தீரனின் தென்றல் – 31
Thank you for reading this post, don't forget to subscribe!“எனக்கும் சித்ராக்கும் பெரிய குடும்பம் இருந்தது தென்றல்… எனக்கு அண்ணா அக்கா நான் தான் கடைசி பையன் வீட்ல எல்லாருக்கும் குறிப்பா அம்மாக்கு ரொம்ப செல்லம். சித்ரா ஃபேமிலி ல சித்ரா தான் மூத்த பொண்ணு அடுத்து ரெண்டு தங்கச்சிங்க ஒரு தம்பி…
நானும் சித்ராவும் ஒரே ஊர்ல ஒரே ஸ்கூல்ல தான் படிச்சோம்… ஆனா ரெண்டு பேருக்கும் எந்த அறிமுகமும் இல்ல… இவ்வளவு ஏன் நானும் சித்ராவும் ஒரே பேட்ஜ் அல்லது ஒரே க்ரூப் கூட கிடையாது…
நான் டுவல்த் படிக்கும் போது சித்ரா லெவன்த்… அப்போ நடந்த ஆனுவல் டே டான்ஸ் ப்ரோக்ராம் ல சித்ரா கலந்துக்கிட்டு டான்ஸ் பண்ணா… அவ முகத்தை எல்.ஈ.டி. ல பார்த்தப்போ அவளோட முகம் அப்படியே மனசுல பதிஞ்சு போச்சு…
அதுல இருந்து அவளை எங்கயாவது பார்த்தா ரசனையா பார்ப்பேன்… உள்ளுக்குள்ள அர்த்தம் தெரியாத ஒரு குறுகுறுப்பு… சித்ராக்கும் அது புரிஞ்சாலும் அவ கண்டுக்கவே மாட்டா… அப்பறம் எக்ஸாம் வந்தது… படிப்பை தவிர வேற எதுலயும் கவனம் சிதற விடாம படிச்சேன்… கிட்டத்தட்ட சித்ராவை மறந்துட்டதா தான் நான் நினைச்சேன். எதிர்பார்த்த அளவுக்கு மார்க் வந்துச்சு
நல்ல காலேஜ் ல சீட் கிடைச்சு உள்ளே போனா சீனியர்ஸ் ரேகிங்… இதுக்கு முன்னாடி யாரையாவது லவ் பண்ணிருக்கியா னு ஒரு சீனியர் கேட்டதும் சட்டுனு மின்னல் மாதிரி சித்ரா வந்துட்டு போனா என் கண்ல… என்னால என்னையே நம்ப முடியலை… ஆனா என்ன பண்ண முடியும் னு அமைதியா அந்த வருஷத்தை ஓட்டுனேன்…
அடுத்த வருஷம் சித்ரா எங்க காலேஜ் ல வேற டிபார்ட்மெண்ட் ல ஜாய்ன் பண்ணா… அப்போ வழக்கம் போல சீனியர் ரேகிங் பண்ண நான் போய் அவளை சேவ் பண்ணேன்… நாங்க படிச்ச ஸ்கூல் பெயரை சொல்லி அந்த ஸ்கூல் தான நீ னு கேட்டதும்
‘ஆமா நான் கூட உன்னை பார்த்துருக்கேன்’ னு சொல்லிட்டு அதுக்கப்புறம் கேஷூவலா பேச தொடங்கினோம்… நட்பா மாறுச்சு எங்க பேச்சு…
சித்ரா மேல இருந்த ஈர்ப்பு எனக்கு அதிகமாகிட்டே போக ஒரு நிலையில அது காதல் னு நான் புரிஞ்சுக்கிட்டேன். ஆனா, அந்த காதலை வெளிப்படுத்த நினைக்கலை…
அன்னைக்கு காலேஜ்ல ஒரு பங்ஷன்… சித்ரா சேரில வந்திருந்தா… என்னால அவ மேல இருந்து கண்ணை எடுக்கவே முடியலை.. அது தான் நான் பண்ண பெரிய தப்பு…” என்று நிறுத்தி பின்னால் இருக்கையில் சாய்ந்து மூச்சை இழுத்து விட்டான் மதன்.
சற்று ஆசுவாசப்படட்டும் என்று விட்ட தென்றல் சில நிமிடங்கள் கழித்து தயக்கமாக “அண்ணா…” என்று அழைக்க லேசாக விழியை விட்டு வெளியே வர இருந்த கண்ணீரை துடைத்து கொண்டு மீண்டும் கூறத் தொடங்கினான்.
“அன்னைக்கு நான் சித்ராவை ரசிச்சதை அவ கவனிச்சாளா இல்லையா னு தெரியாது. ஆனா அவ வீட்ல இருந்து வந்தவங்க கவனிச்சுட்டாங்க… அடுத்த நாள் சித்ரா காலேஜ் வரலை… உள்ளுக்குள்ள ஒரு மாதிரி உறுத்தல்… என்ன காரணம் என்ன ஏதுன்னு புரியாம தவிச்சு போய் இரண்டு மூனு நாள் பொறுத்திருந்து அவளோட க்ளாஸ் மெட் கிட்ட கேட்ட பிறகு தான் அந்த பொண்ணு சொன்னா சித்ராக்கு அவங்க மாமா பையனோட கல்யாணம் ஆகிடுச்சு னு… அந்த பொண்ணு சொன்னதும் நான் மொத்தமா உடைஞ்சு போய்ட்டேன்…
என்னால என்னையே கட்டுப்படுத்திக்க முடியாத அளவுக்கு கோபம் கண்ணீர்… சித்ராவை உள்ளுக்குள்ள எவ்வளவு காதலிச்சிருக்கேன் னு அப்போ தான் புரிஞ்சது… எங்க வீட்ல அண்ணாகிட்ட நான் ரொம்ப ஃப்ரண்ட்லியா பேசுவேன்… அண்ணா அக்கா கிட்ட இதை ஷேர் பண்ணேன்… அவங்க அந்த பொண்ணை மறக்கனும் னா படிப்புல கான்சன்ரேட் பண்ணு னு அட்வைஸ் பண்ணாங்க…
ஆனாலும் என்னால சித்ராவை மறக்க முடியலை அதனால ஊர்ல காலேஜ் நிறுத்திட்டு அண்ணாவும் அக்காவும் அம்மாவை கன்வீன்ஸ் பண்ணி என்னை சென்னை அனுப்பி வைச்சாங்க… படிக்க இடம் மாற்றம் ஓரளவுக்கு மனசை மாத்திக்க உதவுச்சு… என்னோட காலேஜ் லாஸ்ட் டே அன்னைக்கு எதார்த்தமா சித்ராவை சென்னைல பார்த்தேன்… அவளை ஃபாலோ பண்ணி போய் பார்க்க ஒரு மால் ல ஒரு கடையில வேலைக்கு போனா.. அவ முன்னாடி நான் போய் நிக்க அதிர்ச்சி ஆகி என்னை பார்த்து பேச பக்கத்துல வந்தா..
சொல்லப்போனா சித்ராவை பார்த்து நான் தான் ஷாக் ஆனேன்.. கல்யாணம் ஆனதா சொன்ன சித்ரா கழுத்துல தாலி இல்ல நெத்தில குங்குமம் இல்ல… நான் என்ன ஏதுன்னு விசாரிச்சேன் ஒரு நிமிஷம் னு சொல்லிட்டு போய் ஷாப் ஓனர்கிட்ட பர்மிஷன் கேட்டு அதே மால்ல ஒரு காஃபி ஷாப் போனோம்…”
“எப்படி இருக்கீங்க மதன்….” ஏதோ ஒரு உணர்வை விழிகளில் மறைத்து கேட்டாள் சித்ரா
“நான் இருக்கிறதை விடு சித்து… உனக்கு என்ன ஆச்சு? கல்யாணம் ஆனதா உன் ஃப்ரண்ட் சொன்னா… கழுத்துல தாலி இல்ல… இங்க வேலை பார்த்துட்டு இருக்க? என்னாச்சு சித்ரா?” இன்னுமே பதட்டம் குறையாமல் மதன் கேட்க விரக்தியாக சிரித்தாள் சித்ரா.
“கல்யாணம் ஆச்சு… ஆனா ஈசலோட வாழ்க்கை மாதிரி எல்லாமே ஆரம்பிச்ச ஒரே நாள்ல முடிஞ்சு போச்சு…” சித்ரா சொல்ல பகீர் என்றது மதனுக்கு..
“என்ன சொல்ற சித்ரா?” உடைந்த குரலில் மதன் கேட்க
“அன்னைக்கு காலேஜ் பங்ஷன் ல நீங்க என்னை பார்த்ததை வச்சு வீட்ல என்னை அப்பா அம்மா திட்டி அடிச்சு பேசக்கூடாத பேச்சு எல்லாம் பேசி என்னை உயிரோட சாகடிச்சாங்க… நான் அப்படி எதுவும் இல்லை நாங்க ஃப்ரண்ட்ஸ் னு சொன்னேன் நம்பலை…
சரி நீங்க நம்பனும் னா என்ன பண்ணனும் னு கேட்டதும் என் மாமா பையனை கல்யாணம் பண்ணிக்க சொன்னாங்க சரி னு நானும் தலையாட்டிட்டேன்… ரெண்டே நாள்ல முகூர்த்தம் வச்சு அவசர அவசரமா கல்யாணம் பண்ணி வைச்சாங்க… எனக்கு அடுத்து ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க அதனால அப்பா அம்மா சொன்ன வாழ்க்கையை நான் ஏத்துக்கிட்டு தான் ஆகனும் னு மனசை தேத்திட்டு வாழறதுக்கு அந்த வீட்ல கால் எடுத்து வைச்சேன்…
ஆனா அன்னைக்கே என் வாழ்க்கை அழியும் னு தெரியாம போச்சு…” என்று சித்ரா தலை கவிழ ஆறுதலாக அவளின் கை மீது தன் கரத்தை மதன் வைக்க சட்டென்று இழுத்துக் கொண்டாள் தன் கையை…
“என்னாச்சு சித்து…” மென்மையாக கேட்டான் மதன்.
“என் மாமா பையனுக்கு பைக் ரேஸ் போற பழக்கம் இருந்தது. எங்க கல்யாணத்துக்கு ட்ரீட் னு சொல்லிட்டு அவர் ஃப்ரண்ட்ஸ் கூட சேர்ந்து குடிச்சிட்டு பைக் ரேஸ் போயிருக்காரு… ஆக்ஸிடென்ட் ல ஸ்பாட் அவுட்… என்னோட ராசி தான் அவங்க புள்ளையை கொன்னுடுச்சு னு அவங்க அம்மா அப்பா என்னை வீட்டை விட்டு துரத்திட்டாங்க…
கல்யாணம் ஆகி முதல் நாளே தாலி அறுத்துட்டு வந்திட்டா…. அடுத்து இருக்க பொண்ணுங்களை கரை சேர்க்க முடியாது னு என் அப்பா அம்மாவும் வீட்ல சேர்க்க முடியாது னு சொல்லிட்டாங்க…” சித்ரா சொல்ல சொல்ல மதன் அவளின் வேதனை நினைத்து வருந்த சித்ரா முகத்தில் உணர்வே இல்லாமல் அமர்ந்திருந்தாள்.
“அதுக்கப்புறம் ஒரு தூரத்து சொந்தத்துல எனக்கு ஃப்ரண்ட் ஒருத்தங்க சென்னைல இருந்தாங்க காலேஜ் சர்டிஃபிகேட் எல்லாம் எடுத்திட்டு வந்துட்டேன் இங்க இந்த மால்ல எனக்கு வேலை வாங்கி கொடுத்தாங்க அதை வைச்சு ஒரு ஹாஸ்டல் ல தங்கிட்டு இங்க ஒரு ஈவ்னிங் காலேஜ் ல ஸ்டடிஸ் கன்டினியூ பண்றேன்…” என்று சித்ரா சொல்லி முடிக்க
“ஏன் சித்ரா… ஏன் இவ்வளவு கஷ்டத்தை தாங்கிட்டு இருந்த.. என்கிட்ட வந்திருக்கலாமே… என்னோட நம்பர் உன்கிட்ட இருக்கே கால் பண்ணிருக்கலாம் ல ஏன் சித்ரா?” ஆற்றாமையில் வந்த கண்ணீரோடு மதன் கேட்க
“உங்ககிட்ட ஏன் நான் பேசனும்? நீங்க யார் எனக்கு?” என்று சித்ரா கோபமாக கேட்க
“இன்னும் நடிக்காத சித்ரா… என் மனசுல நீ இருக்கிற மாதிரி உன் மனசுல நான் தான் இருக்கேன்…. எங்க இத்தனை வருஷத்துல என்னை நீ மறந்துட்ட னு உன் மனசாட்சியை தொட்டு சொல்லு…” என்று மதன் கேட்க அமைதி காத்தாள் சித்ரா.
“எனக்கு தெரியும் சித்து… நான் உன்னை லவ் பண்ற மாதிரி நீயும் என் பார்வையை ரசிச்ச… அதை நான் கவனிச்சிருக்கேன். என் பார்வை உனக்கு பிடிக்கலை னு ஒரு சின்ன சந்தேகம் எனக்கு வந்திருந்தாலும் உன்னை பார்க்கிறத தவிர்த்திருப்பேனே சித்ரா…” மதன் வேதனையோடு சொல்ல தன் கஷ்டத்தை கூறும் போது வராத கண்ணீர் மதனின் காதலை சொல்லும் போது வந்தது சித்ராவிற்கு…
“பதில் சொல்லு சித்ரா…” அழுத்தமாக மதன் கேட்க
“என்ன சொல்லனும் மதன்… எனக்கு ஆசை இருந்திருந்தாலும் இல்லாட்டியும் என் கழுத்துல தாலி ஏறி இறங்கின அன்னைக்கே எல்லாம் என் மனசை விட்டு போயிடுச்சு மதன்…” முகத்தை எங்கோ திருப்பி வைத்து சித்ரா சொல்ல
“என்னது முடிஞ்சு போச்சா? அப்போ உன்னையே நினைச்சு உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு னு மூளை சொன்னாலும் அதை ஏத்துக்க முடியாம இருந்த என் மனசுக்கு என்ன பதில் சொல்ல போற சித்ரா? “
“நான் ஏன் மதன் சொல்லனும்? உன்னை நானா ஆசைப்பட சொன்னேன்… நானா என்னை மட்டுமே நினைச்சுட்டு இரு னு சொன்னேன்” அலட்சியமாக சித்ரா சொல்ல வாக்குவாதம் ஆனது இவர்கள் பேச்சு.
“சரி சித்ரா… முடிஞ்சது முடிஞ்சதா இருக்கட்டும்… உனக்கு நான் இருக்கேன்… உன்னை நான் இன்னும் காதலிக்கிறேன் நாம கல்யாணம் பண்ணிக்கலாம் சித்ரா…” மதன் பட்டென்று சொல்ல அதிர்ந்தாள் சித்ரா.
சில நொடிகள் நிதானித்த சித்ரா, “சரி மதன் நாம கல்யாணம் பண்ணிகலாம்… ஆனா அதுக்கு முதல்ல என்னை பத்தி எடுத்து சொல்லி உங்க அம்மா சம்மதம் வாங்கிட்டு வாங்க…” என்று சித்ரா சாதாரணமாக சொல்ல
“எங்கம்மா என்னோட ஆசைல என்னைக்கும் குறுக்க நிக்க மாட்டாங்க…” என்று உறுதியாக சொல்லி விட்டு சென்ற மதனுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது.
சித்ராவின் அத்தை மாமா கூறியது போல “அந்த பொண்ணு ராசி தான் அந்த மாப்பிள்ளைய பலி வாங்கிடுச்சு நீ அந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்ல முடியாது” என்று மதனின் தாய் உறுதியாக சொல்ல அதற்கு அவனின் அண்ணன் அக்காவும் துணை இருக்க ஒரு வாரம் உடன் இருந்து போராடி பார்த்து முடியாத மதன் இனி உங்கள் உறவே வேண்டாம் என்று சொல்லி விட்டு வந்துவிட்டான் இங்கு..
மதனின் அம்மா சம்மதம் இல்லாம கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சித்ராவும் வீம்பு பிடிக்க ‘என்னைக்கு இருந்தாலும் எனக்கு நீதான் மனைவி’ என்று அவளுக்காக காத்துக் கிடக்கிறான் மதன்.
படிப்பு முடிந்ததும் ஷ்ரதா க்ரூப்ஸ் ல் மதனும் வேலைக்கு சேர அப்போது தான் சென்னைக்கு மாறுதல் ஆகி வந்த ஆதீரனோடு நெருக்கம் ஏற்பட்டு அவனிடம் தன் காதல் கதையை பகிர்ந்து கொள்ள மதனின் உறுதியை பாராட்டிய ஆதீரன் என்ன உதவி வேண்டுமானாலும் செய்வேன் என்று வாக்கு தர
ஷ்ரதா பிரச்சனையால் ஆதீரன் அந்த கம்பெனி விட்டு விலகி தானே தொழில் தொடங்க அவனோடு சேர்ந்து மதனும் வெளியேறி வந்தான்.
ஆதீரனை வைத்தே பேச வைத்து சித்ராவிற்கு ஆதீரன் கம்பெனியில் வேலை கிடைக்க செய்தான் மதன்.
சித்ராவிற்கு மதன் மீது காதல் இருந்தாலும் மற்றவர்கள் சொன்னது போல தன் ராசி நினைத்தும் மதனின் தாய் சம்மதம் கிடைக்காததாலும் அவனை ஏற்க மறுத்து விலகி நிற்கிறாள் சித்ரா… ஆனால் அவளே அறியவில்லை அவளின் தம்பி இந்த ஊரில் பெரிய கல்லூரியில் சேர்ந்து படிக்க மதன் நிறைய உதவிகள் செய்துள்ளான் என்பதை…
இவர்கள் காதல் கண்ணாமூச்சி ஆட்டம் என்றைக்கு முடியும் என்பதை விதி மட்டுமே அறிந்திருக்க “கண்டிப்பா உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிறது என் பொறுப்பு” என்று வாக்கு தந்தாள் தென்றல்…
- தொடரும்…
- நன்றியுடன் DP ✍️