தீயாகிய தீபம் 9
கோதாவரியும் அபர்ணாவும் புதுமணத் தம்பதிகளான விக்கி ருத்ராவை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். “வலது காலை எடுத்து வெச்சி வாம்மா” எனக் கோதாவரி கூற அவ்வாறே ருத்ரா தன் கணவன் வீட்டினுள் அடியெடுத்து வைத்தாள்.
பூஜை அறையில் தீபம் ஏற்றினாள் ருத்ரா. பின்பு கோதாவரி விக்கி ருத்ராவிற்குப் பாலும் பழமும் கொடுத்தார்.
விக்கியுடன் இணையாக இருப்பதை வெகுவாக அவள் மனம் ரசித்தது. தான் பெரியதொரு பந்தயத்தில் வெற்றி பெற்று விக்கி என்னும் கோப்பையை அடைந்தது போலவே உணர்ந்தாள். தான் இதுவரை கண்டிராத எதிரி எவ்வகையிலும் தங்களில் அருகில் நெருங்க கூடாதென விரும்பினாள்.
பிள்ளைகள் திருமணத்திற்குப் பிறகு எப்படியும் தேவையாக இருக்கும் என யூகித்தால் விசு தன் வீட்டின் மாடியில் இரண்டு பெரிய அறைகளை அபர்ணா திருமணத்திற்கு முன்பே கட்டியிருந்தார்.
ருத்ரா பெற்றோர் முறைப்படி தம் மகளைப் புகுந்த வீட்டில் விட்டுவர விசு வீட்டிற்கு வந்திருந்தனர். இனி எங்கள் பெண் உங்கள் குடும்பத்துடன் ஐக்கியமாகிவிட்டாள். அவளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்னும் விதமாக.
தாலி கட்டியதும் புது உறவுகள் வாழ்க்கையில் இணையப் பழைய உறவுகள் சற்று தள்ளிப் போனது போல ருத்ரா உணர்ந்தாள். ருத்ராவின் பெற்றோருக்கும் மனம் கலக்கத்தான் செய்தது இருப்பினும் சமாளித்து விடைப் பெற்றனர். தங்கள் செல்ல மகளை விட்டுவர மனமே இல்லாமல் கிளம்பினர்.
ருத்ராவின் குடும்பத்தினர் கிளம்ப ஆயத்தம் ஆகினர். ருத்ராவிற்கு துக்கம் தொண்டையை அடைத்தது. இந்த தருணம் எதிர்பார்த்தது தான். தன் அம்மாவை கட்டியணைத்து கண் கலங்கினாள்.
“நீங்க கவலைபடாதீங்க நான் ருத்ராவை பத்திரமா பாத்துக்கிறேன்” என விக்கி அவர்களிடம் ஆறுதளித்தான். அவன் குரலில் இருந்த தன்மை ருத்ராவிற்கு நிம்மதியாக இருந்தது. கண்களால்அவனுக்கு நன்றி உரைத்தாள். அந்த வார்த்தை அந்நேரத்தில் அவளுக்கு தேவையாகவும் இருந்தது.
விசு மற்றும் கோதாவரி அவர்களுக்குத் தைரியம் கூற விடை பெற்றுக் கிளம்பினர். இப்போது வீட்டில் விக்கியின் நெருங்கிய உறவினர் சிலர் மட்டுமே இருந்தனர். அவர்களும் மாலை இரவு என அவர்கள் சௌகிரியத்துக்கு கிளம்பிவிடுவர்.
தன் பெற்றோர் கிளம்பியதும் ஏனோ வெறுமையாக உணர்ந்தாள்.
ருத்ராவை அழைத்து கோதாவரி “பட்டுச் சேலை கஷ்டமா இருந்தால் .. சுடிதார் மாத்திகோ” என்றார்.
“சரிங்க அத்தை” என்றாள் சுருதி குறைந்த குரலில்.
“நீ உன் வீட்ல இருக்கிற மாதிரி இருக்கலாம் சரியா” என வாஞ்சையுடன் அவள் தலையைக் கோதினார்.
விக்கியிடம் அம்மா “ருத்ராவ ரூம்க்கு கூடிட்டு போடா அவ புடவை மாத்தணும்”
ருத்ரா தன் பெட்டியை நகர்த்த “ விடு ருத்ரா நான் எடுத்திட்டு வரேன்” என அவளிடமிருந்து பெட்டியை வாங்கிக் கொண்டான்.
மாடியில் தன் அறைக்கு அழைத்துச் சென்றான் “இதுதான் நம்ம ரூம்” என்றான்.
அவன் அறை மிகவும் சுத்தமாக இருந்தது. பொருட்கள் யாவும் தத்தம் இடத்தில் இருந்தன.
“ரூம் அழகா கிளீனா இருக்கு” என்றாள் சுற்றிப் பார்த்த வண்ணம்.
“எப்பவும் இப்படி இருக்காது ருத்ரா .. உனக்காக ரெடி செய்தது பிராபளிலி இன்னிக்கு மட்டும் தான் இப்படி இருக்கும் நினைக்கிறேன்” என உண்மையைச் சிரிப்புடன் சொன்னான்.
“நீ புடவை மாத்திகோ .. அங்க டிரசிங் ரூம் இருக்கு” என கை காட்டினான்.
எப்போதும் வளவளவென பேசும் ருத்ரா வாய் திறக்கவில்லை. இன்னமும் அன்னை தந்தையை பிரிந்த சோகத்தால் முகம் வாட்டமாயிருந்தது.
முதன் முதலில் அம்மாவை விட்டுப் பிரிந்து பள்ளிக்குச் சென்ற குழந்தை போலக் காணப்பட்டாள்.
விக்கி அவள் அருகே வந்து சற்றே குனிந்து “இன்னும் அம்மா ஞாபகமா ..டோண்ட் வொரிடா .. உன் அம்மா கூட பேசுறியா?” என தன் போனை நீட்டினான்.
மனதிலிருந்ததை அவன் கூறிடச் சட்டென அவள் கன்னத்தில் கண்ணீர் உருண்டோடியது. “அச்சோ என்ன ருத்ரா” எனப் பதறிவிட்டான். அவள் கண்ணீரை மெல்லத் துடைத்தான்.
அவன் அருகாமை அவன் ஸ்பரிசம் அவன் வாசம் என அனைத்தும் அவளுள் ஏதோ ரசவாதத்தைச் செய்ய “போன் வேண்டாமென” இடது வலதுமாகத் தலையசைத்தவள் உடை மாற்ற அடுத்த அறைக்குச் சென்றாள். கதவை தாளிட்டாள்.
அவன் கைப்பட்ட தன் கன்னத்தை மிருதுவாக வருடிக் கொண்டாள். “விக்கி ருத்ராவ அழைச்சிட்டு வாடா” எனக் கோதாவரி குரல் கேட்க அவசரமாக மாற்று புடவையை தேடி மாற்றிக் கொண்டாள்.
அது வேறு கதகளி போல புஸ்சென்று நிற்கச் சரி செய்து கொண்டு வெளியே வந்தாள்.
கீழே வந்தனர். பின்பு அபர்ணாவின் கணவனுடன் விக்கி பேச்சில் ஐக்கியம்மாகிவிட்டான். ருத்ரா அடுத்து என்ன செய்வது? என்று புரியாமல் விழித்தாள்.
அபர்ணாவும் அவள் குழந்தையும் ருத்ராவுடன் பேச ஆரம்பிக்க .. அன்றைய நாள் இனிமையாகக் கழிந்தது. மதியம் சில உறவினர் ஊருக்குச் சென்றுவிட … இரவு அபர்ணாவின் மாமனார் மாமியார் குடும்பத்துடன் கிளம்பினர்.
திருமண ஏற்பாடுகள் தொடங்கி இன்று திருமணமும் இனிதாக முடிந்தது. தாலி கட்ட ஒரு சில நொடிகள் தாம் ஆனால் அதற்கு முன்னரும் பின்னரும் செய்யும் ஏற்பாடுகள் எத்தனை எத்தனை. இது ஒரு சுகமான சுமை.
அன்று இரவு புதுமணத் தம்பதியினருக்கு முதலிரவுக்கான ஆயத்தங்களை கோதாவரியும் அபர்ணாவும் செய்தனர்.
ருத்ராவிற்கு அலங்காரம் செய்து நல்ல நேரத்தில் அறைக்கு அழைத்து செல்ல ஏற்பாடுகள் நடந்தேறின. மணப்பெண்ணுக்கே உரிய தவிப்பும் தயக்கம் அவளை ஆட்டிப் படைத்தது. விக்கி எப்படி நடந்து கொள்வான்? என சிந்தித்தவளுக்கு நாணமும் ஒருவித அச்சமும் சமமாக தராசு தட்டில் நின்றது.
தன் அத்தையின் குரல் கேட்டுக் கிளம்ப ஆயத்தமான ருத்ரா கண்ணாடியில் தன்னை கண்டாள். இவள் பழைய ருத்ரா அல்ல. மஞ்சள் தாலியும் நெற்றி வகிட்டில் குங்குமம் இன்னும் அவள் முகத்திற்கு அழகு சேர்த்தது. பல்லாயிரம் கனவுகளோடு தன் புதிய பயணத்தை துவக்கினாள். அவள் மனதை புகைப்படத்தில் பார்த்த பெண் ஆட்டிப் படைத்தாலும். அதை சற்றும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
ருத்ராவை முதலிரவு அறைக்குக் கோதாவரியும் அபர்ணாவும் அழைத்துச் சென்றனர். விக்கி அறைக்குள் இருந்தான். மணமக்களுக்குச் சங்கடமாக இருக்கக் கூடாதென அவர்கள் விரைவில் அகன்றனர்.
மெல்லிய புன்னகையுடன் விக்கி அவளை வரவேற்றான். அவளும் வெட்க புன்முறுவலுடன் அறைக்குள் வந்து கதவை தாழிட்டாள். “வா ருத்ரா இங்க உட்காரு” என கட்டிலில் தன் அருகில் அவளை அமர சொல்ல .. அவளும் அவ்வாறே அமர்ந்தாள். இருவருக்கும் அடுத்து என்ன பேசுவது எனத் தெரியவில்லை.
இருவரும் திருமணத்திற்கு முன் போனிலும் நேரிலும் பேசினாலும் இந்த தருணம் சற்று சங்கடமாக இருந்தது. “ரொம்ப டையர்டா இருக்கு தூங்கலாமா?” விக்கிச் சட்டென கேட்டுவிட
என்னமோ கற்பனை செய்து வந்தவளுக்குச் சிறு ஏமாற்றம் இல்லாமல் இல்லை. விக்கி மேல் மெல்லச் சந்தேகம் துளிர்விட்டது.
முகத்தில் எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல்“சரி” எனத் தலையசைத்தாள். அவளுக்கும் அந்த பெண் யாரென தெரிந்து கொள்ளும்வரை முழு மனதோடு கணவனுடன் இனிமையாக இருக்க முடியும் எனத் தோன்றவில்லை. அவளுக்கும் வசதியாக போனது.
விக்கிப் படுத்து இரண்டொரு நிமிடத்தில் உறங்கியும் விட்டான். இத்தனை அசதியா பாவம் என நினைத்த ருத்ரா அவளும் அவன் அருகில் படுத்தாள் சிறிது நேரத்தில் அவளும் உறங்கிவிட்டாள்.
நந்தினி குளிருக்கு இதமாக நன்றாகப் போர்த்திக் கொண்டாள். கடந்த ஒரு மணி நேரமாக உறங்க முயன்று தோல்வியைக் கண்டாள். இரவு உறக்கத்தை மொத்தமாக விக்கியின் நினைவுகள் பறித்துவிட்டன.
அவனை முதன் முதலில் சந்தித்த நொடி மனதில் பசுமரத்து ஆணியாய் பதிந்திருந்தது.
அன்று முதல் நாள் வேலையில் சேர்ந்திருந்தாள் நந்தினி. லிப்ட்டை நோக்கி வேகமாக ஓடிவர அது மூடிக் கொண்டது என நினைக்க அடுத்த நொடி சொர்க வாசலை போல திறந்து கொண்டது. திறந்துவிட்டவன் வேறு யார் விக்கிதான்.
அவசரமாக லிப்டில் நுழைந்தாள். “அட கடவுளே …கேட்க மறந்துட்டேன்” என வெளியே பார்க்க அதற்குள் லிப்ட் மூடிக் கொண்டு ராக்கெட்டை போல கிளம்பிவிட்டது. லிப்டில் இருந்த மூவர் தங்கள் செல்போனில் தலையை விட்டு சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாதபடி மோன நிலையில் இருந்தனர்.
லிப்ட் இயக்குபவரிடம் அலுவலகப் பெயரைச் சொல்லி“இந்த ஆபீஸ் எந்த பிளோர்?” கேட்டாள்.
அவன் காதில் ப்ளுடூத்தில் திவ்வியமாகப் பாட்டை ரசித்துக் கொண்டிருந்தான்.
“தேர்ட் பிளோர்” விக்கிப் பதிலளித்தான்.
“தேங்க்ஸ்” என்றாள் மெலிதாக தலையசைத்து ஏற்றான்.
நந்தினி சுடிதார் அணிந்து துப்பட்டாவை இரண்டு பக்கமாகப் போட்டு பின் செய்திருந்தாள். நீளமான ஜடை நெற்றியில் பொட்டு அதன் மேல் லேசான விபூதி கீற்று எனச் சற்றும் ஐடி கம்பெனிக்குப் பொருந்தாதபடி காட்சியளித்தாள்.
அவன் வாழ்க்கையில் உற்று நோக்கிய முதல் பெண்.
இருவரும் லிப்ட்டை விட்டு வெளிவர “அதுதான் உங்க ஆபீஸ்” என அவள் கேட்காமலே சொன்னான். லிப்ட் சென்றுவிட்டது. அவள் தன் அலுவலகம் நோக்கி காரிடரில் நடக்க .. அவளுடன் விக்கி படிகளை நோக்கி நடந்தான்.
“நீங்க எங்க?” அவள் கேட்க
“நேத்துவர மாடியல என்னுடை ஆபீஸ்”
“இன்னிக்கு மாத்திட்டாங்களா?“
“இல்ல இன்னிக்கு ரிசைன் பண்றேன்” என்றான்.
”வேற வேலை கிடைச்சிருக்கா?”
“இல்லங்க நான் சினிமால டைரக்டர் ஆகப் போறேன்” என்றவனை அதிசயமாகப் பார்த்தாள்.
“அது என் நீண்ட நாளைய ஆசை” எனத் தொடர்ந்தான்.
இதற்கு என்ன சொல்வதெனத் தெரியாமல் “குட் லக்” என்றாள்.
“தேங்க்ஸ்” என்றவன் அவளுக்குக் கதவைத் திறந்துவிட்டான். அவள் புன்னகையுடன் விடைப் பெற்றதும். அவள் முகம் மனதில் பெவிகால் போட்டு ஒட்டப்பட்டது.
இரண்டு இரண்டு படிகளாய் தாவி ஏறி தன் அலுவலகத்தை அடைந்தான். தன் கணினி முன் அமர்ந்து அதை உயிர்ப்பித்தான்.
தான் டைப் செய்து வைத்த ராஜினாமா கடிதத்தை ஒருமுறை வாசித்து பார்த்தான். எல்லாம் சரியாக இருந்தது.
தன் மேலதிகாரிக்கு அதை செண்ட் என்னும் பட்டனை கிளிக் செய்யவிருந்த நொடி
“டேய் மச்சான்” என அவனருகில் வந்த நண்பன் கதிர் “பாலு சாருக்கு ஹார்ட் அட்டாக் டா .. ஹாஸ்பெட்டல்ல இருக்கார். அவர் வரவரை உன்னை மேனேஜ் பண்ணச் சொன்னார்“ என பிரேகிங் நியூசை சொன்னான். அவருக்குத்தான் மெயிலை அனுப்ப இருந்தவன் விரலுக்கு பிரேக் கொடுத்தான்.
ஏனோ விக்கி மகிழ்ச்சியாக உணர்ந்தான். தானாக உதடு புன்னகைத்தது.
“ஏன்டா சாருக்கு ஹார்ட் அட்டாக் .. உனக்குச் சந்தோசம்” என கதிர் கேட்கவும் தான் .. இயல்புக்கு வந்தவனாய் “ இடுக்கண் வருங்கால் நகுகனு” வள்ளுவர் சொன்னதைப் பாலோ பண்றேன் எனச் சமாளித்தான்.
“என்னமோ சரியில்லையே” எனக் கதிர் அவனை மேலும் கீழுமாகப் பார்க்க
‘நான் தானே உன் பாஸ் .. போய் வேலை செய்” என விக்கி கராராகப் பேசுபவன் போலப் பேச முயல
“நிறுத்து … நீ அதுக்குலாம் சரிப்பட்டு வர மாட்ட .. நானே போயிடறேன்” என்றதும் இருநண்பர்களும் சிரித்துவிட்டனர்.
ஒளிரும் …
Interesting epi😍😍
Thank you so much Vino sis
Nice going waiting for nxt epi😍😍😍
Thank you so much Priya sis
Nice interesting epi
Thank you so much Kalidevi sis
Good going story
Thank you so much Abirami sis
Nice move
Thank you so much Sujitha sis
Very interesting
Thank you so much Kothai sis
Good going ma
Thank you so much Eswari sis