Skip to content
Home » தீரனின் தென்றல்-21

தீரனின் தென்றல்-21

தீரனின் தென்றல் – 21

“அம்மாடி தென்றல்… என்னடா இது? ஏன் டா எங்கிட்ட கூட இதை சொல்லலை… ஆதீ… ஆதீரன் கூட என்கிட்ட சொல்லலையே மா… சொல்லி இருந்தா என்னை விட்டு போக விட்டிருப்பேனா உன்னை…?” என்று அவளை அணைத்துக் கொண்டு அழ

“ஏன் அத்தை… இந்த விஷயம் தெரிஞ்சு அப்பா நெஞ்சு வலி ல செத்த மாதிரி மானம் போச்சு னு நானும் என் அம்மாவும் சாகுறதுக்கா?” என்று தென்றல் கேட்க விலுக்கென்று நிமிர்ந்த பூரணி

“என்னடி இப்படி எல்லாம் பேசுற? ஆதீ என்ன உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் னு கைவிடவா நினைச்சான்?”

“பின்ன கல்யாணம் பண்ணிக்கனும் னா என் அப்பா அவன் கால்ல விழனும் னு சொன்னது எதனால அத்தை? அதுக்கு முடியாது னு மறுத்தா என்னை கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்க மாட்டான் அதானே உண்மை…

உனக்கு தெரியும் ல அத்தை நான் அவன் மேல உயிரையே வைச்சிருந்தேன்… அதனால தான் இப்படி ஒரு தப்பு எங்களுக்குள்ள நடந்தப்போ கூட எனக்கு அது பெருசா தோணவே இல்ல… ஆனா அவன்… அவன் அப்பா சாவுக்கு என் அப்பாவை பழிவாங்க என் காதலை பயன்படுத்திக்கிட்டான் இல்லையா?” என்று கேட்டவளுக்கு அழுகையில் குரல் கரகரத்தது. சத்தமாக பேசியதில் கர்ப்பம் காரணமாக மூச்சு வாங்க தண்ணீர் எடுத்து வந்து தந்த பொன்னி

“தென்றல் கொஞ்சம் அமைதியா இரு… மதினி… தென்றல் ஏற்கனவே பலவீனமா இருக்கா… அவளை அதிகம் பேச வைக்காதீங்க… நீங்க முதல்ல உட்காருங்க… தென்றல் நீ அமைதியா இரு நான் பேசிக்கிறேன்…” என்று பொன்னி கூற ஆளுக்கொரு இருக்கையில் அமர்ந்தனர்.

“எங்களுக்கும் முதல்ல தெரியாது மதினி… அன்னைக்கு உங்க வீட்டுக்கு வந்து உங்க மகன் எங்களை அசிங்கப் படுத்தின அப்பறம் நாங்க கொஞ்ச நாள் கழிச்சு இதை பத்தி பேசலாம் னு அமைதியா இருந்தோம். ஆனா தென்றல் நாம இந்த ஊரை விட்டு போயிடலாம் னு சொன்னப்போ ஏன் எதுக்கு னு காரணம் கேட்டோம் அவ சொல்லலை…

ஆனா இன்னைக்கே இந்த ஊரை விட்டு போகனும் னு சொன்னா… ஏன் னு உங்க அண்ணன் அழுத்தி கேட்டதும் ‘நான் தப்பு பண்ணிட்டேன் ப்பா… தீரனை நம்பி என்னையே இழந்துட்டேன்… ஆனா அவன் உங்களை பழிவாங்க தான் இப்படி பண்ணிருக்கான் நாளைப்பின்ன உங்களை அவமானப்படுத்த இதை வெளியே அம்பலப் படுத்தி அசிங்கம் பண்ணிடுவான்… அதுக்கு முன்னாடி நாம வேற எங்காவது போய்டலாம்’ னு அழுதா…

‘கொஞ்சம் பொறுமையா பேசலாம்’ னு உங்க அண்ணன் சொன்னதுக்கு ‘நீங்க என்னை கூட்டிட்டு போறீங்களா இல்ல நான் செத்து போகவா’ னு தென்றல் சொல்லவும் அவ பேச்சை மீற முடியாம நானும் உங்க அண்ணனும் கிளம்பி வந்துட்டோம்… எங்க போறது எங்க இருக்கிறது னு எதுவும் புரியலை..‌ உங்க அண்ணனுக்கு இந்த ஊர்ல ஒரு சிநேகிதர் இருக்காரு சேகரன் னு… அவர் வீட்டுக்கு கிளம்பி வந்துட்டோம்.

இங்க பக்கத்து தெரு தான் அவர் வீடு… அவர் தான் இங்க வீடு பிடிச்சு எங்களை தங்க வச்சாரு. அப்போ தான் ஒரு நாள் தென்றல் முழுகாம இருக்கா னு தெரிஞ்சது… இந்த குழந்தைக்காகவாச்சும் உங்க பையன் கிட்ட பேசி தென்றலுக்கும் உங்க பையனுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சு அவரு ஊருக்கு கிளம்பினாரு. ஆனா பஸ் ஸ்டாண்டு போற வழில அவருக்கு நெஞ்சு வலி வந்து அவரை காப்பாத்த முடியாம போச்சு…

என்ன ஆனாலும் என் அப்பாவை அவமானப் படுத்தினவனை நான் மன்னிக்க மாட்டேன் என் குழந்தைக்கு அப்பாவா ஏத்துக்க மாட்டேன் னு பிடிவாதமா இருக்கா தென்றல்…”

பொன்னி சொல்லி முடிக்க “தென்றல்… அம்மாடி… அவன் ஏதோ புரியாம அப்படி பண்ணிட்டான் மா… அவன் பண்ணான் னு சொல்றதை விட நான் அவன்கிட்ட உண்மையை சொல்லாம விட்டது தானே காரணம்… ஆனா நீங்க ஊரை விட்டு போன நாள்ல இருந்து அவன் நல்லாவே இல்ல மா… அண்ணனை அப்படி பேசுனதை நினைச்சு நீ அவனை விட்டு வந்ததை நினைச்சு மருகிட்டே கிடக்கான் புள்ளை…

போதாக்குறைக்கு நானும் என் மருமகளை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தா தான் பேசுவேன் னு சொல்லி இத்தனை மாசம் ஆகியும் அவன் முகத்தை கூட பார்த்து பேசலை ம்மா.. அம்மாடி தென்றல்… பாவம் டா அவன்… அவன் செஞ்ச தப்பை நான் மறக்க சொல்லலை தெரியாம பண்ணிட்டான் மன்னிச்சு ஏத்துக்க தென்றல்… உன் குழந்தை என் பேரப்புள்ளை அப்பா இல்லாம இந்த உலகத்துல கஷ்டத்தை அனுபவிக்கனுமா தென்றல் குட்டி…”

தீரன் படும் கஷ்டத்தோடு நாளை அவள் வயிற்றில் வளரும் குழந்தையும் படப்போகும் கஷ்டம் வரை அன்னபூரணி விளக்கி சொல்லி அவளை தன் மகனோடு சேர்ந்து வாழ சொல்லி மன்றாட வெறுப்பாக பார்த்தாள் தென்றல்.

“போதும் அத்த…. இன்னும் எத்தனை காலம் தான் இப்படி குழந்தை குழந்தை னு சொல்லி தப்பு பண்ற ஆம்பளைங்களை கண்டுக்காம விடுறது? ஒரு தப்பும் பண்ணாத என் அப்பாவை பழி வாங்க உன் பையன் என் காதலையும் என்னையும் யூஸ் பண்ணிட்டு போவான்… இப்போ வயித்துல இருக்க குழந்தைக்காக நான் அவனை ஏத்துக்கனுமா? முடியாது அத்த…

அதுக்காக என் குழந்தைக்கு கலங்கம் வரவும் நான் விட மாட்டேன்… ஏன் இப்படி ஒருத்தன் தான் அப்பா னு சொல்றதுக்கு பதிலா என் குழந்தை வயித்துல இருக்கும் போதே அதோட அப்பாவை இழந்திடுச்சு னு சொல்லிட்டு போறேன்…” தென்றல் எவ்வித உணர்ச்சியும் இன்றி சாதாரணமாக சொல்ல அன்னபூரணியும் பொன்னியும் அதிர்ந்து போயினர்.

“ஏய்… என்னடி பேசுற?” பொன்னி அதிர்ந்து அதட்ட

“தெரிஞ்சு தான் மா பேசுறேன்.. இதோ பாரு அத்தை.. உன் மேல எனக்கு எந்த கோபமும் இல்லை. ஆனா, உன் மகனை இந்த ஜென்மத்துல என்னால மன்னிக்க முடியாது. ஏன்னா அவன் என்ன பண்ணாலும் அவன் பின்னாடியே சுத்திட்டு இருந்த தென்றல் அவனோட காதல் பொய் னு தெரிஞ்ச நொடி செத்து போய்ட்டா.. அதனால தான் அந்த நினைப்புல தான் என் குழந்தையோட அப்பா செத்துட்டான் னு சொல்லறதுக்கு வாய் வந்தது.

அதனால தயவு செஞ்சு உன் மகனுக்கு ஆதரவா பேசிட்டு இங்க வராத அத்தை..” என்று தென்றல் பட்டென்று சொல்லிவிட கண்ணீரோடு அவளை பார்த்த பூரணி எழுந்து தன் புடவை முந்தானையில் முடிச்சிட்டு வைத்திருந்த விபூதி பிரசாதத்தை எடுத்து அவளுக்கு நெற்றியில் இட்டு விட்டு வயிற்றில் இருந்த குழந்தையை ஆசையாக வருடி விட்டு

“செல்லம்… உன் அப்பா தப்பு பண்ணான் தான்… ஆனா தப்பானவன் இல்லடா.. இதை உங்க அம்மாக்கு புரியவைச்சு நீங்க தான் அவங்களை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரனும்…” என்று கூறிய பூரணி “நான் வரேன் மதினி… போய்ட்டு வரேன் தென்றல்… உடம்பை பத்திரமா பார்த்துக்கோ… உனக்கு தோணுனா எனக்கு ஒரு தடவையாவது ஃபோன் பண்ணு…” என்று அவளின் கன்னம் வருடி கூறிவிட்டு வாசலில் இறங்கிய அன்னபூரணி மீண்டும் ஒரு முறை திரும்பி பார்த்து தென்றலை தன் விழிகளில் நிறைத்துக் கொண்டு மீண்டும் தன் ஊருக்கு வந்து விட்டார்.

ஊருக்கு வந்தவர் ஆதீரன் மேல் இன்னும் கோபம் அதிகரிக்க அவனை பார்ப்பதை தவிர்த்து அறைக்குள் சென்று குமாரை உடனே வரச்சொல்லி ஃபோன் செய்ய அடுத்த மூன்று மணி நேரத்தில் குமார் வந்திருந்தான்.

ஆதீரன் வேலைக்கு கிளம்பி சென்றிருக்க தான் ஊருக்கு சென்றதையும் அங்கு பொன்னியையும் தென்றலையும் பார்த்ததையும் அவர்கள் நிலையையும் கூறிய பூரணி தென்றல் பேசியதை ஒரு வரி விடாமல் சொல்லிக் கொண்டு இருந்தவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு இருக்க அதிக ரத்தக் கொதிப்பு காரணமாக மயக்கம் அடைந்தார் அன்னபூரணி.

பதறிப்போன குமார் உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்து விட்டு ஆதீரனை வரவழைத்திருந்தான்.

தாய்க்கு என்ன ஆனதோ என்று பதட்டத்தோடு வந்த தீரனின் சட்டையை பிடித்து உலுக்கினான் குமாரவேலு தென்றலுக்கு அண்ணனாக…

  • தொடரும்…
  • நன்றியுடன் DP ✍️

1 thought on “தீரனின் தென்றல்-21”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *