Skip to content
Home » கானல் பொய்கை 15

கானல் பொய்கை 15

பாரதிக்கும் பாலாவுக்கும் பிரியம்வதா ‘ஃபேமிலி தெரபியைத்’ தொடர்ந்து அளித்து வந்தார். அதனால் பாரதியைப் புரிந்துகொள்வது அவனுக்கு எளிமையாகிவிட அந்த பாதிப்பின் போது அவளது கவனத்தை மடைமாற்றி குற்றவுணர்ச்சிக்குள் அவள் விழாமல் இருக்கும் பொறுப்பை அவன் ஏற்றுக்கொண்டான்.

கூடவே தங்களுக்குள் இருக்கும் அன்னியோன்யத்தை இன்னும் அதிகரித்துக்கொண்டான் அவன். அவளது குற்றவுணர்ச்சியைக் காணாமல் ஆக்குவதே அவனது நெருக்கம் தான்.

பாரதிக்குத் தனியாக சைக்கோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டது. மனரீதியான குறைபாடுகளுக்கு சிகிச்சை அளித்தவுடனே குணமாகிவிடவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. முன்னேற்றம் படிப்படியாகத் தான் நடந்தேறும். சில பாதிப்புக்கு எல்லாம் ஆண்டுக்கணக்கில் மருந்து சாப்பிட்டுத் தெரபிக்குச் செல்பவர்களும் இருக்கிறார்கள்.

அவர்களது மனரீதியான பாதிப்பைக் குறைப்பதில் அவர்களைச் சுற்றியுள்ள நபர்களின் பங்கும் குறிப்பிடத்தக்கது. மன அழுத்தத்திற்கு மனநல மருத்துவரை காண போய்விட்டாலே ‘பைத்தியம்’ என பட்டம் கொடுத்துவிடும் இந்திய சமுதாயம். அதிலும் பாரதியைப் போல பிரச்சனை உள்ளவர்களின் நிலை மிகவும் மோசம்.

‘Compulsive Sexual Behaviour Disorder’ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்காக அந்நோயிலிருந்து குணமாகி இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அனைவரும் இணைந்து இணையத்தில் கம்யூனிட்டி வலைதளம் ஒன்றை நடத்தி வந்தார்கள். அதில் அனைவரும் தங்களது அனுபவத்தைப் பகிர்வார்கள். குணமடைந்தவர்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் உரையாட அவ்வபோது வெப்பைனார் நடத்துவதுண்டு. பிரபலமான மனோதத்துவ மருத்துவரை அழைத்து வந்து வெப்பைனாரில் அவர்களுக்குக் கவுன்சலிங் கொடுக்க சொல்வது, மருத்துவரை அணுக முடியாத நிலையில் இருப்பவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குச் சிகிச்சைக்கு உதவுவது என பல நல்ல காரியங்களை அவர்கள் செய்து வருகிறார்கள்.

அந்தக் கம்யூனிட்டியின் பெயர் ‘ஃபீனிக்ஸ் ஆர்கனிசேசன்’. பிரியம்வதாவின் அறிவுறுத்தலின் பெயரில் அந்தக் கம்யூனிட்டியில் பதிவு செய்து பயனராக இணைந்திருக்கிறாள் பாரதி.

அங்கே பகிரப்படும் இதர நபர்களின் அனுபவத்தைக் கேட்டுத் தன்னுடன் ஒப்பிட்டுப் பார்ப்பாள் அவள். அப்போதெல்லாம் மற்றவர்களின் நிலைக்குத் தனது நிலை பரவாயில்லை என்றே தோன்றும். ஏனென்றால் இந்நோயால் பாதிக்கப்பட்ட ஒரு மனைவியைக் கணவர் விலக்கி வைத்த அனுபவமெல்லாம் அங்கே பகிரப்பட்டது.

அவர்களோடு எல்லாம் ஒப்பிடும்போது தன் கணவன் எவ்வளவு நல்லவன்! நெக்குருகிப்போன பாரதி பாலாவிடம் அந்த கம்யூனிட்டி சைட்டில் படித்ததை வழக்கமாகப் பகிர்வதைப் போல அன்றும் பகிர்ந்தாள்.

அது கட்டாய பாலியல் நடத்தை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஒரு கல்லூரி மாணவியின் அனுபவம். அந்த அனுபவத்தைப் பகிர்ந்து முடித்ததும் பாரதியின் கண்களில் கண்ணீர். குரல் கூட உடைந்து போய்விட்டது அவளுக்கு.

“அவ காலேஜ் படிக்குற பொண்ணுங்க… பதினெட்டு வயஸ்யு தான் ஆகுது… சின்ன வயசுல சொந்தக்கார் மாமா ஒருத்தரால செக்சுவலி அப்யூஸ் பண்ணப்பட்டு அந்த ட்ராமாவால கம்பல்சிவ் செக்சுவல் டிஸ்சார்டரால பாதிக்கப்பட்டவ அந்தப் பொண்ணு.. அவ காதலிச்சவனை நம்பி தன்னோட பிரச்சனைய சொல்லிருக்கா… நியாயப்படி அவன் அவளுக்குச் சப்போர்ட்டா இருந்திருக்கணும்… ஆனா அந்த ராஸ்கல்… ப்ச்.. அதை பயன்படுத்தி அவளை அவனோட ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து…” முடிக்க முடியாமல் அமைதியாகிவிட்டாள். கண்ணீர் மட்டும் வருவது நிற்கவில்லை.

பாலா அவளைத் தனது தோளில் சாய்த்துக்கொண்டான். அழாதே என்று ஆதுரமாக உரைத்து அவளது கூந்தலை நீவிவிட்டான்.

“அவளால அவங்களைத் தடுக்கவும் முடியலயாம்… என் மனசு இதுல்லாம் தப்புனு சொன்னாலும் என்னோட உடம்பு என் கூட ஒத்துழைக்கலனு அவ போஸ்ட்ல போட்டிருக்கா… இது எப்பேர்ப்பட்ட கொடுமை… என்னால அதெல்லாம் படிச்சதும் தாங்க முடியல”

“லீவ் இட் குட்டிமா… இப்ப அவங்களுக்கு உங்க கம்யூனிட்டில இருக்குற எல்லாரும் சப்போர்ட்டா இருக்கிங்க…. சீக்கிரம் இந்த ட்ராமால இருந்து அவங்க வெளிய வந்துடுவாங்க” என்றான் இதமாக.

பாரதி தலையை உயர்த்தி அவனது கண்களை ஆழ்ந்து நோக்கினாள்.

“நீங்க என்னைப் புரிஞ்சிக்கிட்டிங்க… என் பயத்தை, என்னோட குற்றவுணர்ச்சிய புரிஞ்சிக்கிட்டிங்க… கோவப்பட்டாலும் நான் என்னைக் காயப்படுத்திக்கிறதை பாத்ததும் பதறிப்போய் என் பக்கம் உள்ள நியாயத்தை யோசிச்சிங்க… உங்களை மாதிரி அந்தப் பையன் இருந்திருக்கலாம்” என்றாள் வேதனையோடு.

பாரதி இரு கரங்களாலும் அவளைச் சுற்றி வளைத்து அணைத்து உச்சி முகர்ந்தான்.

“நீ அதையே பேசி பேசி ஸ்ட்ரெஸ் ஆகாத குட்டிமா… உனக்கு அந்தப் பொண்ணை நினைச்சு கவலைனா எனக்கு என் பொண்டாட்டிய நினைச்சு கவலை… அவ முகத்துல சிரிப்பைப் பாக்கணும்ங்கிற ஏக்கம்… என் ஏக்கத்தைப் புரிஞ்சிக்கடி” என்று அவன் கெஞ்சியதும் மெதுவாக மற்ற விசயங்களை மறந்து இயல்புக்கு வந்தாள்.

அடுத்து ‘வெர்சுவல் குரு’ செயலியில் தன்னிடம் படிக்கும் மாணவர்களைப் பற்றி அவனிடம் பேச ஆரம்பித்தாள். பின்னர் வழக்கம் போல இருவரும் பேசிக்கொண்டே வீட்டிலிருந்த ஒவ்வொரு வேலையையும் பார்க்க ஆரம்பித்தார்கள்

இரவுணவுக்குப் பிறகு நெட்ஃபிளிக்சில் ஒரு சீரீசை போட்டு விட்டு பாப்கார்னோடு அமர்ந்தார்கள். அதுவும் காதல் காட்சிகள் நிறைந்த சீரீஸ் தான். ஆனால் பாரதியின் உடலும் மனமும் முன்பு போல அலைபாயவில்லை.

பிரியம்வதாவின் சிகிச்சை கொஞ்சம் கொஞ்சமாக அவளை இயல்பாக மாற்ற ஆரம்பித்திருந்தது. தன்னால் இவ்வளவு இயல்பாக காதல் காட்சிகளைப் பார்க்க முடிந்ததும் பாரதிக்கு மகிழ்ச்சியில் கண்ணீரே வந்துவிட்டது.

அவளால் அவளையே நம்ப முடியவில்லை. அக்கணம் அவளது மனம் நன்றியுணர்ச்சியொடு பிரியம்வதாவை நினைத்துக்கொண்டது.

அவரது வேலை அதுதானே என்று மற்றவர்களை போல அவளால் யோசிக்க முடியவில்லை. கணவன் கூட அவளை அருவருப்போடு பார்த்த போது தனக்கு நம்பிக்கை கொடுத்தவர் அல்லவா!

அவரை விடு, என்னைப் பற்றி யோசி என்று அவளது தோளில் அழுத்தம் கொடுத்த பாலாவின் கரம் சொல்லவும் பார்வையைத் தொலைகாட்சியில் பதித்தாள் பாரதி.

அதில் காதலர்களின் முத்த காட்சியைப் பார்த்ததும் விதிர்விதிர்த்துப் போனாள். ஆனால் அவள் பயந்தபடி வேறொன்றும் அவளுக்குள் நிகழவில்லை. மாறாய் ஏதோ வித்தியாசமாக உறுத்தவும் கவனத்தைக் கணவன் பக்கம் திருப்பியவள் பாலாவின் கண்களில் தெரிந்த தாபத்தில் உறைந்து போனாள்.

“என்னங்க?”

“குட்டிமா..” அவனது குரல் கரகரத்தது.

கரங்கள் தொலைகாட்சியை அணைத்துவிட்டு அவளை அணைக்க ராஜாளியின் இறக்கைகளைப் போல விரிந்த தருணத்தில் பாரதியின் பார்வை கனிந்தது.

“ப்ளீஸ்டி… நான் பேசுனதை மனசுல வச்சுக்கிட்டு மனுசனை அவஸ்தைல தள்ளாத… உன்னைப் பக்கத்துல வச்சுக்கிட்டு நல்லவன் வேசம் போடுறது கஷ்டமா இருக்கு” என்று காதுகளில் அவன் கிசுகிசுக்கவும் அவளது இதயத்தில் தடதடவென இரயில் வண்டி ஓட ஆரம்பித்தது.

“நான்… நானா உங்களை…” என ஆரம்பித்தவள் நாணத்தில் உதடு கடித்து முகம் சிவக்க அமைதியாகிவிட்டாள்.

பாலாவின் இதழோரம் சிரிப்பில் துடித்தது. மனைவியின் அருகாமையில் காய்ச்சல் கண்டது போல கொதித்த மேனியோ அவளை அள்ளியணைத்தே ஆகவேண்டுமென அவனுக்குக் கட்டளையிட்டது.

பாரதியும் அவனது கண்பார்வைக்குப் பணிந்திட மெல்லியலாளை மென்மையாகத் தன் வன்கரங்களில் ஏந்திக்கொண்டவன் படுக்கையறை சாம்ராஜ்ஜியத்துக்குள் பிரவேசித்தான்.

இத்தனை நாட்கள் அவர்களது விலகலில் நொந்து போயிருந்த மஞ்சம் இன்று அவர்களின் மையலில் திணறப்போவதை அறியாமல் பாரதியை மெதுவாக உள்வாங்கிக்கொண்டது.

பாலா மனையாளை மூச்சு வாங்க பார்த்தவன் இத்தனை நாட்கள் தாபத்தையும் ஒரே நாளில் தீர்ப்பவனாக மெல்ல மெல்ல அவளுக்குள் மூழ்கத் துவங்கினான்.

இதற்கு முன்னர் வாலிபத்தின் இயல்பாகவும், ஹார்மோன்களின் விளைவாகவும் மட்டுமே இணைந்தவர்கள் அன்று மனமொத்து இணைந்தார்கள்.

திருமணத்திலும் தாம்பத்தியத்திலும் காதல் மட்டும் இருந்தாலே உறவு பிணைக்கப்பட்டுவிடுமென எண்ணுவது அபத்தம். காதலற்ற உறவுகளும் வேறு சில காரணங்களுக்காக காலம் முழுவதும் கடனே என்று பிணைக்கப்பட்டு நாட்களை நகர்த்திய வரலாறு எல்லாம் நம்முடைய முந்தைய தலைமுறை அறியும்.

காதலோடு இணைந்து நம்பிக்கையும் புரிதலும் கூடும் போது தான் தாம்பத்தியம் இனிக்கும். திருமணமும் அர்த்தத்தோடு நிலைக்கும்.

பாலாவும் பாரதியும் இம்முறை ஒருவரை ஒருவர் தீர்க்கமாக நம்பி, ஆழ்ந்த புரிதலுடன் இணைந்தார்கள்.

கடலென பொங்கிய காமத்தில் காதலும் கலந்தது. அழகான இரவுப்பொழுதை பேரழகாக்கி அர்த்தம் கொடுத்தக் கூடலுடன் அவர்களின் இதயங்களும் இணைந்தன இனி பிரிக்க முடியாதவாறு.

மறுநாள் விடியலில் எழுந்தபோது பாரதியின் முகத்தில் யோசனையின் ரேகைகள்! ஆழ்ந்த சிந்தனைவயப்பட்டவளின் புருவத்தை நீவின பாலாவின் விரல்கள்.

“என்ன யோசிக்குற குட்டிமா?” என்றவனின் கரம் முகவடிவை அளந்து கழுத்தை அடைந்தபோதே பட்டென அடித்த பாரதி “தூங்குற மாதிரி நடிக்கிறிங்களா?” என்று கொஞ்சலாகக் கேட்டுவிட்டு அவனது அணைப்புக்குள் அடங்கிக்கொண்டாள்.

பாலா அவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டு உச்சி முகர்ந்ததும் சிந்தனை வலைக்குள் தள்ளப்பட்டவளாக அவனிடம் மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள்.

“எனக்குள்ள கொஞ்சநாளா ஒரு பயம் இருக்குங்க” என்றாள் பாரதி.

பாலா அவளது வதனத்தை உற்று நோக்கினான். அங்கே ஏதோ தவிப்பு! கூடவே அவளது குரலில் கவலையும் பயமும் கொட்டிக் கிடந்தன. கண்களிலோ தயக்கம்! எதை நினைத்து அஞ்சுகிறாள் என்று பாலாவுக்குப் புரியவில்லை.

“எதை நினைச்சு பயப்படுற நீ? ஒருவேளை நேத்து நைட் மறுபடியும்…” என்று அவன் நிறுத்த பாரதிக்கு அப்போது தான் புத்தியில் உறைத்தது முந்தைய நாளிரவு தாம்பத்தியம் முடிந்த பிற்பாடு தனக்குள் எவ்வித உணர்ச்சிக்கொந்தளிப்பும் ஏற்படவில்லை என்பது. எந்தவித அலைபாய்தலுமின்றி பாலாவின் புஜத்தில் தலை வைத்து நீண்டநாட்களுக்குப் பின்னர் நன்றாக உறங்கினாள்.

அப்படி என்றால் அவள் குணமாகிவிட்டாளா? ஆச்சரியத்துடன் கணவனைப் பார்த்தாள் பாரதி. பாலாவுக்கும் அவளது பார்வையின் அர்த்தம் புரிந்தது. அவனது இதழிலும் குறுஞ்சிரிப்பு முகிழ்த்தது.

“வாவ்! மை குட்டிமா இஸ் பேக்” என்றவன் சந்தோசத்தை பாரதியின் இதழில் முத்தமெனும் கவிதையை எழுதிக் கொண்டாடித் தீர்த்தான்.

பாரதிக்கும் அதற்கு பின்னர் தனது அச்சமென்ன என்பதை அவனிடம் விளக்கவேண்டுமென ஞாபகமே இல்லை.

திகட்ட திகட்ட காதலில் முக்குளித்துத் தீர்த்தவர்கள் ஒன்றாய் குளித்து உடைமாற்றி அன்றைய ஞாயிறை மையலோடு ஆரம்பித்திருந்தார்கள்.

“இன்னைக்கு நீ ப்ரேக்ஃபாஸ்ட் செய்யவேண்டாம் குட்டிமா… நான் ஸ்விகில ஆர்டர் போட்டுடுறேன்… ஈவ்னிங் டாக்டர் கிட்ட போகணும்… சோ டின்னரும் வெளிய பாத்துக்கலாம்” என்றான் பாலா.

அப்போது மீண்டும் பாரதிக்குத் தனது பயம் நினைவுக்கு வந்தது. உற்சாகமாக இருக்கும் கணவனிடம் அதைச் சொல்லி அவனது சந்தோசத்தைக் குலைக்கும் எண்ணம் அவளுக்கு இல்லை.

மாலையில் தெரபிக்குச் செல்லுமிடத்தில் பிரியம்வதாவிடம் கேட்டுத் தெளியவேண்டுமென தீர்மானித்தவள் சமைக்கிறேன் என பாலா அடித்த லூட்டியில் மெதுவாக கலக்கம் கலைந்து அவனோடு ஒன்றிப்போனாள்.

அன்றைய தினத்தின் உற்சாகம் சிறிதும் குறையாமல் பிரியம்வதாவின் முன்னே அமர்ந்திருந்தனர் இருவரும்.

“உங்களை இப்பிடி பாக்க ரொம்ப சந்தோசமா இருக்கு… ஆரம்பிக்கலாமா பாரதி?” என்று புன்னகையோடு கேட்டார் அவர்.

ஆமெனத் தலையாட்டியவளிடம் அந்த வாரம் நடந்த அனைத்தையும் கேட்க ஆரம்பித்தார் பிரியம்வதா. பாலா அவர்களிடம் விடைபெற்று வெளியேறினான். அவனது கண்கள் பாரதியிடம் பேசிய இரகசியத்தைக் கவனித்துக் குறித்துக்கொண்டார் பிரியம்வதா.

தொடர்ந்து பாரதியும் அந்த வாரம் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் மறைக்காமல் உரைத்தாள். அதோடு முந்தைய நாளிரவு நடந்த சம்பவத்தைய இரத்தினச்சுருக்கமாகக் கூறினாள்.

“சோ உனக்கு வித்தியாசமா எதுவும் ஃபீல் ஆகல?”

“யெஸ் மேடம்… ரொம்ப நாளுக்கு அப்புறம் நான் அமைதியா ஃபீல் பண்ணுனேன்”

“வேற எதுவும் பிரச்சனை?”

“ரொம்ப கம்மியாகிருக்கு மேடம்… அதுவும் இந்த வீக் சுத்தமா எனக்கு எந்தப் பிரச்சனையும் வரல… ஆனா புதுசா ஒரு பயம் முளைச்சிருக்கு மேம்”

கண்களில் கலவரம் மூள அவள் சொல்லவும் பிரியம்வதா என்னவென விசாரித்தார்.

“எனக்கு இருக்குற பிரச்சனை ஜீன் வழியா அடுத்த ஜெனரேசனுக்குப் போகுமா மேம்? ஐ மீன் இஃப் ஐ அம் கெட்டிங் ப்ரெக்னெண்ட், மை பேபி…”

முடிக்க கூட இயலாமல் தொண்டை கட்டிக்கொண்டது பாரதிக்கு. அவளது கவலை நியாயமானது. ஆனால் அதற்கு அவசியமே இல்லை என்று புரியவைக்கும் கடமை பிரியம்வதாவுக்கு உள்ளதல்லவா!

“சில சைக்காலஜிக்கல் ப்ராப்ளம்ஸ் ப்ரெயின்ல உள்ள பார்ட்சோட வித்தியாசமான தகவமைப்பால ஒரு ஜென்ரேசன்ல இருந்து இன்னொரு ஜென்ரேசனுக்கு ஜீன் வழியா கடத்தப்படுறதுக்கான வாய்ப்பு இருக்கு பாரதி… பட் உனக்கு இருக்குற ப்ராப்ளமுக்கு எந்த உடல்ரீதியான பிரச்சனையும் காரணமில்ல… உன்னோட ப்ராப்ளம் முழுக்க முழுக்க மனரீதியானது… உன்னோட பிஹேவியர்ஸ் தான் உன் ஹார்மோன் தூண்டுதலுக்குக் காரணம்… மத்தபடி உன் ப்ரெயினோட செயல்பாடு நார்மலா இருக்கு… அதுல எந்தப் பிரச்சனையும் இல்ல… சோ உன்னோட இந்தப் பிரச்சனை உன் குழந்தைக்கு வந்துடுமோனு நீ பயப்படவேண்டாம்… அண்ட் ஒன் மோர் க்வஸ்டீன் பியாண்ட் அவர் தெரபி”

தனக்குக் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தைக்கு தன்னுடைய மனரீதியான பாதிப்பு கடத்தப்படாது என்று பிரியம்வதா சொன்னதிலேயே பாரதி நிம்மதியுற்றாள்.

“கேளுங்க டாக்டர் மேம்”

“நீங்க இப்ப பேபிக்கு ட்ரை பண்ணுறிங்களா?”

பாரதியின் வதனம் நாணத்தில் சிவந்துபோனது.

“ப்ளான் எதுவும் பண்ணல மேம்… பட் எனக்குக் குழந்தை வேணும்னு தோணுது… அதான் உங்க கிட்ட கேட்டேன்”

“ஓ.கேம்மா… நீங்க ப்ரெக்னென்சி ட்ரை பண்ணுறிங்கனா மெடிசினோட டோசேஜ் சேஞ்ச் பண்ணனும்… பிகாஸ் ப்ரெக்னெண்ட் விமன்சுக்கு நார்மலா உனக்குக் குடுக்குற மெடிசினை நான் ப்ரிஸ்க்ரைப் பண்ண மாட்டேன்… இந்த தடவைல இருந்தே மெடிசினை சேஞ்ச் பண்ணிடலாமா?”

பிரியம்வதா குறுகுறு பார்வையோடு வினவியதும் பாரதியும் நாணத்தோடு தலையாட்டினாள்.

பின்னர் பாலாவை உள்ளே அழைத்து அவளது பயத்தையும், குழந்தை ஆசையையும் அவனிடம் கூறினார். அவனுக்கும் குழந்தை வந்தால் நல்லது என்ற எண்ணம் தான். தங்களிருவரின் பெற்றோரும் குழந்தைக்கு அவசரப்படுபவர்கள் இல்லை என்றவன் பாரதியின் பிரச்சனை முழுவதுமாக குணமாகிவிட்டால் நிம்மதியாக குழந்தையைப் பற்றி யோசிக்கலாமென்றான்.

“குறைஞ்சது இன்னும் மூனு மாசத்துக்கு மெடிசின் கண்டினியூ பண்ணனும்… பாரதியோட ஹார்மோன் லெவலை நான் மானிட்டர் பண்ணிட்டே இருப்பேன்.. நீங்க எதை நினைச்சும் ஒரி பண்ணாதிங்க பாலா”

பிரியம்வதா கொடுத்த உத்திரவாதத்தால் நிம்மதியுற்ற இருவரும் பூரிப்போடு மருத்துவமனையிலிருந்து கிளம்பினார்கள்.

6 thoughts on “கானல் பொய்கை 15”

  1. Kalidevi

    Superb bala purinjitu avalukh support panni iniku problem solve aeiduchi nalla aeita bharathi. Life started with a meaning full love

  2. CRVS2797

    இந்த மாதிரி பொண்டாட்டியோட பிரச்சினையை புருசனும், புருசனோட பிரச்சினையை பொண்டாட்டியும் புரிஞ்சுக்கிட்டு, ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலா இருந்தாலே போதும் பாதி பிரச்சினை தீர்ந்துடும்.

  3. Fellik

    ஹப்பாடா நான் கூட இவன் பேசுன பேச்சுக்கு விட்டு போயிடுவானோனு நினைச்சேன் சூப்பர் குழந்தை வரைக்கும் யோசிச்சாங்களே நல்லது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *