்பாற்றலால் அச்சூழலை இயல்புக்குக் கொண்டு வந்து நேர்க்காணலை முடித்துகொண்டாள்.

நேர்க்காணலின் முடிவில் முகிலனின் காதில் ராம் ஏதோ சொல்ல அவன் ரம்யாவிடம் மேகவர்ஷிணியைத் தன்னுடன் அழைத்துச் செல்வதாகக் கூறினான்.

“அதுக்குள்ளவா சார்? ஹோட்டல்ல எங்க அட்மின் கூட லஞ்ச்,…”

“இன்னொரு நாள் இன்னொரு இண்டர்வியூ பண்ணாமலா போயிடுவேன்? அப்ப உங்க டீமோட சேர்ந்து லஞ்ச், டின்னர் ரெண்டுமே சாப்பிடுறேன்… இப்ப அந்தப் பொண்ணை என் கூட அனுப்பி வைங்க…  நான் தப்பான எண்ணத்துல சொல்லல… ஷீ நீட்ஸ் ப்ராப்பர் அட்வைஸ்… அதை நான் சொன்னா தான் சரியா இருக்கும்”

ரம்யா ஒரு நொடி யோசித்தாள். பின்னர் மேகவர்ஷிணியை அழைத்து முகிலன் அவளை அழைப்பதாகச் சொல்லவும் எவ்வித தயக்கமுமின்றி கிளம்பினாள் அவள்.

“கொஞ்சம் கூட பயமில்ல?” என்ற ரம்யாவிடம்

“காதல் வந்துச்சுனா பயம் பறந்து போயிடும் ரம்ஸ் பேபி” என்று துள்ளலாகப் பதிலளித்தவள் அங்கே முகிலன் வரவும் அவனோடு உற்சாகமாகக் கிளம்பினாள்.

அதிலும் அவள் கார்க்கதவைத் திறக்க சிரமப்பட்டதால் முகிலனே திறந்துவிட அவனைக் கடைக்கண்ணால் பார்த்துவிட்டுக் காரினுள் சென்று அமர்ந்தாள்.

முகிலன் முன்னிருக்கைக்குப் போக எத்தனிக்கையில் “என் கூடவே உக்காரு முகில்” என்று அழைப்பு விடுத்தவளின் குரலில் இருந்த ஆர்வமா, உரிமையா எதுவோ ஒன்று அவனைப் பின்னிருக்கைக்கு இழுத்துவந்து அவளருகே அமர வைத்தது.

கார் கிளம்பியதும் “உங்க வீடு எங்க இருக்கும்மா?” என வினவினான் ராம்.

“திருவான்மியூர் அண்ணா… சித்ரகுளம் ஸ்ட்ரீட்… நீங்க போங்க… நான் இடம் வந்ததும் ரூட் சொல்லுறேன்”

வீட்டின் சரியான லொகேசனை அவள் சொல்ல கார் வேளச்சேரியிலிருந்து திருவான்மியூர் நோக்கி செல்லத் துவங்கியது.

அங்கே மௌனத்தின் ஆக்கிரமிப்பு அதிகமாக இருந்தது மேகவர்ஷிணிக்குப் பிடிக்கவில்லை.

முகிலனின் குழப்பத்தை அவள் அறியாள்!

அவ்வளவு நேரம் மௌனத்தால் பின்னிய வலையை தன் வார்த்தைகளால் கிழித்தெறிய ஆயத்தமானான் முகிலன்.

“நீ அங்க சொன்னதை நான் ஸ்போர்ட்டிவா எடுத்துக்குறேன்… நீ பேசுனது நாளைக்கு வைரல் ஆகி உன்னை வேற சேனல்ஸ் இண்டர்வியூக்கு கூப்பிட்டாங்கனா ஜஸ்ட் ஜோக் பண்ணுனேன்னு சொல்லிடணும் சரியா?”

மென்மையாக அவளுக்கு அறிவுரை கூறினான் முகிலன்.

மேகவர்ஷிணி இன்னும் “தட்ஸ் மை ப்ளஷர் ப்ரின்சஸ்” என்று அவன் சொன்ன தருணம் கொடுத்த இனிமையிலேயே மூழ்கியிருக்க முகிலனின் வார்த்தைகள் இப்போது அந்த இனிமையில் கசப்பைக் கலந்தன. அழகான கனவு கலைந்த எரிச்சல் அவளுக்கு.

“நான் எதுக்கு அப்பிடி சொல்லணும்? நீ கூட என் லவ்வை அக்செப்ட் பண்ணுன மாதிரி தானே பேசுன முகில்?”

“அந்த நேரத்துல நான் அப்பிடி சமாளிச்சது உன் ஃபியூச்சரை மனசுல வச்சு தான்… சோசியல் மீடியா எவ்ளோ டாக்சிக்னு உனக்குத் தெரியாதா? நீ லவ் யூ சொன்னதுக்கு நான் மட்டும் சமாளிப்பா எதுவும் சொல்லலைனா உன்னை கண்டெண்ட் ஆக்கி உனக்கு மனவுளைச்சலை உண்டாக்குவாங்க… உன் கேரக்டரையே கேவலப்படுத்துவாங்க… என்னோட டீப் ஃபேக் வீடியோ ப்ராப்ளம் உனக்குத் தெரிஞ்சிருக்கும்… நான் ஒரு  பையன்… அந்த ப்ராப்ளம் நடந்த சமயத்துல எனக்கே சில நேரம் ட்ரால் வீடியோஸ் பாக்குறப்ப சூசைடல் தாட்ஸ் வந்துச்சு” என அவன் சொல்லிக்கொண்டே போக திடுக்கிட்டு விழித்தாள் மேகவர்ஷிணி.

“வாட்? நீ தப்பு பண்ணாதப்ப உனக்கு ஏன் அப்பிடிலாம் தோணுச்சு முகில்?”

“சில வார்த்தைகள் நம்மளை அந்தளவுக்குப் பாதிச்சிடும்”

உணர்வின்றி சொன்னவன் வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். மேகவர்ஷிணி சில நொடிகள் மௌனம் சாதித்தாள்.

பின்னரோ “ஃபர்ஸ்ட் டைம் எனக்கு ஒருத்தன் மேல லவ் வந்திருக்கு.. அதை முகம் தெரியாத ஆளுங்களுக்காக நான் ஏன் இல்லனு சொல்லணும்? யாரோ எவரோ என்னமோ நினைச்சா எனக்கென்ன வந்துச்சு?” என்று அசட்டையாகத் தோளைக் குலுக்கி அவனை அயர வைத்தாள்.

முகிலன் அவளை ஆச்சரியமாகப் பார்த்தான்.

“லைஃப் இஸ் நாட் ஈசி மேடம்” என்றான் கிண்டலாக.

“அட் த சேம் டைம் தட் இஸ் நாட் சோ ஹார்ட் டு லிவ் முகில்” என்றாள் அவள் புன்னகைத்தபடியே.

“லுக்! நான் ஆல்ரெடி ஏகப்பட்ட குழப்பத்துல இருக்கேன்… நீ வேற புதுசா என் லைஃப்ல வந்து குழப்பத்தை உண்டாக்காத… உன்னை யாருனு கூட எனக்குத் தெரியாது… மேற்கொண்டு பிரச்சனை வேற விதமா திசை மாறிடக்கூடாதுனு தான் உனக்கு அட்வைஸ் பண்ணிட்டிருக்கேன்… ஆக்ஸ்வலி இது என் கேரக்டரே இல்ல”

“தெரியுமே… நீ ரொம்ப ஜோவியல்னு தெரியும்… அதுவும் பொண்ணுங்க கிட்ட ரொம்ப்ப்ப்ப ஜோவியல்னு கூட தெரியும்… நான் உனக்குக் கமெண்ட் பண்ணிருக்கேன்… ஒரே ஒரு தடவை நீ எனக்கு ரிப்ளை பண்ணுன… அந்த ஸ்க்ரீன்ஷாட் என் கிட்ட பத்திரமா இருக்கு முகில்… பாக்குறியா?”

கேட்டதோடு ஆர்வமாக மொபைல் கேலரியில் ஸ்க்ரீன்ஷாட்டைத் தேட ஆரம்பித்தவளைப் பார்த்து முகிலன் மானசீகமாகத் தலையில் அடித்துக்கொண்டான்.

என்ன பெண் இவள்? நான் சொல்ல வருவதைப் புரிந்துகொள்ளாமல் குழந்தைத்தனமாக நடந்துகொள்கிறாள்!

“இங்க பாரு”

சுரத்தே இல்லாமல் வாங்கி பார்த்தான் முகிலன். தேர்வுக்காக வாழ்த்து கேட்டிருந்ததும் அவன் பதில் அளித்ததும் ஸ்க்ரீன்ஷாட்டில் இருந்தது. இதெல்லாம் அவனுக்கு நினைவு கூட இல்லை என்பது போன்ற முகபாவனையோடு மொபைலை மேகாவிடமே திருப்பியளித்தான் முகிலன்.

இந்தப் பெண்ணைத் தவிர்த்தே ஆக வேண்டும். அதுதான் இவளது வருங்காலத்துக்கும் தனக்கும் நல்லதென தீர்மானித்தவன் அதை மனதில் வைத்தே பேச்சை ஆரம்பித்தான்.

“இந்த ஸ்க்ரீண்ஷாட்ல சொன்ன மொமண்ட் கூட எனக்கு ஞாபகம் இல்ல… இவ்ளோ ஏன் எனக்கு உன் பேர் கூட தெரியாது… ஆனா…”

“மேகா… மேகவர்ஷிணி மோகனரங்கம்”

“சரி… இங்க பாரு மேகா! நான் சோசியல் மீடியால பாக்குற எத்தனையோ ஃபேன்ஸ்ல நீயும் ஒருத்தி… அதை தாண்டி உன் மேல எனக்கு எந்த ஃபீலிங்கும் இல்ல… இனியும் வராது… எந்தப் பொண்ணு மேலயும் வராது… உனக்கு என் நிலமை புரியுதா இல்லையா? ஒரு பெரிய ஷாக்ல இருந்து நான் வெளிய வரணும்… அதுக்கு எனக்குக் கொஞ்சம் ஸ்பேஸ் வேணும்… நீ சொன்ன லவ்ங்கிற வார்த்தை நார்மலா இருக்குறவனையே மூச்சு திணற வச்சிடும்… நான் கட்டாயம் அதுக்குலாம் செட் ஆக மாட்டேன்”

அவன் தடுமாற்றத்துடன் சிகை கோதி சமாளித்தபடி பேசியதில் மனவுளைச்சலில் இருக்கிறான் என்பது புரிந்தது மேகாவிற்கு. அவனை மடியில் சாய்த்து தலை கோதி ஆறுதல் சொல்ல மனம் பரபரத்தது.

ஒரு காலத்தில் எனக்கு மனதைரியத்தை அளித்தவன் இவன்! இவனைத் தனியே விடுவது தான் நான் இவனுக்கு ஆற்றும் நன்றிக்கடனா?

காதலைத் தவிர்த்து ஏனைய கோணங்களிலும் யோசித்துப் பார்த்தாள் மேகவர்ஷிணி. ஏனோ இக்கணம் அவனை விலகி நின்றால் நன்றிக்கெட்டத்தனமாக இருக்குமென மனதில் பட்டது.

அவன் சொல்வதைக் கேட்கக்கூடாதென தீர்மானித்தாள் அப்போதே.

“எல்லாம் அதிர்ச்சிக்கும் ஒரு வைத்தியம் இருக்கும் முகில்… உன்னோட அதிர்ச்சிக்கான மருந்தா என் லவ் இருக்கும்னு நம்புறேன்”

முகிலன் அவளைக் கடுப்பாகப் பார்த்தான்.

“டேய் காரை நிறுத்துடா”

ராமிடம் கத்தினான். காரும் நின்றது. கதவைத் திறந்து இறங்கி காருக்குள் இருந்தவளைத் தீயாய் முறைத்தான்.

“இறங்கு” என்றான்.

