Skip to content
Home » ஐயங்காரு வீட்டு அழகே-8

ஐயங்காரு வீட்டு அழகே-8

அத்தியாயம்-8

Thank you for reading this post, don't forget to subscribe!

  “ஹரன்” என்று காருண்யா ஆசையாக அழைத்ததும், அந்த பெரியவர் பேசியதில் முகம் மாறியது காருண்யாவுக்கு‌.

   “நீங்க எப்ப வந்தேள்?” என்று காருண்யா ஹரனிடம் பேச, “நான் வர்றது இருக்கட்டும்
நீ இங்க என்ன பண்ற. மணி பத்தாகுது உங்க இரண்டு பேருக்கும் தனி உத்தியோகமா?” என்று ஹரன் கேட்க, ராவணனோ ஆண் மகனின் பேச்சு புரிய, “மைண்ட் யுவர் வோர்ட்ஸ் ஹரன்” என்றான்.
 
  “ராவணன் நான் பேசிக்கறேன் நீங்க போங்கோ” என்று அனுப்ப முயன்றாள். “பார்த்தியாடா அம்பி… நேக்கு புரிஞ்சுண்டுது. நோக்கு இன்னமும் புரியலைன்னா விளக்கு பிடிச்சிண்டு நில்லு. நான் கிளம்பறேன். நேக்கு இந்த பொண்ணு நம்மாத்துக்கு மாட்டு பொண்ணா வருவதில் துளியும் இஷ்டமில்லை.” என்று நகர்ந்தார்.

“ஹரன் அவர் என்ன பேசறார். நீங்களும் கேட்டுண்டு இருக்கேள். யார் அவரு” என்றுரைத்தாள்.

  “நான் சொன்னேனோ இல்லையோ. என் பெரிய மாமா” என்று அறிமுகப்படுத்தினான்.

  “வணக்கம்” என்று கூறும் முன், “நாம போலாம்” என்று முகத்தை திருப்பினார்.

   ஹரனோ அவர் மாமாவை விட்டு சற்று தள்ளி வந்து, “என்ன காருண்யா இது? நோக்கே இது நன்னாயிருக்கா? உன்னை பாக்கலாம்னு‌ ஆசையா வந்தேன். என்‌ முகத்துல கரியள்ளி பூசிட்டேள். நோக்கு ஆறு ஆறரைக்கு ஆபிஸ் டைம் முடியுமே. ஏன் பத்து மணிவரை? அதுவும் இவாமாதிரி முரடனோட. மாமா ஏதோ வயசுல பெரியவா பேச எப்படி முறைக்கறான் பாரு.” என்று சுட்டிக்காட்டினான்.‌

  ராவணன் கோபம் இவன் சொல்லி தெரியவேண்டியதில்லை‌ அவளே அறிவாள்.
 
  அதுவும் இல்லாமல் ஹரனின் மாமா பேசியதற்கு தனக்கே கோபம் துளிர்க்க அமைதியாக கையாள துவங்க முயன்றாள்.

“அவாளை விடுங்க. ஏன் என்னை உங்க மாமா அப்படி பேசறார். ஏதோ வேலையில் நாழிகை போனது தெரியலை. நான் ஒன்னும் தனியா தங்க ஆசைப்பட்டது போல பேசறாளே. நீங்களும் அதை என்னிடம் கேட்கறேள். கஷ்டமாயிருக்கு ஹரன்” என்று கூற, “டேய் ஹரன் ஆத்துக்கு போவோம். இந்த மாதிரி நேரங்கழிச்சு நம்மாத்துல எந்த பொம்மணாட்டியும் நிற்கறதில்லை. வீட்டுக்கு போய் இந்த விவாஹம் வேண்டுமா வேண்டாமானு பேசுவோம் வர்றியா இல்லையோ?” என்று கேட்க, ஹரனோ கையாளாகாத தனத்துடன், “நீ வீட்டுக்கு போ அப்பறம் பேசறேன்” என்று அனுப்ப, காருண்யா ஸ்கூட்டியை திருகி கிளம்பினாள்.

  ராவணன் அருகே கேப் வரவும், போனில் ஓடிபி கூறி ஏறினான்.

  “கலிகாலம்… இவாளை எல்லாம் ஆத்துல தண்ணி தெளிச்சு விட்டுட்டா போல. பாரு இந்த நேரம் ஊர்சுற்றி திரியறா. ஏன்டா நீ ஆம்பளை என்னைக்காவது இப்படி பத்து மணிக்கு வீட்டுக்கு தன்னந்தனியா ரோட்ல போவியோ? இதென்னடா அந்த பொண்ணு இப்படி இருக்கு.” என்று குறை சொல்லவே பிறந்தவராக வழிநெடுக காருண்யாவை கரித்து கொட்டினார்.
 
  ஹரனுக்கு நன்றாக தெரியும், இதே மாமா ‘இந்த லோகத்துல புருஷன் பொம்மணாட்டி சேர்ந்து வேலைக்கு போறது ரொம்ப இயல்பானது. அதுவும் டேஷிப்ட் நைட் ஷிப்ட் எல்லாம் பெரிய விஷயமேயில்லை. ஆண் தோழர்கள் எல்லாம் தப்பில்லை. லோகத்துல பொம்மளையாண்டா நிலாக்கே போறா, எல்லாயிடத்திலும் நம்மளாண்ட பேரும் புகழும் எடுத்தா பெருமை தானே’ என்பார். ஏனோ அவர் பார்த்த பெண்ணை கட்டிக்க கூறி வீட்டுக்கு பெரியவர் என்ற அந்த இடத்தை பறித்து விட்டதால் இந்த ஆர்ப்பாட்டம்.

  காருண்யா தங்கியிருந்த இடத்திற்கு வந்தததும் வாட்ச்மேன் கூட “என்னம்மா இவ்ளோ லேட்டு” என்று கேட்டான்.
  அன்னபூரணி ஹாஸ்டல் வார்டனாக பொறுப்பேற்ற பெண்மணியும் கைகடிகாரத்தை பார்த்து “ஆபிஸ்ல ஹெவி ஒர்க்கா காருண்யா?” என்று கேட்க ஆமென்றாள்.

  விடுதிக்குள் வந்தப்பின் அவ்விடம் நிசப்தமாக இருந்தது. எல்லாரும் உறங்கும் நேரத்திற்கு சென்றிருக்க, கதவை திறந்தாள்.

தனது அறையில் ராகவி தூங்கிவிட்டாள். இந்து மட்டும் அவள் காதலனோடு பேசுவதால் விழித்திருக்க, “என்ன காருண்யா ஏன் லேட். ராகவி எட்டி எட்டி பார்த்துட்டு தூங்கிட்டா” என்றாள்.
 
  ராகவியிடம் இரண்டு நாளாக வேலை அதிகமாக போகின்றதென்று உரைத்திருந்தாள். அதனால் அவள் அலுவலக வேலை கூடுதலாக உள்ளதென்று யூகித்து உறங்கிவிட்டாள்.

   காருண்யாவுக்கு இந்து பேசியதற்கு பதில் தராமல், முகம் கழுவி உடை கூட மாற்றாமல் படுத்துக் கொண்டாள்.

   சாப்பிடாமல் படுத்தது கூட காருண்யா உணரவில்லை.
  அவளுக்கு ஹரனின் மாமா இப்படி பேசுகின்றாரே என்றிருந்தது.
  இதில் ஹரன் தன்னை சமாளிக்க முனைவதால் கூடுதல் எரிச்சல். ஆனால் இந்த இடத்தில் ஹரன் தனக்காக பேசினால் ‘இப்பவே இப்படி பேசுவதாக’ குற்றம் சுமத்தப்படலாம்.

  நேரத்திற்கு வந்திருந்தால் இந்த பேச்சு வந்திருக்குமா? புரண்டு புரண்டு படுத்து அசதியில் உறங்கிவிட்டாள்.

  அடுத்த நாள் காலையில் ஏனோ புயலுக்கு முன் வரும் அமைதியாக ஒரு பதட்டம் உண்டானது. இதெல்லாம் உள்ளுணர்வு எச்சரிக்கை செய்யும் விஷயங்கள்.

  காருண்யா மெஸ்ஸில் இரவு சாப்பிடாதது கூறி காலை உணவை விழுங்கி, நேற்றைய தாமதத்தை ராகவியிடம் பகிர்ந்தாள்.
  சாரதாவோ, “என்ன எழுப்பியிருந்தா பால் பிரெட் தந்திருப்பேனே” என்றார்.
 
  “பிரெட் என்னிடம் கூட இருக்கு அக்கா. நேக்கு சாப்பிடற மூட் இல்லை” என்றாள்.

“சரி விடு. இப்ப ஹரன் வீட்ல ஏதாவது பேசி உனக்காக மாமாவை கன்வின்ஸ் பண்ணிருப்பார்.” என்று ராகவி ஆறுதலுரைத்தார்.

  ”நேக்கு ஏனோ அந்த நம்பிக்கை வரமாட்டேங்குது ராகவி. அந்த மாமா ஒருமாதிரி பேசியது என்னவோ மாதிரி உறுத்தலா இருக்கு.” என்றாள்.

  “இரண்டு மாசம் ஹரனிடம் போன்ல பேசியிருக்க அவர் புரிஞ்சுப்பார்.” என்று கூற இரண்டு மாசம் ஆகிடுச்சா?’ என்று நாள் கிழமையை கவனித்தாள்.

   “சரி நான் ஆபிஸ் கிளம்பறேன் ராகவி. சாராதா அக்கா பை” என்று புறப்பட்டாள்.‌

   அலுவலகத்தில் அவளது ஸ்கூட்டி நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு, தனது அலுவலக தளத்தில் நடந்தாள்.

  அவள் கேபின் செல்லும் முன் அங்கே ராவணன் வந்து வேலை பார்த்து கொண்டிருந்தான்.

   காருண்யா அவளது இடம் நோக்கி வரவும் ஜவ்வாது மணம் ராவணனை இழுக்க, காருண்யா வந்ததை உணர்ந்து திரும்பினான்.

  ராவணனை காணாமல் தவிர்த்து அவளிடத்தில் அமர, ராவணன் நேற்றைய விவரம் கேட்க தயங்கினான்.
  ஷாலினியாவது கூடயிருந்தால் இந்த பிரச்சனையே வந்திருக்காது.
  
   காருண்யாவே ஏதாவது சொல்வாளா என்று பார்த்தான். நல்ல நாளிலேயே எதுவும் சொல்ல யோசிப்பா. இப்ப நாமளா கேட்கலாமா என்று திரும்பி பார்த்தான். அலுவலகத்திற்கு வந்ததும் வராததும் கேட்டு தொல்லை படுத்த வேண்டாம் என்று பிரேக் டைமில் கேட்க எண்ணினான்.

     இரண்டு மணி நேரம் கடந்திருக்கும், ரோகிணி அழைத்திருக்க, “அம்மா ஏதாவது இம்பார்டண்னா சொல்லுங்க. அதர்வைஸ் அப்பறம் கால் பண்ணவா” என்றான்.‌

  “இம்பார்ட்டன் தான். நேத்து நைட் என்னடா ஆச்சு? அமிர்தம் மாமி ஒரே புலம்பல். ஏதோ ஆபிஸ்ல நீயுமா காருண்யாவும் ஒன்னா இருந்ததாகவும், அவ பியான்ஸி பார்க்க வந்து ஏதோ பிரச்சனை நடந்ததாம்‌. கல்யாணத்தை நிற்குமோனு பயமாயிருக்குனு ஓன்னு அழுவறாங்க” என்று கேட்டார்.

  “ம்மா நானும் காருண்யாவும் இப்பவும் ஒன்னா தான் வேலை செய்யறோம். இதனால என்ன பயம்.” என்று கத்தினான்.

    அந்த சத்தத்தில் காருண்யா திரும்பினாள்.
 
  “இப்ப அங்க என்ன பிரச்சனை?” என்று நெற்றி சுருக்கினான். காருண்யாவுக்கு அவன் போனில் பேசுவதை கேட்டு திகிலென்றானது. அவசரமாய் போனை எடுத்துக் கொண்டு தனியாக பேச சென்றாள்.
  
   அங்கே சில நேரம் போன் பேசவே தனியாக இடமிருந்தது.

  பாட்டி அமிர்தத்திற்கு அழைக்க, எடுத்ததும் ஒப்பாரி வைக்காத குறை.

  “நாங்களே கால் பண்ண நினைச்சோம். என்ன ஆச்சுடிம்மா? ஹரனோட தோப்பனார் என்னவென்னவோ சொல்லறா” என்று கேட்டதும், “என்ன சொன்னாங்க பாட்டி?” என்றாள்.

  “நீ நேத்து அலுவலகம் தாண்டி நைட் டூயூட்டி பார்த்தியாம். அதுவும் ஒரு ஆம்பளையாண்டா கூட. அவன் உன்னை தொட்டு தூக்கவும் அவமானமா இருந்ததுனு மாப்பிள்ளை சொல்வதா மாமி வேற சொன்னா?” என்றதும், “அய்யோ பாட்டி ராவணன் கூட தான் வேலை பார்த்தேன்.” என்று கூடயிருந்த ஷாலினி விட்டு சென்ற கதையும், ஹரன் அவன் மாமாவோடு வந்த கதையும் விவரித்தாள்.

  “நீ இப்படி சொல்றே. அவா என்னடான்னா நீயும் ராவணனும் நெருக்கமா இருப்பதா சொல்லி அசிங்கப்படுத்தறாளே.” என்று அழுவதை காருண்யாவால் கணிக்க முடிந்தது.

   “பாட்டி நோக்கு ராவணனை பத்தி தெரியாது. ஆனா என்னை பத்தி நன்னா தெரியுமோனோ? பிறகு ஏன் இப்படி பயப்படறேள்” என்றாள் காருண்யா.

அமிர்தமோ “நீ அந்த சீதாவா இருக்கலாம்‌. ஆனா கேள்விக் கேட்கறவா அக்னியில் குளிக்க சொல்வாளே? உன் தோப்பனார் போனில் பேசுவது சரிவராதுன்னு நேர்ல போயிருக்கான். என்னமோ பெருமாள் தான் நம்மளை சேவிக்கணும்.” என்று புலம்ப “பாட்டி நான் வேலை செய்ய போகணும். நீங்க அழாதேள். ஹரன் சமாளிப்பான். அப்பா போயிருக்காரோ, நல்ல செய்தியா திரும்பி வருவார்.” என்று ஆறுதலுரைத்தாள்.

  “சரிடிம்மா நீ சொன்னா கேட்டுக்கறேன்” என்று அமிர்தம் கூற, “பாட்டி இன்னோரு விஷயம். நம்மாத்து பிரச்சனையை இனி ரோகிணி ஆன்ட்டியிடம் பேசாதேள். அவாஅவா பிரச்சனை அவாளே தீர்க்கணும். இதுக்கு எதுக்கு அவாளை குறுக்க இழுக்கணும். நான் உத்தியோகம் பார்க்கற இடத்துல, ராவணன் வேலைக்கு வந்துட்டா. புரியுதா பாட்டி” என்று கூற அரைமனதாய் சம்மதித்தார்.

    காருண்யா பேசி வந்தவள் ராவணன் முகத்தை காணாமல் ராவணனை தவிர்த்து நடமாட அவனுக்கு அவளிடம் பேச வேண்டும் போல இருந்தது.

   ஆனால் காருண்யா முதத்தை திருப்பி செல்வதையும் அறிந்ததால் சற்று நேரம் கழித்து பேசுவது சிறந்ததாக கருதினான்.

  அதனால் வேலையில் கவனத்தை செலுத்தினான்.

  மதியம் உணவுண்ணும் வேளையில் தான் தனிமை கிடைத்தது.
 
  “வீட்ல என்ன சொல்லி பிரச்சனையாகுது காரு” என்று கேட்க,  “இன்னும் என்னாகணும்? தலைப்பாடா சொன்னேன் வேலை முடிஞ்சதும் போறேன்னு. நீங்க தான் ஷாலினி ஜெயந்த் இருக்கான்னு உட்கார வச்சேள். இப்ப பாருங்கோ.. என்னை நேர்ல வந்து பார்க்க சர்பிரைஸா வந்தா. ஹாஸ்டலில் நான் வரலை என்றதும் என் ரூம்மேட் ராகவியிடம் ஆபிஸ்ல இருக்கறதை கேட்டுண்டு நேரா இங்க வந்துட்டா… இங்க நானும் நீங்களும் இருக்கறதை தப்பாவே புரிஞ்சுண்டா. அவா மாமாவுக்கு என்னை ஏற்கனவே பிடிக்கலையாம். இதுல ராத்தகரி நேரம் ஆம்பளையோட சுத்தறேன்னு என்னை அசிங்கப்படுத்தி பேசியிருக்கா. அப்பாவும் பாட்டியும் காத்தாலயே இடியை கேட்டு அதிர்ந்து உட்கார்ந்திருக்கா.
  அப்பா இப்ப ஹரன் வீட்டுக்கு போயிருக்கார். விவாஹம் நடக்குமோ இல்லையோனு பாட்டி பயந்து சாவறா” என்று வெடிக்க, “ஏய் இதுல என்ன தப்பு கண்டுபிடிச்சாராம். ஆளும் மண்டையும். அந்த அரை மண்டையன் உன்னோட பேசினான்ல அவனுக்கு தெரியாதா? ஆபிஸ்ல கொலீக் கூட ஒர்க் பண்ணி..” என்றவனை இடைவெட்டி, “யாரை அரைமண்டையன்னு சொன்னேள்?” என்றாள் காருண்யா.
 
  ‘இரண்டு அரைமண்டையன் இருந்ததால் கேட்கறாளே’ என்றவன், ‘ஹரனை சொன்னதா சொன்னா ருத்ராதேவியா அவதாரம் எடுப்பா.’ என்று “அதான்… அந்த பெரியவர்” என்று மாற்றி உரைத்திட, “பொய் சொல்லாதேள்… நீங்க ஹரனை சொன்னேள்.” என்று கோபப்பட்டாள்.

  ராவணனோ பின்னங்கழுத்தை தடவி, “இப்ப ரொம்ப முக்கியம். அங்க யார் உன்ன தப்பா எடுத்துக்கிட்டா? தப்பா எடுத்துக்கற அளவு இங்க என்ன நடந்தது?” என்று எரிச்சலில் கேட்டான்.

  “என்ன நடந்ததுனு கேட்கறேள். அவா பார்க்கறச்ச நீங்க என் தோளை பிடிச்சேள்.” என்று குற்றம் சுமத்தும் விதமாக பேச, ராவணனுக்கும் கோபம் உண்டானது.

“லூசா நீ… நீ எலியை பார்த்து பயந்து ஸ்கிட் ஆன. அந்த நேரம் கீழே விழாம இருக்க தோளில் கைவைச்சி நிறுத்தினேன். இதை போய்….

  இதுல அவங்க தப்பா யோசிக்கறது விடு. நீயே குற்றம் சுமத்துற மாதிரி என்னை பிளேம் பண்ணற” என்றான்.

  “என்ன ஆச்சுன்னு கேட்டது குற்றமா? ஸப்பா” என்று இரண்டெட்டு நகர்ந்தான்.

  மனம் தாளாமல் திரும்பி, “அவங்க தப்பா எடுத்துக்கிட்டு ஏதாவது பேசினா சொல்லு. நான் ஹரனிடம் எக்ஸ்பிளைன் பண்ணறேன். இதனால எல்லாம் கல்யாணம் தடைப்படாது. எடுத்து சொன்னா புரிஞ்சுப்பாங்க‌. அங்கிள் தான் போயிருப்பதா சொன்னியே. சரியாகிடும்” என்று கூற, கோபமாய் காருண்யா அவ்விடம் விட்டு வேலை செய்ய சென்றாள்.

  ராவணனுக்கு ‘இதென்னடா வம்பா போச்சு’ என்று தோன்றினாலும், இதனால் மட்டும் திருமணம் தடைப்பெறாது. எல்லாம் சரியாகிவிடுமென நம்பினான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
 
 

6 thoughts on “ஐயங்காரு வீட்டு அழகே-8”

    1. M. Sarathi Rio

      ஐயங்காரு வீட்டு அழகே..!
      எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
      (அத்தியாயம் – 8)

      என்னை கேட்டா… அப்படிப்பட்ட சம்பந்தமே வேணாம்பேன்.
      ராவணா சொன்ன மாதிரி ரெண்டுமே அரை மண்டையனுங்கத்தான்…
      இதுல உண்மையை சொன்னா
      காருண்யாக்கு மூக்குக்கு மேல கோபம் வருது. இன்னும் சொல்லப் போனா, இவளே ஒரு அரை மென்ட்டல் தான் என்பேன். அந்த பெரியவரு வயசுக்கேத்த மாதிரியா பேசறாரு, அத்தனை பெரிய வார்த்தையை ஈஸியா விட்டுட்டு போறாரு, அதை கேட்டுட்டு இந்த லூசு வேற ஆமாம் சாமி போடுது. ராவணன் என்ன அவ கையை பிடிச்சு இழுத்தானா, கட்டி பிடிச்சானா, கிஸ்ஸடிச்சானா, இல்லை ரூம் போட்டானா…? அப்படியே ரூம் போடணும்ன்னாலும், ஆபீஸ் அவர்ஸ்ல தான் ரூம் போடணுமா ? இல்லை ஆபீஸ்ல தான் ரெண்டு பேரும் ஜாலி பண்ணனுமா…? ஏன் வெளியே எங்கேயும் இடமில்லையா அதுக்கு…? அந்த பெருசு தான் அப்படி பேசிச்சின்னா, அதை ஏன் இந்த சிறுசு வாய் மூடி கேட்குது, இந்த புரொதலுக்குத் தான் ரெண்டு மாசமா காருண்யா கூட போன்ல கடலை போட்டானாமாம்… சரியான கூமுட்டை, அபிஷ்டூ
      இவனையெல்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்டு குப்பை கொட்டணும்ன்னு ஒண்ணும் தலையெழுத்தில்லை. அதுக்கு பேசாம உறியில தொங்கிடலாம். அந்த ஹரன் தான் அரக்கத்தனமா பேசினா, அதைக்கேட்டு இந்த அரக்கியும்
      ஜிங்கு ஜிங்குன்னு ஆடறதைப் பார்த்தா ஆச்சரியமா இருக்குது போங்க.

      😀😀😀
      CRVS (or) CRVS 2797

  1. Raavanan mela kobapadurathu la enna niyam .karunya indha koba tha andha aramandaiyan kita kattu help pannathu ah thappu ah purinchikitu atha vachi prachanai panna yaru enna panrathu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *