Skip to content
Home » அரிதாரம் – 16

அரிதாரம் – 16

சினிமா துறையில் பெயர் பெற்ற தயாரிப்பாளராக இருந்த கீதாவின் அப்பாவிடம் எத்தனையோ டைரக்டர்கள் வந்து கதை சொல்லி செல்வர். 

அவருக்கு இருந்த உடல்நல கோளாறினால் அவரது மனைவி தனியாக அவர் எங்கும் செல்ல வேண்டாம் என்று நினைத்து அவர்களது வீட்டிற்கு முன் இருந்த அறையிலேயே அலுவலக அறையாக வைத்துக் கொள்ள சொல்லிவிட்டார். 

ஆகவே அவரது வீடும் அலுவலகமும் ஒரே இடமாகியது. அப்படி ஒரு நாள் கதை சொல்ல டைரக்டருடன் வந்தவன் தான் ராஜேஷ். அண்ணா நகரின் மத்தியில் மிகப்பெரிய பங்களாவில் கண்டு மயங்கினான். அன்றைய நேரம் பார்த்து வேலைக்காரி வராததால், வந்தவர்களுக்கு குடிப்பதற்கு பழச்சாறை கொடுத்து மகளிடம் அனுப்பி வைத்தார் அவளது தாய். 

கீதாவை கண்ட ராஜேஷிற்கு அவளை மணந்து கொண்டால், இந்த சொத்து முழுவதும் தனக்கு வருமே என்ற எண்ணம் தோன்றியது. உடனே அதற்குரிய வேலையை தொடங்கி விட்டான் பெண்களை மயக்கும் குணமுடைய ராஜேஷ் கீதாவிடமும் பேச, அந்த வயதில் இருந்த ஈர்ப்பில் ராஜேஷிடம் தன் மனதை பறி கொடுத்தாள். 

தந்தைக்குத் தெரியாமல் தன் காதலை வளர்த்த கீதா. 

தான் இல்லாமல் அவளால் வாழ முடியாது என்ற நிலைக்கு அவளை கொண்டு வந்தான் ராஜேஷ்.

அவன் நினைத்தது போலவே, ராஜேஷை உண்மையாக காதலித்த கீதா தந்தையிடம், நான் திருமணம் செய்து கொண்டால் ராஜேஷ் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தாள். 

அவரும் மகளுக்கு எவ்வளவோ பொறுமையாக கூறினார். ராஜேஷின் குணம் நான் விசாரித்த வரையில் நல்லதாக தெரியவில்லை என்று, ஆனால் தந்தை தன் காதலை மறுப்பதற்காக ராஜேஷை குறை கூறுகிறார் என்று கலங்கிய கீதா, “அப்பா, நான் கல்யாணம் என்று செய்து கொண்டால் ராஜேஷ்சை தான் கல்யாணம் செய்து கொள்வேன். இல்லை என்றால் இப்படியே உங்களுடன் இருந்து விடுவேன்” என்று முடிவாக சொல்லிவிட்டாள். 

ஒரே மகளாக செல்லம் கொடுத்து வளர்த்தவள் தன்னிடம் இப்படி பேசியதில் மனம் நொந்த பெற்றோர், அவளின் ஆசைப்படி அவனை அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க சம்மதித்தனர். ஆனால் அவளது தந்தை ஒன்றும் லேசு பட்டவர் இல்லையே. அவனை மிரட்டி இதுவரை நீ எப்படி இருந்தாலும் பரவாயில்லை. “என் மகள் உன்னைத்தான் மனம் முடிப்பேன் என்று ஒற்றை காலில் நிற்கின்றாள். நீ அந்த அளவுக்கு அவளை மனதை மாற்றி இருக்கிறாய் என்பதை புரிந்து கொண்டேன். என் மகளுக்காக தான் உன்னை நான் அவளுக்கு திருமணம் செய்து கொடுக்கின்றேன். ஆனால் இனிமேல் உன்னை பற்றி தவறாக ஏதாவது ஒரு விஷயம் கேள்விப்பட்டேன் என்றால், உன் உடலில் உயிர் இருக்காது. இதை நினைவில் வைத்துக் கொண்டே என் மகள் கழுத்தில் தாலி கட்டு” என்று மிரட்டியே கீதாவிற்கு மணமுடித்து வைத்தார். 

ராஜேஷ் பணத்திற்காக கீதாவை மணந்து கொண்டான். ஆனால் கீதாவோ அவனை உண்மையாக காதலித்து தானே மணந்தாள். அவர்களது இல்வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக கடந்தது. அதன் பலனாக அடுத்த வருடத்திலேயே மான்சியை ஈன்றெடுத்தாள் கீதா. 

மாமனாரின் செல்வாக்கை பயன்படுத்தி எப்படியும் படம் எடுத்து டைரக்டராக விட வேண்டும் என்ற அவனது கனவு. அதை அவனது மாமனார் நிறைவேற்றவே இல்லை. உன் திறமையை வைத்து வேறு எந்த ஒரு தயாரிப்பாளரிடமாவது கதை  சொல்லி படம் பண்ணிக் கொள் என்று அவனது ஆசைக்கு தடை போட்டு விட்டார். 

அதனால் தான் அவன் இன்று வரை அசிஸ்டன்ட் டைரக்டராகவே இருக்கிறான். அதுவும் நிலையாக ஒரு டைரக்டரிடம் வேலை செய்யும் பழக்கமும் இல்லை. அவன் வேலை செய்யும் இடத்தில் உள்ள பெண்களிடம் தவறாக நடந்து கொள்வதால், எந்த ஒரு டைரக்டரும் அவனை நிலையாக வைத்துக் கொள்ளவில்லை. தயாரிப்பாளரின் மருமகன் என்ற காரணத்தினால் இதுவரை யாரும் எதுவும் சொல்லாமலும் இருந்தார்கள். அதுவே அவனுக்கு தைரியத்தை வரவழைக்க தொடர்ந்து தவறுகள் செய்து கொண்டே இருந்தான். இதோ இன்று ஆராதனா வரை.

தன் காதல் கணவன் ஒரு சிறு பெண்ணிடம் இப்படி நடந்து இருக்கின்றானே என்ற கவலை அவளை அழுத்தத்தில் ஆழ்த்தியது. ஆராதனாவும் தண்டிப்பதா இல்லை மன்னிப்பதா என்று முடிவை தன் கையில் விட்டு விட்டதால், ஒரு முடிவுக்கு வரவேண்டிய கட்டாயத்தில் இருந்தால் கீதா. 

இப்பொழுது மனைவியாக அவள் முடிவெடுக்க விரும்பவில்லை. ஒரு பெண்ணாகவே முடிவெடுக்க தீர்மானித்தாள். அதில் நிமிர்ந்து ஆராதனாவை பார்த்த கீதா, “மன்னிப்பா? மன்னிக்கும் படியான சிறு தவறு இது அல்ல! தண்டிப்பதற்கான பாதகமான செயல்தான்! அவனை தண்டிக்க தான் வேண்டும். என்னை கேட்டால் சினிமாவில் வருவது போல் நடுரோட்டில் நிற்க வைத்து கல்லாலையே அடித்து கொள்ள வேண்டும்” என்றாள் வெறி கொண்டவள் போல். 

அவளின் ஆவேசத்தை கண்ட ஆராதனா அவளது கைகளை பிடித்து அழுத்தம் கொடுத்து தன் நன்றியை தெரிவித்து, “என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்” என்றாள். 

சிறிது நேரம் யோசித்த கீதா “அவனை நான் தண்டித்துக் கொள்கிறேன் இனிமேல் நீ அவனைப் பற்றி நினைத்து, உன் வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளாதே. 

நடந்தது உன்னை அறியாமல் நடந்த விபத்து என்று நினைத்து இதிலிருந்து வெளியே வந்து விடு” என்று சொல்லிவிட்டு, “முதலில் நீ யூனியனில் ராஜேஷ் மேல் உன்னிடம் தவறாக நடக்க முயல்கிறான் என்று ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்து விடு” அத்துடன் எல்லா விஷயத்தையும் மறந்து விடு. 

அவனை நான் பார்த்துக் கொள்கிறேன். இனிமேல் அவன் உன்னிடம் மட்டுமல்ல எந்த பெண்ணிடமும் வாலாட்டாதபடிக்கு செய்து விடுகிறேன். தைரியமாக இரு” என்று ஆராதனாவிற்கு ஆறுதல் கூறினாள். 

இருவரது மனநிலையும் சற்று இலகுவாக பொதுவான விஷயங்களை பற்றி பேசி நேரத்தை கடத்தினர். சற்று நேரத்திற்கெல்லாம் மான்சி பசிக்கிறது என்று அவர்களிடத்தில் வந்தாள். பின்னர் அவளுக்கு ஆர்டர் செய்த உணவுகளை வரவைத்து அவளை சாப்பிட வைத்தாள் கீதா. ஆராதனாவையும் உணவு உண்ணச் சொல்ல, “எனக்கு வெளியே உணவு உண்ண பயமாக இருக்கிறது” என்றாள் ஆராதனா. 

அவளின் பயத்தை கண்டு வருந்திய கீதா, “கவலைப்படாதே. இங்கு எதுவும் கலந்திருக்க மாட்டார்கள். ஆனால் இனிமேல் நீ கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருந்து கொள். என் கணவனுடன் சேர்த்து மற்றொருவரும் இருக்கிறான் அல்லவா? ராஜேஷ்சை நான் கவனித்துக் கொள்வேன்.

மற்றொருவன் பற்றி உனக்கு மட்டுமே தெரியுமாதாலால் நீதான் அவனை தண்டிக்க வேண்டும். அவன் யாரென்று உன்னைத் தவிர  வேறு யாருக்குமே, ஏன் எனக்கு கூட தெரிய வேண்டாம். 

என்னை உன் அக்காவாக நினைத்துக் கொள். எந்த பிரச்சினை என்றாலும் என்னிடம் தயங்காமல் சொல். என்னால் முடிந்த உதவியை உனக்கு நான் கண்டிப்பாக செய்வேன் இனிமேல் உன் வாழ்க்கையில் ராஜேஷ் குறிக்கிட மாட்டான். அந்த உறுதி என்னால் இப்பொழுது உனக்கு தைரியமாக கொடுக்க முடியும்” என்ற கீதா, ஆராதனாவிடம் விடைபெற்று வீட்டிற்கு சென்று விட்டாள்.

கீதா கிளம்பிய பிறகு அவர் கூறியபடியே நேராக யூனியன் அலுவலகத்திற்கு சென்றாள் ஆராதனா.

அங்கு பொறுப்பில் இருப்பவரிடம் அசிஸ்டன்ட் டைரக்டர் ராஜேஷ் பற்றி எழுத்து மூலமாக ஒரு குற்ற சாற்றை பதிவு செய்தாள். அதில் இருந்த பெரியவர் ஒருவர் ராஜேஷின் குல நலங்களை பற்றி நன்கு தெரிந்தவர். ஆராதனாவிடம் “நீ எழுத்து மூலமாக கம்ப்ளைன்ட் பண்ணி இருக்கிறாய்மா. அவன் பெரிய தயாரிப்பாளரின் மருமகன். அதனால் உன் வேலைக்கு ஏதாவது தொந்தரவு வந்தால் என்ன செய்வாய்? அது மட்டுமல்லாது ராஜேஷுக்கும் இந்த விஷயம் தெரிய வரும் அப்பொழுது அவன் இன்னும் தவறாக ஏதாவது செய்து விடுவானே?” என்று ஆராதனாவின் மேல் உள்ள அக்கறையில் கவலையாக கூறினார். 

“அப்படி எதுவும் எனக்கு நடக்கக்கூடாது என்று தானே சார் நான் யூனியனில் கம்ப்ளைன்ட் செய்கிறேன். இதை யூனியன் தான் சரிபடுத்தி தர வேண்டும். என் முடிவில் நான் உறுதியாகத்தான் இருக்கிறேன். அவர் யாரோட மருமகனாக இருந்தால் எனக்கென்ன? ஒருவேளை மருமகனுக்காக அவர் பேசினால், நான் அவரிடமே பேசிக் கொள்கிறேன்” என்று திடமாக கூறினாள் ஆராதனா.

– தொடரும்..

– அருள்மொழி மணவாளன்..

5 thoughts on “அரிதாரம் – 16”

  1. Kalidevi

    interesting. paravala rajesh oda wife aaradhana somnnatha porumaiya ketu oru ponna mudivu eduthu iruka avanuku punishment kodukanumnu pakanum ena punishment kodukuranganu. aaradhana complaint koduthathu therinja varuvan avan ivala thedi athuku munnadi geetha pathukanum. next raghu avanuku ena punishment koduka pora

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *