Skip to content
Home » இடனறிதல்-50

இடனறிதல்-50

பொருட்பால் | அரசியல் |இடனறிதல்

குறள்:491

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது

முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக்‌ கண்டபின்‌ அல்லாமல்‌ எச்‌ செயலையும்‌ தொடங்கக்‌ கூடாது; பகைவரை இகழவும்‌ கூடாது.

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

குறள்:492

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்

மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும்‌ அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பலவகைப்‌ பயன்களையும்‌ கொடுக்கும்‌.

குறள்:493

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்

தக்க இடத்தை அறிந்து தம்மைக்‌ காத்துக்கொண்டு பகைவரிடத்திற்‌ சென்று தம்‌ செயலைச்‌ செய்தால்‌, வலிமை இல்லாதவரும்‌ வலிமை உடையவராய்‌ வெல்வர்‌.

குறள்:494

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்

தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச்‌ செயலை நெருங்கிச்‌ செய்வாராயின்‌, அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர்‌ தம்‌ எண்ணத்தை இழந்துவிடுவார்‌.

குறள்:495

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற

ஆழமுள்ள நீரில்‌ முதலை மற்ற உயிர்களை வெல்லும்‌; ஆனால்‌ நீரிலிருந்து நீங்கி வந்தால்‌ அந்த முதலையையும்‌ மற்ற உயிர்கள்‌ வென்று விடும்‌.

குறள்:496

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து

வலிய சக்கரங்களையுடைய பெரிய தேர்கள்‌ கடலில்‌ ஓடமுடியாது; கடலில்‌ ஓடுகின்ற கப்பல்களும்‌ நிலத்தில்‌ ஓடமுடியாது.

குறள்:497

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்

(செய்யும்‌ வழிவகைகளைக்‌) குறைவில்லாமல்‌ எண்ணித்‌ தக்க இடத்தில்‌ பொருந்திச்‌ செய்தால்‌, அஞ்சாமை அல்லாமல்‌ வேறு துணை வேண்டியதில்லை.

குறள்:498

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்

சிறிய படை உடையவனுக்குத்‌ தக்கதாக உள்ள இடத்தில்‌ பொருந்தி நின்றால்‌, பெரிய படை உடையவன்‌ தன்‌ ஊக்கம்‌ அழிவான்‌.

குறள்:499

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது

அரணாகிய நன்மையும்‌ மற்றச்‌ சிறப்பும்‌ இல்லாதவராயினும்‌ பகைவர்‌ வாழ்கின்ற இடத்திற்குச்‌ சென்று அவரைத்‌ தாக்குதல்‌ அரிது.

குறள்:500

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு

வேல்‌ ஏந்திய வீரரைக்‌ கோத்தெடுத்த கொம்பு உடைய அஞ்சாத யானையையும்‌, கால்‌ ஆழும்‌ சேற்று நிலத்தில்‌ அகப்பட்டபோது நரிகள்‌ கொன்றுவிடும்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!