Skip to content
Home » தீரனின் தென்றல்-33

தீரனின் தென்றல்-33

தீரனின் தென்றல் – 33

Thank you for reading this post, don't forget to subscribe!

சனிக்கிழமை தென்றல் அலுவலகத்தில் இருந்து சீக்கிரம் வந்து விடுவாள் அத்தோடு ஞாயிறு விடுமுறை அபூர்வா உடன் நேரம் செலவழிப்பாள் என்று தெரிந்த ஆதீரன் பொன்னி மற்றும் ரூபியிடம் சொல்லி விட்டு விளையாடிக் கொண்டிருந்த அபூர்வா சக்தி இருவரிடமும் “ஒரு வேலை இருக்கு… போய்ட்டு வந்திடுறேன்” என்று சொல்லி விட்டு ஆதீரன் கிளம்பி விட்டான்.

தென்றல் வந்தவள் இயல்பாக அபூர்வா சக்தியோடு சேர்ந்து விளையாட சித்ராவும் வந்து சேர்ந்து கொள்ள ரூபிணி சித்ரா தென்றல் அபூர்வா சக்தி என்று விளையாட இவர்களுக்கு மாலை சிற்றுண்டி தயாரித்துக் கொண்டு இருந்தார் பொன்னி.

கொஞ்ச நேரம் விளையாடி விட்டு பொன்னி தந்த சிற்றுண்டியை மகளுக்கு ஊட்டியபடியே “புவிக்குட்டி… வர புதன்கிழமை இருந்து நீயும் சக்தி கூட சேர்ந்து ஸ்கூலுக்கு போகனும்… அழாம போகனும் சரியா?” தென்றல் கேட்க

“ம்ம்… என்று தலையாட்டிய அபூர்வா நான் அலுவே மாத்தேன் (அழவே மாட்டேன்) அம்மம்மா தான் அலும்… அம்மம்மா கிட்டே அலாதே சொல்லு மா…” என்று உணவோடு சேர்த்து வார்த்தைகளையும் கடித்து கடித்து கூறினாள் அபூர்வா.

“பார்த்தியா டி உன் பொண்ணை… என் அத்தையை கிண்டல் பண்றதே இவளுக்கு வேலையா இருக்கு…” என்று கூறியபடியே ரூபி கொஞ்ச

“ம்ம்… இல்லாம பின்ன.. ஆனா ரூபி தென்றலை விட அபூர்வா குட்டி கொஞ்சம் குறைவா தாண்டி சேட்டை பண்றா…” என்று மகளை வாரினார் பொன்னி..

“அம்மா…” என்று தென்றல் செல்லமாக முறைத்தாள்.

சற்று நேரம் கழிய குமார் வந்து சேர இன்னும் கலகலப்பானது சூழல். குமார் வந்த பிறகும் கூட அபூர்வா யாரையோ தேடுவது போல வாசலை வாசலை எட்டிப் பார்த்து ஹாலுக்கும் வாசலுக்கும் நடக்க தொடங்க

“அப்புக்குட்டி என்னடி பண்ற?” ரூபி கேட்க

“எங்க அத்தை… இன்னூ காணோ…” என்று கேட்க

“எல்லாரும் தான் இங்க இருக்கோமே… யாரைடா கேட்குற அப்புக்குட்டி?” குமார் கேட்க

“ச்சூப்பர் மேன் தான்… வேலைக்கு போதேன் சீக்கம் வரேன் சொன்னா… இன்னூ காணோ…” என்று முகம் வாடி குழந்தை சொல்ல தென்றலை தவிர அனைவருக்கும் புரிந்து போக அவர்களுக்கும் தந்தையையும் மகளையும் சீக்கிரம் சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைத்து வேண்டிக் கொள்ள தென்றல் மட்டுமே மதனை தான் கேட்கிறாள் என்று நினைத்து

“புவிக்குட்டி மதன் அண்ணா பாவம் அவருக்கு வேலை இருக்கும் ல..‌ அவரு நாளைக்கு வந்து உன்கூட விளையாடுவாரு..‌ சரியா…?” என்று தென்றல் கூற

“அய்யோ தெட்டு… நான் மதனை கேட்கல ச்சூப்பர் மேன் வேணூ…” என்று அபூர்வா அழுத்தமாக கூற

“என்ன இவ… அம்மா இவ மதன் அண்ணாவை தான சூப்பர் மேன் னு கூப்பிடுவா… இப்போ அவர் இல்லனு சொல்றா… என்னமா சொல்றா?” தென்றல் குழப்பமாக கேட்க அனைவரும் என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் முழிக்க

“ஐயோ அத்தை… அப்புக்குட்டி மதன் அங்குள சூப்பர் மேன் சொல்ல மாட்டா… மதன் அங்குள் கூட தங்கி இருக்க பிரண்ட் அங்குள் தான் அவ சூப்பர் மேன் சொல்லுவா…” என்று சக்தி தெளிவாக கூறிவிட

“மதன் கூட இருக்க ஆளா? அண்ணா என்ன ண்ணா சொல்றா இவ உங்களுக்கு தெரியுமா?” என்று குமாரிடம் கேட்க

“ம்ம்… தெரியும் ம்மா… மதன் கூட இருந்த ஃப்ரண்ட் தான் அன்னைக்கு பாப்பா மயங்குனப்போ அவரு தான் மதன் கூட இருந்து ஹெல்ப் பண்ணிருக்காரு..‌ அதான் பாப்பா அப்படி சொல்றா..” குமார் விழுங்கி முழுங்கி கூற

“ஆனா நான் அன்னைக்கு ஹாஸ்பிடல் போனப்போ மதன் அண்ணா மட்டும் தான இருந்தாங்க..” தென்றல் கேட்க

“அது..‌ அப்போ அவருக்கு ஏதாவது வேலை வந்திருக்கும் போயிருப்பாரு…” என்று ரூபா சொல்ல

“ஓ… சரி அப்போ இப்போ இருக்காரா? நானும் அவரை பார்த்து தாங்க்ஸ் சொல்லிக்கிறேன்…” என்று தென்றல் மதன் வீட்டுக்கு போக மதன் இன்னும் வந்திருக்கவில்லை வீட்டில் யாரும் இல்லை என்று திரும்பி வந்து பொன்னியிடம் “எங்க ம்மா யாரையும் காணோம்?” என்று விசாரிக்க

“தெரியல ம்மா… அந்த தம்பி ஏதோ வேலை இருக்கு னு சொல்லிட்டு போச்சு…” என்று பொன்னி சமாளிக்க பார்க்க மதனும் குழந்தைகளை பார்க்கும் சாக்கில் சித்ராவை பார்த்து விட்டு போகலாம் என்று உள்ளே வர அவனை வரவேற்ற தென்றல் அவனுக்கும் சிற்றுண்டி காஃபி எடுத்து வந்து தந்து

“அண்ணா நீங்க கூட உங்க ஃப்ரண்ட் தான் அபூர்வா சூப்பர் மேன் னு கூப்பிடுவா னு சொல்லவே இல்லை… இப்போ பாருங்க திடீர்னு அவ சூப்பர் மேன் வேணும் னு அடம் பிடிக்கிறா… ஆமா எங்க உங்க ஃப்ரண்ட் எனக்கு இன்னும் இன்ட்ரோ கூட தரலை…” என்று கேள்விகளை அடுக்க குடித்த ஒரு சிப் காஃபி தொண்டையிலேயே வறண்டு போனது மதனுக்கு…

“அ… அது ம்மா.. அவரு.. அவர் என் ஃப்ரண்ட் தான் எப்போவாவது இங்க வந்து ஸ்டே பண்ணுவாரு. இன்னைக்கு அவருக்கு முக்கியமான வேலையா போனாரு. மண்டே தான் வருவாரு…” என்று மதன் முடிக்க

“அச்சோ.. புவிக்குட்டி உன் சூப்பர் மேன் வெளியே போய்டாராமே… அவரு வந்ததும் எனக்கு காட்டு…” என்று தென்றல் கூற அனிச்சம் மலர் போல வாடிப்போனாள் அபூர்வா.

“நான் எப்போ கூப்பித்தாலும் வதேன் னு சொன்னா… எனக்கு ஒதனே ( உடனே) ச்சூப்பர் மேன் வேணூ…” என்று முகத்தை சுருக்கி அழ தொடங்கினாள் அபூர்வா.

“அப்புக்குட்டி ஏன் அழுற? அப்பா… உன்கிட்ட அந்த ஆதீ மாமா நம்பர் இருக்கு ல அதுக்கு ஃபோன் போட்டு சீக்கிரம் வரச்சொல்லு… பாப்பா அழறா பாரு…” அபூர்வாவை சமாதானம் செய்ய நினைத்து ஆதீயின் பெயரை சக்தி உச்சரித்து விட தென்றல் விலுக்கென்று நிமிர்ந்து பார்க்க “ஏய் சும்மா இரு டி…” என்று ரூபா மகளை அடக்க ஏதோ தவறாக பட்டது தென்றலுக்கு…

முதலில் ஆதீ கன்ஸ்ட்ரக்ஷன் என்ற பெயர் சற்று உறுத்தல் தந்தாலும் நிறைய பேர் தங்கள் பிள்ளைகளின் பெயரை தன் நிறுவனத்திற்கு சூட்டுகின்றனர் அத்தோடு ஆதீ என்று பெயர் வைத்தால் ஆதீரனாக தான் இருக்க வேண்டும் என்று இல்லையே என்று நினைத்து கொண்டு தான் நேர்காணலில் கலந்து கொண்டாள் தென்றல்.

ஆனால் இப்போது ஆதீ என்று சொன்னதும் ரூபா அதட்டவும் மற்றவர்கள் முகமும் சரியின்றி இருக்க எதுவோ உறுத்த “ஆதீயா? அண்ணா.. யாரு அந்த ஆதீ?” கோபம் கலந்த சந்தேக குரலில் தென்றல் கேட்க அனைவருமே எச்சிலை விழுங்கினர் எப்படி சொல்வது என்று…

“அது… தென்றல் வேற யாரும் இல்ல…. நம்ம பாஸ் தான் கொஞ்ச நாள் லீவ் ல இருந்தாரு… அவர் தான் குழந்தைங்க கூட சேர்ந்து விளையாடினாரு…” அவளை சமாளிக்க சித்ரா சொல்ல

“பாஸா? அவரு ஏன் லீவ் போட்டு என் குழந்தை கூட விளையாடிட்டு இருக்கனும்? என்ன சொல்றீங்க எல்லாரும்? ஃபர்ஸ்ட் ஆதீ யாரு?” மிகுந்த கோபத்தோடு தென்றல் கேட்க

“ஏன்னா அவரு தானே உன் குழந்தையோட அப்பா… அப்போ அவரு குழந்தையோட விளையாடாம வேற யாரு விளையாடுவா? ஆமாண்டி.. நீ நினைக்கிற மாதிரி உன்னோட தீரன் தான் இந்த ஆதீ போதுமா?” என்று அதிரடியாக பொன்னி கூற அதிர்ந்து போய் நின்றாள் தென்றல்…

  • தொடரும்…
  • நன்றியுடன் DP ✍️

1 thought on “தீரனின் தென்றல்-33”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *