தீயாகிய தீபம் 4
ருத்ரா வயது 25 சொல்லில், செயலில், எண்ணத்தில் ஒரு நேர்த்தி இருக்கும். கூர்மையான பார்வை. சற்றே உயரம் குறைவு. பருமனான தேகம். கொத்தமல்லி கட்டு போல தலை முடி. அவளுக்கு நீண்ட முடி வேண்டும் என்னும் ஆசை. ருத்ரா தொல்லியல் துறையில் பணிபுரிகிறாள். அவள் வேலை அலுவலகத்தில் காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஆறு வரை எனக் கிடையாது. ஊர் ஊராகச் சுற்ற வேண்டும். பல நாள் வீட்டுக்கு வரக் கூட முடியாது.
அது மட்டும் அல்லாமல் ஓவியம் தீட்டுவதிலும் திறமையானவள். மிக நேர்த்தியாக வரைவாள். சிறு வயது முதலே நன்றாக ஓவியம் தீட்டுவாள்.
தொல்லியல் தொடர்பான படிப்பைத் தேர்ந்தெடுத்த பொழுது வீட்டில் யாரும் ஆட்சேபிக்கவில்லை. அவள் படித்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்னும் நிலைமை இல்லை. செல்வச் செழிப்பான குடும்பம். அதனால் படிப்பு வேலை அனைத்தும் அவள் விருப்பம்.
ருத்ராவின் அப்பா நாராயணன் ரெயில்வே துறையில் உயர் அதிகாரி. அம்மா பரிமளம் மகப்பேறு மருத்துவர். இத்தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் சங்கரன், ருத்ரா மற்றும் பவித்ரா.
சங்கரன் எம்.என்.சி.யில் நல்ல வேலை. இருவீட்டார் சம்மதத்துடன் சித்ராவைக் காதல் திருமணம் முடிந்து ஒரு சுட்டிப் பெண்ணுக்குத் தகப்பன்.
இரண்டாமவள் ருத்ரா. அடுத்தது பவித்ரா பல் மருத்துவ மாணவி.
ருத்ரா எப்பொழுதும் அவள் வேலை நிமித்தமாக புராதான கோயில். அல்லது ஏதேனும் ஒரு கிராமத்தில் எதையாவது ஆராய்ந்து கொண்டிருப்பாள். அவளுக்கு மிகவும் பிடித்தமான வேலை இது.
வீட்டைச் சுத்தம் செய்கையில் ஏதேனும் பழைய பொருள் கிட்டினால் அவளின் உடன்பிறப்பான பவி “ருத்ரா இது எந்த செஞ்சரி பொருள்” எனக் கலாய்ப்பது வழக்கம்.
“அடேய் இது என் பாட்டி கொடுத்த வெங்கல பானை .. கைய வெச்ச அவ்வளவுதான்” என அவர்களின் அம்மா பரிமளம் முன்னே வந்திடுவார்.
பரிமளத்திற்குத் தான் கொண்டு வந்த சீதனப் பொருட்களை யாரும் தொடக் கூடாது. ஆனால் அவரின் பிள்ளைகள் கிடைத்த வாய்ப்பை தவர விடுவார்களா? அந்த சீதனப் பொருட்களை ஆராய்வது போல நையாண்டி செய்வது வழக்கம். கிண்டலும் கேலியுமாக அன்றைய நாள் முடியும்.
இதில் ருத்ராவும் சேர்ந்து கொண்டு “இது பத்தாவது நூற்றாண்டு இட்லி பானை” எனக் கலாட்டா செய்வாள்.
எத்தனை வருடங்கள் ஆனாலும் பெண்களுக்கு தன் அம்மா வீட்டு சீதனத்தின் மேல் உள்ள பிரியம் குறையாது. அது பயன்படுத்தாத பொருளாக இருந்தாலும் அது வேண்டும். பரிமளம் மட்டும் விதிவிலக்கா என்ன?
பெண்களுக்கு தங்கள் பிறந்த வளர்ந்த வீட்டின் உணர்வு குவியலாய் அவை தென்படும். அந்த உணர்வு தங்களின் இறுதி நொடிவரை அவர்களை ஆட்கொண்டிருக்கும்.
ருத்ராவிற்கு வரன் பார்க்க ஆரம்பித்தனர் பெற்றோர்.
“ருத்ரா நீ யாரையும் லவ் செய்யலையா?” என பவித்ரா கிசுகிசுப்பாக கேட்க
இடதும்வலதுமாக தலையாட்டினாள் “இல்லடி எவனும் சிக்கல .. அம்மா அப்பாவே வரன் பார்க்கட்டும் … ஆனா எனக்கு பிடிச்சிருக்கணும்” என்றாள் கண் சிமிட்டியபடி
“ஆனா நீ.. ஒன்னு மண்ணுக்கு கீழ பூமியில் மண்டையை விட்டுத் தேடுவ .. இல்ல மேல கோயில் கோபுரத்தை ஆராயச்சி செய்வ .. நடுல பார்த்தாதானே மனுஷங்க தெரிவாங்க … இதுல எங்க லவ் பண்ணப் போற” என பவி நக்கலடிக்க
பவி சொல்வதும் ஒரு விதத்தில் உண்மைதான் எனத் தோன்றும் ருத்ராவிற்கு ஆனாலும் கெத்து குறையாமல் “அடிங்க” என பவியை உதைக்க துரத்துவாள். அடுத்த பத்து நிமிடம் வீடு களேபரம் தான்.
ஏனோ ருத்ராவிற்குக் காதலிக்க தோன்றவில்லை. தனக்குத் தகுந்த ஆள் சிக்கவில்லை எனத் தோன்றும்.
அவள் பெற்றோர் அலசி ஆராய்ந்து தேடிய வரன் விக்கி. இருவருக்கும் ஜாதகம் பொருந்தி வந்தது. இருவருக்கும் மற்றவர் புகைப்படம் வாட்சப் மூலம் அனுப்பப்பட எந்த மறுப்பும் இன்றி இருவருக்கும் பிடித்திருந்தது. அப்படிதான் இவர்களுக்குச் சொல்லப்பட்டது. விக்கி இவள் புகைப்படத்தை கூட பார்க்கவில்லை எனத் தெரிந்தாள் என்ன செய்திருப்பாள்?
பெண் பார்க்கும் படலம் அன்று ருத்ரா தாமதமாகத்தான் வீட்டிற்கே வந்தாள். திடீரென்று சென்னையில் பயங்கர வெய்யிலின் தாக்கத்தால் சொல்லாமல் கொல்லாமல் பலத்த மழை. ருத்ராவின் குழு அடுத்த செல்ல வேண்டிய இடத்தை பற்றிய முக்கியமான மீட்டிங் அன்று இருந்தது. அதற்குச் சென்றவள் வரத் தாமதம் ஆகிவிட்டது.
விக்கி தன் பெற்றோர் மற்றும் ரவி அபர்ணாவுடன் குடும்பம் சகிதமாகப் பெண் பார்க்க வந்திருந்தான்.
ருத்ரா அம்மா ஆயிரம் முறை போனில் “சீக்கிரம் வாடி மாப்பிள்ளை வீட்ல வந்துட்டாங்க” என அவசரப்படுத்தினார்.
“அம்மா பயங்கர மழை .. ஓலா.. உபேர் எதுலையும் வண்டியும் கிடைக்கலை .. எப்படியாவது சீக்கிரம் வரேன் .. நீ அதுவரை சமாளி” எனக் கொஞ்சலாகக் கெஞ்சினாள்.
எப்படியோ அடித்துப் பிடித்து வந்து சேர்ந்தாள். மழையில் நனைந்து ஈரமான ஜீன்ஸ் மற்றும் குர்த்தியுடன் வந்து சேர்ந்தாள். ஆம் விக்கி முதன் முதலில் அவளை அப்படித்தான் கண்டான்.
வீட்டின்னுள்ளே நுழைந்ததும் “சாரி சாரி ” என ருத்ரா மன்னிப்புக் கேட்க
“சாரி எதுக்கு மா .. உள்ள போமா .. டிரஸ் மாத்திக்கோ.. முதல்ல எதாவது சாப்பிடு ” என விக்கி அம்மா கோதாவரி சொல்ல …“தேங்கஸ் ஆன்ட்டி” என்றபடி உள்ளே ஓடினாள் ருத்ரா.
பத்து நிமிடத்தில் மெல்லிய ஜரிகையுடன் பட்டுப் புடவை சன்னமான தங்கச் சங்கிலி. கண்ணை உறுத்தாத தங்கத் தோடுகள் மற்றும் வளையல்கள். சின்ன பொட்டு, என ஆர்ப்பாட்டம் இல்லாத ஒப்பனையுடன் வெளி வந்தாள்.
மழை சற்று ஓய்ந்திருந்தது. சில்லென்ற காற்று மட்டும் அவ்வப்பொழுது முள்ளாய் குத்தியது.
அவள் சகஜமாக வேண்டி விசு அவள் வேலைப் பற்றி கேட்டறிந்தார். சில கோயில்கள் பற்றிப் பேசினார்.
பின்பு விக்கியும் ருத்ராவும் தனியே பேச வீட்டிற்குப் பின்னால் இருந்த தோட்டத்தில் இருக்கைகள் போடப்பட்டன.
முதலில் ருத்ரா தாமதமாக வந்ததிற்கு மன்னிப்பு கோரினாள். அடுத்து தன் வேலையைப் பற்றி வாய் ஓயாமல் படபடவென பேசினாள். விக்கிக்கு அவள் வேலை மீது கொண்டுள்ள காதல் புரிந்தது.
விக்கி ஓரிரு வார்த்தையில் தன் வேலையைப் பற்றி சொல்லி முடித்தான். அவன் அடுத்துப் பேச எத்தனிக்கும் முன் மீண்டும் மழை தொடங்க இருவரும் அவசரமாக உள்ளே வரவேண்டியதாயிற்று. வேறுவழியின்றி மனமில்லாமல் விக்கி தன் பெற்றோர் அருகில் சென்று அமர்ந்துவிட்டான்.
ருத்ரா அம்மா அவளைக் கேள்வியோடு நோக்க “பிடித்திருக்கிறது” என தலையசைத்தாள். தன் செல்ல மகள் கன்னத்தைக் கிள்ளி ஆனந்த கண்ணீருடன் கட்டி அணைத்தார்.
“அம்மா இரு இரு .. மாப்பிள்ளை வீட்ல பதில் வரணும்” என பவி அம்மாவை அடக்கினாள்.
விக்கி “இந்த கல்யாணம் வேண்டாம்” என்றுத்தான் சொல்ல நினைத்தான். ஆனால் யாரோ ஒரு தம்பதி தங்கள் பெண்ணை பெற்றெடுத்து வளர்த்து படிக்க வைத்து ஆசையாகத் திருமணம் முடிக்க தன் முன் நிற்க வைப்பதும். அவர்களின் உடல் பொருள் ஆவி என அனைத்திலும் ஏக்கமும் எதிர்பார்ப்பும் சேர்ந்து தன்னை பார்ப்பதும் அவனுக்குச் சங்கடமாக இருந்தது.
அதனால் அவனால் மறுக்க இயலவில்லை.
விசு குடும்பம் அவர்களுக்குள் மெதுவாகப் பேசிக் கொண்டனர்.
விசு “என்னபா உனக்கு பொண்ணு பிடிச்சிருக்கா?” எனக் கேட்க
“எனக்கு சம்மதம் பா” என்றான்.
அவன் மொத்த குடும்பமும் திகிலுடன் அவனைக் கண்டன.
“என்ன?“ என புரியாதவன் போல பொதுவாய் அவன் கேட்க
“நிஜமாவே கல்யாணத்துக்கு சம்மதிக்கிறாயா?” அம்மா வாய்விட்டுக் கேட்டுவிட்டார். ஏன் எனில் இது சாதாரண விஷயம் அல்லவே.
விக்கி விரிந்த புன்னகையுடன் “அம்மா எனக்குக் கல்யாணத்துக்குச் சம்மதம்” என அழுத்தம் திருத்தமாகக் கூறினான்.
“இதுதான் அழகுல மயங்கிறது போல … சட்டுபுட்டுனு கல்யாணத்தை முடிங்க அத்தை” என ரவி கூறவும். விக்கி குடும்பத்தாருக்குச் சிரிப்பை அடக்குவது கடினமாகத்தான் இருந்தது.
விசுசந்தோஷமாக “எங்களுக்கு பொண்ணு பிடிச்சிருக்கு” என்றார். கோதாவரிக்கும் முகம் கொள்ளாத சந்தோஷம்.
ருத்ரா அப்பாவும் தங்களுக்குச் சம்மதம் என்றதும் அனைவருக்கும் அத்தனை அத்தனை ஆனந்தம்.
“அப்ப நிச்சயத்துக்கு நாள் குறிச்சிடலாமா? வர வெள்ளிக் கிழமை நாள் நல்லா இருக்கு” என்றார் விசு கைப்பேசியில் பஞ்சாகத்தை பார்த்தபடி.
“அதுல ஒரு சின்ன பிரச்சனை” என ருத்ரா அப்பா தயங்கினார்.
“சொல்லுங்க சம்மந்தி ..”என்றார் விசு கூடவே “இனி சம்மந்தினு கூப்பிடலாம் இல்லையா?” என புன்னகையுடன் கேட்கவும்
“தாராளமா .. தாராளமா” என அதே ரீதியில் பதில் அளித்தார் நாராயணன்.
அவரே தொடர்ந்தார் “ருத்ரா இன்னும் ரெண்டு நாள்ல கம்போடியால இருக்கிற அங்கோர் வாட் கோயிலுக்கு அவ டீமோட போறா.. வர இரண்டு மாசம் ஆகும். அது அவ ரொம்ப எதிர்பார்த்த டிரீம் ப்ராஜெக்ட்” என கைகளைப் பிசைந்தார்.
விசு ஏதோ சிந்தித்தவராக தன் மனைவி மட்டும் மகனிடம் பேசினார். பின்பு “சம்மந்தி உங்களுக்கு விமரிசையா நிச்சயதார்த்தம் நடத்தனுமா .. அதாவது சொந்தகாரங்கள கூப்பிட்டு” எனக் கேட்டார்.
“அப்படி இல்ல”
“சரி உங்களுக்கு சம்மதம்னா இப்பவே வெற்றிலை தட்டு மாத்திகலாம்” எனக் கேட்கவும்.
ருத்ரா வீட்டினர்க்கும் அதுவே சரி எனப் படவே உடனே எளிமையாக அப்போதே தட்டு மாற்றிக் கொண்டு திருமணத்தை நிச்சயப்படுத்தினர்.
கோதாவரி தன் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை ருத்ரா கழுத்தில் போட்டு அவளுக்கு பூ வைத்துவிட்டார்.
இதே போன்றதொரு மழை நாளில் ருத்ரா செய்த ஒரு செயல் எத்தனை பேரின் வாழ்க்கையை தடம் பிறழ வைக்கப் போகிறது என அன்று அவளுக்குத் தெரியாது. ஆனால் அன்றைய தினம் அந்தப் பொழுதை மிக இன்பமாக நகர்ந்து கொண்டிருந்தது. ரகசியம் வெளிவர இது சமயம் இல்லை என்னும் விதமாக.
ஒரு வாரம் விசு குடும்பத்தில் எந்த பிரேகிங் நியூசும் இல்லாமல் நகர … “அங்கிள் விக்கி மயக்கம் ஆகிட்டான். ஹாஸ்பெட்டல சேர்த்திருக்கிறோம்” என விக்கி நண்பன் விசுவை போனில் தொடர்பு கொண்டு பேசினான்.
குடும்பமே நிலைகுலைந்து போனது.
ஒளிரும் …
Interesting👍
Thank you so much Vino sis
அச்சோ என்ன ஆச்சு அவனுக்கு
Viraivil teriya varum sis.
Thank you so much Kothai sis.
OMG 😮
What happened to Vikki?
Good going
Thank you so much Abirami sis
Interesting . Vicky ku ena achi mayakam vara alavuku
Viraivil teriya varum.
Thank you so much Kalidevi sis.
Intresting😍😍
Thanks a lot Priya sis
Nice
Thank you so much Eswari sis