நீயின்றி வாழ்வேது-36
விருஷாலி ஊருக்கு வந்தது அம்மாச்சியைப் பார்க்க என்று, அக்கம்பக்கதினர் எண்ணிக் கொண்டார்கள். ஏன் அன்னமே அப்படித் தான் நினைத்துக் கொண்டார்.
என்ன முதல் முறை ஜோடியாக வர எதிர்பார்த்தார். ஆனால் இப்பொழுது தான் விஷாகன்-விருஷாலி கல்யாணம் நடந்தது, விஷாகனின் தந்தை கருமாதி என்ற இழப்பு, அதன் காரணமாக அதிக நாள் கடை அடைத்தனர் என்பதால் அன்னம் எதுவும் துருவி கேட்கவில்லை.
செய்யும் தொழில் தெய்வம் அல்லவா.?!
மகள் துணையின்றித் தனியாகப் பேருந்தில் ஏறிவர கற்றுக் கொண்டாளெனப் பெருமையாக எண்ணிக் கொண்டார்.
உண்மை தெரிந்தால் என்னவாகுமென்று பொறுமையாகக் காணத்தானே போகின்றனர் என்பது விவேக் மனம் பதறியது.
சென்னையிலிருந்து வந்ததும் குளித்து இலகுவான நைட்டிக்கு மாறியிருந்தாள்.
அம்மாச்சி கண் திறந்து நடமாடிக் கொண்டிருந்தால் நிச்சயம் இந்த உடுப்பு போடாதேயென்று திட்டி தீர்த்து இருப்பார்கள்.
அன்னம் தான் திடீரென வந்த மகளுக்குக் கூழ் குடிக்கக் கொடுத்து மாவடு ஊறுகாயை தொட்டுக்கக் கொடுத்தார்.
அதைப் பருகி ருசித்தவளை, அரிசியைக் கழுவியபடி நலம் விசாரித்தார் அன்னம்.
“அபர்ணா பொண்ணு எப்படி இருக்கா? இப்பவும் உன்னிடம் ஏட்டிக்குப் போட்டியா பண்ணுதா?”
“பழகிடுச்சு… சின்னப் பொண்ணுதானே” என்று நிலைமையை மேலும் கவலைக்கிடமாக மாற்றாமல் பதில் தந்தாள்.
எப்படியும் அண்ணன் விவேக் தாய்தந்தையிடம் எதையும் கூறமாட்டான்.
அங்கேயிருக்கும் கல்லுளிமங்கனும் தன்தாயிடம் நடந்ததைக் கூறமாட்டார். சுகன்யா அத்தையிடமே எதுவும் வாய்திறக்கவில்லை. ‘எங்களுது புருஷன் பொண்டாட்டி சண்டை உன் வேலையைப் பாரு’ என்று தானே வாயடைத்தார்.
“சுகன்யா மதினி இப்ப பரவாயில்லையா?” என்று அன்னம் அடுத்தக் கேள்விக்குத் தாவினார்.
“பரவாயில்லை பரவாயில்லை.” என்று கூறி கூழை தொண்டையில் இறக்கினாள். மாவடு ஊறுகாயை கடித்து ருசிக்க அதன் சுவை அவளை இன்னமும் சாப்பிட தூண்டியது.
“சுகிர்தன் ஏதோ முஸ்லிம் பொண்ணைக் கட்டிக்கிட்டானாமே.? என்று வரிசையாய் கேட்டார்.
“அம்மா… முஸ்லிம் பொண்ணு இல்லை கிறிஸ்டியன் பொண்ணு. வீட்டுக்கு மாலையும் கழுத்துமா வந்தாங்க. அத்தை அழுதாங்க. நான் தான் காபி போட்டுக் கொடுத்தேன். குடிச்சாங்க. சின்ன மச்சானை பெயர் சொல்லி ‘சுகிர் கிளம்பலாமா?’ கூப்பிட்டு கொஞ்ச நேரத்துல இடத்தைக் காலிப்பண்ணிட்டாங்க.
