Skip to content
Home » காதலை கண்ட நொடி -8

காதலை கண்ட நொடி -8

அத்தியாயம் – 8

அவளை அடித்துவிட்டானே தவிர அவனுக்கு மனதே பொறுக்கவில்லை.. அவர்களை வேடிக்கை பார்த்தவர்கள் கலைந்து சென்றனர்..அந்நேரம் தன் நண்பனை காணாமல் தேடி வந்தவன் அவனை பார்த்துவிட்டு அருகில் வர.. இதுவரை எந்த பெண்ணிடமும் காதலாக நெருங்காதவனுக்கு தன்னவளுக்கு தன் காதலை புரியவைக்கவும் தெரியவில்லை..

அந்த இயலாமை கோபமாக மாற..அங்கிருந்த கம்பியில் தன் கைகளை ஓங்கி அடித்தான் அதில் அவன் கையில் அடிப்பட்டு ரத்தம் வந்ததை பார்த்து அதிர்ந்த ஜோனஸ் 

“டேய்.. என்னடா ஆச்சு?” என்றபடி அவனது கையை பிடித்து பார்க்க அதை இழுத்துக்கொண்டவன்..

“கொஞ்சநேரம் எதும் கேட்காதடா..வெயிட்” என்று கூற

“சரிடா இங்க உட்காரு.. ரத்தம் நிறைய வருது” என்றபடி அவனை அங்கேயே அமரவைத்து தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்த கர்ஃசிப்பை எடுத்து அவனது கையில் கட்ட அவர்கள் முன்னே வந்து நின்றான் கெளதம்.. அவசரமாக ஓடிவந்ததில் மூச்சு வாங்க நின்றான்..

தன் தோழியை இழுத்துச்சென்றவன் அருகிலேயே இருந்த பார்க்கில் அவளை அமரவைத்துவிட்டு..

“இருடி பைக் கீ அங்கேயே விட்டுட்டு வந்துட்டேன்.. இதோ தேடி எடுத்துட்டு வர்றேன்” என்று விட்டு ஓடினான்..

அவளோ அவனைபற்றியே யோசித்தபடி அமர்ந்து இருந்தாள்..

ஓடியவன் நேரே இஷான் இருப்பிடம் தேடி அவன் முன்னே வந்து நின்றான்..

அவனை நிமிர்ந்து இஷான் பார்க்க..

“நீங்க யாரு? எதுக்காக இங்கே வந்தீங்க? ஏன் கயல் பின்னாடி லவ் லவ்னு சுத்துறீங்க அதும் அவளை இப்படி கோவப்படுற அளவுக்கும்.. அவளை அடிக்கிற அளவுக்கும் உங்களுக்கு யார் சார் உரிமை கொடுத்தது?” என்று சரமாரியாக கேள்வி கேட்க.. அவனை ஆழ்ந்து பார்த்தான் இஷான்.. அவனது பார்வை இவனுக்கு ஏதோ உணர்த்த அமைதியாக

“சொல்லுங்க ப்ளீஸ்” என்று கூற..

“இந்த ஜென்மத்தில் எனக்கு வைஃப்னு ஒரு பொண்ணு இருக்கான்னா அது என் விழி தான்.. என் அம்மாக்கு நான் ப்ராமிஸ் பண்ணி இருக்கேன் கெளதம்” என்று கூற அதிர்ந்த கெளதம்

“சார் என்ன சொல்றீங்க?” என்று கேட்க..எல்லாவற்றையும் அவனிடம் கூறினான் இஷான் அவன் கூறி முடிக்க பயங்கரமாக யோசித்த கெளதம்..

“நீங்க நினைக்கிறது நடக்கும்னு எனக்கு தோணல சார் ஆனா இதெல்லாம் நடந்தா முதல்ல சந்தோஷம் படுற ஆள் நான்தான்..நான் ஏன் இத சொல்றேன்னா.. அவ..சொன்ன கஷ்டங்கள் அப்படிசார்..அதுலயும் அவங்க அம்மா ரொம்ப கோவமா இருக்காங்க..நீங்க நிறைய கஷ்டப்படனும் சார் இதுக்கு..ஆனா நிச்சயம் என்னால முடிஞ்ச ஹெல்ப் நான் செய்யறேன் சார்” என்று கூறினான்..

“தேங்க்ஸ் கெளதம்.. உங்க ப்ரண்ட்ட சமாதானம் செய்ங்க ப்ளீஸ்..” என்றுவிட்டு அவனிடம் ஐயாயிரம் ரூபாயை நீட்டினான்..

“சார் என்ன இப்படி எங்கள காசு கொடுத்து கேவலப்படுத்துறீங்க?” என்று கோவமாய் கேட்க..

அதில் லேசாக சிரித்தவன்..

“அவகூட இருக்கனால அவள மாதிரியே ஆகிட்டீங்களா? இது என் பொண்டாட்டியோட காசுதான்..நீங்க ஏடிஎம் ல வித் ட்ரா பண்ண பணம்..ஆக்சுவலி தட் டே மிஸ்டேக்ஸ் ஆர் மைன் சோ..ப்ளீஸ்..ஐ நோ ஹர் சுட்சுவேஷன்.. வேணாம் சொல்லாதீங்க பிகாஸ் ஷீ ஈஸ் மை ரெஸ்பான்ஸிபிலிட்டி..” என்று கூற..அதை வாங்கியவன்..

“நீங்க லவ்வர்னு சொல்லி இருந்தா கண்டிப்பா வாங்கி இருக்க மாட்டேன் சார்.. நீங்க அவள பொண்டாட்டினு சொன்னீங்க பாருங்க அதுல தெரியுது சார் உங்களோட உரிமையும் உங்க குணமும்..என் கயல் ரொம்ப லக்கி சார்” என்றான் கெளதம்..

அதைகேட்டவனுக்கு லேசாக வெட்கம் வர அதை தன் அடர்ந்த சிகையை கோதி அடக்கியபடி புன்னகைத்தான்..

“விழியோட லவ் எனக்கு கிடைச்சா நான்தான் லக்கி கெளதம்..ஹர் வாய்ஸ் ஈஸ் மெஸ்மெரைஸிங் மீ” என்றான் ரசனையோடு..அப்போது தான் அவனது கையை பார்த்தவன்..

“சார் அடிபட்டு இருக்கு” என்று அதிர

“நல்லா கேளுங்க கெளதம்.. உங்க ப்ரண்ட்ட அடிச்சுட்டானாம் அதான் அவன் கையை அவனே காயப்படுத்தி வெச்சு இருக்கான்” என்று ஜோனஸ் கூற.. அவனை முறைத்தபடி

“ஜோனி” என்றான் கோவமாக..

“ஏன் சார் இதெல்லாம் ஓவரா இல்ல.. உங்க லவ்வ ப்ரூப் பன்ன வேற வழியா இல்ல., இப்படி உங்களை நீங்களே காயப்படுத்தி தான் நிரூபிக்கனுமா?அப்படி பார்த்தா அவளும்தான் உங்கள அடிச்சா” என்று கோவமாக கேட்டான் கெளதம்..

“என்ன அடிச்சாளா?” என்று ஜோனஸ் கேட்க அவனை முறைத்தவன் இவனிடம் திரும்பி

“இல்ல கெளதம்.. அந்த டைம் என் கோவம் அவுட் ஆஃப் கன்ட்ரோல் ஆகிடுச்சு..அவ அடிச்சது சரிதான் கெளதம்.. பிகாஸ் ஷீ ரெஸ்பெக்ட் ஹர் இண்டியன் கல்ச்சர்..எனக்கு அது பத்தி ரொம்ப தெரியாது..சோ ஷீ டிட் கரெக்ட்” என்று கூற..

“அநியாயத்துக்கு அவளுக்கு சப்போர்ட் பன்றீங்க” என்று கூற அதில் சிரித்தவன்..

“என் வைஃப்க்கு நான்தான் சப்போர்ட் பண்ணனும்” என்று கூற 

“யப்பா டேய்..முடியல என்னால..நீ லவ் பண்ணாலும் பண்ண இப்படி என்ன கொல்லாதடா..கெளதம் நீங்க போங்க அங்க கயல் வெயிட் பண்ணுவாங்க..” என்று கூற..

“ஆமா சார்..பை சார்” என்றுவிட்டு ஓடினான் கெளதம்..தன் தோழியின் திட்டம் பற்றி அவனுக்கு சொல்ல விருப்பம் இல்ல..அவனுக்கு தோன்றியது ஒன்றே ஒன்று தான் இவரோடு தான் தன் தோழியின் வாழ்க்கை நன்றாக இருக்கும்..அதில் அவளது ப்ளானை சொல்லி அவளது வாழ்க்கையை அவனே பாழாக்க விரும்பவில்லை..

“இதெல்லாம் உனக்கே ஓவரா இல்ல? அந்த பொண்ணு கழுவி ஊத்தி இருக்கு..அடிச்சு வேற இருக்கு ஆனா நீ ஈஈனு இளிச்சுட்டு இருக்க..என்னா மேக்டா நீ” என்று கேட்க..

“பிரிட்டிஷ் இண்டியன் கொலாபுரேஷன் மேக்டா” என்று கூறியவனை பார்த்து தலையில் அடித்து கொண்டவன்..

“உன்ன அவ அடிச்சதுல தப்பே இல்ல..வா..கைக்கு மருந்து போடனும்” என்று அவனை இழுத்துக்கொண்டு போனான்..

அங்கோ அவனைபற்றியே யோசித்தவாறு அமர்ந்து இருந்தாள் கயல், கண்கள் கலங்கி கன்னம் சிவந்து இருந்தது..

‘யாரு இவன்.. எதுக்கு என்னை லவ் பண்றேன்னு சுத்துறான்..அவனை அடிச்சுட்டேனே..அதுக்கு ஏதாவது பழி வாங்குவானா? வேலையை விட்டு எடுத்துடுவானா?’என்று பல்வேறு விதமாக எண்ணியவளின் எண்ணம் கடைசியாக தாய் தந்தையிடம் வந்து நின்றது..

‘இல்ல..இல்ல..நான் என் அப்பா அம்மாக்கு நியாயம் செஞ்சே ஆகணும்’என்று மனதை நிலைபடுத்தியவள் கண்களை துடைத்தபடி அமர்ந்தவள் தன் நண்பனை தேட அப்போது தான் அவன் வந்து கொண்டு இருந்தான்..

“கீ கிடைச்சுட்டுடி வா போலாம்” என்றபடி அவளை அழைக்க..அவன் கைபிடித்து தடுத்தவள்..

“கெள அது வந்து..அந்த ஆளு” என்றபடி அவள் நடந்ததை கூற..லேசாக சிரித்தவன்

“நீ அவர லவ் பண்றியா கயல்?” என்று கேட்க அதிர்ந்தவள்..

“இல்லடா..இல்ல..உனக்கு தான் என்னோட ப்ளான் தெரியும்ல” என்று கூற

“உன் ப்ளான்லாம் தெரியும் பேபி.. ஆனா அதுக்காக ஒரு உண்மையான லவ்வ நீ அவமதிக்கறது சரியானு யோசி பேபி அவங்கள பழிவாங்க ஆயிரம் வழி இருக்கு அதுக்கு உன் வாழ்க்கை தான் பிராதானமா? அவங்கள பழி வாங்குறேன்னு நீ உன் லைஃப்ப கெடுத்துகாதேடா.. அவரு ஃபாரின்காரா இருந்தா கூட நல்லவரா தெரியுறார்..யோசிடா” என்றுவிட்டு அமைதியாக அவளை அழைத்துக்கொண்டு கிளம்பினான்..இதற்குமேல் சொல்ல எதுவும் இல்லை என்பதுபோல..

ஆனால் மறுநாளிலேயே அவள் காதல் வயப்பட்டு இருப்பாள் என்பதை அவளுக்கு யார் சொல்வது?

வீட்டிற்கு சென்றவள் சிவந்த கன்னத்தை தாய் தந்தையிடமிருந்து மறைக்க நேரே ரூமிற்குள் அடைந்து கொண்டாள்..

மறுநாள் தன் வேலை போயிருக்கும் என எண்ணி வந்தவளுக்கு வேலை ரெடியாக இருந்தது..அதில் ஆச்சரியமானவள் கண்கள் ப்ரோகிராம் போது தினம் தன்னை வந்து ரசிக்கும் அவனை எதிர்பார்த்து காத்திருந்தது..அவளை இடையூறு செய்யாமல் தூரமிருந்து அவளை பார்த்துவிட்டு அவள் தன்னை காணும்போது கண்டுக்காமல் போய்விடுவான்..அவளது கண்கள் அவன்மேல் ஏக்கமாய் தொட்டு மீளும்..

இப்படியே ஒருமாதம் சென்றிருக்க..அன்று அவள் ப்ரோகிராம் முடிந்ததும் ஓரு மீட்டிங்..வீடியோ கான்ப்ரன்ஸ்ஸில் என்று அறிக்கை வர..எல்லோரும் அங்கே ஆஜராகி இருந்தனர்..

சற்று நேரத்தில் வீடியோமூலம் பேச ஆரம்பித்தார் ஸ்டீவ்..

“ஹாய் எவ்ரிபடி..ஹவ் ஆர் யூ ஆல்?” என்று கேட்க எல்லாரும் ஒன்றாக 

“ஃபைன் சார்..அபெளட் யூ சார்?” என்றனர்..அதில் லேசாக சிரித்தவர்

“Yeah I’m good..Let us come to the point..You all known your manager now?”(நான் நல்லா இருக்கேன்..இப்போது விஷயத்திற்கு வரேன்..உங்க எல்லாருக்கும் மேனேஜரை தெரிந்து இருக்கும்னு நினைக்கிறேன்) என்று கேட்க..அதுவரை எந்த விதமான அலட்டலும் இல்லாமல் நின்று கொண்டு இருந்தவள் இஷானை பற்றிய பேச்சு எனவும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தாள்..அதற்குள் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவரின் பார்வை அவளை கடந்து தன் மகனிடம் வந்து நின்றது..

“எஸ் சார்..ஹி ஈஸ் வெரி நைஸ் பர்சன்” என்று அவனுக்கு ஹெட் ஆஃப் தி மேனேஜர் கூற..

“இஸ் இட்.. ஓஓ..ஹி டிட் வாட் ஹி செட் ட்டூ மீ..லெட் ஐ இன்ட்ரோடியூஸ் மை டியர் சன்..மிஸ்டர்.இஷான் ஸ்டீவ்” என்று கூற..ஜோனஸ் கெளதம் தவிர அனைவரும் அதிர்ச்சியாய் பார்த்தனர்..

இங்கே கயல்விழிக்கோ பேரதிர்ச்சி..

7 thoughts on “காதலை கண்ட நொடி -8”

  1. CRVS2797

    ஏன்னா, கயலே அந்த ஓனரோட பையனை காதலிச்சு கல்யாணம் பண்ணி ஏமாத்த தான் நினைச்சா.. கரெக்ட்டா…?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *