Skip to content
Home » மனதில் விழுந்த விதையே-6

மனதில் விழுந்த விதையே-6

அத்தியாயம்-6

Thank you for reading this post, don't forget to subscribe!

    போலீஸ் கையில் இருந்த புகைப்படத்தில் பெண்களின் நால்வர் இருக்கவும், கீழே இறங்க தயங்கினார்கள்.

   தமிழ் தான் “ஆதேஷ்… அங்க என்னாச்சுனு பாரு” என்று அனுப்ப, “இவரையா எங்களை போட்டுக் கொடுத்திடுவார்” என்று சஹானா சட்டென வாய் துடுக்கில் வார்த்தை விட்டாள்.

    வேதாந்தோ “அதெல்லாம் பக்குவமா பேசுவான். ஆதேஷ் போ,” என்று அனுப்ப, ஆதேஷ் சஹானாவை மார்க்கமாக முறைத்தபடி சென்றான்.

   அங்கே கூட்டத்தில் ஒருவனாக கலந்து வேடிக்கையாளராக முதலில் நின்றான். பின்னர் போலீஸ் ஒருவரிடம் சிகரெட்டை பற்ற வைத்து ஏதேதோ பேச, தலையாட்டினான்.

   சற்று தூரத்தில் கார் இருக்க, அதுவும் வெளியாட்கள் உள்ளேயிருப்பவரை காணாத வகையில் மறைத்திருக்கவும் நகம் கடித்தபடி மென்பனி ஏறிட்டாள்.

    இருபது இருபத்தியைந்து நிமிடம் உலாவியவன் மெதுவாக தங்கள் வண்டியின் அருகே வந்து ஏறினான்.
  
  அதற்குள் ஆயிரம் முறை சஹானாவும் மிருதுளாவும் அவனை வரச்சொல்லுங்க. போயிடலாம்  அச்சோ ஏதாவது உலறிடப்போறார். எங்க மேல கோபமா வேற இருந்தார்.” என்று மாறி மாறி புலம்பி தள்ளினார்கள்.

  ஆதேஷ் காருக்கு நெருக்கமாய் வந்து, “மச்சான் வண்டியை எடுத்துட்டு நம்ம தங்கற இடத்துக்கு போயிடுவோம். அப்பறம் பேசலாம்” என்றான்.

   தமிழும் சட்டென வண்டியை பின்னால் இயக்கினான்.

   சற்று தொலைவு செல்லவும் சாக்ஷியே தயங்கி “என்னங்க ஆச்சு?” என்று பரிதவிப்பாய் கேட்டாள்.

     “ஏங்க..  இந்த பொண்ணை யார் கல்யாணம் பண்ணிக்க முன்வந்தாங்க?” என்று புரியாமல் கேட்டான் ஆதேஷ்.

   “ஏதோவொரு கிழவன் செகண்ட் மேரேஜ் பண்ண கேட்டான். ஏன்?” என்று மென்பனி கூறவும், “நீங்க உங்க பிரெண்டை கிட்னாப் பண்ணிட்டு வந்ததா சொல்லறிங்க. அங்க இந்த பொண்ணு அவளோட தோழிகளோட சேர்ந்து திருமணத்துக்கு பயந்து ஓடிவந்துடுச்சுனு தேடறாங்க. இந்த இடத்துக்கு நீங்க வருவது எப்படியோ தெரிந்து வச்சிருக்காங்க.

  அங்க காலையில இந்த பொண்ணை காணோம் என்றதும், உங்க மூன்று பேர் வீட்லயும் போலீஸ் விசாரிக்க போயிருக்காங்க.

அங்க காரை திருடிட்டு வந்ததா அவர் சொல்லிருக்கார்.
   கொடைக்கானல் போனா போயிருப்பாங்கனு இடத்தை எப்படியோ ஸ்மெல் பண்ணிட்டாங்க. பொண்ணு காணோம்.
நீங்க இங்க வந்தா பிடிச்சி வச்சி அனுப்ப உடனடியா கொடைக்கானல் போலீஸுக்கு தகவல் தந்திருக்காங்க.
  
   என் கெஸ் கரெக்ட்னா உங்க வீட்ல எல்லாம் யாராவது இப்ப வாட்ச் பண்ணி இந்த பொண்ணை பத்தி தகவலை தேட ஆர்வமா இருக்கலாம்.
   யார் கண்டா போனை கூட ஹாக் பண்ண வாய்ப்பு இருக்கு” என்று ஆதேஷ் விளக்கினான்.
 
    “காரை எடுத்தாந்ததை அண்ணா தான் திருடியதா சொல்லிருப்பார்.” என்று மென்பனி யூகித்து உரைத்தாள்.

   நான் தடுக்கி விழுந்தா கொடைக்கானல் போவேன். எங்க அத்தை வீடுனு அடிக்கடி சொல்லிருக்கேன். மேபீ… அதை மிருதுளா சித்தி நோட் பண்ணிருக்கலாம்.” என்று சஹானா உரைத்தாள்.

    வேதாந்த் சாக்ஷியை காணவும், “நான் அப்பா அம்மாவிடம் நேத்தே சொல்லிட்டேன். அவங்க இதெல்லாம் தேவையில்லாத ஆணி. மரியாதையா மிருதுளாவை தைரியமா கல்யாணத்தை பண்ணிக்க மாட்டேன்னு மறுத்து பேச சொன்னாங்க.

   இந்த எருமை தைரியம் வந்து வாய் திறக்காதுனு நான் தான் அப்பா அம்மா தூங்கியதும் பணத்தை எடுத்துட்டு நகை எடுத்துட்டு கிளம்பிட்டேன்.  
   அப்பா அம்மாவுக்கு நானும் கூட்டுனு தெரியும். என்ன பத்தி தப்பும் தவறுமா மாட்டிவிடமாட்டாங்க.  உலறவும் மாட்டாங்க. என்ன… நாளைக்கு என் பெர்த்டே மகள் கூட இல்லையேனு ஓயாம புலம்புவாங்க.” என்றவள் போனை எடுத்து அழைக்க சென்றாள்.

   “ஹலோ ஹாக் பண்ணிட்டு இருக்கலாம்.” என்று தடுத்தான் ஆதேஷ்.

    “அந்தளவு போகாதுங்க” என்று சஹானா கூறவும், “நினைச்சிட்டு இரு. நீங்க என்ன பண்ணிட்டு வந்திருக்கிங்க தெரியுமா? வேளச்சேரி எம்.எல்.ஏ ராஜபாண்டியனுக்கும் உங்க பிரெண்டுக்கும் கல்யாணம் பண்ண பேசியிருக்கிங்க. அவர் அரசியல் செல்வாக்கை வச்சி தேடறார்.
 
    இந்த ஆட்சி அவங்களோடது. அதனால எந்தளவு வேண்டுமென்றாலும் இறங்கி தேடறாங்க. முதல்ல போனை சுவிட்ச் ஆப் பண்ணுங்க” என்று சீரியஸாக கூறினான்.

    பெண்கள் மூவரும் அவரவர் போனை சுவிட்ஆப் செய்யும் நேரம், “உங்க பேரண்ட்ஸ் நம்பரை நீங்க யாரிடமாவது பேச நினைக்கிற நம்பரை இதுல ஸ்டோர் பண்ணுங்க” என்று வேதாந்த் நீட்டவும், மடமடவென டைப் செய்து பதிய வைத்தார்கள். அப்படியே ஷேர் செய்தால் இவர்கள் எண்ணும் அகப்படுமென்று முன்னெச்சரிக்கையாக வேதாந்த் தெளிவுப்படுத்தினான்.

    அந்த இடத்தில் ச்விட்ச் ஆப் செய்துவிட்டு அலைப்பேசிக்கு மூடுவிழா செய்து கைப்பையில் வைத்தார்கள்.

    “இப்ப எங்க போறது?” என்று மென்பனி கூறவும் தான், பெண்களுக்கு பயமும் உருவானது.

   தமிழோ “இப்ப நாங்க தங்கற இடத்துக்கு அழைச்சிட்டு போறோம். இன்னிக்கு சூழ்நிலை பார்த்துட்டு முடிவெடுங்க. அம்ரிஷ் ஓகே வாடா?” என்று நண்பனிடம் ஆலோசனை கேட்டான்.
  
    அம்ரிஷ் இருக்கும் மனநிலைக்கு என்ன சொல்வது. அவன் யாரென மிருதுளா அறிவாள். எப்படியும் தோழியிடம் பகிரலாம். தற்போது தாங்கள் தங்கள் இடத்திற்கு அழைத்து சென்று பின்னர் தெரியப்படுத்தினால் என்னவாகும்.

    இந்த பொண்ணு வேற அழுதுட்டு இருக்கா’ என்று அவன் மனம் மிருதுளாவுக்காக பாவம் பார்த்தது.

   “நோ பிராப்ளம் டா.” என்று ‘பார்த்துக்கலாம்’ என்று இமை மூடி அறிவித்தான்.

    பெண்கள் மூவருமே அமைதியாகிட, மிருதுளா அழுது கரைந்தாள்.

    அதற்குள் ஒரு பெரிய காம்பவுண்ட் கேட்டில் தமிழ் நிறுத்தி, ஹாரன் கொடுத்திடவும் கேட் வேகமாய் திறக்கப்பட்டது.

    சுற்றிலும் ஆறடி உயரத்திற்கு சுவர்கள். பெரிய தோட்டம் ஆங்காங்கே பச்சை பசேலென்ற செடிகொடிகள் அளவாக கத்தரித்து கண்ணிற்கு நிறைவாய் காட்சிதந்தது.

   வண்ண வண்ண பூக்கள் வரிசையாக காண்போருக்கு மகிழ்ச்சியை அள்ளி தெளிக்கும் விதமாக வைக்கப்பட்டிருந்தது.

சின்னதாய் செயற்கை நீரூஊற்று வேறு மனதை கவர்ந்தது.

    கார் போர்டிகா இருக்குமிடம் செல்லவே நேரமெடுத்தது.

    ஒரு பெரிய வில்லா போன்று வீடு இருந்தது. 
  
    தமிழ் காரை நிறுத்தவும், ஆதேஷ் இறங்கினான்.

   சாக்ஷி பயத்தோடு இறங்கினாள். இல்லையா பின்ன, முன்பாவது தைரியம் இருந்தது. தற்போது முன்பின் தெரியாத நான்கு ஆடவர்கள். இதில் மிருதுளாவை மணக்க போவது ராஜபாண்டியன் என்ற அரசியல் பிரமுகர். அவரிடம் மோதி அழைத்து வந்ததை அறிந்தால் தங்களின் நிலை.

    அரசியல்வாதியிடம் மோதும் அளவிற்கு தங்களுக்கு தைரியம் உண்டா? என்பதை இனி வரும் சூழ்நிலைகள் வேண்டுமாயின் தீர்மானிக்கலாம். ஆனால் தற்போது இந்த நொடி மறைக்காமல் கூறவேண்டுமாயின் பயம் பயம் பயம் இது மட்டும் ஆட்சி புரிந்தது.
   
    “அம்மா அப்பாவை ஏதாவது பண்ணிடுவாங்களா?” என்று கேட்டாள் சாக்ஷி.
  
   “வாய்ப்பு குறைவு. அரசியல் பலம் வச்சி மத்த இலக்கா அதிகாரியிடம் வேலையை வேண்டும்னா வாங்குவாங்க. ஒரு தனிப்பட்ட குடும்பத்தை ஏதாவது பண்ணறது வாய்ப்பு குறைவு. பிகாஸ் ஒர் குடும்பம் இல்லை. மூன்று குடும்பம். மூன்று குடும்பத்துலயும் உறவுகள் நட்புகள் தெரிந்தவங்கனு ஆதரவு வந்தா அரசியல்கட்சில பெயர் கெடும். அதனால வீட்டுல பெரியவங்களை குடைச்சல் தரமாட்டாங்க. ஆனா கொடைக்கானல்ல இருந்தா மாட்டறதுக்கு வாய்ப்புண்டு.” என்றான்.

    பேசிக்கொண்டே லக்கேஜை இறக்கவும் ஆட்களை பணித்தார்கள்.  பெண்களும் இறங்கி தங்கள் உடைமையை எடுத்தார்கள்.

        “என்னால உங்களுக்கு எல்லாம் கஷ்டம். என்னை விடுங்க. நான் இங்க சூசைட் பாயிண்ட்ல தற்கொலை பண்ணிக்கறேன். நீங்க உங்க வீட்டுக்கு போங்க” என்று மிருதுளா முட்டாளின் மறுவதாரமாக உரைத்தாள்.

  அம்ரிஷ் கோபமாய் திரும்பி பார்த்தான்.
   “வாழ்க்கையில கஷ்டம் வந்தா செத்திடணுமா? லூசா நீ. உனக்காக யோசித்த மூன்று பிரெண்ட்ஸை  பாரு. மூன்று பேரோட பலம். உனக்கான பலவீனத்தை தூக்கி போடு.

   இப்ப இதை யோசிக்காம வந்து ரெப்பிரஷ் ஆகிட்டு ரெஸ்ட் எடுப்போம்” என்று அதட்டினான்.

     “எங்களால் உங்களுக்கு கஷ்டமில்லையே” என்று மென்பனி கேட்டாள்.
 
   “ஏங்க நாலு முரட்டு ஆட்கள் கூட தங்க நீங்க தான் கஷ்டப்படணும். விடுங்க… வீடு பெரிசா இருக்கு.நீங்க ஒருபக்கம் போய் தங்குங்க.” என்று அனுப்பினான் வேதாந்த்.

     பணியாட்கள் ஆண்களுக்கு முன்பே அறையை ஒதுக்கி இருந்தார்கள்.

  அதனால் பெண்களுக்கு தான் தங்க இடத்தை ஒதுக்க கூறினான் அம்ரிஷ்.

   அகலமாய் நீண்டிருந்த ஹாலில் நுழையவும், அம்ரிஷ் புகைப்படம் வரவேற்பறையில் வரவேற்றது.

    இனியும் முகமூடி போட்டு மறைத்து என்ன செய்வது? இங்கே வந்தாயிற்றே என்று முகமூடி அவிழ்த்தான்.

   மிருதுளாவை தவிர மூன்று பெண்களும் வாயை பிளந்து, “ஆக்டர் அம்ரிஷ்?” என்று கேட்க, “ஆமா” என்று உரைத்துவிட்டு குஷன் இருக்கையில் அமர்ந்தான்.

    “இதுக்கு தான் முகத்தை மறைச்சிட்டே வந்திங்களா?” என்று மென்பனி கேட்கவும், “கூட்டத்தை அவாய்ட் பண்ணவும், பிரச்சனையை தவிர்க்கவும் தான்.” என்று இலகுவாக கூறினான்.

     பணியாட்கள் சூடான காபி எடுத்து வந்து தரவும் ஆண்கள் வாங்கி பருக, பெண்களோ பருக பயந்தனர்.

     “மயக்க மருந்துலாம் இல்லைங்க. நூறு சதம் நம்பி குடிங்க.
  நீங்க எப்படி ஒரு தோழியோட பிரச்சனையை சால்வ் பண்ணி அவளுக்கான மன ஆறுதலுக்கு வந்திங்களோ!? அதே போல தான் நாங்களும் அம்ரிஷிற்காக வந்தோம். அவனுமே சில பிரச்சனையை தவிர்க்கவும் அதோட வலி வேதனையை மறக்கவும் தான் இங்க வந்திருக்கான் புரிஞ்சுக்கோங்க.

   எங்களை பார்த்து பயப்பட வேண்டாம்.” என்று வேதாந்த் தான் விரிவுரையாற்றினான்.

  மென்பனியோ “எங்க கார் அப்ப?” என்று கூறவும், தமிழோ “மச்சி… கார் வச்சி கேப்சர் பண்ணுவாங்க. கார் வேதாந்த் வீட்ல விடச்சொல்லிடு. இல்லைனா அது வேற பிரச்சனை கிளம்பும். கார் உன்னோட டிரைவர் ஓட்ட, அப்படியே எங்கயாவது பார்த்து இங்க ஸ்மெல் பண்ணிட்டு வந்துடுவாங்க” என்றதும் அம்ரிஷ் உடனடியாக போனை எடுத்து பி.ஏ சம்பத்திற்கு அழைத்து,  மெய்யப்பனை மென்பனி காரை வேதாந்த் வீட்டிற்கு கொண்டு சென்று விடக்கூறினான்.
  
   சம்பத்தும் “ஓகே சார். மெய்யப்பனுக்கு கால் பண்ணி சொல்லறேன். சார்… இஷா மேடம் பேட்டி கொடுத்திருக்காங்க பார்த்திங்களா?” என்று தயங்கி தயங்கி கேட்டான்.

    “பார்க்கலை சம்பத். பார்த்துட்டு தேவைப்பட்டா கூப்பிடறேன்” என்று உரைத்துவிட்டு, நண்பர்களை பார்த்து “இஷா டிவில பேட்டி தந்துட்டாளாம்.” என்று சுரத்தையின்றி கூறினான்.
  
   “என்னடா இதை மறந்துட்டோமே. டிவி போடு” என்று வேதாந்த் பேச, “வேண்டாம் டா. மிஞ்சி மிஞ்சி போனா தனியா பேசியதை அனவுன்ஸ் பண்ணி பிரகடனம் செய்திருப்பா. விட்டு தள்ளு… எதுனாலும் லேட்டா பார்த்துக்கலாம்.” என்று கூறிவிட்டான். ஆதேஷும் ‘பார்றேன் இஷா அம்ரிஷ் பிரச்சனையே கொஞ்ச நேரம் மறந்துட்டோம். இந்த பொண்ணு மிருதுளா பத்தியே யோசித்துவிட்டோம்’ என்று புலம்பி செல்ல, அம்ரிஷிற்கும் ‘அதானே.. என் மனதை அழுத்தி வதைத்த பெரிய பிரச்சனையை மறந்து போனேன். எப்படி? இந்த பொண்ணு பத்தி யோசித்து இருந்தோம். இப்ப கூட சம்பத் சொல்லலைனா இஷா பத்தி திங்க் பண்ணிருக்கவே மாட்டேன். அவ்வளவு எளிதில் மறக்க முடிந்ததா?’ என்று அம்ரிஷ் மனம் ஆச்சரியப்பட்டது.

-தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *