புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

நீயின்றி வாழ்வேது-19

நீயின்றி வாழ்வேது-19

     விஷாகனின் செவியில் கிளிகளின் கீச்சு ஒலியும், குயிலின் குக்கூ ஓசையும், காகம் கரையும்  சத்தமும் விடாமல் கேட்டப்பின்னே வலது கையால் கண்ணைக் கசக்கினான்.

   இடது கையில் பாரமிருக்க, நெஞ்சிலும் ஏதோ மிருதுவாய் அழுத்தவும், தன் நெஞ்சின் மீது உறங்குபவளை அனுஅனுவாய் ரசித்தான்.

      ஸ்டிக்கர் பொட்டு இடமாற்றம் பெற்று அவளின் கூந்தலில், அவன் இதயம் போலவே சிக்கியிருந்தது.

     நன்றாகப் படிய வாரிய தலைமுடி, இவனின் கைகள் பின்னங்கழுத்துப் பிடரியில் தழுவியிருந்த சிகையில் விளையாடியிருக்க லேசாய்ச் சிக்காகியிருந்தது.

   காது மடலில் பல்தடமிருக்க, விஷாகனோ பதறி ‘அவளை என்ன செய்தாய் விஷாகா’ என்று மனசாட்சி விருஷாலிக்காகக் குரல் கொடுக்கத் திடுக்கிட்டு எழுந்தான்.

     “ஷாலி.. ஷாலி..” என்று நெஞ்சில் சாய்த்து எழுப்ப, அவள் முகமெங்கும் ஷேவ் செய்து இரண்டு நாளில் வளர்ந்த முட்தாடிகளால் அவள் கன்னத்தைச் சிவந்திட செய்தது.

      “ஷாலி..” என்று பதட்டப்படவும், அவன் உடல் அதிர்வில் தூக்கம் கலைந்தாள் அந்த ஓவியப்பாவை.
     அவள் எழுந்ததும் தான், சீரான மூச்சு விடுத்தான்.

    நேற்று பலகாரமிருந்த பக்கம் கைகடிகாரத்தை வைத்திருந்தான். அதனை எடுத்து நேரம் பார்க்கவும், மணி ஆறெனக் காட்டியது.

    “அச்சச்சோ இவ்ளோ லேட்டா எந்திரிச்சா அம்மாச்சி திட்டுவாங்க என்று எழுந்தாள். இரவு அவசரத்திற்கென்று சேலையை ஒன் பிளிட்ஸ் வைத்து சேப்டி பின்னை குத்தியிருக்க, சட்டென எழவும், பின் வாயை பிளந்தது.

   விருஷாலி சேலையைப் பிடித்து விஷாகனை காண வெட்கம் கொண்டு அப்படியே போர்த்திக் கொண்டு அமர்ந்தாள்.

    விஷாகனுக்குக் காலையிலேயே தேவதை தரிசனம் கண்டவனாய், “என்ன அவசரம் சாப்பிட்டு அங்க போகணும். திரும்பக் கறிசோறு சாப்பிடணும். பதறாம கிளம்பு.” என்று முட்தாடியை தேய்த்தான்.

   அவனின் வன்மையான கரத்திற்கே லேசாய் குத்தவும், பெண்ணவள் தளிர் மேனி வலித்திருக்குமோ? என்று அவளை மீண்டும் தரிசிக்கப் பார்வை அவள் உடலெங்கும் சென்று மீண்டது.

     அவளை நிற்க வைத்து கேட்கவும் கூச்சப்பட்டான். நேற்று முரட்டு முத்தங்களை வழங்கி மூச்சு விடத் திணறடித்துவிட்டு, இதென்ன கேள்வி? என்று இவனிடமே கேட்டுவிட்டாள்.
  விருஷாலி நிச்சயம் தன்னிடம் துடுக்குத்தனமாகக் கேட்க மாட்டாளென்றாலும், அவளுக்காகத் தன் மனசாட்சியை, அவள் தரப்பில் பதில் வினா எழுப்பும்.

   அவன் மனமும், மனசாட்சியும் எப்பொழுதோ அவளின் பாதத்தில் சரணடைந்துவிட்டது.

    கிச்சன் பக்கமாகச் சென்றவள் மடமடவெனச் சேலையை ஒருமுறை அவிழ்த்து கட்டி முடித்து
   குளிக்க மஞ்சளை எடுத்துக் கொண்டு சென்றாள்.

   எதிரே செம்பருத்தி அம்மாச்சி குளித்து முடித்து அன்னபூரணி அம்மாச்சி வீட்டுக்கு தயாராகி நின்ற கோலத்தைக் கண்டதும், “போச்சு போச்சு அம்மாச்சி உட்கார வச்சி அரைப்பக்கத்துக்குப் பேசப்போகுது.” என்று குளியலறைக்கு வந்து மடமடவெனப் பச்சை தண்ணீரில் குளித்தாள்.

   தனது தாய் அன்னம் கூறியப்படி தலைக்குக் குளித்து ஈரத்தலையில் கொண்டையிட்டு சேலைக்கட்ட துவங்கினாள்.

    பாத்ரூமில் சரிவராதென எதற்கும் இருக்கட்டும் என்று நைட்டி எடுத்திருந்தாள்.

    இங்கிருக்கும் வரை நைட்டி எல்லாம் அம்மாச்சி அணிந்தால் திட்டுவார்களென்று இதுவரை அணிந்திடவில்லை. ஏன் வாங்கியது கூடக் கிடையாது. தற்போது தான் விவேக்கின் வற்புறுத்தலில் அன்னத்தோடு சென்று இந்த நைட்டியை கல்யாணத்திற்கு உடை வாங்கும் போது இதர உடைகளையும் வாங்கினாள்.

     அணிந்து விட்டு நீர்க்கோழி போல எட்டி பார்த்து அம்மாச்சி இல்லையென்றதும் வேகமாய் வீட்டுக்குள் வந்து சேர, விஷாகன் மீது மோதினாள்.
    இடையோடு வளைத்து பிடித்தவன், “அவசரமில்லாம கிளம்பச் சொன்னேன் ஷாலிம்மா.” என்றான்.
   
    “ம்ம்.” என்று நகரப் பார்க்க, விஷாகன் கைகளுக்குள் சிறையிலிருந்தாள்.

    “ஷாலி… மஞ்சள் வாசம் ஆளை இழுக்குது” என்று அவள் மேனியில் மஞ்சளோடு சோப்பும் கலந்த வாசத்தை நுகர்ந்தான்.

   “ஏற்கனவே மஞ்சளா தானே இருப்ப. எதுக்கு மஞ்சள்?” என்று வாசம் பிடித்தபடி நாசியைக் கன்னத்திலிருந்து கழுத்துக்குக் கொண்டு சென்றான்.

   “மஞ்சள் கிழங்கு கல்லுல அரைச்சி பூசினேன். அம்மாச்சி தான் இதெல்லாம் போடச்சொல்லிச்சு.” என்றவள் தொண்டை குழி ஏறியிறங்க முத்தம் வைத்தான்.

     இமைகள் விஷாகன் தந்த முத்தத்தில் பித்தேற வைக்கவும் அவனின் போன் மணி அழைத்தது.
   
   விஷாகன் சலித்தவனாய் “நான் குளிச்சிட்டு வர்றேன். அம்மாவா இருந்தா எடுத்து பேசு ஷாலி.” என்று சென்றான்.

    கைப்பேசியை எடுக்கும் முன் அழைப்பு மணி நின்றது.
   யாரெனப் பார்க்க போனை எடுத்து திறக்க போன் பூட்டப்பட்டிருந்தது.

    பேட்டர்ன் தெரியாமல் அழைக்க முடியாதென்றதால் போனை அப்படியே வைத்து விட்டு சேலை கட்ட ஆரம்பித்தாள்.

     சின்னப் பார்டரில், கடல் வண்ண சேலையை உடுத்தி ஈரத்தலையைத் துவட்டினாள்.

    மெத்தையிலிருந்த பூக்களைத் தட்டிவிட்டு புது மெத்த கவரை விரித்து, வீட்டை கூட்டி பெருக்கினாள். 

     விஷாகன் குளித்து வந்த போது விருஷாலி அங்கில்லை. அதன் காரணமாக, தலைவாறி கைக்கடிகாரம் அணிந்து புறப்படுவதில் தயாரானான்.

    ஒரு பக்கம் காதில் போனை வைத்து “எழுந்து ரெடியாச்சுமா. வந்துடுவோம்.” என்று கூறினான்.
  
   அவனுக்குப் பின்னால் விருஷாலி காபியை எடுத்து வந்து கொடுத்தாள்.

    “தேங்க்ஸ் ஷாலி. ஆமா.. பாக்கெட் பால்லா? பசும்பாலா?” என்றான். நேற்றைய அனுபவத்தால்…
   
    “இங்க எல்லாம் பசும்பால் தான் அத்தான்.” என்று கூறி அவனைக் காண நாணி சென்றாள்.

   அவள் செல்லவும் அவள் கைப்பற்றி அதில் முத்தமிட்டான்.

   மீசை குறுகுறுப்பு அடைய வைக்கவும், உருவ முயன்றாள்.

   “பிடிச்சிருக்குல.” என்று கேட்டான். அவளோ வெட்கம் கொண்டு உதடு துடிக்க லேசாய் முறுவல் உதிர்த்திட, கையை விடுவித்தான்.

   அதன் பிறகு அம்மாச்சி விருஷாலி விஷாகன் வனஜா குடும்பத்தார் என்று சங்கரன் ஏற்பாடு செய்த வண்டியில் வந்தார்கள். சற்று பெரிய கார் என்பதால் பின்னால் எட்டு பேர் முன்னே மூன்று பேர் தாராளமாக அமரலாம்.

  தவிட்டு மேட்டிலிருந்து  அன்னப்பூரணி வீட்டுக்கு வந்ததும், விஷாகன் பார்வை அழுது கொண்டிருந்த அபர்ணாவை ஏறிட்டது.

   இங்கு வந்ததும் அவளைத் தேடி சென்றால் பார்ப்பவர்களுக்குத் தானாக மெல்வதற்கு அவல் கொடுத்ததாக மாறிடுமென்று விவேக்கை தேடினான்.

     விவேக்கும் அப்பொழுது தான் மணியுடன் பைக்கில் வந்து இறங்கினான்.

  விஷாகன் பார்வையாலேயே ‘என்னை இப்படித் தனியாக விட்டுட்டு போன. எதுக்கு அழுவறா?’ என்பது போலப் பார்த்தான்.
      
     “கறி வாங்கிட்டு வந்துட்டேன் அம்மாச்சி.” என்று சட்டையில் வேர்வை ததும்ப அடித்துப் பிடித்து வந்ததும் எதற்குச் சென்றானெனப் புரியவும் தற்போது எதற்கு அபர்ணா அழுகின்றாள். அப்பா எங்கே என்று தேடினான்.

   அவரையும் காணவில்லை அன்னையையும் காணவில்லை.
  
    கொஞ்ச நேரம் விருஷாலியோடு சாப்பிட சென்று அபர்ணாவையே யாரும் கவனிக்காத போது  பார்த்தான்.  

    தந்தை மீது அதீத சினம் துளிர்த்தது. பெத்த பொண்ணு எதுக்கோ அழுவறானு தேடி ஓடிவர வேண்டாம்.

    என்னை இங்க தவிக்கவிட்டுத் திரிகின்றார் என்று மனதில் திட்டினான்.

  காலை உணவாய் சாப்பிட இரண்டாம் முறை இட்லி வைக்கும் போது, நேற்று போல அந்த அபர்ணா சாப்பிடவில்லையோ என்ற எண்ணம் உருவானது.

   இந்தப் பாழும் மனம் மனிதநேயம் கொண்டு இருந்திருக்கக் கூடாது. இப்படி மனிதநேயம் தனக்குள் இருப்பதால் தான் கங்காரு குட்டியாய் அபர்ணாவை அழைத்து வந்துள்ளோம். 
       
     மற்றவருக்குத் தெரிந்தால் தந்தைக்குத் தான் அவமரியாதை, அவர் சேர்த்து வைத்த நல்ல பெயர் அழியும். தனக்கேன் இத்தனை பரிதவிப்பு. சுகிர்தனை போல என்னால் எக்கேடோ கெட்டுப் போய்த் தொலையுங்கள் என்று போக முடியவில்லையே.

    தலைவலி தாக்கவும் இதற்கு மேல் பொறுக்க முடியாமல், “சாப்பிட்டியா?” என்று செய்கையில் கேட்டான்.
 
   அபர்ணா ஆமென்று தலையாட்டி முடித்தாள்.
  ஆள்காட்டி விரலால் ஏன் அழுவுற அழாதே சிரி’ என்று கண்ணும் கன்னமும் காட்டி கேட்டு பின்னர் உதட்டை பார்த்து டிக் செய்தது போல ஸ்மெல்(smile) பண்ண கூறினான்.

    அபர்ணாவும் சரியென்று கண்ணைத் துடைத்துவிட்டு அமர்ந்தாள்.
 
     விஷாகன் அதன் பின்னே நிம்மதியாய் சாப்பிட்டான். இந்த மனிதநேயம் இந்தப் பெண் மீது ஏன்? என்று ஆராய, அவனுக்குச் சங்கீதா இறப்பு மட்டும் வந்து போனது.

  ஒருவேளை தனக்கு, தந்தைக்கு இன்னொரு குடும்பம் இருப்பதைத் தெரிந்தும், அவரை அடித்துத் திட்டி அனுப்பியிருந்தால் அந்தப் பெண்ணோடு வாழ்ந்து இருப்பார். இந்தப் பிஞ்சு குழந்தைக்குத் தாய் இருந்திருப்பாரே என்ற எண்ணமே அவனைக் கத்தியால் குத்தியது.

   பலருக்கும் நடக்கும் விஷயத்தைத் தங்கள் செய்கையோடு ஒப்பிட்டுத் தன்னால் தான் தவறுக்குக் காரணம் என்று விதியை இழுத்து வைத்துக் கொள்வதும், தானாகக் கஷ்டப்படுவதே நேயமிக்க மனித மனதின் செயல்.

   விஷாகன் அபர்ணாவின் செய்கை பேச்சை அன்னம் பார்த்து தொலைக்க, கறிவிருந்தில் கேட்டுச் சங்கடம் கூடுமோயெனக் காத்திருந்தார்.

     அபர்ணாவிடம் ஏற்கனவே விவேக் ‘யார் உன்னிடம் எதைக் கேட்டாலும்  தன்னிடம் கூறியது போல உளறிடக்கூடாது என்பதை அழுத்தம் திருத்தமாய்க் கூறி இருந்தான். அதனால் அன்னம் கேட்டபோது அபர்ணா எதையும் கூறாமல் மௌவுனம் காக்க, ‘எதையும் வாய் திறந்து கூறாத அமுக்குனி’ எனக் கன்னத்தில் கிள்ளிவிட்டார்.

     இங்குச் சின்னச் சின்னப் பூகம்பம் நிகழ்ந்தாலும் மதியம் கறிவிருந்து ஜோராகவே நடந்தது.

     அமர்களமாய் ஆர்ப்பாட்டமாய் நடந்தேறினாலும், விஷாகன் மனம் எப்பொழுது சென்னை திரும்புவோம் என்றதில் தவித்தது.

  நண்பர்கள் ரவி, தனுஷ் அவரவர் குடும்பம் எல்லாம் விருந்து சாப்பிட்டு அப்படியே சுற்றிபார்க்க செல்வதாகக் கூறி அகன்றனர்.

    அப்படியும் சிலர் தங்கள் அண்டை வீட்டு ஆட்கள் இருக்க அன்னபூரணி வீட்டை சுற்றி வந்து பேசி திரியவும் எந்தப் பேச்சும் எடுக்க இயலாதென்று நன்றாகவே தெரிந்தது.

       சுகிர்தனோ நன்றாகச் சாப்பிட்டு ஏப்பமிட்டு ஜெனிபரோடு தனது செல்பீகளை வாறி வழங்கினான்.

    விருஷாகன் விருஷாலி தனியாக இருக்க அன்னம் சிற்றுண்டி எடுத்து வந்து தந்தார்.

   சிற்றுண்டி கொடுத்துவிட்டு தயங்கி ”அபர்ணா யாரு மாப்பிள்ளை. நம்ம சொந்தக்கார பிள்ளை மாதிரி இருக்கு?” என்று கேட்டார்.

   “அப்படியா அத்த. எனக்கு அப்படித் தெரியலை. நம்மூர் வந்து பாருங்க எல்லாப் பொண்ணுங்களும் நல்லா கலரா லட்சணமா இருக்கும். அம்மா கூட நம்ம ஊர் பக்கமானு நிற்க வச்சி கேட்பாங்க. அப்பறம் இல்லையென்றதும் அசடு வழிய வந்து என்னிடம் சொல்வாங்க.

  நீங்க ஜப்பான் சைனா எல்லாம் பார்த்தாலும் என்ன மாப்பிள்ளை ஒரே முகமா தெரியுது. சப்பை மூக்கு வெள்ளை தோலுனு சொல்விங்க.” என்று மிகச் சாமர்த்தியமாகக் குழப்பினான்.

   படிக்காத தங்களுக்குத் தவறாகத் தோன்றுதோ என்று குழப்பமெடுத்து, மொட்டாய் மலர வேண்டிய மகளின் வாழ்வில் ஏதேனும் கேட்டு கருகிட கூடாயென்று இறைவனை வேண்டினார். அவரால் அதைத் தான் சரியாகச் செய்ய முடியும்.

    தன்னால் தன் கைமீறியதை மாற்றவோ தடுக்கவோ முடியாதவர்களுக்கு இறைவனே கதி.
  
   ஆனால் நீதி நேர்மை நியாயம் என்று வாழும் விஷாகனை போன்றோருக்கு மனசாட்சியே கதி.

     கடந்த முறை போலவே சுகிர்தனின் பணியைக் காரணம் காட்டியே இந்த முறையும் உடனடியாகச் செல்ல முடிவெடுத்தான் விஷாகன்.
     ஏசியில் கணினி பெட்டி முன் வேலை செய்யும் மனிதன் என்றால் இன்னமும் உயர்வாகப் பார்த்து, அவர்கள் வேலையைப் பெரிய பொக்கிஷமான வேலையாகக் கருதி ‘ஆகட்டும் நீங்க லீவு எடுக்க முடியாது’ என்று புரிந்துக்கொள்ளும் வழமை இருக்க, யாருக்கு வேண்டுமானாலும் விபூதி அடிக்கலாம். அப்படித் தான் அங்கிருந்தவர்களுக்கு விபூதி அடித்துத் தன் மனம் கொய்த மனைவியை மட்டும் அழைத்துச் செல்ல தயாரானான்.

    சம்பந்தி வீட்டில் மகளை விட்டுவிட்டு வர, அன்னம் சங்கரன் விவேக் மற்றும் செம்பருத்தி அம்மாச்சியும் ஆசையாக வந்தார்கள்.

  செந்தூரன் தாத்தா, செல்லம்மா அம்மாச்சி, அன்னபூரணி அப்பத்தா என்று படையோடு கிளம்ப மனம் ஆயத்தமானாலும் உடல் அதற்கு ஈடுகொடுக்கவில்லை.

  திருமண அலைச்சலில் முதியவர்களுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது. அதன் காரணமாகப் போக்குவரத்தை தவிர்த்தனர். எப்படியும் ஏதேனும் சடங்கு சம்பிரதாயம் என்று வரவேண்டியது உண்டு. அப்பொழுது பார்த்துக் கொள்ளலாமெனப் பிரயாணத்தைத் தவிர்த்தனர். விஷாகனுக்கு இது சாதகமாக அமைந்தது.

    விருஷாலி வீட்டு ஆட்கள் மட்டும் சென்னை வருவதால் எப்படியாவது அபர்ணா தந்தையின் மகள் என்று கூறிடலாமெனத் திட்டம் தீட்டினான்.

    சென்னையில் அவனுக்குக் காத்திருக்கும் அனுபவங்கள் என்ன என்னவோ? அதையெல்லாம் அறியாமல் விருஷாலியின் கைப்பிடித்துச் சாய்விருக்கையில் தோதாக அமர்ந்து பேருந்தில் வந்த பாடலை ரசித்து, தன்னவளோடு இணைந்து நாயகன் நாயகி இடத்தில் அவர்களைப் பொருத்தி கொண்டு கனவை கண்டார்கள்.

இணைந்திடும் இருமனம்
எழுந்திடும் புதுஸ்வரம்
கண்ணங்களில் சிரிக்கின்ற
கனவுகள் ஆயிரம்

உன்னில் என்னை நானும் கண்டேனே
யாக்கை துறந்தேனே
கண்ணுக்குள்ளே காதல் கொண்டேனே
மீண்டும் பிறந்தேனே

இன்னும் இன்னும் வேண்டுமென்பேனே
நெஞ்சுக்கூட்டில் உன்னை வைப்பேனே
உன் பாதம் பட்ட மண்ணைத் திண்பேனே
 உன் சுவாசம் எனை தீண்டும் போது
சொர்க்கம் கண்டு ஓடுகின்றேனே

அபர்ணாவும் படத்தைப் பார்த்துக்கொண்டே உறங்கிவிட்டாள். சுகன்யாவோ கணவரிடம் வரும் வழியில் சில பழைய நினைவை தன்னையறியாமல் கூறி மகிழ, உதயகுமார் மனம் ஊஞ்சலாடியது.

எல்லாம் முடிந்துவிட்டதென எண்ணி அவர் மகிழ, விதி ‘இப்ப தானே ஆரம்பம்’ என்று நகைத்தது.

-தொடரும்.
Praveena Thangaraj

19 thoughts on “நீயின்றி வாழ்வேது-19”

    1. உப்பை தின்றவன் தண்ணீர் குடித்து தா ஆகவேண்டும் சகி

  1. Dei vishaka aparna un appa oda ponnu nu sollradhuku ne ready agita ana ava un kozhandhai nu solli prachainai panna veena akka ready agitanga…. Paarthu iru da

  2. Super sis nice epi 👍👌😍 vishagan ku ennum enenna sodhanai kathiruko🙄 needhi nermai nu parkura manasa than maatha mudiyalaiye enna pandradhu🤧 appdi erundhu dhan keta per a kedaikudhu sis😢🥺

  3. Ithuvarai ellam nalla padiya mudinjithu aduthu ena nadakapothu athu vishakan virushali life ah kedukuma ena twist vachi irukinga sisy . Interesting ah pothu epi

  4. நீயின்றி வாழ்வேது…!
    (அத்தியாயம் – 19)

    எல்லாம் நல்லாத்தான் போயிட்டிருக்கு. ஆனாலும், யாரு எந்த நிமிஷத்துல வந்து குட்டையை கிளப்புவாங்களோன்னு விஷாகனை விட நமக்குத் தான் ஒரே பதட்டமா இருக்கு. இதுல அந்த குழந்தையை எதுவும் சொல்ல முடியாது. அப்பன் செய்த தப்புக்கு அந்த குட்டி இப்பவே உண்மையை சொல்லும் முடியாம, முழுங்கவும் முடியாம தவிச்சிட்டிருக்கு.
    இதுல சென்னை போனவுடனே இன்னும் என்னென்ன வில்லங்கம், எந்தெந்த ரூபத்தில வரப்போகுதுன்னு அது வேற டென்ஷனாவே இருக்குது.
    😇😇😇
    CRVS (or) CRVS 2797

  5. அங்க ஊர்ல வெடிக்காத ஆட்டோ பாம் அநேகமா சென்னை வந்ததும் வெடிக்கும்னு தோணுது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!