Skip to content
Home » விருந்தோம்பல்

விருந்தோம்பல்

திருக்குறள்

Thank you for reading this post, don't forget to subscribe!

அறத்துபால் -இல்லறவியல்விருந்தோம்பல்

குறள்:81

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு

வீட்டில்‌ இருந்து பொருள்களைக்‌ காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம்‌ விருந்தினரைப்‌ போற்றி உதவிசெய்யும்‌ பொருட்டே ஆகும்‌.

குறள்-82

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டாற்பாற் றன்று

விருந்தினராக வந்தவர்‌ வீட்டின்‌ புறத்தே இருக்கத்‌ தான்‌ மட்டும்‌ உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும்‌ அது விரும்பத்தக்கது அன்று.

குறள்:83

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று

தன்னை நோக்கி வரும்‌ விருந்தினரை நாள்தோறும்‌ போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால்‌ வருந்திக்‌ கெட்டுப்‌ போவதில்லை.

குறள்:84

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்

நல்ல விருந்தினராய்‌ வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில்‌ மனமகிழ்ந்து திருமகள்‌ வாழ்வாள்‌.

குறள்:85

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்

விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில்‌ விதையும்‌ விதைக்க வேண்டுமோ?

குறள்:86

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு

வந்த விருந்தினரைப்‌ போற்றி, இனி வரும்‌ விருந்தினரை எதிர்பார்த்திருப்பவன்‌, வானுலகத்தில்‌ உள்ள தேவர்க்கும்‌ நல்ல விருந்தினனாவான்‌.

குறள்:87

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்

விருந்தோம்புதலாகிய வேள்வியின்‌ பயன்‌ இவ்வளவு என்று அளவு படுத்திக்‌ கூறத்தக்கது அன்று; விருந்தினரின்‌ தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்‌.

குறள்:88

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்

விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில்‌ ஈடுபடாதவர்‌, பொருள்களை வருந்திக்‌ காத்து (பின்பு இழந்து) பற்றுக்‌ கோடு இழந்தோமே என்று இரங்குவர்‌.

குறள்:89

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு

செல்வ நிலையில்‌ உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப்‌ போற்றாத அறியாமையாகும்‌; அஃது அறிவிலிகளிடம்‌ உள்ளதாகும்‌.

குறள்:90

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குநழ்யும் விருந்து

அனிச்சப்பூ மோந்தவுடன்‌ வாடிவிடும்‌; அதுபோல்‌ முகம்‌ மலராமல்‌ வேறுபட்டு நோக்கியவுடன்‌ விருந்தினர்‌ வாடி நிற்பர்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *