2
புதுவயல் கிராமத்திற்கு மேற்கே சப்தகிரி எனப்படும் ஏழுமலைகளில் ஒன்றான சுர நாட்டை
பலாசுரன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். அவனுக்கு திருமணமாகி பல வருடங்களாகியும்
பிள்ளைப்பேறு இல்லை. ரேணுகா தேவி, மதிவதனா என்று ஒன்றுக்கு இரண்டாக மனைவிகள்
இருந்தும் பிள்ளை வரம் இல்லையே என்று சிவபெருமானை நோக்கி கடும் தவமிருந்தான்
பலாசுரன். அவனுடைய குருவின் வார்த்தைப்படி தவத்தின் கடைசியில் ஒரு யாகம்
வளர்த்தான். அதில் நிறைய பொன்னையும் பொருளையும் பட்டையும் பீதாம்பரத்தையும்
ஆஹுதி செய்தான். அது போதாது என்று காட்டில் வாழும் மிருங்கங்களையும் காளி
தெய்வத்தின் முன்பு பலியிட்டான். இத்தனைக்குப் பின்பு காளி தெய்வம் அவனுக்கு
மனமிரங்கி ஹோமகுண்டத்தில் ஒரு தங்கப்புஷ்பத்தை வெளிக் கொணர்ந்தது.
“இந்த புஷ்பத்தை தங்கத்துடன் சேர்த்து உருக்கி தேனுடன் கலந்து காலையில் வெறும்
வயிற்றில் ஒரு மண்டலம் அதாவது நாற்பத்து எட்டு நாட்களுக்கு தவறாமல் உண்டு வந்தால்
கரு தரிக்கும். ஆனால் எல்லா கர்பத்தையும் போல பத்து மாதத்தில் அல்லாமல் இந்த பிள்ளை
பதினெட்டு மாதங்கள் சென்று பிறக்கும். ஏனெனில் நாற்பது பிள்ளைகளுக்கு சமமான
பலத்துடனும் வளர்ச்சியுடனும் இந்த பிள்ளை பிறக்கும்.” என்று வரம் தந்தது.
அந்த புஷ்பத்தை பலாசுரனின் கையில் இருந்து சட்டென்று கண்ணிமைக்கும் நேரத்தில் தன்
கையில் மிகவும் பக்தி பரவசத்துடன் வாங்கிக் கொள்வதைப் போல் தட்டிப் பறித்துக்
கொண்டாள் முதல் மனைவி ரேணுகா தேவி. தர்மப்படியும் தார்மீகப்படியும் முதல்
மனைவியின் பிள்ளை தானே இளவரசாக முடியும். மன்னருக்குப் பிறகு அரசு ஏற்க முடியும்.
அதனால் பலாசுரனுமே தங்கபுஷ்பம் ரேணுகாதேவியின் கைக்குப் போனதில் பெரிதாக
அலட்டிக் கொள்ளவில்லை. எப்படியோ தனக்கு ஒரு வாரிசு வேண்டும். அது யாரால்
என்றாலும் சரி தான்.
காளி தெய்வம் சொன்னதைப் போல அந்த தங்கப்புஷ்பத்தை தயார் செய்து கொடுக்கவென்று
தன் தாயை வரவழைத்தாள் அவள். அந்த தாயும் கர்ம சிரத்தையுடன் அதை தயார் செய்து
தந்தாள். எக்காரணத்தைக் கொண்டும் மதிவதனாவுக்கு ஒரு பிள்ளை பிறந்து விடக்கொடாது
என்று மகளுக்கு தூபம் போட்ட வண்ணம் இருந்தாள்.
ஆனால் பலாசுரன் விரும்பி மணந்து கொண்ட மதிவதனாவோ தன்னுடைய பிள்ளை தான்
இந்த சுர நாட்டை ஆள வேண்டும். அதற்கு தனக்கு ஒரு பிள்ளை பிறக்க வேண்டும்.
தங்கபுஷ்பமோ சக்களத்தியிடத்தில் இருக்கிறது. அவளுக்குள் முதலில் பிள்ளை பிறந்து அதற்கு
இளவரசு பட்டம் கட்டி விட்டால் என்ன செய்வது? எனவே தனக்கும் இப்போதே தங்கபுஷ்பம்
வேண்டும். அதை தருவிக்க கணவனான பலாசுரனால் தான் முடியும்.
“அரசே, எனக்கும் பிள்ளைப்பேறு வேண்டும். அந்த பூவில் எனக்கும் பாதியைத் தாருங்கள்.
தயவு செய்யுங்கள்” மதிவதனா கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
“ஆ, அது எப்படி? ஒரே ஒரு தங்கப்புஷ்பம் தானே கிடைத்தது. அதில் எப்படி பாதியைக்
கொடுக்க முடியும்? பிறகு பிறக்கும் பிள்ளை பாதி பலவானாக பிறந்து விட்டால் என்ன
செய்வது?”
“அது உண்மை தானே. யோசிக்க வேண்டிய விஷயமும் கூட” என்று பலாசுரன் யோசிக்கவே
செய்தான்.
“அப்படியென்றால் எனக்காக வேறு ஒரு புஷ்பம் பெற்று தாருங்கள் அரசே”
“இனி வேறு ஒன்று எப்படி கிடைக்கும்?” மதிவதனாவிற்கு கிடைத்து விடக் கூடாது என்பதில்
உறுதியாக இருந்தாள் ரேணுகாதேவி.
“தாயே எனக்கும் ஒரு குழந்தையைக் கொடுக்க வேண்டும்” என்று மண்ணில் விழுந்து அழுது
புரண்டாள் பலாசுரனின் இரண்டாவது மனைவி மதிவதனா. அவளுடைய வேண்டுதலுக்கு
செவி சாய்த்த காளி அவளுக்கும் சிறியதான ஒரு தங்கப்புஷ்பத்தைக் கொடுத்தது. அவளும்
அதை தங்கத்துடன் உருக்கி தேனுடன் கலந்து ஒரு மண்டலம் உண்பதற்கு தயார் செய்து
தருவதற்காக ஒரு சேடிப் பெண்ணை பணிக்கு அமர்த்தியிருந்தாள்.
அந்த சேடியை ஆசைக் காட்டி தங்கப்புஷ்பத்தை களவாடி கொண்டு வந்து கொடுக்க
வைத்தாள் ரேணுகா. அதையும் சேர்த்து தானே உண்டதனால் ரேனுகாவிற்கு பிறந்த மகாசுரன்
ரெண்டத்தனை பலவானாகப் பிறந்தான். அந்த தங்கப்புஷ்பத்திற்குப் பதில் வேறு ஒரு
தங்கபுஷ்பத்தை தயார் செய்து கொடுத்தாள். அதை சேடி மதிவதனாவிற்கு கொடுத்து வந்தாள்.
அவளுக்கும் ஒரு ஆண் குழந்தைப் பிறந்து பகாசுரன் என்ற பெயரில் வளர்ந்து வந்தது.
வானத்துக்கும் பூமிக்குமாக உயரத்துடன், அரை பூமிப் பந்தின் அளவிற்கு பெருத்த
தேகமாகவும், கலங்கரை விளக்கின் பிரகாசமான ஒற்றை விளக்கைப் போன்ற நெற்றியின்
கீழே எரிகின்ற ஒற்றைக் கண்ணையும், யானைத் தந்தங்களைப் போன்ற ஒவ்வொரு பல்லும்,
ரத்தத்தைப் போன்று செக்க சிவந்த கண்களும் உறுத்து விழிக்கும் பார்வையாகவும், ஒவ்வொரு
கையும் காலும் ஒரு யானை அளவிற்கு பருத்தும் பலமாகவும் இருந்த அந்த மகாசுரனை
காண்போர் யாராயிருந்தாலும் பயப்ப்படும்படியான தோற்றத்தில் அசுரனாகவே வளர்ந்தான்.
வளரும் காலத்தில் அபரிமிதமான வளர்ச்சியினால் மிகுந்த பெருத்த தேகத்தை
கொண்டவனாதலால் அவனுடைய பிறப்பிடம் அவனுக்கு போதுமானதாக இல்லை. எனவே
தன்னுடைய சுரனாட்டுடன் சேர்த்து மீத ஆறு மலைகளையும் ஆக்கிரமித்துக் கொண்டு
விட்டான். அங்கே வசித்துக் கொண்டிருந்த பூர்வக்குடிகளை தன்னுடைய பலத்த பராக்கிரமம்
மிகுந்த ஆகிருதியால் பயமுறுத்தி துரத்தி விட்டான். அது இந்திரனாக இருந்தாலும் சரி, ஏன்
அந்த யமதர்மனாகவே இருந்தாலும் சரி தான்.
தன்னுடைய உழைப்பில் உண்ணாமல் அடுத்தவர் உழைப்பை உறிஞ்சி உண்பவர்கள் சுயநலம்
கொண்டவர்களாகவும் சோம்பேறித்தனத்தில் ஊறியவர்களுமாகத் தானே இருப்பார்கள்! அது
போல மகாசுரனும் பருத்த தன் தேகத்தை தூக்கி உழைத்திட சோம்பேறித்தனம்
கொண்டவனாக ஆனால் மற்றவர்களை விட அதிகளவில் உண்பவனாக இருக்கவே
அடுத்தவரை பயமுறுத்தி அடித்து பிடுங்கி உண்டு அரக்கத்தனத்துடன் வாழ்ந்து வந்தான். ஊர்
மக்கள் விளைவிக்கும் பயிர்களையும் காட்டில் வாழும் மிருக ஜீவனகளையும் தின்று
முடித்தவனுக்கு இனி மேல் தின்பதற்கு ஒன்றுமில்லாமல் போனது.
மலைகளின் உச்சியில் படுத்தே கிடக்கும் மகாசுரனால் எழுந்து போய் தனக்குத் தேவையான
உணவை தேடி உண்பது இயலாது. அதனால் அந்த பக்கம் வருவோர் போவோரிடம் மிரட்டி
எதையாவது வாங்கி உண்பான். “சும்மா கிடந்த கோழிக்கு தீனியைப் போடுவானேன்.
தீனியை தின்னுப்புட்டு கோழி கொண்டையை ஆட்டிக்கிட்டு நம்மை கொத்த வருவானேன்”
என்பதைப் போல தனக்கு படியளந்தவர்களையே பிடித்து தின்னத் தொடங்கவும் அந்த
பக்கமாக யாரும் வருவதோ போவதோ இல்லை. ஆள் நடமாட்டமற்று போயிற்று அந்த
பிரதேசம்.
எனவே தினமும் அதிகாலையில் வானத்தில் கிழக்கே உதித்து நாள் முழுவதும் தன் பாதையில்
நகர்ந்து மாலையில் மறைவதற்கென்று மேற்கே வரும் அந்த சூரியப் பந்தை லபக்கென்று
ஒற்றைக் கையால் பிடித்து லாவகாமாக உண்டு விடுவது அவன் வழக்கம். ஒரு முழு சூரியனை
ஒரே வாயில் உண்டு, அந்த உண்ட மயக்கத்தில் நாள் முழுவதும் படுத்தே கிடப்பது அவனுக்கு
வாடிக்கையாகிப் போனது.
சூரியக் குஞ்சுகளை உண்டு வந்ததினால் சூரிய பகவான் கோபமுற்று அவன் தலைக்கு மேலே
வந்து நின்று அவனை ஒரு உக்கிரப் பார்வைப் பார்த்தார். ஆனால் தன் ஒரு கையினால்
சூரியனை மறைத்து விட்டான் மகாசுரன். சூரிய பகவானும் நின்று பார்த்து விட்டு இவன்
கொஞ்சம் கூட அசையாமல் படுத்துக் கிடக்கிறானே, இவனை நம்மால் ஒன்றும் செய்திட
இயலவில்லையே என்று கவலையுற்றவராக தன் தேரில் ஏறி சூரிய உலகத்திற்கு திரும்பிக்
கொண்டிருந்த போது எதிரே வந்த அக்கினி பகவான் “என்ன சூரியனாரே, எங்கே இவ்வளவு
சோகமாக சென்று கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டார்.
“என்னெவென்று சொல்வேன் அக்கினியாரே?” நீண்ட பெருமூச்சு விட்டார் சூரியனார்.
“இவ்வளவு சோர்வாக ஒருபோதும் உம்மை நான் பார்த்ததேயில்லையே!” வியப்புடன்
கேட்டார்.
“ஆம். எல்லாம் இந்த மகாசுரனால் வந்தது”
“யார், அதோ அந்த மலையின் மீது எந்நேரமும் படுத்துக் கிடக்கிறானே அவனா?”
“ஆம்.”
“அடடா, என்ன செய்தான் அவன் உம்மை?”
“தினந்தோறும் என் குழந்தைகள் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகர்ந்து இந்த பூமிப் பந்திற்கு
வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருக்கிறது”
“அது தான் தெரிந்த விஷயமாயிற்றே. நீர் இல்லாவிட்டால் இந்த பூமியில் ஒரு புல்லு பூண்டு
முளைக்குமா? அல்லது முளைத்தாலும் பிழைக்குமா?”
“ஆனால் தினம் என் குழந்தைகளை அந்த மகாசுரன் ஒரே வாயில் லபக்கென்று தின்று
விடுகிறானே”
“அட, இதென்ன அநியாயமாக இருக்கு”
“அதைக் கேட்கப் போனேன். அவன் எதையாவது சட்டை பண்ணினால் தானே”
உடனே அக்கினியார் கோபம் கொண்டார்.”என்ன திமிரு அந்த மகாசுரனுக்கு. இரும். நான்
போய் அவனை என்னவென்று கேட்கிறேன்” சொன்ன வேகத்தில் விரைந்தார் அந்த மலையை
நோக்கி. தன்னுடைய படை பரிவாரங்களுடன்.
“ஏய் மகாசுரா, எத்தனை ஆணவம் உனக்கு? சூரிய குஞ்சுகளை தினந்தோறும் பிடித்து உண்டு
விடுகிராயாமே. உனக்கே இது அடுக்குமா? இனி அதுப் போல செய்யாதே”
“போமய்யா அப்பால். வந்து விட்டார் உபதேசம் செய்வதற்கு.”
“ஏய், யாரிடம் பேசுகிறாய் என்று புரிகிறதா உனக்கு?”
“நன்றாகத் தெரிகிறது. நீர் அக்கினி தானே. நானே குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கிறேன்.
அருகில் வாரும். சற்றே குளிர் காய்கிறேன்”
“என்னவொரு எகத்தாளம்” சட்டென்று அவன் மேல் அக்கினியார் நெருப்பு ஜுவாலையாக
பாய்ந்தார். ஆனால் அதை விட வேகமாக தன் வாயைத் திறந்து பெருமூச்செடுத்து ஊதினான்
மகாசுரன். பட்டென்று அக்கினியார் அவிந்து போனார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த சூரியனார் மீண்டும் சோகமாகிப் போனார். தோல்வியுற்று
திரும்பிக் கொண்டிருந்தவரை எதிர் கொண்டது வருணன் தான். அதே கேள்விகள்.
சூரியனாரின் அதே பதில்கள். இப்போது அக்கினியாரின் தோல்வியும் சேர்ந்து கொண்டது.
இப்போது வாயு பகவானின் முறை. அவனும் தன் பங்குக்கு மகாசுரனை வெற்றிக் கொள்ள
புறப்பட்டு வந்து அவனை நோக்கி தன் பலம் கொண்ட மட்டும் ஊதினான். ஆனால்
மகாசுரனோ சற்றே திரும்பினார் போல் படுத்துக் கொள்ளவும் அவன் முதுகில் பட்ட காற்று
அவனை புரட்டி தள்ளிட பலனற்று திரும்ப வாயு பகவானின் வாயிற்குள்ளேயே போய்
விட்டது.
மூவரின் புலம்பலைக் கேட்ட வருணர் கொந்ததளித்துப் போனார். “டேய் அசுரா,
என்னவொரு ஆணவம்? பஞ்ச பூதங்களான எங்களையே இப்படி செய்தாயே. இரு. உன்னை
செய்கிறேன் என்று பார்”
நேரே போய் மகாசுரன் முன் நின்றார்.“ஏய் மகாசுரா, அத்தனை தூரத்திற்கு உனக்கு திமிராகிப்
போயிற்றா? சூரியக் குஞ்சுகளை பிடித்து உண்பாயோ! எங்கே என்னிடம் வந்து பார். நான்
யார் என்று காட்டுகிறேன்”
“நன்றாக. நீ வருணர் தானே. வாரும் அருகில். நீண்ட நாட்களாக தாகத்தில் தவித்துக்
கொண்டிருக்கிறேன். அப்படியே உம்மை முழுங்கி விடுகிறேன்” கொஞ்சமும் அசையாமல்
படுத்தவாக்கிலேயே வருண பகவானை முழுங்கி விட முயன்றான் மகாசுரன்.
ஆனால் இது என்ன! மற்ற மூவரை ஓட விட்டதைப் போல இந்த வருணனை ஒன்றும் செய்திட
இயலாதவாறு வருணரின் படைகளான மேக கூட்டங்கள் கறுத்து இடி இடித்து அவனை ஒரு
சேரத் தாக்கத் தொடங்கியது. விடாது பெய்த அடாத மழையினால் அவன் படுத்திருந்த
இடத்தின் கீழே இருந்த பூமி நெகிழ்ந்து சரிந்து சமவெளியாக இருந்த இடம் பள்ளமாக போய்
விட்டது. அவனால் அங்கே படுத்திருக்க இயலவில்லை. எனவே எழுந்தான். அவன் எழுவதற்கு
காத்திருந்தார் போல வாயு பகவானும் அங்கே வந்து தன் முழுபலத்தையும் உபயோகித்தான்.
பலத்த காற்று வீய், வீய் என்று வீசியது. மரங்கள் எல்லாம் வேரோடு சாய்ந்தது. மேலே
வானத்தில் இருந்து கொட்டிய மழை பூமியின் ஊற்றுக் கண்களை திறந்து விட பூமியிலிருந்தும்
நீர் வீரிட்டு கிளம்பியது. பூமியின் மேற்பரப்பில் பெருகிய வெள்ளம் கீழே விழுந்து கிடந்த
மரங்கள் ஆடு மாடுகள் என அனைத்தையும் மிதக்க வைத்து விட்டது. கனத்த சரீரமானதால்
மகாசுரன் மிதக்கவில்லை. ஆனால் பெரு வெள்ளத்தில் மகாசுரனால் ஒரே இடத்தில் நிலைத்து
நிற்க முடியாமல் போனது. அவன் நிலை தடுமாறுகிறான் என்பதைக் கண்ட வருணனும்
வாயுவும் தங்கள் பலம் கொண்ட மட்டும் அவனைத் தாக்கவே தன் பெருத்த சரீரத்தைத் தூக்கிக்
கொண்டு ஓடத் தொடங்கினான் மகாசுரன்.,
அவன் பின்னாலேயே விரட்டிக் கொண்டு வந்த மூவரில் அக்கினி எல்லா மரங்களையும் தன்
தீநாக்கினால் எரித்துக் கொண்டு வரவே மகாசுரனுக்கு ஒளிவதற்கு இடமில்லாமல் போய்
கடைசியில் பூமிக்கு அடியில் போய் புதைந்து கொண்டான்.
சூரியனார் வாயு அக்கினியார் வருணர் என அனைவரும் மகாசுரனை தேடியும் கண்டுபிடிக்க
முடியவில்லை. எப்படியோ ஒருவழியாக அவனை அந்த மலையுச்சியிலிருந்து கிளப்பியாயிற்று.
இனி அங்கே படுத்துக் கொண்டு வருவோர் போவோரிடம் சண்டை இழுத்துக் கொண்டிருக்க
மாட்டான். தொலைந்தான். என்று நிம்மதி அடைந்து அவரவர் தங்கள் வேலையைப் பார்க்கப்
போனார்கள்.