அவங்களே தனிவீடு போய் எல்லாம் பார்த்துக்கிட்டாங்க. உன் மாப்பிள்ளை தான் ஓரெட்டு எட்டி பார்த்துட்டு வந்தார்.” என்று நொடித்தாள்.
“வியாபாரமெல்லாம் எப்படி? உனக்குச் சென்னை பிடிக்குதா.” என்றதும் தலையாட்டினாள்.
“அந்தப் பொண்ணு இன்னமும் கடையில தான் இருக்கா?” என்று போனில் கேட்டது போலவே மகேஸ்வரியை பற்றி நேரிலும் கேட்டார். மகள் அமைதிகாக்கவும், “சரிசரி கேட்கலை.
ஏதோ பயம்… மாப்பிள்ளை தான் எப்படிப்பட்டவருனு தெரியுமே. அப்பன் தப்பு செய்தாலே விளாசினவரு. அவர் தப்பு செய்வாரா?” என்று உலையில் அரிசியைப் போட்டுவிட்டு குழம்புக்கு அங்கிருந்த மணதக்காளி செடியை பிடிங்கி அலசி இலையைக் கிள்ளினார்.
விருஷாலி அன்னைக்கு உதவியாக இருந்தாள். மகள் சோர்வாகத் தெரிய, போய் உறங்க கூறியும் மறுத்துவிட்டு வாசலில் வேடிக்கை பார்த்தாள்.
வனஜா கல்லூரிக்கு சென்றதாலும், அவள் தாய் காயத்ரி வேலைக்குச் சென்றதாலும் அந்த வீடு பூட்டியிருந்தது.
வனஜாவுக்குத் தந்தையில்லை. தாய் மட்டுமே. ‘ஒருத்தியை விரசா கட்டிக்கொடுத்துட்டு நான் என்ன பண்ணறது. படிக்க ஆசைப்படறா நான் படிக்க வைக்கிறேன் என்பார். கல்யாணம் செய்து புருஷன் தயவில் ஒப்படைக்க மனம் உந்தினாலும், காயத்ரி அமங்கலி ஆனபோது திக்கற்று இருக்க, கூலி வேலைக்குச் சென்று வந்து கஷ்டம் அனுபவித்தார் அந்தக் கணம் பொம்பளை பிள்ளை படிச்சா நல்ல வேலைக்காவது போகலாமென்ற எண்ணம் உதிக்க மகளுக்குச் சொந்தக்காலில் நிற்க படிப்பு முக்கியமென, திருமணம் பார்க்க தவிர்த்தார்.
மூன்றாவது வருடம் துவங்கிவிட்டாதா? என்று விருஷாலி எண்ணம் போனது. தான் கல்லூரி விடுமுறையில் திருமணமானதால் இந்த இடைப்பட்ட நாட்களில் விடுமுறையும் முடிந்து கல்லூரி திறந்துவிட்டதை மறந்தே போனாள்.
லைப்ரரி மேம் தமிழரசியைக் காண எழுந்தாள். இன்று லைப்ரரி விடுமுறை நாள் என்றதும் நாளைக்குச் செல்வோமென விட்டுவிட்டாள்.
வீட்டுக்குள் செம்பருத்தி அம்மாச்சி சுவாசம் ஏதோ பெயருக்குச் சென்றுவருகிறது. யார் வந்திருக்கின்றார்,என்ன பேசுகின்றார் என்று மொத்தமாய்ச் சுயநினைவுயில்லை. கஞ்சி புகட்டினால் ஏதோ ஒருடம்ளர் அளவும், அரை டம்ளர் அளவுமாக உள்ளே இறங்குகிறது. மற்றபடி சுதாரிப்பே இல்லை.
இங்கு வந்ததிலிருந்து போனையும் சார்ஜரில் போட்டு ஆன் செய்யவில்லை. அப்படிச் செய்தால் அந்த மாயக்கண்ணன் உடனடியாகத் தனக்கு அழைத்துப் பேசிய மயக்கிடுவான் என்பது விருஷாலி எண்ணம். ஒன்றை மறந்துவிட்டாள். அவன் போன் போட்டாளே இங்கு இவளிதயம் அவனை நாட ஆரம்பிக்கும்.
கண்ணீரோடு ‘நான் அவரைச் சந்தேகப்படலை. லேசான பயம் இருக்கு.
ஏன் என் பேச்சை கேட்டு அவளை வேலையை விட்டு தூக்க மாட்டேங்கிறார்.’ இதான் அவள் மனதில் எழுந்தது. அதை விவேக்கிடமும் கூறினாள்.
அவனோ ‘அதை மச்சானிடம் தான் கேட்கணும் அவரென்ன நினைக்கிறாரோ.’ என்று இருக்கும் பிரச்சனையில் விழிபிதுங்கி நின்றான்.
செம்பருத்தி அம்மாச்சி உடல்நிலை மோசமானால் அடுத்துச் செலவு ஆரம்பிக்கும். இப்பொழுது தான் தங்கை திருமணச் செலவும், சம்பந்தி இறப்பென அதற்கான முறையும் செய்து விட்டு வந்தது. எதற்கும் பணத்தைத் தயார்படுத்த அலைந்தான்.
வனஜா வந்தப்பின் விருஷாலி மொத்தமாய்த் தனியாகப் போய்ப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். வனஜா அப்படியிப்படி என்று சற்று அதிகப்படியான இல்லற வாழ்க்கையைக் கேட்க, கமுக்கமாக விருஷாலி ‘காதலர்கள் கொஞ்சல், சண்டை, பெட்ரூம் காட்சி எல்லாம் தடை… தடை… தடை… எதுவும் என்னோட வாயுல இருந்து உருவமுடியாது.” என்று தோழிக்கு பகிர வேண்டியதை மட்டும் பகிர்ந்து கொண்டாள்.
வனஜா கல்லூரிக்கு சென்றதால் கல்லூரி கதையை விவரித்தாள். விருஷாலிக்கும் மீதியிருக்கும் படிப்பை தொடர்ந்தால் என்ன? என்று முடிவெடுத்தாள். அதைத் தாய் அன்னத்திடம் கூறினாள்.
விவேக்கோ தங்கை தன் அன்னையிடம், ‘உங்கள் சண்டையைக் கூறாமல், படிக்கப் போவதாகக் கூறி நாளைக்குச் செல்வதாகப் பேசிக் கொண்டிருக்கின்றாளென’ விஷாகனிடம் தெரிவித்தான்.
விஷாகனோ அவள் படிப்பை இங்கே தொடர டிசி அப்ளை செய்ய நினைத்தான். இன்றோ அவளே அங்குச் சென்று படிக்கப் போவதாகக் கூறவும், “ஒருவருஷம் தானே. அவளுக்கு என்னைப் பிரிய சம்மதம்னா அங்க படிக்கட்டும். இந்த ஒரு வருஷம் கண்டிப்பா அவயென்னை புரிஞ்சிப்பா” என்றான்.
விவேக்கிற்கோ கணவன் மனைவி சண்டையில் இடையில் மாட்டிக்கொண்டான். நல்லவேளை விருஷாலியிடம் எதையும் பகிரவேண்டியதில்லை. இங்கு நடப்பதை மட்டும் தினமும் பகிர கூறி விஷாகன் கோரிக்கையாக விடுத்தான்.
அன்னத்திடம் விவேக் “அவளுக்கு ஒருவருஷம் தான் படிப்பு இருக்காம். மச்சான் இங்கிருந்து படிக்கச் சொல்லிட்டார்.’ என்று கூறவும் முதலில் கத்தினார். பிறகு அங்கிருந்தா படிப்பு ஏறாது. கல்யாணம் ஆச்சு. அபர்ணா இருக்கா, சமையல் கட்டுனு கதியாகிடுவா. இங்க இருந்து படிச்சிட்டு உடம்பை தேற்ற சொன்னார் சின்னப் பிள்ளையா ஒட்டடகுச்சியா இருக்கே.” என்று விவேக் கூறவும் சமாதானம் அடைந்தார்.
எப்படியும் தனது தாய் செம்பருத்தி உயிர் ஊஞ்சலாட, அவர்கள் பேத்தி அருகேயிருந்து கடைசிக் காலம் அவருக்குக் கழியட்டும் என்று எண்ணிவிட்டார்.
சங்கரனோ இரவு தான் வந்தார். முன்பு போலக் குடிப்போதையில் வரவில்லை. மகள் வந்திருக்கின்றாளென அன்னம் காலையில் கூறியதால் திண்பண்டமாக அதிரசம் முறுக்கு என்று வாங்கி வந்தார்.
விருஷாலிக்கு ஆச்சரியம் தான். ‘இவர் தண்ணி வண்டியாச்சே
டெய்லி குடிக்கலைனா தூக்கம் வராதே.’ என்று பார்க்க, ‘மச்சான் தான் கூப்பிட்டு வச்சி பேசுச்சு, நம்ம சொன்ன புத்திமதி தலைக்கு ஏறலை. மச்சான் எடுத்து சொல்லவும் இப்பலாம் குடிக்கிறதை விட்டுடுச்சு” என்றான் விவேக்.
விருஷாலிக்கு சந்தோஷமானது. இத்தனை தெளிவாய் தந்தை மனம் மாறப் பேசுபவன். ஏன் தன் விருப்பத்தைப் புரிந்துக் கொள்ளவில்லையென்று மீண்டும் தன் கணவனின் எண்ணத்தில் உழன்றாள்.
அதன் பின் உறக்கமும், அடுத்த நாள் விடியலுமாய்ப் பிறந்தது.
இங்கிருந்த சுடிதாரை பொறுமையாக எடுத்து செல்ல வைத்திருந்ததால் இருந்த துணிமணிகளில் ஒரு சுடிதாரை எடுத்து அணிந்து கல்லூரிக்கு கிளம்பினாள்.
விவேக்கின் போனை வாங்கி லைப்ரரி மேம் தமிழரசிக்கு கல்லூரி செல்வதைத் தெரிவித்தாள்.
‘பரவாயில்லையே உன் கணவர் இந்தளவு யோசித்துப் படிக்க இங்கயே அனுப்பிட்டாரே’ என்று நாயகனை தான் புகழ்ந்தார்.
இதோ இந்த ஒருவாரம் கல்லூரிக்கு தினமும் பஸ்ஸில் சென்று வந்து பாடத்தைப் படித்து நேரம் போனது.
இன்னமும் போனை ஆன் செய்யவில்லை. ஒரேமுறை விவேக் சார்ஜர் போட்டு வைத்து அவனாக ஆன் செய்ய விருஷாலியோ வெடுக்கெனப் பிடுங்கி சார்ஜ் ஏறியதை பார்த்துவிட்டு, போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்து விட்டாள்.
“நான் எல்லாம் மச்சான் இடத்துல இருந்தா, நாலடி அடிச்சி போடினு விட்டுடுவேன். அந்த மனுஷன் பொறுமையா இருக்கார்.” என்று பேசவும் விருஷாலியோ “ஆமா ஆமா உன் மச்சான் ரொம்ப ரொம்பப் பொறுமைசாலி தான்.” என்று திட்டிவிட்டு எழுந்தாள்.
அன்று விருஷாலியும் வனஜாவும் மதியசாப்பாட்டைச் சாப்பிட ஆரம்பிக்க, இரண்டு வாயை எடுத்து வைத்ததும் விருஷாலிக்கு குமட்டிக் கொண்டு வந்தது.
வாந்தி எடுத்துச் சோர்ந்ததும் தண்ணீர் குடித்துவிட்டு டேபிளில் சாய்ந்துக் கொண்டாள்.
அவள் வாந்திக்கு வேறு காரணம் இருக்குமோயென்று சிந்திக்கவில்லை. மனம் எப்பொழுதும் பாரமாக இருக்க உணவும் பிடிக்கவில்லை, உறக்கமும் பிடிக்கவில்லை, சங்ககாலத் தலைவனை எண்ணி தவித்து, உடல் மெலிவாளே தலைவி அப்படித் தான் தனக்கும் உடல்நிலை மோசமாகி வாந்தி வந்ததாகக் கருதினாள் விருஷாலி.
எதையும் ‘அச்’சென்று தும்பும் முன் காரணம் காரியம் அறிந்திடும் வனஜாவுமே, தோழி சாப்பிடாமல் உடலை கெடுத்துக் கொண்டதாக நினைத்தாள். அவளுக்கும் விருஷாலி பிரச்சனை அறிந்திருந்தாள். அவளுக்குக் கூறியது விவேக்… அவளது காதலன்.
மாலை பேருந்தில் விருஷாலி வனஜா அருகருகே அமரவும் “என்னாச்சு விருஷாலி? அண்ணாவுக்கு உனக்கும் என்ன பிரச்சனை.
உங்களுக்குள்ள நடக்குற காதல் கீதல், அப்படியிப்படி எதையும் சொல்ல வேண்டாம். உன் மனசை அழுத்துற பாரத்தைச் சொல்லலாம்ல.” என்றதும் விருஷாலி வனஜா தோளில் சாய்ந்திருந்தவள் மெதுவாய் அவளைக் கண்டு ஜன்னல் பக்கம் திரும்பினாள்.
“அண்ணா நல்ல குணம் தானே. உன்னைத் தனியா பார்க்கணும்னு பொண்ணு பார்க்கறதுக்கு முன்னயே வந்து எப்படிப் பார்த்தார் தெரியுமா?
நான் கூட என்ன இந்தாளு இப்படி உத்து உத்து பார்த்துத் தனியா சிரிச்சிட்டு உன்னையே திங்கறாப்ல பார்க்கறாரேனு நினைச்சேன். ஏன்னா அதுல அவ்ளோ காதல் இருந்துச்சு.
பொண்ணு பார்க்க வர்றப்ப அண்ணாவை பார்த்ததும், அவர் முன்ன பார்த்த பார்வையில அம்புட்டு வழிஞ்சதுக்கான அர்த்தம் புரிந்தது.
அப்படிப்பட்டவர் உன்னை ஏமாத்துவாரா?” என்று கேட்டதும், “உனக்கு அவரைப் பத்தி என்ன தெரியும்” என்று தேம்பினாள்.
“அழாத புள்ள… பஸ்ல நம்மூர் ஆளுங்க இருக்காங்க. அப்பறம் கண்ணு காது வச்சி நீ இங்க வந்தது படிக்கவோ அம்மாச்சியைப் பார்க்கவோ இல்லைனு புரிஞ்சிடப்போகுது.” என்றதும் அவசரமாய்த் துப்பட்டாவை எடுத்து துடைத்துக் கொண்டாள் விருஷாலி.
தனது பிரச்சனை இவளுக்கு எப்படித் தெரியும் என்று வனஜாவை ஏறிட்டாள்.
அப்பொழுது தான் பேருந்தில் யார் இருக்கின்றனர் என்று வனஜா ஆராய்ந்து தன் காதில் முடியை ஒதுக்கினாள்.
அவள் பின்னலிட்ட சிகையில் விருஷாலி வீட்டு பன்னீர் ரோஜா கச்சிதமாய்க் குடிக்கொண்டிருக்க, ‘விவேக் அண்ணா’ என்று மனதில் தோன்றியதை கேளாமல் திரும்பி கொண்டாள்.
தனது நிலை இங்கே விவேக் அண்ணாவை தவிர்த்து யாருக்கும் தெரியாது. அப்படியிருக்க, வனஜாவுக்குத் தெரிகிறதென்றால், இவர்கள் காதலிக்கின்றனரோ? என்று அதிர்ந்தாள்.
தன் வீட்டு பன்னீர் ரோஜாப்பூ தோழி தலையில் இருப்பதை வைத்து தவறாக எடுக்க முடியாது. அம்மா கூட நிறையப் பூக்கள் பூத்து வீணாகின்றது என்று வனஜாவுக்கும் தனக்கும் பறித்துக் கொடுப்பார்கள். அதுப்போலக் கூட அன்னை கொடுத்திருக்கலாமோ? இல்லை அண்ணாவும் வனஜாவும் விரும்புகின்றாரா? இந்த யோசனையிலேயே சுழல, வனஜா தோளைத் தட்டி “ஊரு வந்துடுச்சு இறங்கு” என்று அழைத்தாள்.
வனஜாவும் விருஷாலியும் இறங்கி நடந்தார்கள்.
உடல்நிலை சற்று சோர்வாகவும், வனஜா விருஷாலியின் வீட்டில் விட வந்தாள். காயத்ரி இன்னமும் வராததால் வனஜா அங்கே அமர்ந்தாள்.
முகம் கழுவி விருஷாலி வனஜா திண்ணையில் இருந்தார்கள். வனஜா பார்வை விருஷாலியை தாண்டி விவேக்கை பார்த்து உதட்டை பிதுங்கி ‘சமாதானப்படுத்த முடியலை.’ என்று சமிக்ஜையில் கூறினாள்.
விருஷாலியோ இதைக் கண்டும் காணாதது போல அன்னை கொடுத்த டீயை வாங்கிக் குடித்தாள்.
டீ முழுவதும் குடித்து டம்ளரை வைக்க, அதற்குள் வாந்தி வர, பாதையின் மறு பக்கம் சென்று ஓரமாக வாந்தி எடுத்தாள்.
“என்னாச்சுடி” என்று அன்னம் பதற, “மதியமும் இப்படித் தான் ஆச்சு. காலையில வயித்துக்கு என்ன கொடுத்திங்க.” என்று வனஜா கேட்க, அன்னமோ மகளின் முகத்தை உன்னிப்பாய் கவனித்தார். வாந்தி எடுத்தாலும், அவள் கணவரை காணாத கவலையோ, அவளுக்குப் பிடித்த அம்மாச்சிக்கு உடல்நிலை மோசமாகியிருந்தும், முகம் கருத்திடாமல், புதிதாய் சோபையாய் தெரிந்தாள்.
“நாள் தள்ளியிருக்கா விருஷாலி” என்றதும் தான் விருஷாலிக்கு என்னவோ புரிய துவங்கியது.
கைகள் தானாக அடிவயிற்றில் வருடி, அன்னையைக் கண்டு ஆமென்று தலையாட்டினாள்.
-தொடரும்.
Praveena Thangaraj

Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 wow vrushali pregnant ah super 😘
Very interesting
Wow super. Vishakan will come now. Shali don’t delay go with vishakan. Intresting
Interesting 😍😍😍super 🥰🥰
Superb epi interesting
நீயின்றி வாழ்வேது…!
பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 36)
ஒரு வருசம் படிக்க அனுமதிச்சிருக்கான், அவளை விட்டு ஒருவருசம் பிரிஞ்சிருக்கவும் சம்மதிச்சிருக்கான் அவளோட அப்பாவுக்கும் அட்வைஸ் பண்ணி திருத்தி இருக்கிறான்னா…
மகேஸ்வரியை வேலையை விட்டு தூக்காததுக்கும் நிச்சயமா ஏதோவொரு காரணம் இருக்கும்ன்னு ஏன் இவளுக்குப் புரியலை.
அட.. விவேக் வனஜாவை விரும்புறானா…? இது புதுக்கதை தான்.
இப்ப இவ கன்சீவ்வா இருக்கிறான்னா… இனி என்ன செய்யப்போறா…????
😀😀😀
CRVS (or) CRVS 2797
Interesting💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
Sueper super ipo shali eppadi inga irunthu padipa nee unga aal kuda iruka ninaipiye. Yosichi sikram oru nalla mudivuku va shali intha nalla vishayam vishakanuku sollanume
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
👌👌👌👌👌💕💕💕💕💕💕💕😍😍😍😍😍
Super
Super.. Interesting
Vishali ne eppo tha n Vishagan ah puribchipiyo than theriyala
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை