Skip to content
Home » அந்த வானம் எந்தன் வசம்-30

அந்த வானம் எந்தன் வசம்-30

30

Thank you for reading this post, don't forget to subscribe!

அவளை தன் உடலுக்குள்ளே புதைந்து போகுமளவிற்கு சேர்த்து அணைத்து கொண்டு அருள் நின்றிருந்தது எத்தனை நேரமோ?

“அக்கா”

 “விடுங்க.  ரம்யா கூப்பிடுகிறாள்”

.”யக்கா.!”

“வந்து விட போகிறாள்.”

“விடறேன். ஒன்னே ஒன்னு சொல்லி விட்டு போ”

“என்ன?” பரபரத்தாள். அவன் மீண்டும் அவளை தன் கை வளைவில் பிடித்து கொண்டு, கூர்மையாக அவள் முகத்தில் பார்வையை பதித்தவாறு கேட்டான்.

“இப்போது சொல். நான் வரி போட்ட கழுதையா? அல்லது உண்மையில் வரிக்குதிரை தானா?”

“இப்போது இந்த கேள்வி முக்கியமா?”

“நிச்சயமாக.!”

“ஏன்?”

“எனக்கே தெரிய வேண்டி இருக்கிறதே”

தன்னோடு சேர்த்து அணைத்தவனிடம் இருந்து விலகாமலே சொன்னாள். “இப்படி ஒரு நிலையில், என்னை வைத்து பின் இந்த கேள்வியை கேட்டால் என்னவென்று பதில் சொல்வது?” வெற்றிக் களிப்பில் கண்கள் மின்னிய முகத்தை ஏறிட்டுப் பார்க்க இயலாத நாணம் அவளுக்கு புதிது. 

“அக்கா.!”

“விடுங்கள்.”

“இந்த பதில் சரியில்லை.”

“பின் வேறு எப்படி சொல்வதாம்”

“கழுதையா? வரி குதிரையா?”

உதட்டை சுழித்து கொண்டு கண்களை மூடி திறந்து பின் சொன்னாள். “வரி குதிரை தான்”

சட்டென்று கையை தளர்த்தினான். அவனை நோக்கி விளையாட்டாக கையை கும்பிட்டு நின்றாள். மீண்டும் ரம்யாவின் குரல் அழைத்தது. இவர்கள் நகர்ந்து தங்களை சரி செய்து கொண்டு அவளை பார்த்து கையை அசைத்தார்கள். அதற்குள் அவளும் அவர்களை நோக்கி தடுமாறி கொண்டே கீழே இறங்கி வந்தாள். ரம்யாவும் அந்த இடத்தின் அழகை ரசித்து அருளிடம் ஒரு நூறு கேள்விகளை கேட்டு அவனை திணற அடித்து விட்டு பிறகு எல்லோருமாக மேலே ஏறினார்கள்.

மேலே ஏறும் போது அருள் அவனுடைய வலது புறம் வந்த நிவியின் கையை பிடித்து கொண்டிருந்தவன், தடுமாறி விழ போன ரம்யாவை தன்னிச்சையாக சட்டென்று இடது கையால் பிடித்து கொண்டான். 

நிவி இடது கண் ஓரத்தால் அவனை முறைத்தாள். தனக்குள் சிரித்து கொண்ட அருள் ரம்யாவின் கையை விடுவித்தான்.

“தொட தொட மலர்ந்ததென்ன? 

பூவே தொட்டவனை மறந்ததென்ன?

பார்வைகள் புதிது ஸ்பரிசங்கள் புதிது 

மழை பெற பூமி மறுப்பதென்ன?”

கைப்பேசியில் ரிங்க்டோன் சந்தர்ப்பத்திற்கு பொருத்தமாக ஒலித்தது. அவன் எடுக்கவில்லை. குன்றிலிருந்து இறங்கியவர்கள் அடிவாரத்திற்கு வந்த போது அவனுக்கு கைப்பேசியில் மீண்டும்  அழைப்பு வந்தது. எடுத்து டிஸ்ப்ளேயில் பெயரை பார்த்தவன் அது வரை பிடித்திருந்த நிவியின் கையை விட்டான்.

“ஹல்லோ..”

“………..”

“நான் வெளியே இருக்கிறேன். இன்னும் அறை மணி நேரம் ஆகும். அதுவரை அவரை பிடித்து வை. இதோ வந்து விட்டேன்.”

“……………”

“இல்லே செல்வி. மறக்கவில்லை. நல்லா ஞாபகம் இருக்கிறது.”

“…………..”

“கொஞ்சம் அவசர வேலையாக வெளியே வந்து விட்டேன். இதோ வருகிறேன்”

அதற்குள் ரம்யா நிறுத்தி இருந்த வண்டியிடம் வந்தவன் ரம்யாவை பார்த்து கை அசைத்தான். பார்வையால் நிவியிடம் போய் வருகிறேன் என்பதாக சொல்லி கொண்டான். விடுபவளா  ரம்யா?

“என்ன சார், செல்வி மேடமா? இவ்வளவு பறந்து பறந்து போறீங்க.”

“ஆமாம் ரம்யா, அவர்கள் தென்னந்தோப்பை ஓட்டினார் போன்று எனக்கும் கொஞ்சம் சின்னதா ஒரு தென்னந்தோப்பு இருக்கிறது. அதை குத்தகைக்கு விட வேண்டும். இருவரோடதையும் சேர்த்து ஒருவரிடமே விடுவதாக ஏற்பாடு. அதற்கான ஆள் இன்று வருவதாக சொல்லி இருந்தார். மறந்தே போயிற்று. அவர் வந்து விட்டாராம். அதான் உடனே போயாக வேண்டும். வருகிறேன்”

அவன் தன்னுடைய டூ வீலரில் ஏறி சடுதியில் பறந்தான். அவன் போகும் வரை பார்த்து கொண்டு நின்றிருந்தவள் திரும்பி ரம்யாவிடம் கேட்டாள்.

“யார் அந்த செல்வி?”

“எனக்கு கம்ப்யூட்டர் மேடம்.”

நிவிக்கு எரிச்சலாக வந்தது. ஆனால் கோபப் படமுடியாதே. பதிலும் தெரிந்தே ஆக வேண்டும்.

“உன்னுடைய கம்ப்யூட்டர் மேடம் அருளை ஏன் அழைக்கணும்?”

“ஓ, அதை கேட்கிறாயா?”

பதிலை கேள்வியாக கேட்டவள் உடனே பதில் சொல்லாமல் வண்டியை ஓட்டி கொண்டிருந்தாள். அதற்கு மேல் நிவியால் பொறுமையாக இருக்க முடியவில்லை. அவள் முதுகில் சுரண்டினாள்.

“ஏய், யார் அது செல்வி மேடம்?”

“அது நம்ம வர்மா சார் கல்யாணம் கட்டி கொள்ள போகிறவங்க”

அருள் வந்து விட்டு போனதும் செல்வி அவளுடைய அப்பா வரதராசனை போட்டு தொனப்பினாள். எரிச்சல் பட்டாள். 

“அப்பா, நீங்களும் ஒரு வருஷமா சொல்லி கிட்டு தான் இருக்கீங்க. வர்மாவை எனக்கு பேசி முடிப்பதாக. இன்னும் செய்ய மாட்டேங்கிறீங்களே.”

“நான் என்ன செய்ய? நானும் ஜாடைமாடையாக கேட்டு பார்க்க தான் செய்தேன்”

“எதுக்கு ஜாடை மாடையாக கேட்பது.? நேருக்கு நேர் கேட்டு விடுங்களேன்” 

“நானும் நினைத்து கொண்டு தான் இருக்கிறேன். பொன்னியக்காவிடம் பேசினேன். அவர்களும் அருளின் அம்மாவும் நம் சம்பந்ததில் மிகுந்த விருப்பமாக தான் இருக்கிறார்களாம். ஆனால் அருள் தான் பிடி கொடுத்து பேச மாட்டேன் என்கிறானாம்”

“இப்படியே சொல்லி கொண்டிருந்தால் எப்படி?”

“கொஞ்சம் பொறுமையாக இரு. நம் ராஜசேகர் மகள் கல்யாணம் முடிந்ததும் பொன்னியக்காவை அழைத்து கொண்டு ஒரு நடை போய் அருளின் பெற்றோரையே நேரிடையாக கேட்டு விடுகிறேன்”

“எதை செய்தாலும் காலாகாலத்தில் செய்யுங்கள். இருவரும் ஒரே கல்லூரியில் வேலை செய்கிறோம். சேர்ந்தே எங்கும் செல்கிறோம். இதற்கு  ஒரு முடிவு தெரியாமல் மனது அதிலேயே நிற்கிறது. அதனால் சீக்கிரம் எதையாவது செய்து எங்கள் கல்யாணத்தை முடிக்க பாருங்கள்” 

3 thoughts on “அந்த வானம் எந்தன் வசம்-30”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *