📖 Premium தளத்தில் கதைகள் வாசிக்க, 🛒 Amazon Kindle‑இல் கதைகள் வாசிக்க, ▶️ YouTube Channel‑இல் Audio novel கேட்க👇
Skip to content
Home » இதயத்திருடா-3

இதயத்திருடா-3

இதயத்திருடா-3

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

     அதிகாலை காபி பருகியபடி பேப்பரை புரட்டினான் மாறன்.

    “ஏன்டா… கொஞ்சம் எழுப்பினா நானே காபி போட்டு வச்சிருப்பேனே. நீயேன் கஷ்டப்படணும்.” என்று அக்கா செவ்வந்தி கேட்டதும் “பழகிடுச்சு அக்கா. ஆமா மாமா எழுந்துக்கலை.” என்று காபியின் கடைசி மிடறை பருகினான் மாறன்.

     “நேத்து உன்னை காணோமேனு வாசல்ல உட்காந்திருந்தார். மதி எத்தனை நாள்டா இப்படி தனியா இருப்ப, எங்க காலத்துக்கு பிறகு உன்னை பார்த்துக்க ஒரு பொண்ணு வேண்டாமா? மதுவந்தியே நினைச்சிட்டு இருக்கியே.. அவ போய் நாலு வருஷமாக போகுது.” என்று பேசவும், அக்கா திருமண பேச்சை ஆரம்பிக்கவும் எழுந்தான்.

      “பதில் சொல்லிட்டு போயா. உங்கக்காவுக்கு தினமும் இந்த கவலையிருக்கு” என்று அக்கா கணவரான கணேசன் மாமாவும்  எதிர்பார்ப்பாய் கேட்க, எப்பவும் போல் அமைதியை தான் பதில் தந்தான்.

     “இந்நேரம் கடைப்பையன் கடை திறந்து இருப்பான். நான் அப்பறம் பேசறேன் மாமா” என்றதும், “நைட்டு தான் லேட்டா வந்து மழுப்பறியே ஐயா” என்று செவ்வந்தியும் தொடர்ந்து வந்தார்.

    “அக்கா.. அப்படின்னா இந்த கேள்வி எனக்கு பிடிக்கலைனு அர்த்தம். எனக்கு நீயும் மாமாவம் போதும். நம்ம மூன்று பேருக்கு மத்தியில யாரும் வர வேண்டாம்.” என்று படபடவென கூறினான்.
  
      “மூன்று பேருக்கு ஏன் ஐயா சொத்து பத்து, கடை எதுக்கு? நமக்கென்ன குழந்தை குட்டி இருக்கா” என்று மடக்க பார்த்தார்.

     “குழந்தை குட்டி இல்லை மாமா. ஆனா நமக்கான உணவாதாரம் முதல், மருத்துவ செலவும் இந்த உலகத்துல இருக்கவரை தேவையாச்சே. அதுக்கு தான் உழைக்கறேன்.” என்று சாமர்த்தியமாய் கூறினான்.

    எப்படி பேசினாலும் திருமணம் வேண்டாமென உரைத்து கறாராக கூற, செவ்வந்தி கவலையாய் நின்றார்.

     “அம்மா அப்பா இருந்தா இப்படி உன்னை விடமாட்டாங்க டா. அக்கானு தானே அலட்சியமா கல்யாணம் வேண்டாமென்று சொல்லற” என்று செவ்வந்தி கண் கசக்க மதிமாறன் சோர்ந்து விட்டான்.

     “அம்மா அப்பா இருந்தாலும் இதை தான் சொல்லிருப்பேன்.” என்று கடக்கமுயன்றான்.
“நில்லு டா.. அக்கா பொண்ணை கட்டினோம். அவ அல்ப ஆயுளில் போய் சேர்ந்துட்டா, புதுசா ஒருத்தியை திருமணம் செய்தா அவளோட வாழ்றதோ அக்கா மாமாவோட சேர்ந்து இருந்தாலோ உன்னோட லைப் நெருடலில், இரண்டு பக்கமும் தவிக்கும்னு பார்க்கறியா… நாங்க வேண்டுமின்னா எங்கயாவது போயிடறோம். நீ ஒரு கல்யாணம் பண்ணு டா. மதி ப்ளீஸ் டா. அவ தான் வயிற்றுல ஒரு உசிரை சேர்த்து அழைச்சிட்டு போயிட்டாளே.” என்று குறைப்பட்டு முடித்தார்.

   தாங்கள் கூடவே இருப்பதால் மதிமாறன் மணக்க யோசிக்கின்றானோ என்று அப்படி பேசினார் செவ்வந்தி.

     “அக்கா…. தயவு செய்து இப்படி பேசாதே. உன்னையும் மாமாவையும் நான் அப்பா அம்மா ஸ்தானத்துல தான் பார்க்கறேன்.
 
    எனக்கு ஒரு நல்லதென்றால் நீங்க சந்தோஷப்படுவீங்கனு தெரியும். ஆனா மதுவந்தி இடத்துல நான் யாரையும் பார்க்கலை. சின்னதுல இருந்து மாமா மாமானு என்னை கூப்பிட்டு வம்பிழுத்து காதலிச்சவள்.

     என் குழந்தையை நாலு மாதம் சுமந்திருக்கா. என்னால எப்படிக்கா இன்னொருத்தியை நினைக்க முடியும்?

    அப்படியே ஒருத்தியை நினைக்க முடியும்னா, இல்லை தனியா இருக்க முடியலைனா சொல்லறேன் எவளையாவது கட்டி வையுங்க. இப்ப கல்யாணம் எதுவும் வேண்டாம்.” என்று கடிகாரத்தை பார்த்து ஹோட்டலுக்கு செல்ல நேரமாக குளிக்க சென்றான்.

      அடையும் காரசட்னியும் செவ்வந்தி வைத்திருக்க, மடமடவென உண்டு முடித்து கிளம்பினான்.

     கணேசனோ “இப்படி ஒருத்தனோட கடைசி வரை வாழ நம்ம பொண்ணு மதுவந்திக்கு கொடுத்து வைக்கலையே. விபத்து வந்து காவு வாங்கிடுச்சே” என்று புலம்பினார்.

     வார் செருப்பை மாற்றும் நேரம் மதிமாறன் காதில் விழுந்தது. அக்கா மாமாவிடம் மதுவந்தி விபத்தில் இறந்ததாக அல்லவா அறிந்தது. அது திட்டமிட்ட கொலை என்று மதிமாறன் கூறவில்லை. அவன் இனியும் சொல்லப்போவதில்லை.

      நினைவுகள் எங்கோ பயணிக்க தினமும் வரும் வழியில் வந்தான். எப்போதும் போலீஸ் என்றால் அந்த பக்கம் பார்வை திருப்ப மாட்டான். ஏனோ நெஞ்சு குறுகுறுக்க நழுவிடுவான்.

   இன்றோ ‘நான் இங்க தான் மாற்றலாகி வந்தேன்’ என்ற நற்பவி வார்த்தையில் அவளை தேடினான்.

    திருமணம் முடிவானதா, எப்பொழுது கல்யாணம் என்று கேட்பதற்கு ஆவலாய் இருந்தான்.

     “டூவீலர் எல்லாம் லெப்ட்ல போங்க. விமல் அண்ணா.. அந்த குருவிக்கூடு நிறுத்தி என்னனு கேளுங்க. அந்த டார்க் ப்ளு கோமாளி டிரஸ் அவனையும் நிறுத்தி என்னனு பாருங்க” என்று நற்பவி குரல் கேட்க அவ்விடம் வண்டியை நிறுத்தி கண்களால் அவளை தேடினான்.

    அவள் குரல் கேட்டதே தவிர அவளை காணவில்லையே என்ற ஆதங்கத்தோடு இருக்க, “சார் இங்க எதுக்கு நிற்கறிங்க. கிளம்புங்க கிளம்புங்க” என்று விரட்ட, எங்கிருந்தோ தன்னை காண்பதை அறிந்து கொண்டான்.

   இல்லையா பின்ன.. போலீஸ் வந்து ‘ஏன் நிற்கற நகரு’ என்ற கேள்விக் கேட்டு முரட்டு தனமாய் விரட்டாமல் ‘சார் என்று அனுப்புகின்றனரே’ என்று தோன்றியது.

       வண்டியை ஸ்டார்ட் செய்ய அதுவோ சதி செய்தது. அதனால் ஒரமாய் மெதுவாய் தள்ளிக் கொண்டு சென்றான்.

    “சார் என் பெயர் குரு சார் இப்ப பேசிட்டு போனது என் பொஞ்சாதி மஹா சார். அவ தான் குருவிக்கூடுனு பேசுவா. நான் இங்க தான் பட்டினப்பாக்கத்துல இருக்கேன்.

    மெய்யாலுமே அது என்னை வம்புல மாட்டிட்டு போகுது சார். என் தலையை சலூன்ல ஒட்ட நறுக்க சொல்லுச்சு. மாட்டேன்னதும், போலீஸ்ல இப்படி பேசிட்டு சுத்துது. நீங்க தேடுற ஆள் நான் இல்லை” என்று குரு என்பவன் சத்தியம் செய்யாத குறையாக அடித்து பேசினான்.
 
      “பட்டினப்பாக்கம்னா.. அட்ரஸ் சொல்லு. ஏன்பா ப்ளு சட்டை என்ன பார்க்கற உன் டீடெய்ல் சொல்லு” என்று கேட்க அனைவரையும் கண்டு, அவனோ பைக்கை கீழே போட்டு விட்டு, ஹெல்மெட் முகத்தோடு ஓடினான்.

     போலீஸ் மொத்தமும் அவனை தேடி ஓட, நற்பவி அங்கிருந்த காரிலிருந்து விரைவாக பிடிக்க பறந்தாள். அப்பொழுதே அந்த வண்டியில் நற்பவி இருக்கின்றாளென அறிந்து கொண்டான் மாறன்.
  
      நற்பவி நேரம் சின்ன சின்ன சந்தில் ஓடி ஆங்காங்கே ஹெல்மெட் உடை அகற்றி மாற்றி ஓடி ஓளிந்தான் ப்ளூ சட்டை.

    மதிமாறனோ அதேயிடத்தில் நிற்க, ஸ்டார்ட் ஆனதும் நற்பவி அவனை பிடித்தாளா இல்லையா? என்ற எண்ணத்தில் இருக்க, கடை பையன் போன் வரவும் அட்டன் செய்து “வர்றேன் டா” என்று ஓட்டினான்.

      கடைக்கு வந்த நேரம் டீ காபி பால், வடை போண்டா என்று இருக்க, இட்லி, பூரி, சப்பாத்தி பொங்கல் ஐட்டங்கள் செய்து வரிசையாய் வந்திறங்கியது.

    அதனை எடுத்து கிச்சன் பக்கம் சென்றதை மேற்பார்வையிட்டவாறு வடிவேல் நிற்க, மதிமாறன் வந்ததும் வணக்கம் வைத்து பணியை கவனித்தனர்.

   இதுவரை மதிமாறன் தாமதமாக வந்ததில்லை. இன்று முதல் முறையாக அப்படியென்றதும் விசித்திரமாக பார்த்தார் வடிவேல்.

      இங்கு நற்பவியோ எதிரே இருந்த கமிஷனரிடம் திட்டு வாங்கி கொண்டிருந்தாள்.

     “மற்றவங்க கனவுகளுக்காக இங்க வேலைக்கு வந்தா இப்படி தான். அக்யூஸ்ட் அந்த பக்கம் ரன் ஆகறான்னு தெரிந்தும் எப்படி விட்டு வேடிக்கை பார்த்த, இதுல யாரு இது? தேவையில்லாம எவனிடமோ தனிபட்டு பேசி அனுப்ப வச்சிருக்க? நாம தேடறதுக்கு சம்மந்தப்பட்டவன் மட்டும் மாட்டினா எத்தனை குடும்பம் தப்பிக்கும் தெரியுமா?

     நன்விழி லெவலுக்கு நீ இல்லை. அவ இப்ப இருந்தா அடிப்பட்டு வந்தாலாவது ஆளை முன்ன நிறுத்திருப்பா?” என்று கர்ஜினை குரல் அவ்வறையில் ஆவேசமாய் நற்பவியை திட்டி முடிக்க, வாதமோ விளக்கமோ கொடுக்காமல், நற்பவி தன் தவறை எண்ணி அமைதியானாள். அவள் அக்காவின் கனவிற்காக வேலைக்கு சோர்ந்தாள். அவளும் இத்துறையில் ஆர்வம் வந்ததில் சொன்னால் புரியுமா?

   “எனிவே நெக்ஸ்ட் டைம் டியூட்டியை ஒழுங்கா பாருங்க” என்றதும் “ஓகே சார்” என்று சல்யூட் அடித்து திரும்பினாள்.

    தொப்பியை டேபிளில் வைத்து கமிஷனர் தர்ஷன் எழுந்திட, “சாரி அங்கிள்.” என்று திரும்பி கூறிவிட்டு வெளியேற நகர முற்பட்டாள் நற்பவி.

     “இங்க பாரு… இப்பவும் சொல்லறேன். உங்க அக்கா நன்விழி புல்லட் பட்டாலும் முதல்ல காரியம் பெரிசுனு களத்துல இருப்பா. அவளோட பார்வை குறைபாட்டுக்கும், அவ கனவை நீ நிறைவேற்றவும் இந்த இடத்துக்கு வந்திருக்கலாம். ஆனா ஒவ்வொருத்தருக்கும் ஒரு கனவு வேட்கை இருக்கும். அவங்களுக்கு தான் இது சரி வரும். இல்லை ஏனோ தானோனு போயிடும்.” என்று கூறினார்.

    “அங்கிள் நீங்க என் அப்பாவோட பிரெண்ட். நன்விழி அக்காவோட ரோல் மாடல். நீங்க சொல்லறதை மறுக்க மாட்டேன். அட் தி சேம் எனக்கும் அக்கா மாதிரி இது என் கனவுக்கு வேட்கை கொண்ட பணி தான்.

      அங்க இருந்தவர் மதிமாறன். அவர் என்னை தேடவும்…  அதனால..” என்று கையை பிசைந்தாள்.

     “யார் அவன்?” என்று கேட்டார் தர்ஷன்.

     “அது பஸ்ட் கேஸ் இன்வஸ்டிகேஷன் பண்ணினப்ப ஹெல்ப் பண்ணினாரே… புட் அரேஜ் பண்ணி, கூட ஒர்க் பண்ண ஒரு சர்வண்ட் அரேன்ஜ் பண்ணினவர். அவரை சென்னையில பார்த்தேன்.” என்று கூறவும் தர்ஷன் தன் இரு கைகளை பிணைத்து அவளின் கண்களை கவனிக்க, அதில் திருட்டுத்தனம் சிறிதாய் வெளிப்பட்டது.

      “கேட்கணும்னு நினைச்சேன். பொண்ணு பார்த்துட்டு போனாரே என்னாச்சு… உன் அப்பா என்னிடம் என்ன ஏதென விசாரிக்க சொல்லறான்.

     உங்கக்கா நன்விழி கேட்டப்பவும் மாப்பிள்ளை பார்த்தவனே பதில் சொல்வான் இரண்டு வாரம் பொறுங்கனு சொன்னியாமே.” என்று கேட்டார் தர்ஷன்.

   ‘அச்சச்சோ.. இவரு இன்னிக்கு என்னை திட்டுவார் அதோட நைஸா ஓடிறலாம்னு பார்த்தா பெர்சனலை கேட்டுட்டாரே’ என்று பயந்தாள் நற்பவி.

     அதற்குள் யாரோ கமிஷனரை பார்க்க வரவும், “ஓகே பிறகு பேசிக்கலாம்” என்று நற்பவியை அனுப்பிட நிம்மதியாய் வெளிவந்தாள்.

     “ஓடினவன் நாங்க தேடறவனா தான் இருப்பான். கவனத்தை சிதற விட்டுட்டேனே. இந்த இரும்பு மனுஷனிடமெல்லாம்(தர்ஷன்) திட்டு வாங்க வேண்டியதா போச்சு.

   இதுல மூச்சுக்கு முந்நூறு தடவை நன்விழி அக்கா புராணம் எடுத்து, என்னை பாயிண்ட் பண்ணறதே இவருக்கு வேலையா போச்சு.” என்று புலம்பியபடி நற்பவி மதிமாறனின் எண்ணை கண்டு “உன்னால தான்டா மூஞ்சியை பாரு” என்று திட்டினாள்.
 
    அக்கம் பக்கம் சிலர் திரும்பி பார்க்க வீடியோ கால் பேசுவதாக தானாக மாற்றி தன்னிலையை நொந்தவாறு ஸ்டேஷன் நோக்கி சென்றாள். 

-இதயம் திருட வருவான்.
-பிரவீணா தங்கராஜ்.

3 thoughts on “இதயத்திருடா-3”

  1. Kalidevi

    😆😆😆😆 matikitta pangu un thirutu thanam yar kitta kamikira dharshan athu romba naal achi intha name story la vanthu . Ipo es agita next time maruvathur de. Intha kathium nee pesitu ponathula irunthu oru Mari irukan neeum avan number pathu pesura enannadakuthu rendu perkum nadula

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!