Skip to content
Home » ஐயங்காரு வீட்டு அழகே-1

ஐயங்காரு வீட்டு அழகே-1

அத்தியாயம்-1

Thank you for reading this post, don't forget to subscribe!

கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்

உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த
உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்தா
த்ரைலோக்யம் மங்களம் குரு

மாத சமஸ்த ஜகதாம் மது கைடபாரே
வக்ஷோ விஹாரிணி மனோகர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ ஸ்வாமினி, ச்ரிதஜன ப்ரிய தான சீலே
ஸ்ரீ வேங்கடேச தயிதே தவ சுப்ரபாதம்

தலைக்கு பக்கவாட்டில் சுப்ரபாதம் அலாரமாக ஒலித்து, கடிகாரத்தில்  ஆறு முப்பது என்று காட்டியது.
  கொட்டாவியை விட்டு மெதுவாக எழுந்த ராகவி அதனை அணைத்துவிட்டு, வலது பக்கத்தில் உள்ள மெத்தையை பார்வையிட எப்பொழுதும் போல அவளது ரூம்மெட் தோழி காருண்யா அவ்விடத்தில் இல்லை. இடது பக்கம் இந்து மட்டும் என்ன சத்தம் வந்தாலும், எனக்கென்ன என்று உறங்கியிருந்தாள்.

   “இந்த காருண்யா மட்டும் எப்படி தான் அலாரம் அடிக்கும் முன்னவே எழுந்துக்கறாளோ. இந்த லட்சணத்துல இந்த ஸ்லோகத்தை அலாரமா வேற செட் பண்ணி, என் தூக்கத்தை வேற கெடுக்கறா.” என்று சலிப்படைந்து, பல் விலக்க ப்ரஷில் பேஸ்டை வைத்து, தேய்த்தாள் ராகவி.

  அப்படியே குளிக்கவும் சென்றாள். ‘அன்னப்பூரணி வுமன்ஸ் ஹாஸ்டல்’இல் இருபது அறைகள் உள்ளது. அதில் ஒவ்வொரு அறையிலும் மூன்று பேர் தங்கலாம். இந்த அறையில் காருண்யா இந்து, ராகவி தங்கியிருக்கின்றார்கள். இந்து அலாரம் அடித்தும், இன்னமும் எழுந்துக்கவில்லை.

  நம் நாயகி காருண்யா அதிகாலை எழுந்து குளித்து முடித்து காபி பருக சென்றியிருப்பாள்.

ராகவி ஷவரை திறந்துவிட, பச்சை தண்ணீரோ ஐஸ்கட்டி மழையாக பொழிந்தது.

  “அய்யோ அய்யோ அய்யோ… இந்த குளிரு குளிருது. இந்த காருண்யா எப்படி தான் தினமும் சில் தண்ணில குளிக்கறாளோ? நமக்கு இன்னிக்கு மேனேஜர் சீக்கிரம் வர சொல்லவும், ஒரு நாளைக்கே உதறது” என்று இந்த இரண்டு நொடியே போதுமென்று முகத்திற்கு ஃபேஸ் வாஷ் போட்டு முகமலம்பி காக்கா குளியலை முடித்தாள்.

   ‘எங்கயிருக்கா இந்த காரு. காருன்னு சென்னா மூக்குக்கு மேல கோபம் வரும். ‘என்னை ஏன்டி காரு பஸ்ஸுனு பேர் வச்சி கிண்டல் பண்ணுறேள்’னு கத்துவா’ என்று முனங்கியபடி, ராகவி காருண்யாவை தேடி கேண்டீன் வந்தாள்.

  காருண்யாவோ ”எங்காத்துல எங்க பாட்டி, மணக்க மணக்க நேக்கு ஃபில்டர் காபி போட்டு தருவா. அவா போட்டு தந்து குடிச்சது. இங்க வந்தப்பிறகு இப்பல்லாம் எங்கயும் குடிச்சதில்லை. ஏதோ உங்க கையால  போடுற காபின்னா நேக்கு இஷ்டம் சாரதா அக்கா” என்று கூறியவளின் முதுகில் மொத்தென்று ராகவி அடித்தாள்.

   “ஆஹ்… ராகவி பேயே” என்று திரும்பாமல் காருண்யா திட்டினாள்.

  “அதெப்படி டி, நான் தான்னு திரும்பாமலே சொல்லற” என்று ராகவி கேட்டதும், “நீ அங்க வரச்ச, நேக்கு தான் உன் வாசம் காத்துல வந்துடுதே. ஸ்டாபெர்ரி பிளேவர் பேஷ்வாஷ், லெமென் பாடி ஸ்பிரே.” என்று அங்கலாய்த்தாள்.

  “ஆமா ஆமா… உன்‌ பக்கத்துல வந்தா ஜவ்வாதும், சந்தனம் குங்குமம்னு விபூதி வாசம் இல்ல வருது. ஏன்டி… இப்படி பழைய பஞ்சாங்கமா இருக்க? நெத்தியை பாரு சிக்னல்ல இருக்கற மாதிரி கலர் கலரா கோடு” என்று கேட்டாள்.

  “நோக்கு என்ன வந்துச்சு. அவஅவா விருப்பு  வெறுப்பை தாண்டி, பழக்கதோஷம்னு ஒன்னு இருக்கு.” என்று காருண்யா கூறவும் தான் ராகவிக்கு குளிர் நீரில் குளித்ததே நினைவு வந்தது.

  “ஏன்டி நீயெல்லாம் மனுஷ ஜென்மமா? தண்ணி பைப்பை திறந்தா ஐஸ்கட்டி கணக்கா தண்ணி கொட்டுது. இந்த குளிரில் எப்படிடி தினமும் குளிக்கற? எனக்கு இந்த ஒரு நாளைக்கே ஜன்னி வந்துடற மாதிரி இருக்கு” என்று சந்தேகத்தை கேட்டாள்.

  “நான் எங்காத்துல இருக்கறச்ச நேக்கு பாட்டி பழக்கப்படுத்திட்டா. தினமும் பிரம்ம முகூர்த்தம் அப்ப எழுந்து ஸ்னானம் செய்து, சாமிக்கு பூஜை செய்து, அப்படியே தீவார்த்தனை காட்டினா சேமமா இருப்போம்னு நம்புவா. பாட்டி கோவிலுக்கும் நெய்வேத்தம் செய்ய எல்லாம் கூட்டிட்டு போவா. அதெல்லாம் பசுமரத்தாணியா பதிந்திடுச்சே.
    இப்ப நான் விட்டாலும் பழக்கதோஷம் என்னை விடமாட்டேங்குது ராகவி.
  நேக்கு என் பக்கத்துல பாட்டி இல்லாத குறையெல்லாம் அவா பழக்கப்படுத்தி விட்ட இந்த விஷயமெல்லாம் தான் நினைவுப்படுத்தி துணை நிற்குது.” என்று கூறினாள் காருண்யா.

  “உன் பாட்டி உன்னை நல்லா ட்ரையின் பண்ணிருக்காங்க. நல்ல வேளை எனக்கு இப்படியொரு பாட்டி இல்லை தப்பிச்சேன்டா சாமி.” என்று வஞ்சப்புகழ்ச்சி அணியாக, பாட்டியை பாராட்டி விட்டு காபியை பருகினாள்.

  “ஆமா… இன்னிக்கு என்ன? மங்களகரமா மஞ்சள்?” என்று ராகவி காருண்யாவின் துப்பட்டாவை தூக்கி பறக்கவிட்டு கேட்டாள்.

காருண்யாவுக்கு பாட்டி பழக்கப்படுத்திய பண்புகள் நிறைய. அதில் முக்கிய நாளில் மஞ்சள் பச்சை வண்ணத்தில் உடையுடுத்த வேண்டும். அப்படி உடை உடுத்தினால் கூடுதலாக பாஸிடிவ் தோன்றும். காருண்யாவுக்கு ஏதேனும் முக்கிய நாளிருக்க, அதற்காக தனக்கு நேர்மறையான எண்ணம் உதிக்க அவ்வாறு அணிவாள்.

    “அதையேன் கேட்கற ராகவி. இன்னிக்கு ஆபிஸ்ல புதுசா இரண்டு பேர் வர்றாளோ இல்லையோ. அவாளை என் பக்கத்துல தான் உட்கார வைப்பதா மேனேஜர் பேசிண்டுருந்தார். உனக்கு தான் தெரியுமே. நான் ரொம்ப ஆச்சாரம், மடி சுத்தம் பார்ப்பேன்னு. பக்கத்துல வர்றவா எப்படிப்பட்டவளோ? ஆனாலும் அவங்களோட தான் நாளெல்லாம் குப்பை கொட்டணும். உனக்கு தான் தெரியுமோனோ, நேக்கு பழகற மனுஷாளுங்க செட்டாகாதுன்னா மொத்தமா ஒதுங்குவேன்.
   பிடிச்சா நெருக்கமா பழகி ஒட்டிப்பேன்.‌ பக்கத்துல சேர்ந்து வேலை செய்யப் போறவா. அவாளோட மனஸ்தாபம் வந்துடக் கூடாதோனோ?! அதுக்கு தான் பெருமாளாண்ட ஒரு அப்ளிக்கேஷன். வர்றவாளை மொத்தமா ஒதுங்கிடற மாதிரி கேரக்டர் வேண்டாம்‌, அட்லீஸ்ட் சுமூகமா உத்தியோகத்துல பிரெண்ட்லியா பழகற ஆட்களா கண் முன்னாடி கொடுன்னு வேண்டுதல்.

ரோஸ்ஸின் எல்லாம் நேக்கு அசைவம் வாடை ஒத்துக்காதுன்னு, அவ அசைவம் சாப்பிட்டா அன்னிக்கு என்னிடம் தள்ளி நின்றுடுவா. வர்றவா பக்கத்திலேயே உட்கார்ந்து டிபன் பாக்ஸை திறந்தா என் நிலைமையை யோசி.” என்று விளக்கமளித்தாள்.

  ராகவியோ “அதென்ன பழக்கமோ? கண்றாவி… ஆனா ஒன்னுடி. கண் கண்ட கணவனை கண் முன்ன நிறுத்து ஆண்டவான்னு வேண்டுதல் வைக்காம, கூட வேலை செய்யற ஆட்களுக்கு எல்லாம் நல்லவங்களா வரணும்னு அப்ளிகேஷன் போடுற பாரு. உன்னை மியூசியம்ல தூக்கி உட்கார வைக்கணும்” என்று கிலுக்கி சிரித்தாள் ராகவி.

  “அதெல்லாம் எம்பெருமாளுக்கு எனக்கென்ன கொடுக்கணும்னு நன்னா தெரிந்து வச்சிண்டுருப்பார். சின்ன சின்ன விஷயத்தை நேக்கு  சரியா தருவார். எனக்கு வர்ற ஆம்பளயாண்டால சரியான நேரத்துல என் கண் முன்ன நிறுத்துவார். அதுக்கு தான் என் தோப்பனார் இருக்காரே. எனக்குன்னு வர்ற ராஜகுமாரனை குறுக்கு விசாரணை செய்து குவாலிட்டியா தேர்ந்தெடுப்பார்.” என்று பெருமிதமாக கூறி மணிக்கட்டில் அணிந்திருந்த கருப்பு லெதர் கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்தாள்.

“அச்சோ நாழியாச்சு செத்த சீக்கிரம் போகணும். வந்து பேசறேன் ராகவி பைபை” என்று மெஸ்ஸில் செய்த சப்பாத்தியை பேசியபடி சாப்பிட்டு  சிட்டாக பறந்தாள் நாயகி.

   காருண்யாவுக்கு எட்டு வயது இருக்கும் பொழுது, அவள் அன்னை தீபா தைராய்டு பிரச்சனையால் இறந்துவிட்டார். தந்தை சீனிவாசன் மட்டுமே. தந்தை வழி பாட்டி அமிர்தம். இருவருமே காஞ்சிபுரத்தில் வாழ்கின்றனர். காஞ்சி மாநகரத்தை தாண்டி வெளியுலகத்திற்கு வர தயங்குவார்கள். சொந்த வீடு என்பதாலும், சீனிவாசனுக்கு அங்கே இருக்கும் கோவிலில் பணி என்பதாலும் அவ்விடம் விட்டு வர மறுத்துவிட்டார்.
  காருண்யா மட்டும் திருமணம் ஆகும் வரை சென்னையில் வேலை செய்ய அனுமதி வாங்கி, அன்னப்பூரணி மெஸ்ஸில் தங்கியுள்ளாள்.

   காருண்யா தனது பிங்க் வண்ண ‘ஸ்கூட்டி பெப்’பில் வேலை செய்யும் இடத்திற்கு போக்குவரத்துக்கு பயன்படுத்துவாள். அதன் பலன் அலுவலகத்திற்கு, நேரத்திற்கு வந்து சேர்ந்தாள்.

    புதிதாக வேலைக்கு வரும் ஆட்கள் வந்துவிட்டார்களா என ரோஸ்லினிடம் கேட்டாள். அவளோ தலையசைத்து இல்லையென்றாள்.
காருண்யா அலுவலகத்தில் அவளையும் சேர்த்து எட்டு பேரும், புதிதாக வரும் இருவரோடு புது பிராஜக்ட் வேறு போடப்படுவதாக கேள்விப்பட்டாள். அதில் இருவரில் ஒருவன் தான் தலைமை பொறுப்பாக செயல்படப் போவதாகவும் அறிந்தாள்.

ஒரே கம்பெனியில் தினமும் காணும் மனிதர்களுக்குள்ளே அபிப்ராயம் மாறும். இதில் புதிதாக வருபவரோடு விரைவில் திட்டங்கள் ஒன்றுபோல தோன்றினால் தானே வேலைகள் வெற்றியாக செயல்படும். இதில் அவளது பக்கம் தான் வருபவர்கஹ் வேலை செய்யும் இடமும் போடப்படுவதாக அறிந்தாள்.

   இதையெல்லாம் நினைத்து, காருண்யா அவள் வேலை செய்யும் இடத்திற்கு வந்து அமர்ந்தாள்.

  ‘பெருமாளே.’ என்று இறைவனை துதித்துவிட்டு தன் கணினியோடு காதல் புரிய ஆரம்பித்தாள். வேலையை தான் தற்போது காதலிக்கின்றாள். அவளை காதலிக்க வலை வீசியவர்களும் உண்டு. ஆனால் இவளை மணந்தால் மாமிசம் சாப்பிடுவதை துறக்க வேண்டும் என்றதற்கே, பழக அஞ்சி நாசூக்காய் தவிர்ப்பார்கள். ஆனால் காருண்யாவின் திவ்ய தரிசனத்தை என்றுமே காணாமல் செல்ல மாட்டார்கள். காருண்யா தான் செதுக்கி வைத்த சிலையாயிற்றே.

   தோழி ரோஸ்லின் கூட மதம் தாண்டி பழகுவாள். ஆனாலுமே மாமிசம் கொண்டு வந்தால் அன்று முழுவதும் அவள் பக்கமே திரும்ப மாட்டாள்‌ காருண்யா.

   ஒவ்வொருத்தராய் அலுவலகம் வந்து சேர, புது ஆட்களும் வந்தார்கள்.

    தலைமைப்பதவியில்  இருப்பவரிடம், இரண்டு பேர் பேசுவதை பார்த்தாள். பரந்த முதுகும் நெடுநெடுவென்ற உயரம் மட்டுமே தெரிய, எப்படியும் அறிமுகப்படுத்தும் நேரம் தெரிந்துக் கொள்வோமென வேலையை கவனித்தாள்.

  சற்று நேரத்தில் “ஹே காய்ஸ் இவங்க தான் நம்ம ஆபிஸுக்கு புதிதாக வந்தது. இவங்க இதுக்குமுன்ன நம்மளோட மெயின் பிராண்ச்ல வேலை செய்தவங்க. புது பிராஜக்ட் விஷயமா இப்ப நம்ம டீமோட வேலை செய்ய வந்திருக்காங்க.

  ரோஸ்லினுடன் காருண்யா திரும்பி பார்த்தாள். தன்னுடன் பணிப்புரியும் சிலர் ‘ஹாய் ஹலோ’ என்று புதிதாக வந்த ஆண்களின் கையை குலுக்கி அறிமுகமானார்கள். தலைமை பதவியில் இருந்த ஜவஹரோ, “ஒவ்வொருத்தரும் தனி டேலண்ட்‌. சொல்ல வந்ததை கேட்ச் பண்ணிடுவாங்க. உங்க டீமுக்கும் கன்வே பண்ண ஈஸியா தான் இருக்கும்” என்று பேசினார்.‌

   புதிதாக வந்த இருவரிடம் “ஹாய் காய்ஸ்… இது தான் நீங்க சந்திக்கற டீம். இவர் விக்னேஷ் அவர் தாமஸ், இவங்க ரோஸ்லின், இவங்க காருண்யா, இது ஷாலினி, கமலேஷ், சந்தர், தேவேந்திரன் ” என்று வரிசையாக அறிமுகப்படுத்த, “ஹாய்” “ஹலோ” என்று பரிமாறிக் கொண்டே வந்தனர். இங்கிருப்பவர்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தியப்பின், வந்த இருவரின் பெயரையும் கூறி, அறிமுகமப்படுத்த வேண்டுமே. அவர்கள் தானே முக்கியம்.

“காய்ஸ்… இவர் ராவணேஸ்வரன், அவர் ஜெயந்த், என்று அறிமுகப்படுத்த, ‘ராவணேஸ்வரன்?’ என்று காருண்யா மனதிற்குள் சொல்லிப் பார்த்தாள்.

  ஏனெனில் இந்த பெயர் அவளுக்கு புதிததல்ல, ஏற்கனவே கேள்விப்பட்ட பெயர். ஆனால் அங்கிருந்த தோழி ரோஸ்லினோ “வாவ் பெயர் வித்தியாசமா இருக்குப்பா’ என்று கிசுகிசுத்தாள்.

  ‘ஆளும் சும்மா அம்சமா இருக்கார். அதை கவனிச்சியா?’ என்று ஷாலினி கிசுகிசுக்க, காருண்யாவோ ‘இந்த பெயர் வச்சிண்டிருந்தவா நேக்கு தெரிந்து இந்த லோகத்துல…? இந்த பெயரை இதுக்கு முன்ன கேட்டிருக்கேன். அவன் தானா இது?’ என்ற சிந்தனைக்குள் சிக்கியிருந்தாள்.

ராவணேஸ்வரனும் காருண்யாவை கண்டு ‘இவள் யார்?’ என்ன என்ற சிந்தனைக்குள் மூழ்கவில்லை. அவனுக்கு காருண்யா நேற்றியில் வைத்திருந்த சிறு கோபுர பொட்டும், விபூதி கீற்றும், அதற்கு கீழ்  குங்குமமும், பளிச்சிட்டு காட்டிக் கொடுத்ததே அவள் யாரென்ற அடையாளத்தை. ஆனாலும் தவறாக அடையாளப்படுத்திட கூடாதென்று தற்போது எல்லோர் முன்னிலையிலும் கேளாமல் தவிர்த்தான்.

   தலைமையாளன் ஜவஹரோ தொழில் சார்ந்த விஷயம் பேசி முடித்து, இனி நீங்க மிங்கிள் ஆகிட்டு டிஸ்கஸ் பண்ணிடுங்க. உங்க டீமுக்கு ராவணேஸ்வரன் தான் ஹெட்” என்று கைகுலுக்கி விடைப்பெற்றார்.

   இனி இந்த புது பிராஜக்ட் முடியும்‌ வரை, இந்த குழுவோடு தான் தங்கள் வேலை செய்ய வேண்டுமென்றதால் ஜெயந்த், ராவணேஸ்வரனான இரு ஆண்கள் எளிதாக அறிமுகமாகினார்கள்.

   ராவணேஸ்வரன் நட்புரீதியாக மெதுவாக ஒவ்வொருத்தரோடு அறிமுகமாகி சிநேகமாக பேசினான்.
கடைசியாக காருண்யா அருகே வந்து, “ஏய்.. ஹாய்” என்றான். சரியாக சிற்றுண்டி நேரத்திற்காக மணியடித்தது.

  “ஹலோ” என்றவள் ஏதோ கேட்க நினைக்க, ராவணேஸ்வரனோ அவள் அருகே ஆழ்ந்து மூச்சை இழுத்துவிட்டு, “இன்னும் நீ ஜவ்வாது உபயோகப்படுத்தறதை விடலையா காரு” என்றான்.

அவனது ‘காரு’ என்று அழைப்பில் முகம் சிடுசிடுக்க முறைத்தவளுக்கு எதிரேயிருந்தவன் தெளிவாக நினைவுக்கு வந்தான். ‘அவனே தான்’ என்றது அவள் மனம். 

-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.

வாசிக்கும் அன்பான ரீடர்ஸுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

14 thoughts on “ஐயங்காரு வீட்டு அழகே-1”

  1. M. Sarathi

    ஐயங்காரு வீட்டு அழகே..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 1)

    ராவணேஸ்வரன் & காருண்யா..
    பேஷ், பேஷ்… ரெண்டு பேரோட
    நாமமே ரொம்ப வித்யாசமா, அமோகமா இருக்கே. என்னவொன்னு, நாயகியோட பேரு காருண்யான்னு இருக்கிறதால காருண்யமா இருப்பாளோ, அப்படின்னா நாயகனோட பேரு ராவணேஸ்வரன் என்கிறதால…
    அட்டகாசமா அரக்கத்தனம் எல்லாம் பண்ணுவானோ..?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *