புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

நீயின்றி வாழ்வேது-9

நீயின்றி வாழ்வேது-9

சென்னை வந்திறங்கியதிலிருந்து விஷாகன் தீம்பிழம்பை விழுங்கியவனாய் திரிந்தான்.

உதயகுமாரின் சிம்மை தன்னிடமே வைத்து கொண்டான் விஷாகன். தனது கட்டுப்போட்ட கையை முன்னும் பின்னும் பார்த்து அடுத்து என்ன முடிவெடுப்பதென குழம்பினான்.

தந்தையை அடித்து துரத்திவிட்டு இனி அன்னை, தம்பி என்று ஒரு குடும்பமாக இருந்துவிட்டு போகலாம். எத்தனை நாளைக்கு வேலி போட்டு காவல் பார்ப்பது? ஏற்கனவே வேலி தாண்டி என்றோ சென்று விட்டாரே.!

முன்பென்றால் இந்த முடிவு தான் விஷாகன் திட்டவட்டமாய் எடுத்திருப்பான்.
ஆனால் விருஷாலியை கண்டதிலிருந்து இதனால் தன் திருமணம் தடைபடுமா என்று சிந்தித்தான்.

அவளை வேறு காதலிக்க துவங்கிவிட்டது இந்த கையளவு இதயம்.

சுகிர்தன் தானாக அண்ணன் அறைக்கு வந்தான்.

“அந்தாளுக்காக நீ ஏன் இரத்தகாயம் வர்ற அளவுக்கு குத்திக்கற அண்ணா.

ஒன்னு சொல்லட்டா… ஒருத்தன் பொண்ணு பின்னாடி போன அப்படியே விட்டுடணும். அவனை இழுத்து பிடிச்சி கட்டவே முடியாது. இரண்டு பசங்க தோளை தாண்டி வளர்ந்தும் அப்படியென்ன டேஸ்.. சாரி இந்த டேஸ்ல என்னவேன்னா பில் பண்ணிக்கோ.

உனக்கு மாதிரி எனக்கு கோபம் வரலைனு அர்த்தமில்லை. கைக்கு மீறி போன விஷயத்துல திரும்ப சரிப்படுத்தறது முடியாது.

அம்மாவே சகிச்சிட்டு அந்தாளோட ஒரே ரூம்ல இருக்காங்க.” என்று பெரியவனுக்கே பாடம் நடத்த துவங்கினான்.

விஷாகன் தம்பியை ஒரு முறை தீர்க்கமாக பார்க்க, சுகிர்தன் தொடர்ந்தான்.

“அவர் போனா போகட்டும். நம்மளை இனி அதை பண்ணாதே, இதை பண்ணாதேனு ஆடமுடியாது.

நாம அம்மாவை அன்பா பார்த்துப்போம்.” என்று கூறவும் ‘நிறுத்துடா’ என்பது போல கையை காட்டிவிட்டு மெத்தையில் அமர கூறினான்.

ஒருத்தன் தப்பு பண்ணி போய் தொலைனு நாம விட்டு கொடுக்கறது எப்படிப்பட்ட பாதைக்கு வழிவகுக்கும் தெரியுமா? அதே தப்பை அடுத்தவன் செய்தாலும் ஊர் உலகத்துல நடக்காததா? என்ற பேச்சை உலாத்த விடும்.

அப்பா எப்படியோ போகட்டும் அம்மாவை மட்டும் நாம பார்த்துக்கலாம்னு இருந்தா, இரண்டு பசங்க இருந்தும் அந்த அம்மாவுக்கு பிள்ளை இல்லைனு அர்த்தம் டா.

என்ன சொன்ன கை நழுவி போனா விட்டுடணும்னா? இரண்டாயிரம் ரூபா நோட்டு கையிலருந்து போனா அப்படியே பறக்க விட்டு வேடிக்கை பார்ப்ப? இரண்டாயிரம் வேண்டாம் டா. நூறு ரூபாய் நோட்டு பறந்தாலுமே ஓடிப்போய் அது குப்பையில இருந்தாலே திரும்ப போய் எடுப்ப, 

ஏன்… கையில போட்டிருக்கியே மோதிரம் அது டாய்லெட்ல பிளஸ் பண்ணிட்டு திரும்பறப்ப விழுந்தா கையை விட்டு எடுப்பியா? இல்லை தங்கம் தானே போனா போகுது. கண்ட கருமத்துல கையை விட்டு எடுக்கணும்னு யோசிப்பியா.” என்றதும் சுகிர்தன் முகம் கோணலாய் மாறியது.

முகத்தை அஷ்டக்கோணலா மாத்தாதே நிச்சயம் எடுப்ப, பிறகு நாலைந்து தடவை சோப்பு போட்டு கழுவுவ, இரண்டு மூன்று தடவை டெட்டால்ல அலசுவ, பெர்ப்யூம் எல்லாம் அடிச்சி உனக்கு சாட்டிபிகேஷன் ஆகறவரை சுத்தம் செய்வ, சாதாரண நகை பணத்திற்கே நாம விட்டு கொடுக்கறதில்லை.

அப்பாடா… அம்மாவோட புருஷன். உனக்கும் எனக்கும் இன்சியல் தந்தவர். இதே நாம சின்ன வயசுல தப்பு பண்ணினா காதை திருகி நல்வழிப்படுத்துவார். இப்ப அவர் தப்பு பண்ணிருக்கார். தாத்தா இல்லை… அப்பத்தாவிடம் சொல்லி இப்ப திருத்த முடியுமா? அவங்களுக்கு தெரிந்தா பொட்டுனு போயிடுவாங்க. நம்ம வளர்ந்து நமக்கு கல்யாணமாகற வரை உசிரோட இருக்கறதே அபூர்வம்.

தாத்தாயில்லாத குறையை நான் கையில எடுத்திருக்கேன். நீ நினைக்கிற மாதிரி அவரை மட்டும் அடிச்சி துரத்த முடியாது.” என்று புரிய வைக்கும் வகையில் முடித்தான் விஷாகன்.

“அந்தாளுக்கு என்ன பையன் பொண்ணு இருக்காங்களா ஏன் இவ்ளோ யோசிக்கற, எவளோடவோ போய் தொலையட்டுமே” என்று மீண்டும் அதே பல்லவி பாடினான் சுகிர்தன்.

விஷாகன் அந்தாளுக்கு பையனா பொண்ணா என்றதிலேயே இடிந்து நின்றான்.

‘ஏழு வயதில் இருக்கின்றாளே…. தங்கள் தந்தையின் நகலெடுத்து.’ என்றவன் சிந்தனையை கலைத்து, “அண்ணா இப்பவும் சொல்லறேன். அடைமழையை அணைப்போட்டு தடுக்க முடியாது.” என்று கூறிவிட்டு சென்றான்.

மருத்துவமனையில் அடித்து சேர்த்து விட்டாயிற்று. தன் கடைக்கண் கண்டாலே ஓடி ஒளிர்ந்து கள்ளத்தனமாக மறைந்து விடுகின்றார்.

சுகன்யா அறைக்கு வரவும் மெதுவாய் எழுந்தான்.

“வலிக்குதா விஷாகா, கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்க கூடாதா?” என்று சாதம் பிசைந்து ஊட்ட வந்தார்.

“ஸ்பூன் போட்டு கொடுங்கம்மா. நானே சாப்பிட்டுப்பேன்” என்றதும், “பரவாயில்லைடா… சின்ன வயசுல ஊட்டிவிடும்மானு அடம் பிடிப்ப, சுகிர் பிறந்ததால அவனை வளர்க்க ஓடுவேன். உனக்கு ஊட்டிவிட்டது எல்லாம் அவர் தான். இப்ப எனக்காக அவரையே அடிக்கிற அளவுக்கு வளர்ந்துட்ட…

இந்தம்மா உனக்கு அடிப்பட்டா ஊட்டவாது செய்யறேன். நாளைக்கு மருமக வந்தா உனக்கு ஊட்ட விடுவாளா?
எம்புருஷனுக்கு நான் பார்த்துக்கறேன்னு சொல்வா” என்று விருஷாலியை நினைவுப்படுத்தி பையனின் எண்ணத்தில் இனிமை கூட்ட முயன்றார்.

“விருஷாலி அப்படி சொன்னா வாயை உடைச்சிடறேன்மா” என்று சிரித்தான்.

“விருஷாலியிடம் என்னடா பேசின.” என்று ஊட்டிவிட்டபடி கேட்டார்.

“அம்மா… நான் எங்க பேசினேன்.” என்று காதை தேய்த்து திரும்ப முயன்றான்.

“அட என் பையன் முகம் பார்த்தே எனக்கு புரிஞ்சிக்க தெரியாதா? சுடத்தண்ணி குடிக்கறவனாடா நீ. எப்பவும் ப்ரிட்ஜ் வாட்டர் தான்.

அங்க மருமகளை பார்க்க அவ வீட்டுக்குள்ள போனியே. எப்படி டா பேசினாளா?” என்று கேட்டு பையன் திருமுகத்தை வருடினார் சுகன்யா.

“பேசினா… குழம்புக்கு தாளிக்க அளந்தெடுத்து, கடுகு உளுந்து போடற மாதிரி எண்ணி எண்ணி பேசினா. எனக்கு தான் பேசிட்டே இருக்கணும்னு தோன்றுச்சு.” என்று வேறொரு உலகத்துக்கு செல்ல முயன்றவனிடம் தண்ணீர் குவளையை நீட்டி குடிக்க வைத்தார்.

“அம்மா… சுடத்தண்ணி வேண்டாம்” என்று மறுக்க, “டேய்… அங்க இதை தானே குடிச்ச, இதுல அன்னம் கொடுத்த கஷாயம் வேற குடிச்சியே” என்று மகனை கேலி செய்ய துவங்கினார்.

“அம்மா… உனக்கே தெரியும்ல. நான் சளி பிடிச்சாலும் ப்ரிட்ஜ் தண்ணி தான் குடிப்பேன்.” என்று பாதி குடித்த தண்ணீரை அன்னையிடம் மறுத்து கொடுத்தான்.

“தெரியும் டா. என் பையன் பழக்க வழக்கம் எனக்கு தெரியாதா” என்று மறைத்து வைத்த தண்ணீர் பாட்டிலை தந்தார்.

அது மிதமான குளிர்ச்சியாய் இருக்க, பருகினான்.

“என் வாழ்க்கை முடிஞ்சிடுச்சு விஷாகா. இனி உன் வாழ்க்கையை பாரு. தேவையில்லாம கையை உடைச்சிட்டு கஷ்டப்படாதே.

நாய் வாலை நிமிர்த்த முடியாது. அம்மாவே மீண்டு வர்றேன்டா.” என்று ஆறுதலாய் மகன் கையை பிடிக்க, “எப்படிம்மா மீண்டு வருவ?” என்று கவலை தோய்ந்து கேட்டான் புதல்வன்.

“மீண்டு வருவேன்டா….. என் மூத்த பையனோட கல்யாணம். அவனுக்கு பிடிச்ச பொண்ணோட நடக்க போகுது.
இந்த பிரச்சனையை தள்ளிப் போட்டுட்டு மருமகளை பத்தி யோசியா” என்று சந்தோஷமாய் கூறவும், விஷாகனும் உதயகுமாரை சற்று ஒதுக்கி வைத்தான்.

முதல் வருஷம் படிக்கிற பொண்ணு என்னை கல்யாணம் பண்ணி இங்க வந்து எப்படி சமாளிக்க போறாளோ, அவ வர்றதுக்குள்ள இங்க இருக்கற பிரச்சனையை சரிபண்ணி வைக்கணும்.’ என்றவன் கை கட்டை மெதுவாக அகற்றினான்.

கை கட்டை மெதுவாய் கழட்டி முடிக்க லேசாய் எரிச்சல் உணரவும், முகம் சுணங்கினான்.

அடுத்து நலன் விசாரிப்பாய் காயத்தின் காரணகர்த்தாவே வந்தார்.

உதயகுமார் தயக்கமாய் நுழைய, விஷாகன் அவரை வெட்டுதல் பார்வை வீசினான்.

விஷாகன் அருகே அமர போக அவன் எழுந்தான். தன் மகன் அவனருகே அமர்வதற்கு கூட தனக்கு இனி பாக்கியம் இல்லை என்று உணர்ந்தவர் வேறு வழியின்றி சற்று தள்ளி நின்றார்.

“என்னடா இவன் அவ்ளோ அடிச்சும் திரும்ப போன்ல அவங்களிடம் பேசறாங்களேனு தப்பா  நினைக்காதப்பா.

சங்கீதா மட்டும் என்றால் மறக்கறது சுலபம். அபர்ணாவை மறக்க முடியலையேப்பா. என்னயிருந்தாலும் அவளும் என் ரத்தம் தானே. உன்னை மாதிரி சுகிர்தன் மாதிரி ஆம்பளை பையனா இருந்தா கூட பரவாயில்லை. பொம்பளை பிள்ளைடா… என்னை தேடி கேட்கறா. சங்கீதா கூட போன் பண்ணலை. நான் தான் போன் பண்ணினேன். ஒரு மாசம் முன்னவே குழந்தை இன்னிக்கு ஸ்கூல்ல டான்ஸ் ஆடறதை சொல்லியிருந்தா. அதனால தான்….” என்று அவரின் தரப்பு நியாயமாக(?) கூற துவங்க பெருமூச்சை வெளியிட்டு சினத்தை மட்டுப்படுத்த முயன்றான் முடியவில்லை.

“யோவ்… எனக்கு இருபத்தியொன்பது வயசு. உன்னை மாதிரி இருபது வயசுல கல்யாணம் பண்ணியிருந்தா எனக்கு எட்டு ஒன்பது வயசுல குழந்தை இருந்திருக்கும். நீ தாத்தா… என்னது தாத்தா…

ஐம்பது வயசு ஆகலைனு மிதப்பா. உனக்கு நாற்பத்தி ஒன்பது வயசு. இன்னும் மூனு மாசமான ஐம்பது ரவுண்டா வந்து நின்றிடும்” என்றதும் தலை குனிந்தார்.

“தயவு செய்து என் முன்ன முன்ன வந்து தலை குனியாத. என்னைக்காவது அருவாமனையை எடுத்து கழுத்திலேயே போட்டுடப் போறேன். போயா” என்று கடுப்போடு மொழிய, அப்பொழுதும் அங்கேயே இருந்தார்.

“இன்னும் என்ன?” என்று அதட்டினான்.

“சிம் கார்டு.. கஷ்டமர் போன் போடுவாங்க.” என்று கேட்டு முடிக்க, “என்ன பார்த்தா எப்படியிருக்கு? போன் எதுவும் தரமுடியாது. பெரிய பிசினஸ் மேன் பாரு. கொரியர் ஆபிஸ் தானே. எதுனாலும் லேண்ட்லைனுக்கு கால் பண்ணுவாங்க.

எத்தனையோ வேலையை பார்க்கற எனக்கு அதையும் பார்க்க தெரியும். பார்க்க கஷ்டமா இருந்தா ஆள்வச்சி கூட சமாளிப்பேன்.

நீங்க எங்கயும் ஊர் மேய போகாம இருந்தா நல்லது.” என்று விரல் நீட்டி எச்சரித்தான்.

உதயகுமாரை தாண்டி சுகன்யா வரவும் தந்தை மகன் சற்று பேச்சை தவிர்த்தனர்.

சுகன்யா சென்றதும் “அதையும் மீறி எங்கயாவது போனது தெரிஞ்சது நானே வண்டி ஏத்தி கொன்றுடுவேன். எங்கம்மா விதவை ஆனா கூட பரவாயில்லை.” என்றதும் கண்ணீரை வெளிப்படுத்தினார்.

“இந்த நீலிக்கண்ணீருக்கு ஒன்னும் குறைச்சலில்லை” என்று முனங்கியபடி விஷாகன் வெளியேறினான்.

மனம் இதற்குள்ளே அரைப்பட பிடிக்காமல், அவனின் வாட்டர் சப்ளை கடையிருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான். அங்கு சென்றதும் வேலையில் மனம் ஒன்றுப்பட துவங்கியது. மனம் என்பது ஒன்றையே எண்ணி முடங்கிடாதே.

என்ன தான் பெரிய பெரிய பிரச்சனை என்றாலும் மூன்று வேலை சாப்பாடும், இரவு உறக்கமும், இயற்கை உபாதை கழிக்கவும், என்று எதையும் செய்யாமல் தவிர்க்க முடியுமா என்ன? அது போல வயசு பையனின் வேலை, கடமைகள் என்று மனதை செலுத்தினான். அதன் காரணமாக காதல் உணர்வுகளுக்கும் சிறகு முளைத்தது.

தனது போனை எடுத்து விவேக்கிற்கு அழைத்தான். விருஷாலி வீட்டிலிருந்து கிளம்பும் நேரம் விவேக்கின் போன் நம்பரை வாங்கியிருந்தான். அதனால் அவனுக்கு அழைத்து விருஷாலியிடம் பேச ஆசையாய் நம்பரை அழுத்தினான்.

அங்கு விவேக் நம்பரிலிருந்து போன் வரவும் கத்தரித்து விட்டான். விஷாகன் இரண்டாவது முறை போன் செய்ய கத்தரிக்காமல் விவேக் பச்சை பட்டனை அழுத்திவிட்டான்.

“விருஷாலி எதுக்கு அழுவுற…. அம்மா இப்ப தான் பொண்ணு பார்த்துட்டு போயிருக்காங்க. இப்ப இப்படி செய்தா என்ன அர்த்தம்” என்று விவேக் அவனின் தங்கை அம்மாவோடு பேசுவது கேட்டது.

விஷாகனோ “ஹலோ… ஹலோ… விவேக்… விவேக்.. டேய்…” என்று அங்கு என்ன பேசுகின்றார்கள் என்று புரியாது தவித்தவனாய் நின்றான்.

அவர்கள் செவிக்கு தன் குரல் கேட்கவில்லையென்றதும் என்ன பேசுகின்றாரென கேட்க ஆரம்பித்தான்.

மாறி மாறி பேச்சு சத்தம் கேட்க, போனை செவிக்கு கொடுத்துவிட்டு, இமை மூடி பேசுவதை மட்டும் உள்வாங்கினான்.

அனைத்தும் கேட்டவனாய் கையை நெற்றியில் அடித்து கொள்ள, வலது கை விண்ணென்று வலியை கூட்டியது.

-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்




17 thoughts on “நீயின்றி வாழ்வேது-9”

  1. Super sis nice epi 👍👌😍 Evan pesina pechula andha pulla bayandhuduchu pola🙄 eppdi nee edha kalyanam varaikum kondupoga poriyo da thambi kadavul dhan unaku thunai🙏😢

  2. நீயின்றி வாழ்வேது…!
    (அத்தியாயம் – 9)

    ஒருவிதத்துல சுகிர்தன் சொல்றதுலேயும் பாயிண்ட் இருக்கு. பொண்ணு பின்னாடி ஓடறவங்களை எப்படி தடுத்து நிறுத்த முடியும்..? இதை சுகிர்தன் தனக்கே கூட சொல்லிக்கிறானோன்னு தோணுது. முதல்ல பெண் குழந்தை இருக்குன்னு சொல்வாரு. அப்புறம் இளவயவு பொண்டாட்டி இருக்குன்னு சொல்லுவாரு.. இப்படி சால்ஜாப்பு சொல்லிட்டே மிச்ச வாழ்க்கையையும் வாழ்ந்து முடிச்சிடுவாரு. இவனுங்களுக்கு
    வாழ்க்கைப்பட்ட பொண்ணுங்க தான் திரிசங்கு சொர்க்கம் மாதிரி வாழ்வையே தொலைச்சிட்டு நிப்பாங்க.

    அது சரி, விருஷாலி வீட்ல என்ன பிரச்சினை..? ஒருவேளை, இவங்க அப்பன் மேட்டர் தான் அங்கேயும் ஓடுதோ…???
    😕😕😕
    CRVS (o)r CRVS 2797

  3. அச்சச்சோ விருசாலி வீட்ல என்ன தான் பிரச்சினை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!