மேகவர்ஷிணி மலங்க மலங்க விழிக்கவும் கையைப் பிடித்து இழுத்து சாலையோரமாக இறக்கியவன் எச்சரிக்கும் தொனியில் பேச ஆரம்பித்தான்.

“இதுதான் நீயும் நானும் பாத்துக்குறது கடைசி முறை… முகில்னு ஒருத்தனைப் பாத்தது, காதல் கண்றாவினு உளறுனதை எல்லாம் இந்த செகண்ட்ல இருந்து நீ மறந்துடணும்… மறக்குற… நீ யாருனு எனக்கு இப்ப வரைக்கும் தெரியாது… தெரிஞ்சிக்க விருப்பமுமில்ல… கிளம்பு”

அப்படியே அவளை விட்டுவிட்டுக் காரிலேறி கதவை அடைத்துக்கொண்டான்.

மேகவர்ஷிணி திகைப்பாகப் பார்க்கும்போதே கார் கிளம்பிப்போய்விட்டது.

நல்லவேளையாக வீட்டுக்கு அருகே தான் இறக்கி விட்டிருந்தான். எனவே பொடிநடையாக நடந்து வீடு போய்ச் சேர்ந்தாள் அவள்.

முகிலன் சொல்வது போல தான் குழந்தைத்தனமாகத்தான் நடந்துகொள்கிறோமோ? அவனது துயரைத் தீர்க்கக் கிடைத்த வாய்ப்பாக எண்ணித்தான் காதலைத் தன் மனம் ஏற்றுக்கொண்டதோ?

யோசனைகளோடு வீட்டிற்குள் காலடி எடுத்துவைத்தவள் மோகனரங்கம் ஹால் சோபாவில் தூங்கி வழிந்தபடி அமர்ந்திருக்கவும் முகிலனை மறந்து தந்தையை எழுப்ப ஓடினாள்.

அதே நேரம் காரில் போய்க்கொண்டிருந்த முகிலனோ தலையைக் கைகளால் தாங்கியவண்ணம் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தான். ராம் காரை ஓட்டியபடி அவனை ஓரக்கண்ணால் பார்த்தான்.

“அந்தப் பொண்ணைப் பாதி வழில இறக்கி விட்டுட்டு வந்தது தப்புடா மச்சி”

நிமிர்ந்து அமர்ந்தவன் “வேற என்ன பண்ணிருக்கணும்? அவ கூட டூயட் பாடிருக்கணுமா? ப்ராக்டிக்கலா யோசி ராம்… அந்தப் பொண்ணுக்கு இன்னைக்கு நான் இண்டர்வியூல பேசுன விசயத்தைக் கேட்டதும் என் மேல சிம்பதி வந்துடுச்சு… அதை லவ்னு தப்பா நினைச்சு என் கிட்ட ப்ரபோஸ் பண்ணிருக்காடா… இப்ப தான் காலேஜ் தேர்ட் இயர் படிக்குறா… மிஞ்சி மிஞ்சி போனா இருபது வயசு இருக்கும்… அவ இம்மெச்சூர்டா பேசுறதை நான் சீரியசா எடுத்துக்கணுமா?” என்று கேட்டதும் ராமின் புருவங்கள் ஆச்சரியத்தில் உயர்ந்தன.

“இந்த விவரம் எல்லாம் உனக்கு யார் சொன்னாங்க? அவ காலேஜ் ஃபைனல் இயர்னு உனக்கு எப்பிடி தெரியும்?”

“லிட்டில் மன்ச்கின்” என்று சொல்லிவிட்டு பெருமூச்சுவிட்டான் முகிலன்.

“அவ காட்டுன ஸ்க்ரீன்ஷாட் பாத்ததும் அவளோட ஐடியை ஒரு நாள் செக் பண்ணுனது ஞாபகம் வந்துச்சு… அதுல காலேஜ்ல எடுத்த வீடியோசும் இருந்துச்சு.. இன்னும் ஸ்கூல் பொண்ணு மெண்டாலிட்டில இருக்குற கேர்ள் அவ… மோர் ஓவர், இப்ப என் மைண்ட் ஃபுல்லா என் மேல விழுந்த அவதூறை எப்பிடி போக்கலாம்ங்கிறதுல தான் இருக்கு… லவ் பத்தி யோசிக்க எனக்கு டைம் இல்ல மச்சி”

கவலையாய் முகிலன் உரைத்ததும் ராமுக்கும் நண்பன் செய்ததில் உள்ள நியாயம் புரிந்தது. காருக்குள் மீண்டும் மௌனத்தின் ஆட்சி தொடர அது பைபாஸ் சாலையில் வேகமெடுத்து ஓட ஆரம்பித்தது.

17 thoughts on “MM 6”

  1. M. Sarathi Rio

    மேகத்தின் மோனம்..!
    (அத்தியாயம் – 6)

    எஸ்.. ஒருத்தரை நமக்கு பிடிக்க காரண காரியம் தேவையில்லை. எப்படி ஒரு சின்ன கல் துண்டை கண்ணுக்கு முன்னாடி வைச்சிட்டு பார்த்தா பெரிசா தெரியுமோ… அதே மாதிரி தான்
    நாம நேசிக்கிறவங்க சொல்ற ஒரே ஒரு வார்ததையிலேயே, அது நல்லதாவும் இருக்கலாம், கெட்டதாவும் இருக்கலாம்… நம்ம மைண்ட் அதுலேயே நின்னுடலாம். அந்த நிமிஷம் நம்ம லைஃப் கலர்ஃபுல்லா, மீனிங்ஃபுல்லா மாறிடலாம்.
    இதையே சிம்பிளா சொல்லனும்ன்னா, ஒரு வார்த்தை கொல்லும், ஒர வார்த்தை வெல்லும் (நில்லும்).

    அந்த மாதிரி தான் மேகாவுக்குள்ளும், அன்னைக்கு அவன் சொன்ன அந்த வார்த்தைகள்
    அவளையும், அவளோட அப்பாவையும் உசிரோட காப்பாத்திச்சுன்னா, இன்னைக்கு அவன் படுற கஷ்டத்தை பார்க்க முடியாம,
    தன்னையும் அறியாம
    வார்த்தைகள் மூலமா தன் காதலையும், விருப்பத்தையும் வெளிப்படுத்திருக்கா. அவளோட பாய்ண்ட் ஆஃப் வ்யூல அவ பண்ணது கரெக்ட்ன்னா…
    அவனோட பாய்ண்ட் ஆஃப் வ்யூல அவன் அவளை அவாய்ட் பண்ணதும் கரெக்ட் தான்.
    இல்லைன்னா, இதுவும் டாக்சிக்
    இஸ்யூவா மாற வாய்ப்பு இருக்குது தானே…? ஏற்கனவே ரோஸ் கார்டனையே கொடுக்கிறேன்னு சொன்னதுக்கே, பெருசா இஸ்யூஸ் போயிட்டிருக்கிறச்ச,
    இப்ப இவளோட லவ் ப்ரோபஸலை பார்த்துட்டு,
    பார்க்குற பொண்ணெல்லாம்
    இவனுக்கு லவ் ப்ரபோஸல்
    பண்ணுறாங்கன்னும், இவனும்
    பகிரங்கமா அக்செப்ட் பண்ணிக்கிறான்ங்கற மாதிரியும்…. நெக்ஸ்ட்
    ஃபேக் வீடியோ வைரல் ஆனாலும் சொல்றதுக்கில்லை.
    என்ன சொல்றிங்க.

    மீடியா உலகமே பொல்லாதது…
    இல்லைங்கிறதை இருக்கிறதாவும், இருக்கிறதை
    கண்ணு, காது, வாய், மூக்குன்னு அட்டேச் பண்ணி வைச்சு இன்னும் ஓவரா டெவலப் பண்ணி, டெலிவரியும் பண்ணிடும்.
    பொல்லாத உலகம டா சாமி..!

    CRVS (or) CRVS 2797

  2. Kalidevi

    Antha edathula vachi solli iruka kudathu meha rna tha avan varthai una kapathi irunthalum avanuku nee thaniya atha solli pesi irukalam tak nu Yen unaku athu love nu thonuchi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *