அத்தியாயம்-7
தன் போனில் ஆசையாக துஷாராவோடு பேச ஆசைப்பட்டான். அதற்காக தான் அவசரமாய் போனை வாங்கி வரக்கூறினான். ஆனால் அண்ணாமலை பேசியதை கேட்டப்பின் அவளிடம் சாதாரணமாய் பேசவே மனம் வலித்தது.
ரொம்ப நேரம் போன் அடிக்கவும், “அந்த தம்பி தூங்கிட்டு இருக்காரா, போன் அடிச்சிட்டே இருக்கு. துஷாரா என்னனு பாரு” என்று கூற, துஷாரா ஹர்ஷா இருக்கும் இடத்திற்கு வந்தாள்.
எதையோ இழந்தவன் போல அருகேயிருக்கும் அலைப்பேசியின் ஒலியே செவியில் சென்றடையாதவனாக அவ்வறையில் இருந்த புகைப்படத்தை பார்த்தான். அப்புகைப்படத்தில் சிறுவயது துஷாரா இருந்தாள்.
பள்ளி சீருடையில் இரட்டை சடை பின்னி தலையில் சிவப்பு ரோஜாவை வைத்திருந்தாள். ஏதோ பரிசு வாங்கும் விதமாக இருக்க, அவன் முன் வந்தாள்.
அவளென்றதும் நீண்ட பெருமூச்சை விடுத்து, முகத்தை திருப்பி கொண்டான்.
“என்ன ஆச்சு? உலகமே இடிந்து விழுந்த மாதிரி ரியாக்ஷன்.
அப்பயிருந்து போன் அடிக்கு எடுத்து பேச என்னவாம்?” என்று கையை நீட்டி சுட்டிக்காட்டினாள்.
போனை பார்த்து, ”ராம்கி தானே? கண்டிப்பா பேசணும்னு அவசியமில்லை.” என்று கடினமாக பதில் தந்தான்.
“பிரெண்டோட பேசினா பொழுது போகும் இல்லையா?” என்று கூற, “அவன் திரும்ப திரும்ப உன்னை பத்தி கேட்பான். உன்னை பத்தி பேசுவான். முன்னனா ஒரு மாதிரி ஜாலியா எடுத்துப்பேன். இப்ப வரவர வலிக்குது. நீ கிடைக்கமாட்டியானு ஏங்கிட்டு இருக்கேன்.” என்று நெஞ்சில் இதயமிருக்கும் பக்கம் கை வைத்து உரைத்தான்.
துஷாரா வாசல் கதவு பக்கம் எட்டி பார்த்து, “எங்கம்மா மாடில இருக்காங்க. இந்த மாதிரி பேசி எதையாவது இழுத்து விடாதிங்க. எத்தனை முறை சொல்லறது” என்று கோபத்தில் பாய்ந்தாள்.
“உனக்கென்ன உனக்கு மாப்பிள்ளை எல்லாம் பார்க்கறாங்க சந்தோஷமா சுத்தற. இவன் யாரு ஊர் சுத்தி பார்த்து போறவன்னு நினைச்சுட்ட, எனக்கு வலிக்குது.
நான் ஹாஸ்பிடல்லயே இருக்கேன். வார்ட்பாய் யாராவது கேர்டேக்கரா என்னை பார்த்துக்கட்டோம்” என்று ஆதங்கமாய் பேசினான்.
“நீங்க இங்க வர்றதுக்கு முன்ன இதை யோசித்திருக்கணும். இப்ப இப்படி பேசறிங்க? முதல்லயே என்றால் அப்பாவிடம் அவருக்கு ஷையா இருக்கும் ரொம்ப புஷ் பண்ணாதிங்கன்னு சொல்லியருப்பேன். இப்ப வந்து குதிக்கறிங்க” என்றவள் அடிக்கடி வாசல் பக்கம் எட்டி பார்த்து கொண்டாள்.
“உன்னை இப்படி இந்தளவு விரும்ப ஆரம்பிப்பேன்னு நினைக்கலை. இதயம் ரொம்ப வலிக்கு. ஐ லவ் யூ துஷாரா” என்று காதலை உரைத்தான்.
அதை கேட்டு ஸ்தம்பித்தவளாக மாறியவள், ராம்கி போன் செய்யவும் ஹர்ஷா போனில் ஆங்கிலப் பாடல் மீண்டும் கேட்டது.
“போன் பேசினா பேசுங்க இல்லை போங்க. நீங்க கத்தினா இனி அம்மா அப்பா வந்தா கூட நான் கவனிக்க மாட்டேன். இப்படியா தங்க இடம் கொடுத்த இடத்துல பொண்ணுகிட்ட காதலை சொல்வாங்க? எங்கப்பா உங்களை போய் நம்பறார்” என்று கத்திவிட்டு கடந்தாள்.
ஹர்ஷாவுக்கே தன்மீது கோபம் துளிர்த்தது.
இதென்ன தேவையற்றதை இழுத்து வைக்கின்றோமோ? அண்ணாமலை அங்கிள் நல்ல குணம். அவர் காட்டும் தன்னலமில்லா நேசத்தில் விளையாடுவதாக தோன்றியது.
ராம்கியின் போனை ஹர்ஷா அட்டன் செய்து, ”சொல்லுடா” என்றான்.
“என்னடா பக்கத்துல தானே போன் இருக்கும். எடுக்காம என்ன பண்ணின? தூங்கிட்டியா?” என்று கேட்டதும், “எதுக்கு போன் செய்த அதை சொல்லு” என்று ஹர்ஷா அதே அலைவரிசையில் கேட்டான்.
“எதுக்குன்னா? அங்கிள் ஆன்ட்டி போன் போட்டா எடுக்கலையாமே. என்னடா சைட் அடிக்குற பிஸில இருந்தியா?” என்று சிரித்து கொண்டே கேட்டான்.
“ராம்கி… இப்படி பேசறதை நிறுத்து. நாளைக்கு அந்த பொண்ணு இல்லைன்னா நான் இல்லைன்ற நிலைமையில் என்னை தள்ளிடாத. என்னால காதல் தோல்வி எல்லாம் தாங்க முடியாது. நீ பாட்டுக்கு என்னை ஏத்தி விடாத.” என்று கோபமாய் உரைத்ததும் ராம்கியோ அதிர்ந்தான்.
“என்னடா விளையாட்டா பேசினேன். சீரியஸா பதில் சொல்லற?” என்றவனிடம், “ராம்கி நானா கால் பண்ணறவரை, என்னை டிஸ்டர்ப் பண்ணாத. அப்பா அம்மாவிடமும் இதையே சொல்லிடு” என்று துண்டித்து விட்டான்.
எதை தின்றால் பித்தம் தெளியும் என்பது போல இருந்தவனுக்கு கூடுதலாக மிளகாய் சாற்றை வடிகட்டி அருந்த கொடுத்தது போல ஒரு வாரத்தில் சூழ்நிலை உருவானது.
துஷாராவை பெண் பார்க்கும் வைபோகம்.
காலையிலிருந்து கிச்சனில் நெய் வாசம், இனிப்பு சுவை வாசம், முறுக்கு சுடுவதென்று அறுசுவைகள் மணக்க, என்ன விசேஷம் என்று கேட்டதும், “நம்ம துஷாராவை இன்னிக்கு பொண்ணு பார்க்க வர்றாங்க.” என்ற வள்ளியின் பேச்சில் ஹர்ஷா முற்றிலும் துவண்டான்.
சில நாட்களாக இந்த பக்கமே தலைகாட்டாமல் சென்றவளை மனதில் திட்டி தீர்த்தான்.
இதில் வள்ளி ஆசையாக தட்டில் பலகாரம் வைத்து, அவன் கட்டிலில் அருகே வைத்திருக்க, வேண்டா வெறுப்பாய் சுவைத்தான்.
அப்படியே இருந்தால் அதற்கு வேறு ‘சாப்பிடுங்க தம்பி’ என்று பாசமாக உரைப்பதை கேட்டும் மறுக்க முடியுமா?
அண்ணாமலை வேறு பர்மிஷன் போட்டு வந்து மகளுக்காக வந்தவர்களுக்கு உபசரிக்க தேவையானதை எடுத்து வைத்தார்.
அலங்காரம் செய்து வந்ததும், “நீயெல்லாம் எங்கயோ வாழ வேண்டியவ மா.” என்று சந்தோஷமாய் உரைத்தார்.
தந்தைக்காக முகமலர்ந்து நின்றாலும், ஹர்ஷாவின் மனம் வலிக்குமே என்ற கவலையும் கொஞ்சமிருந்தது.
இவளாக செல்லாமல் அவனாக வரயியலாது. அதனால் இந்த கோலமெல்லாம் அவன் காணாமல் தவிர்ப்பது நல்லதென்று நினைத்தாள்.
ஆனால் விதி சும்மாயில்லாமல் விக்கல் சத்தம் மூலமாக அவளை அழைத்தது.
“துஷாரா அந்த தம்பிக்கு விக்கல் எடுக்கு. தண்ணீ கொண்டு போய் கொடு. நான் மிக்சர் வைக்கிறப்ப தண்ணி கொண்டு போய் கொடுக்க மறந்துட்டேன்” என்றார்.
“நீங்க போய் கொடுங்கம்மா” என்று மறுத்து பேசினாள்.
“அடியேய்… அடுப்புல எண்ணெய் இருக்கு. அதுவும் கொதிக்குது. இல்லைன்னா செய்ய மாட்டேன். நீ தான் அலங்காரம் எல்லாம் பண்ணிட்டியே. தண்ணி மட்டும் கொண்டு போய் கொடு” என்று கூறினார்.
“அப்பாவை கொண்டு போக சொல்லுங்க.” என்றாள்.
“உங்கப்பா மாப்பிள்ளையை வரவேற்க தெரு முனை வரை போயிட்டார். முதல்ல தவிச்ச வாயுக்கு தண்ணி கொடுத்துட்டு வா போடி” என்று திட்டவும் வாட்டர் பாட்டிலில் தண்ணீரை கொண்டு சென்று நீட்டினாள்.
‘இக்’ ‘இக்’ என்று விக்கல் சத்தம் தந்தவன், தண்ணீரை வாங்காமல் பெண்ணவளை பருகினான்.
அவன் தன்னிடமிருந்து நீரை வாங்காமல் தன்னை உற்றுநோக்கவும், நிமிர்ந்தாள்.
அதன் பின் தண்ணீரை வாங்கி அவளை உள்ளங்காலிருந்து உச்சந்தலை வரை பார்வையிட்டு, “அலங்காரம் எல்லாம் எவனுக்கோ ஒருத்தனுக்காக இல்ல?” என்று கேட்டதும், எச்சிலை விழுங்கி, “ப்யூச்சர்ல கணவரா கூட இருக்கலாம். அப்ப இந்த அலங்காரம் சரியா இருக்கும்” என்றாள்.
“எனக்கு இந்த அலங்காரம் பிடிக்கலை. உன்னை சுத்தமா பிடிக்கலை. இத்தனை நாள் ஓடி ஒளிஞ்ச மாதிரி இப்பவும் ஒளிஞ்சியிருக்கலாம். ஏன் இந்த கோலத்துல என் கண் முன்ன வந்த? என்னை காயப்படுத்த தானே?” என்று ஆற்றாமையோடு கேட்டதும், “அம்மா கூப்பிடுவாங்க. அப்பா வந்துடுவார். நான் போறேன். தண்ணி இங்கேயே இருக்கட்டும்” என்று வைத்துவிட்டு ஓடினாள்.
ஹர்ஷாவோ இமை மூட அவன் விழியிலிருந்து கண்ணீர் துளிகள், வழிய ஆரம்பித்தது.
காலை தடவி பார்த்தான் முன்பு விட சற்று பரவாயில்லை. நாளை மறுநாள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். முடிந்தால் அங்கேயே தங்கலாமா?’ என்றெல்லாம் சிந்தித்தான்.
பின்பு இங்கேயே இருந்து தன் காதலியை இன்னொருத்தன் பெண் பார்க்க மணக்க வேடிக்கை பார்ப்பானேன்.
“உள்ளவாங்க… உட்காருங்க… வள்ளி.. மாப்பிள்ளை வீட்ல வந்துட்டாங்க” என்றவர் குரல் ஹர்ஷா இருந்த அறை வரை கேட்டது.
பெற்ற மகளுக்கு தந்தை ஆசையாக வரன் பார்த்து அழைத்து வருகின்றார். இந்தளவு சந்தோஷப்படுவது சரிதானே?! என்று கலக்கியவன் அருகே, “ஏன் தம்பி அழறிங்க கால் வலிக்குதா?”என்று அண்ணாமலை குரல் மிக அருகில் கேட்டதும் சுதாரித்தான்.
“லைட்டா அங்கிள்.” என்று சமாளிக்கும் நேரம், “உங்க பாஸ்போர்ட் பர்ஸ் தம்பி. பணத்தை மட்டும் செலவு பண்ணிட்டேன்னு குணா சொன்னான். ஏதோ இதெல்லாம் எங்கயாவது தூக்கி போடலையேனு அவனை விட்டுட்டேன். இப்ப லாக்கப்ல இருக்கான். சம்பந்தி வீட்டோட மருதமுத்து வந்து கொடுத்தார் ” என்று கூறவும் அதனை வாங்கி பார்வையிட்டான்.
‘நல்லவேளை எல்லாம் இருக்கு’ என்ற ஆறுதலுக்கு பதில், ‘இந்தியால இனி என்னால இருக்க முடியாதா?’ என்றதே அவனை வாட்டியது.
இதில் இன்று துஷாராவுக்கு பெண் பார்க்கும் நிகழ்வு என்றதும், “சரிங்க தம்பி.… பையன் வீட்ல வந்துட்டாங்க. என்ன ஏதுனு பேசி முடிச்சு வந்து பேசறேன்” என்று பம்பரமாய் ஓடினார்.
“அங்கிள்” என்று சத்தமின்றி அழைத்தான்.
‘அவரை அழைத்து என்ன செய்ய போகின்றாய் என்று மனசாட்சி நக்கல் செய்தது.
‘பாஸ்போர்ட் கைக்கு வந்துவிட்டது. இனி இங்கே இருக்க தேவையில்லை.
அட்லீஸ்ட் துஷாரா விரும்பினால் கூட அண்ணாமலை அங்கிளிடம் பேசலாம். அவள் தான் தந்தை பார்ப்பவனை மணக்கும் திட்டத்தில் அலங்காரம் செய்து நின்றாளே. தன்னை காதலிப்பதாக துஷாரா ஒரு வார்த்தை உரைத்தால் கூட, அண்ணாமலையின் முன் தைரியமாக பேசுவான்.
விரும்பியவளை எவனோவொருவன் பெண் பார்க்க மெத்தையில் ‘ஐ மாஸ்க்’ போட்டுவிட்டு நீட்டி படுத்தான்.
தப்பும் தவறுமாய் நினைவுகள் அலைப்பாய்ந்தது.
இந்த பாஸ்போர்ட் கிடைக்காமல் கூட சதி செய்திருக்கலாம். ஏன் தான் கிடைத்ததோ? என்று மனதில் புலம்பினான்.
ஆனால் கிடைத்து விட்டது. இனி இங்கு தங்கி காதல் வலியை கூட்டாமல் உடனே விமானத்திற்கு டிக்கெட் போடவும் தோன்றியது. நாளை மறுநாள் செக்கப் முடித்து டாக்டரிடம் பயணம் செய்யலாமா என்று கேட்டு விட துடித்தான். அப்படி செல்லலாமென்றால் புறப்பட துடித்தான்.
வெளியே என்ன நடந்ததோ யாரின் சப்தமும் வராமல் போக மெதுவாக தாங்கியை பிடித்து காலுக்கு அழுத்தம் கொடுக்காமல் ஊன்றாமல் ஸ்டிக் உதவியால் ஹாலுக்கு வந்தான்.
“என்ன தம்பி இங்க வந்துட்டிங்க?” என்று வள்ளி தான் பார்த்துவிட்டு பதறினார்.
“மாப்பிள்ளை யாரோ வந்தாரே… அவரை பார்க்கலாம்னு வந்தேன் ஆன்ட்டி” என்று சமாளித்தான்.
“அட ஒரு மணி நேரம் இருந்தாங்க. காபி, ஸ்வீட் மிக்ஸர் சாப்பிட்டு கிளம்பிட்டாங்க. உங்களிடம் காட்டலாம்னு நினைச்சேன் நீங்க தூங்கிட்டு இருந்திங்க” என்று அண்ணாமலை கூறவும், ஹர்ஷா குற்றம் உள்ள நெஞ்சாக நின்றான். அண்ணாமலை வந்து ஹர்ஷா பெயரை கூப்பிட்டு எழுப்ப முயன்றார்.
துஷாராவை பெண் பார்க்க வந்தவன் என்றதால் அவனை காண வேண்டுமா என்று உறங்குவதாக நடித்தான்.
இப்பொழுது கூட இந்த வரன் முடிந்ததா இல்லையா? என்ற ஆவலில் கால் வலியை கூட பொருட்படுத்தாமல் வந்து விட்டான்.
“அங்கிள்… கல்யாணம் டேட் பிக்ஸ் பண்ணிட்டிங்களா?” என்று வெகுசாதாரணமாய் கேட்பதாக நினைத்து கேட்டான்.
துஷாராவுக்கு அவன் குரல் உள்ளுக்குள் துடிப்பதாக பேச்சிலேயே தெரிந்தது.
தந்தை கண்டுபிடித்து விடுவாரா? என்ற அச்சம் சூழ, அவளது அறையில் கதவருகே பார்வை பதித்தாள்.
“துஷாராவை பிடிச்சிருக்கு சொல்லிட்டாங்க. ஜாதகம் மேலோட்டமா பார்த்தாங்க போல. நல்லாயிருக்குனு வந்துயிருக்காங்க. இன்னிக்கு பொண்ணு பார்த்ததால், அவங்க வீட்ல ஒருமுறை கலந்தாலோசித்து பேசறதா சொல்லிட்டாங்க. எனக்கென்னவோ இந்த வரனே முடிவாகும்னு தோணுது தம்பி” என்று மகிழ்ந்தார்.
”அங்கிள்… நான் நாளை மறுநாளுக்கு பதிலா நாளைக்கே ஹாஸ்பிடல் போயிட்டு, கன்சல்டிங் பண்ணிட்டு வந்துடலாம்னு இருக்கேன். பிளைட்ல டிராவல் செய்யலாம்னு சொல்லிட்டா, ஆஸ்திரேலியாவுக்கு டிக்கெட் புக் பண்ணிடலாம்னு நினைக்கறேன்” என்று கூறவும் அண்ணாமலையோ, “ஏன் தம்பி உடம்பு நல்லா குணமான பிறகு போகலாமே?” என்றார்.
“இல்லைங்க அங்கிள் அப்பா அம்மாவை பார்க்கணும் போல இருக்கு. என்னதான் தினமும் போன்ல விசாரிச்சாலும் நேர்ல பார்த்தா ஒரு தெம்பு வரும். அதோட உங்களுக்கு எதுக்கு சிரமம். எத்தனை நாள் இங்க இருக்க முடியும் சொல்லுங்க. தனியா இருக்கவும் போரடிக்கு ” என்றான்.
அதற்கு மேல் பிடித்து நிறுத்தவா முடியும். துஷாரா கல்லூரி சென்று விடுகின்றாள். அண்ணாமலை உத்தியோகம் செல்ல, வள்ளி டிவியே கதியென்று இருக்கின்றார்.
அறையில் தேவைகள் எல்லாம் கிடைத்தாலும், இது உரிமையாக தங்குமிடமா என்ன? துஷாரா காதலித்தாலாவது வெட்கம் கெட்டு தங்கி திருமணத்தை பற்றி பேச்சு எடுக்கலாம்’ என்றது அவன் சிந்தனை.
“துஷாரா இந்த தட்டெல்லாம் கொண்டு போய் வைக்கலாம்ல.” என்று வள்ளி அதட்ட, உடை மாற்றி வந்தவளோ ‘ஏலமிடாதிங்க அம்மா’ என்று நொடித்து கொண்டு வந்து ஆங்காங்கே இருந்த தட்டு டம்ளரை எடுத்து வைத்தாள்.
அவள் வந்ததற்கு முக்கிய காரணம் ஹர்ஷா அங்கு நின்றிருந்தது தான்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.
வாசிக்கும் அனைவருக்கும் அன்பு கலந்த நன்றிகள்.
காதலியும் இல்லை இனி இவள்
காதலையும் விட முடியவில்லை
காதல் சோகம்
கண்ணீர் வழியே….
கோவம் வந்தாலும்
காட்ட முடியாத வேதனை…..
Adei vittrunga da yennai nu kathara vidureengaley yenga hero va 😝😝😝
Paavam harsha 🥺 thushara avanga appa kaga maraikura aana evana partha kashtamavum eruku pengaluku eppovum rendupakkamum edi dhan pola🙄 eppo evan enna pannuvaan parpom🤔
தென்றல் நீ தானே..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 7)
அடேய் கிறுக்கா ! உனக்கு இதே பெட்ரோமாக்ஸ் லைட்டே வேணுமா ? எதுக்குடா இம்புட்டு கலக்கம்…? உனக்கு துஷாரா தானே வேணும், பேசாம உங்கப்பாம்மா கிட்ட உன்னோட ஆசையை சொன்னேன்னா, அவங்களும் வந்து பார்த்துட்டு ஓகே சொல்லப் போறாங்க.
அதுக்கெதுக்கு இப்படி உடைஞ்சு போற. புத்திச்சாலித்தனமா யோசி.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Practical ah Evan yosikrathu correct. Paapom yennaaaguthunu
Spr going waiting for nxt epi 😍
Wow nice epi
Paavam ya nama paiyan harsha
Harsha inga irundhu varuthapadyrathuku ooruku poida lam nu nenaikiran