Skip to content
Home » ஐயங்காரு வீட்டு அழகே-6

ஐயங்காரு வீட்டு அழகே-6

அத்தியாயம்-6

Thank you for reading this post, don't forget to subscribe!

காருண்யாவுக்கு முன் வந்திருந்த ராவணன், அவளை கண்டதும், “கங்கிராட்ஸ் காரு” என்று கையை நீட்டினான்.

என்ன ஏதென கேட்காமல் அவன் கையை நீட்டியதும் கையை தந்து விட்டு முழித்தாள்.

“அம்மாவிடம் உங்க பாட்டி சொன்னாங்களாம்.. உனக்கு அலைன்ஸ் முடிவாகிடுச்சுன்னு. ட்ரீட் எங்க? அவர் பெயர் என்ன?” என்று மகிழ்ச்சியாக கேட்டான்.

பாட்டி அதுக்குள்ள அக்கம் பக்கத்துல உள்ளவாளுக்கு சொல்லிடணுமா?! என்று மனதில் நினைத்தாளும் ராவணனிடம் “ஹரிஹரன்னு அப்பா சொன்னா. இப்ப தான் பார்த்திருக்கா. இன்னும் பொருத்தம் பார்த்து பொண்ணு பார்க்க வருவா. அதுக்குள்ள முடிவே பண்ணிட்டாப் போல பாட்டி மாமியிடம் சொல்லிட்டாங்க” என்றாள்.

ராவணனோ “உங்கப்பா உனக்குன்னா கவனமா தேர்ந்தெடுப்பார்.
பெயரை உன்னிடம் சொல்லறார்னா. ஓரளவு முடியற ஸ்டேஜ்ல இருக்கும். இல்லைன்னா உன் மனசுல ஆசை வளர்க்க விடமாட்டார்.'” என்றான்.‌

காருண்யாவுக்கும் இதே எண்ணம் உண்டு. தந்தைக்கு முழுதும் முடிவானால் மட்டுமே தன்னிடம் பெயரை குறிப்பிட்டு இருப்பார் என்று அவளுக்கும் தோன்றியது.

“அவர் போட்டோ வச்சியிருக்கியா?” என்று ஆசையாக கேட்க, “அப்பா நேக்கு போட்டோ தரலை. இரண்டு மாசம் அவர் அப்ராட் போறாளாம் வந்ததும் பொண்ணு பார்க்க வர்றதா சொன்னா” என்று கூறவும், “ஓ.. நைஸ்.. அங்கிள் உனக்கு போட்டோ அனுப்பினா. எனக்கும் காட்டு.” என்றான்.

காருண்யா வெட்கத்துடன் தலையாட்டி வேலையை கவனித்தாள்.

ரோஸ்லினோ இவர்கள் பேசி முடிக்க, இரண்டு மணி நேரம் கழித்து பிரேக் டைமில் வந்து, “ஏன் காருண்யா… உன் பழைய பிரெண்டை பார்த்ததும், என்னை கழட்டி விட்டுட்ட பார்த்தியா?” என்று சண்டை பிடித்தாள்.

“என்ன உலறுற” என்று கேட்க காலையில் கைகுலுக்கி ராவணன் பேசியதை கேட்டாள். கூடவே எதற்கு கைகுலுக்கி வாழ்த்தினான் என்று விசாரித்தாள்.

“எங்காத்துல வரன் பார்த்ததை, நேக்கே நேத்து தான் பாட்டி சொன்னா. பொண்ணு பார்த்தா நோக்கு விஷயத்தை சொல்லியிருப்பேன். ஆனா அதுக்குள்ள பாட்டி மாமியிடம் ஷேர் பண்ணிருப்பா போல. மாமி ராவணனிடம் சொல்லியதால் அவர் வந்ததும் வராததும் விஷ் பண்ணினார். நேக்கு பழைய பிரெண்ட் புது பிரெண்ட் என்று பாகுமானம் இல்லைடி” என்றாள் காருண்யா.
ரோஸ்லினோ, “உனக்கு அலைன்ஸ் பார்த்துட்டாங்களா?” என்றதும் ஆமென்று தலையாட்டினாள்.

“எப்படியிருக்கார்?” என்று கேட்க உதட்டை பிதுக்கி, நான் போட்டோ பார்க்கலை. பொண்ணு பார்க்க வர, இரண்டு மாசம் ஆகும். இப்ப அப்ராட் போயிருப்பதா ஆத்துல சொன்னா” என்றாள்.

“எந்த உலகத்துல இருக்க? போட்டோவை அனுப்ப சொல்லு. இரண்டு மாசத்துல சாட் பண்ணி பாரு” என்று ஊக்கினாள்.

“ம்ம் அப்பாவிடம் கேட்டு பார்க்கறேன்” என்றாள்.

ரோஸ்லின் அதன்பின் “அப்ப நீ பார்த்தும் எனக்கும் காட்டு.” என்று அவளது இடத்திற்கு சென்றாள்.

ராவணன் ஜெயந்த் சிரித்து பேசி வேலை செய்ய அமர, அவளுமே வேலைக்குள் மூழ்கி, நேரங்கள் பறந்தது.

மாலை ராகவியிடம் பகிர, அவளுமே போட்டோ தான் கேட்டாள். காருண்யா விழிக்க, “ஏன்டிம்மா… அதெல்லாம் தப்பு பாட்டி திட்டுவா’ இப்படி ஏதாவது சொல்லி உசுரை வாங்காத. போட்டோ கேளு. அப்படியே ஏதாவது சொன்னா பிரெண்ட்ஸ் கேட்டாங்கன்னு உண்மையை சொல்லு” என்றதும், காருண்யாவோ, “என்னை ஏன் கிண்டல் பண்ணறேள். பாட்டி அம்மா இல்லாத பொண்ணுனு சில சம்பிரதாயத்தை சொல்லி வளர்த்தா. அதோட ஆச்சாரமா இருக்க சொல்லிக் கொடுத்தா. அதுக்காக இப்படி தான் இருக்கணும்னு ஒரு வட்டத்துக்குள்ள என்னை தள்ளி விடலை.
ராவணன் மத்தவா தான். அவன் வீட்ல போய் சாப்பிட்டா திட்டலை. நான் பெரிய மனுஷி ஆனதும், எதையும் தொடாதேனு ரூமுக்குள் தள்ளி விடலை. இனி வர்ற காலத்துல இதெல்லாம் நீயா தான் பார்த்துக்கணும். ஸ்னானம் பண்ணிட்டு படிக்கவே போறப்ப வீட்லயும் எல்லா இடத்திலும் பழகலாம்னு போதிச்சவா என் பாட்டி.

நிறைய பேர் நினைக்கிறா, மாமிகள்னா ஓவரா சுத்தம் பார்த்து மத்தவாளை ஒதுக்குவானு. மேபீ சிலர் அப்படி இருக்கலாம். சிலர் படிப்பு உத்தியோகம் கொடுக்கறதை வச்சி அறிவா யோசித்து, எதை எதுக்கு சொன்னா என்ற சரியான காரணத்தை அறிந்து, தேவைக்கு ஏத்த மாதிரி பழக்க வழக்கத்தை மாத்திக்கறா. சொல்லப்போனா எங்க சொசைட்டில காதல் திருமணம் அதிகம். யாரையும் வெட்டவா குத்தவானு போனதில்லை.” என்று பேசியதும் ராகவியோ “ஏய்… நான் உன்னை கேலி பண்ணலைப்பா… போட்டோ கூட வாங்காம ஓகே சொல்லிட்டியானு கேட்டேன்.” என்று காருண்யாவை கேலி செய்ததால் உண்மையான வருத்தத்தில் பேசினாள்.

“போட்டோ பார்க்காம தான் ஓகே சொன்னேன். ஏன்னா… நேக்கு விவரம் தெரிந்ததிலருந்து நேக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது, எது எனக்கு ஒத்துக்கும், என் டேஸ்ட் எப்படின்னு பார்த்து பார்த்து செய்வா பாட்டி. நேக்கு எந்த பாடத்துல விருப்பம், அதுல என்ன படிச்சா, ப்யூச்சர்ல உத்தியோகம் எப்படியிருக்கும்னு கவனிச்சு வழிகாட்டியவர் என் தோப்பனார். அப்படி பார்த்து பார்த்து செய்தவர் நேக்கு மாப்பிள்ளையா வர்றவாளை குவாலிட்டி இல்லாம தேர்ந்தெடுக்க மாட்டார்னு நம்புறேன். நானா கேட்காவிட்டாலும் போட்டோ அனுப்புவார். அதுக்குமுன்ன முந்திரிகொட்டையா அவசரப்பட நான் விரும்பலை.” என்று பேசி செல்லவும், ராகவியோ, ‘இவளை எல்லாம் யாரும் காதலிக்கலையானு இந்துகிட்ட அடிக்கடி கேட்பேன். இந்து அதுக்கு இவ பேசறதை கேட்டா காதலிக்கலாம்னு வர்றவன் ஓடிப்போயிடுவான்னு சொல்லி சிரிப்பா. அப்ப எல்லாம் கோபத்துல சொல்லறானு நினைப்பேன். சீரியஸ்லி இந்தளவு தெளிவா பேசினா காதலிக்கறவன் பெரிய வித்தக்காரனா இருந்தாலும் ஜம்பம் பலிக்காது.’ என்று ராகவி கடந்தாள்.

காருண்யா மெஸ்ஸில் வந்ததும் சாரதா “என்னடிம்மா… முகம் இப்படியிருக்கு? தலைவலியா… காபி போட்டு தரவா?” என்று கேட்டார்.

“போடுங்க அக்கா‌” என்று காலாட்டி அமர்ந்தாள்.
“என்ன.. வீட்லயிருந்து உங்க பாட்டி கால் பண்ணலையா?” என்று கேட்க, “இன்னும் பத்து நிமிஷம் இருக்கு அக்கா. இந்நேரம் கோவிலுக்கு போயிட்டு வீதில யாரிடமாவது பேசிட்டு மெதுவா நடந்து வந்திருப்பா. கொஞ்சம் ஜலத்தை தொண்டையில இறக்கிட்டு, சுவாதீனமா போன் பண்ணுவா” என்று பேச, சூடான காபி முன் வந்தது. “இன்ஸ்டன்ட் காபி” என்று கொடுக்க, பருகினாள்.

அதே நேரம் பாட்டி அழைத்துவிட, “என்னடிம்மா மொஸ்ஸுக்கு வந்துட்டியா” என்று கேட்டார்.

“வந்துட்டேன் பாட்டி. சாரதா அக்காவிடம் காபி கேட்டு வாங்கி குடிச்சிண்டு இருக்கேன். நீங்க கோவிலுக்கு போயிட்டு வந்தாச்சா? நைட் என்ன டின்னர்” என்று கேட்டாள்.

“உங்கப்பா அவிச்ச பயறு சாலேட் போதும்னு சொல்லிட்டான். அதனால் கூடவே பாலும் பழமும் எடுத்து வச்சியிருக்கு.” என்றார்.

“ம்ம்” என்றதும், அமிர்தமோ “ஏன்டி நானும் உன் தோப்பனாரும் உனக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சு. போட்டோ பத்தி கேட்டியா? விசாரிச்சியா?” என்று கேட்டதும், ரோஸ்லின் ராகவியிடம் பேசி சலித்து போன விஷயமென்பதால், “பாட்டி போட்டோ இருந்தா அனுப்ப போறேள். அதை வேற வெட்கம் விட்டு கேட்கணுமோனு விட்டேன்” என்றாள் நாயகி.

“ம்கூம் நீ இப்படி தான் சொல்வேன்னு நினைச்சேன். இங்க அந்த பையனான்டா, உன் போட்டோவை கேட்கறான். அப்பா உன்னிடம் பெர்மிஷன் கேட்டுட்டு கொடுக்கலாமானு கேட்டார். பொண்ணு பார்க்க வர்றதுக்கு இரண்டு மாசம் ஆகலாம். இந்த காலத்துல பேசி பழக நேரம் எடுத்துக்கலாம்னு சொல்லறானாம்.
எங்களுக்கும் தப்பா தோன்றலை. இப்பல்லாம் அப்படி தானே. எங்க காலம் மாதிரியா?” என்று பேசவும், காருண்யா சன்னமாய் சிரித்து, “நம்பர் கொடுங்கோ பாட்டி. நான் பார்த்து பேசிக்கறேன்.” என்றாள்.

“சீனிவாசா… அவாளாண்ட நம்ம காருண்யா போட்டோ கொடுத்துடு. அப்படியே அந்த பிள்ளையாண்டா போட்டோவையும் நம்ம காருண்யாவுக்கு அனுப்பிடு” என்று கத்துவதை காருண்யாவுக்கு போன் மூலமாக கேட்டது.

“அனுப்பிட்டேன் மா. காருண்யா ஹரிஹரன் போட்டோ பார்த்து பிடிச்சிருக்கானு கேட்டு சொல்லுங்க. மாப்பிள்ளையாண்டா கேட்கறார்” என்று அவரும் மற்றொரு போனில் ஹரிஹரனிடம் பேசுவதை காருண்யாவால் யூகிக்க முடிந்தது.

அவசரமாக வாட்சப் வந்து ஹரிஹரன் புகைப்படத்தை பார்த்துவிட்டு, “பாட்டி நீங்க பார்த்தவா நன்னா இருக்கா.” என்றாள்.

“சீனிவாசா” என்று கூறி கையை உயர்த்தி காட்டியிருக்க வேண்டும். தந்தையின் குரல் தூரத்தில் “காருண்யாவுக்கும் உங்களை பிடிச்சிருக்காம்.” என்று பேசுவது கேட்டது.
‘காருண்யாவுக்கும்’ அப்படியென்றால், அந்த ‘க்கும்’ சொல்லும் சேதி, ஹரிஹரனுக்கு இவளை பிடித்திருப்பதாக தந்தையிடம் அவன் தெரிவித்திருக்க வேண்டும் என்று அறிந்து கொண்டாள்.

நோட்டிபிகேஷன் சத்த வந்து சேர ஹரிஹரனின் மற்றொரு புகைப்படம் அதையும் பார்த்தாள். தந்தை பாரத்ததில நிறைவு உண்டானது.
“இரண்டு மாசம் போன்ல பேசி பழகு. வந்ததும் நேர்ல ஒருவாட்டி பார்த்துட்டு, அடுத்த நாளே நிச்சயம் பண்ணிடலாம்.
அடுத்தடுத்த மாசத்துல கல்யாணம் செய்யலாம்னு அப்பா வரிசையா பிளான் போட்டாச்சு. அதோட அந்த பிள்ளையாண்டாவோட அம்மா அப்பா இந்த வாரத்துல உன்னை பாக்க வந்தாளும் வரலாம்” என்று தகவல் தந்தார்.

“சரிங்க பாட்டி.” என்று கூறியவள் பாட்டியிடம் நாளைக்கு பேசுவதாக சொல்லி போனை வைத்தாள்.

சாரதாவிடம், “அக்கா நேக்கு அப்பாவும் பாட்டியும் பார்த்து வச்சியிருக்கவா” என்று புகைப்படத்தை காட்டவும், காருண்யாவின் நிறத்தை போலவே இருக்க, “உன் கலருக்கு இருக்கார். சும்மாவே உங்காளுங்க நல்ல நிறமா தான் இருப்பாங்க. முகலட்சணம் சும்மா அள்ளுது. கல்யாண சாப்பாடு எப்போ” என்று வாழ்த்தி விசாரிக்க, பாட்டி சொன்னதை அச்சு பிசகாமல் உரைத்தாள்.

“அப்ப புது பிராஜக்ட் முடியவும் வேலை விட்டுட்டு போயிடுவியா.” என்று கேட்க, “ம்ம் இங்க தான் வீடுன்னா உத்தியோகத்தை கண்டினியூ பண்ணுவேன். இல்லை அவர் எந்த ஊர் பக்கம் வேலை இருக்கோ அங்க பிராண்ஞ்ச் இருக்க மாத்திப்பேன். இல்லைன்னா… அவ்ளோ தான்.” என்றதும், சாரதாவோ “அதெல்லாம் வேலைக்கும் போவ.” என்று கூறி அணைத்தார்.

“கண்டிப்பா பத்திரிக்கை வைப்பேன் நீங்க வரணும் அக்கா.” என்று கூற சம்மதமாய் கூறினார்.

அறைக்கு வரவும், ராகவி இந்து ஏதோ பேசியவர்கள் இவள் நெருங்கி வந்ததும், என்ன என்பது போல பார்வையிட, “நேக்கு எங்காத்துல பார்த்து வச்ச மாப்பிள்ளை” என்று காட்ட ராகவி போனை பிடுங்கி பார்த்தாள்.
இந்து தலையை எக்கி பார்வையிட, “பரவாயில்லை… லவ் பண்ணாமலேயே அழகா அம்சமா புருஷன் கிடைக்கறாங்களே. வாழ்த்துகள் காருண்யா.” என்று இந்து வாழ்த்தினாள்.

ராகவியோ, “ம்ம்ம் அம்பி அம்சமா இருக்காப்ல.” என்று சொன்ன அடுத்த வினாடி ஏதோ நம்பரில் கால் வந்தது. அந்த நம்பர் ட்ரூ காலரில் ஹரிஹரன் என்று காட்டியதும் ராகவி அவசரமாய் போனை காருண்யாவிடம் நீட்டினாள்.

காருண்யாவோ ”அ.. அவ..அவர்” என்று முழித்து இந்துவையும் ராகவியையும் பார்த்தாள்.

“பேசு.” என்று ராகவி கூற, “நாங்க வேண்டுமின்னா வெளியே போகவா” என்று இந்து கேட்க, “செத்த சும்மாயிருக்கேளா” என்று கைகள் நடுங்க அட்டன் செய்தாள்.

-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.

11 thoughts on “ஐயங்காரு வீட்டு அழகே-6”

  1. M. Sarathi Rio

    ஐயங்காரு வீட்டு அழகே..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 6)

    அப்படின்னா ஹரிஹரன் தான் ஹீரோவா….? ராவணன் இல்லையா…? எனக்கென்னவோ ஏதோ டவுட்டாவே இருக்குதே.

    ஏன்னா, ஹரிஹரன்னு (ராமன்) பேரை வைச்சுட்டு ஹீரோவை வில்லனாவும், ராவணன்னு பேரை வைச்சுட்டு வில்லன் பேரை கதாநாயகனா மாத்தி டுவீஸ்டட வைச்சாலும் வைப்பாங்க, இவங்களை நம்பவே முடியாது.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *