ருத்ரமாதேவி - 21
அத்தியாயம் 21
ஜோதிடம் பற்றிய பேச்சில் கவலை அடைந்த மகாதேவியை தந்தையும் மகளும் சேர்ந்து சமாதானப் படுத்தினர்.
அவர்களின் செயலில் சமாதானம் அடைந்த மகாதேவி, ருத்ராவிடம், "நீ எந்த முயற்சியும் எடுக்க வேண்டாம். விதிப்படி நடக்க வேண்டியது நடக்கும் போது நடக்கட்டும்" என்று கூறி, "சரி வாங்க. நேரம் ஆகிறது. சாப்பிடலாம்" என்று எழுந்தார்.
இரவு உணவை ஊட்டி விடும்படி ருத்ரா கெஞ்ச. தாயும் தந்தையும் அவளுக்கு ஊட்டி விட்டனர்.
அன்றைய தினம் அப்படியே கழிய, மறுநாள் கல்லூரிக்கு வந்த ருத்ரா முதலில் தேடியது அன்பரசுவை தான்.
நண்பர்கள் ஒவ்வொருவராக வர கடைசியாக வந்து சேர்ந்தான் அன்பரசு. அவனைக் கண்டதும் துள்ளி குதித்து அவனின் கையை பிடித்து, "அண்ணா தஞ்சாவூர் அருகே தான் எங்க தாத்தா பாட்டியின் ஊர் உள்ளதாம். எனக்கு என்னமோ அவர் எங்கள் மாமாவின் மகனாக இருப்பாரோ என்று சந்தேகமாக இருக்கிறது. திருமணஞ்சேரி தான் என் அம்மாவின் ஊர். தமிழ் சார் ஊர் எது என்று கண்டுபிடித்தால் தெரிந்து விடும்" என்று மகிழ்ச்சியாக கூறினாள்.
அவளின் மகிழ்ச்சி அவனையும் தொற்றிக் கொள்ள, "இன்று எப்படியும் கண்டு பிடித்து விடுவேன் என்றான்.
வகுப்புக்கு செல்லும் நேரம் வர அனைவரும் அவரவர் வகுப்பை நோக்கி சென்றனர்.
அவளுக்கு என்னவோ தமிழ் வேந்தன் சொந்தம் என்றே அவளின் உள்ளுணர்வு சொல்லிக் கொண்டே இருந்தது.
வகுப்புக்கு வந்த தமிழ் வேந்தனும் வழக்கம் போல் அவளை தவிர மற்ற எல்லோரையும் பார்த்து பாடம் எடுக்க, தன்னை தவிர்ப்பதில் கவலையானாள்.
மதிய உணவு இடைவேளையில் அன்பரசு தமிழ் வேந்தன் பற்றிய முழு விவரங்களையும் கூற, அவனின் தாய் தந்தையர் பெயர் கேட்டதும், அவன் தன் மாமன் மகன் என்றதில் அவளுள் ஒரு வித மகிழ்ச்சி பொங்கியது.
அந்த மகிழ்ச்சி அவனை காண வேண்டும் என்ற ஆவலை தூண்ட, உடனே அவனைத் தேடி சென்றாள். ஸ்டாஃப் ரூம் சென்று அவனை காண, அவளைக் கண்டதும் வெளியே வந்த தமிழ் வேந்தன், "நான் தான் உன்னை எந்த தொந்தரவும் செய்யவில்லையே. பின்னே என்ன?" என்று சற்று கோபமாக கேட்டான்.
அவனின் கோபம் அவளுக்கு சங்கடமாக இருந்தாலும், அவனைப் பற்றி தனக்கு தெரியும் என்பதை அவனுக்கு உணர்த்தும் பொருட்டு, "இல்லை அத்தான். அம்மா பிரியாணி கொடுத்து இருக்காங்க. உங்களுக்கும் கொடுக்கலாம் என்று தான்" என்று வெட்கப்பட
அவளின் 'அத்தான்' என்ற கூற்றில் அதிர்ந்து நின்ற தமிழ் வேந்தன், அவள் வெட்கத்தில் நிற்கும் கோலத்தைக் கண்டு மேலும் அதிர்ந்தான்.
கால் கட்டை விரல் கொண்டு தரையில் கோலம் போட்டுக் கொண்டு, ஷாலின் நுனியை பிய்த்துக் கொண்டு, தலையை ஒரு பக்கம் சரித்து கொண்டு அவனை பார்த்து நின்றதை பார்க்கும் போது அவனுக்கு மட்டும் அல்ல நமக்கும் அதிர்ச்சி தான்.
அதிர்ச்சியில் இருந்து மெல்ல வெளிவந்த தமிழ் வேந்தன் "ஏய்.. ச்சீ... ஏன் இப்படி நெளிஞ்சுக்கிட்டு நிற்கிற, அத்தான் பொத்தான்ட்டு" என்று சிடுசிடுத்தான்.
அவனின் சிடுசிடுப்பைக் கண்டு மனதில் சிரித்துக்கொண்டே, "அத்தான்... ஊரில் மாமா அத்தை எல்லோரும் நலமா?" என்று நாடக பாணியில் கேட்க.
அவளின் சிரிப்பிலேயே தெரிந்து கொண்டான் அவளுக்கு அவனைப் பற்றி தெரிந்து விட்டது என்று.
அவளை முறைத்து விட்டு, ஒழுங்காக இங்கு இருந்து ஓடிடு. அப்புறம் நான் பேச ஆரம்பித்தால் தாங்க மாட்ட என்று மிரட்டினான்.
அவன் மிரட்டவும் நாக்கை துருத்தி ஔவம் காட்டிவிட்டு ஓடிவிட்டாள்.
ஏனோ அன்றைய தினம் அவளுக்கு மகிழ்வாக கடந்தது. வழக்கம் போல் வீட்டிற்கு வர, KTM அட்வஞ்சர் பைக் வாசலில் இருக்க, யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே வீட்டினுள் நுழைய, அங்கு இருந்த நபரைக் கண்டு அதிர்ந்து நின்றாள்.
வேறு யார். நம்ம தமிழ் வேந்தன் தான் அமர்ந்து அவளின் தாய் தந்தையுடன் பேசிக் கொண்டு இருந்தான்.
தன் அண்ணனின் மகன், தன் கண் முன் அமர்ந்து இருப்பதில் மகாதேவி நெகிழ்ந்து போய் அமர்ந்திருந்தார். அவனின் கையை தன் கைக்குள் பொத்தி வைத்துக் கொண்டு அவனிடம் பேசிக் கொண்டு இருந்தார்.
ருத்ராவை கண்டதும் முகம் முழுவதும் சிரிப்பாக வரவேற்று தன் அண்ணன் மகன் என்று தமிழ் வேந்தனை அறிமுக படுத்தினார். பின்னர் அனைவருக்கும் காஃபியும் நொறுக்கு தீனியும் எடுத்து வர சமையல் அறை நோக்கி செல்ல, அவரின் கை பிடித்து இழுத்து தன் அருகே அமர வைத்துக் கொண்டே, "நீங்க ஏன் அத்தை அதெல்லாம் செய்யனும். அதான் ருத்ரா இருக்கால்ல. அவ செய்வா" என்று மகாதேவியிடம் கூறி விட்டு, ருத்ரவை பார்த்து", "ருத்ராமா நீ போயி அத்தானுக்கு "க்கூம் என்று தொண்டையை செருமி எல்லோருக்கும் காஃபி எடுத்துட்டு வாடாம்மா" என கூறினான்.
அவனை தன் வீட்டில் பார்த்ததிலேயே அதிர்ந்து போய் இருந்தவளை அவனின் பேச்சு மேலும் அதிர்ச்சியை தர, அதே அதிர்ச்சியுடன் தன் தந்தையை காண, அவரோ போ என்றவாறு தலையை ஆட்டினார்.
தந்தை கூறியதும் அமைதியாக சென்று அங்கு தயாராக இருந்த காஃபியை எடுத்து வந்து அனைவருக்கும் கொடுத்து விட்டு தந்தையின் அருகில் அமர்ந்து அவர்களது பேச்சை கவனிக்கலானாள்.
உங்களை காணும் என்றதும் உங்கள் உயிர் தோழி உமாவிடம் அதாவது என் அம்மாவிடம் சென்று விசாரித்திருக்கிறார் உங்கள் அண்ணன். என் அப்பா என்று நெஞ்சை தட்டி காண்பித்தான்.
அவர்களுக்கும் நீங்கள் எங்கு சென்றீர்கள் என்று தெரியாததால் அவரை மிரட்டி விட்டு வந்துவிட்டார் சங்கரேஷ்வர்.
அதன் பிறகே மகாதேவியை கடத்த முயன்ற கயவர்கள் அவர் காதலித்த காதலனுடன் ஓடிவிட்டாள் என்று வதந்தியை பரப்பிவிட்டனர்.
அதை உண்மை என்று நம்பிய சங்கரேஷ்வர் மகாதேவியின் காதல் கண்டிப்பாக உமாமகேஷ்வரிக்கு தெரிந்திருக்கும் என்று நினைத்து அவளை கடத்தி தங்கள் பண்ணை வீட்டில் அடைத்து விசாரிக்கும் படி தன் அடியாட்களுக்கு கட்டளை இட, அவர்களும் அப்படியே அவளை பண்ணை வீட்டில் கட்டிவைத்து விட்டார்கள்.
சங்கரேஷ்வரனும் ஆரம்பத்தில் அமைதியாக விசாரிக்க, அவள் தெரியாது தெரியாது என்று கூறியதில் கோபமாகி அடித்து விசாரிக்க ஆரம்பித்து விட்டான்.
அப்படியே இரண்டு நாட்கள் கடந்தது. உமாவை காணவில்லை என்று ஊருக்கே தெரிந்துவிட்டது. அவளும் அவளின் தோழி போலவே யாரையோ காதலித்து ஓடிவிட்டாள் என்று பரவியது.
இரண்டு நாள் கழித்து...
தொடரும்...
- அருள்மொழி மணவாளன்...
Leave a reply
-
ருத்ரமாதேவி - 236 hours ago
-
ருத்ரமாதேவி - 2222 hours ago
-
ருத்ரமாதேவி - 203 days ago
-
ருத்ரமாதேவி - 194 days ago
-
ருத்ரமாதேவி - 185 days ago
- 143 Forums
- 2,523 Topics
- 3,006 Posts
- 0 Online
- 2,067 Members
