தீரனின் தென்றல் – 36
Thank you for reading this post, don't forget to subscribe!தன் தாயும் தோழியும் அண்ணனும் கூட ஆதீரனின் உறவு வேண்டும் என்ற போது தென்றலுக்கு பெரிதாக தோன்றவில்லை… ஆனால் தன் மகள்… இத்தனை ஆண்டுகள் தான் உயிரோடு வாழ்ந்ததே இவளுக்காக தானே… அப்படி இருக்க இன்று தனக்கு தந்தை வேண்டும் என்று கூறி விட்டாளே… என்று உள்ளளவில் உடைந்து போனாள் தென்றல்.
அபூர்வா தனக்கு அப்பா வேண்டும் என்று சொன்ன உடனே அதே இடத்தில் மடங்கி அமர்ந்து விட்டாள் எதுவும் பேசாமல்…
“தென்றல்” என்று பொன்னி பதறி அருகில் செல்ல வேண்டாம் என்று கை நீட்டி தடுத்தவளுக்கு கண்ணீர் பெருக்கெடுக்க மகளின் முன்பு முட்டியிட்டு அமர்ந்து
“புவிக்குட்டி… அம்மா உனக்காக தானேடா வாழ்ந்தேன்… எந்த விதத்துல உனக்கு குறை வைச்சேன். இப்போ உனக்கு அப்பா வேணும் னு கேட்குற… நான் உன்னை பார்த்துக்க மாட்டேனா?” என்று தென்றல் கேட்க
“அம்மா வேணும்.. அப்பாவு வேணும் தெட்டு… ப்பிளீச் நீனு தான நங்கா ( ரங்கநாதன்) தாத்தா ச்சூப்பர் அப்பா சொன்ன… சத்திக்கு அப்பா கொமாரு மாமா ஈக்கு கீதே (கீழே) பார்க் ல அளாடுற எல்லா ஃப்ரண்ட் கூட அப்பா ஈக்கு… எனக்கும் வேணும்மா… ச்சூப்பர் மேன் என் கூட எப்பி (எப்படி) அளாடுவான் தெயுமா? எனக்கு அவனே அப்பாவா வேணும்மா” மழலை மொழியில் தன் தேவையை கூறி விட்டாள் அபூர்வா.
தென்றலின் அமைதி புயலுக்கு முன்னான அமைதி என்று புரிந்த ஆதீரன் என்ன நடக்குமோ என்று பதட்டத்தில் எச்சில் விழுங்கிய படி நிற்க
எதுவும் செய்யாமல் எழுந்து சென்ற தென்றல் அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள்.
“பாஸ் என்ன பாஸ் இது? இப்போ என்ன பண்றது?” மதன் கேட்க
“அதெல்லாம் ஒன்னும் பண்ண வேண்டாம் தம்பி.. அவ இனி எங்கேயும் போக மாட்டா… மாப்ளை நீங்க தைரியமா இருங்க உங்க பொண்ணு கூட நேரம் செலவு பண்ணுங்க… தென்றல் இனி எந்த பிரச்சனையும் பண்ணமாட்டா…” என்று பொன்னி கூற
“அம்மா.. அவ குழப்பமான மைன்ட் ல இருக்கா… எதாவது தப்பா முடிவு எடுக்க போறா…” சித்ரா பதற
“ஒருவேளை அவ முன்னாடி இருந்த தென்றலா இருந்திருந்தா அந்த முடிவு எடுப்பா சித்ரா.. ஆனா இப்போ அவளுக்கு அத்தையையும் அவ பொண்ணையும் பார்த்துக்க வேண்டிய பொறுப்பு இருக்கே.. இவங்க ரெண்டு பேரும் கூட அண்ணனை பத்தி திட்டி பேசிருந்தா இப்போ அமைதியா முறைச்சுக்கிட்டு கூட இங்கேயே இருந்திருப்பா.. ஆனா அவளோட அம்மாவும் பொண்ணும் அவளுக்கு எதிரா இருக்கிறதை நினைச்சு அழுகை வந்திருக்கும் அதை இங்க காட்ட முடியாம ரூம்ல போய் அழுதுட்டு இருப்பா… காலையில சரியாகிடுவா… நீங்க அமைதியா இருங்க சித்ரா.” என்று தோழியை உணர்ந்து ரூபிணி சொல்ல அனைத்தும் அறைக்குள் கேட்டாலும் தென்றல் அமைதியாக இன்னொரு திட்டத்தை மனதில் வகுத்து அமைதி காத்தாள் தென்றல்.
“சரிப்பா… நேரம் ஆகுது பாருங்க மாப்ளை… தென்றல் கொஞ்சம் சரியாகுற வரை மதன் தம்பி கூடவே தங்கிக்கோங்க…” என்று பொன்னி தயக்கமாக கூற
“ஐயோ இதுல என்ன மா இருக்கு… அந்த வீடே பாஸோடது தான்… வாங்க பாஸ் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க…” என்று மதன் அழைக்க
“அம்மா நானும் கிளம்பறேன்” என்று சித்ரா சொல்ல
“சித்ரா இன்னைக்கு நீங்க இங்கேயே தங்குங்க…” என்று ரூபி கேட்க சித்ரா தயக்கமாக பார்த்தாள்.
அதை புரிந்து “சரி மச்சான்… நாம சேர்ந்து பேசிட்டே தூங்கி ரொம்ப வருஷம் ஆகுது ஸ்கூல் காலேஜ் படிக்கும் போது கம்பைன் ஸ்டடி படிக்கும் போது தூங்கினது வாங்க போகலாம்.” என்று ஆதீரனையும் மதனையும் அழைத்துக் கொண்டு எதிர் ஃப்ளாட்டில் நுழைந்தான் குமார்.
“சரி சித்ரா பிள்ளைகள கூட்டிட்டு போய் படுக்க வை நான் அதுகளுக்கு பால் காய்ச்சி எடுத்திட்டு வரேன்..” என்று அடுப்படி சென்றார் பொன்னி.
மறுநாள் காலை முதல் நாள் தந்த சோர்வும் ஞாயிற்றுக்கிழமை தானே என்ற அலட்சியமும் சேர்ந்து கொள்ள யாரும் எழுவதாய் இல்லை என்று உறக்கத்தில் இருக்க ஏதோ சத்தம் கேட்டு எழுந்து வந்தார் பொன்னி.
தென்றல் கிச்சனில் காஃபி போட்டுக் கொண்டு இருக்க அழுது அழுது முகம் எல்லாம் வீங்கி இருந்தது. பொன்னிக்கு அதை பார்த்து வருத்தமாக இருந்தாலும் இப்படியே விட்டால் மகள் மற்றும் பேத்தியின் நிலை என்ன என்ற கவலையில் தான் நேற்று அனைத்தையும் போட்டுடைத்தார் பொன்னி.
தென்றல் கோபமாக இன்று முழுக்க அறையை விட்டு வரமாட்டாள் என்று நினைத்திருக்க அவள் வெளியே வந்து காஃபி போட பொன்னி ஆச்சரியமாக பார்க்க தனக்கு மட்டும் காஃபி போட்டுக் கொண்டு மீண்டும் அறைக்குள் சென்று விட்டாள் தென்றல்.
பெருமூச்சு விட்ட பொன்னி அனைவருக்கும் காஃபி கலக்க பாலை அடுப்பில் சிம் செய்து வைத்து விட்டு ரூபியை எழுப்ப அவள் எழுந்த பாடில்லை… சித்ரா முதலில் எழுந்து அம்மா “தென்றல் எழுந்தாளா? என்ன பண்றா?” என்று இன்னும் பதட்டமாக கேட்க
“அவ ரூபி சொன்ன மாதிரி ராத்திரி பூராவும் அழுதுருப்பா போல மா.… கண் சிவந்து முகம் வீங்கி இருந்தது. அதனால தலைவலி வந்திருக்கும் போல.. வெளியே வந்து அவளுக்கு மட்டும் காஃபி போட்டுக் கிட்டு ரூம்க்குள்ள போய் கதவை சாத்திக்கிட்டா.. அவளுக்கு கோபம் இருக்க தான் செய்யும் சித்ரா… கொஞ்ச நாள் விட்டு தான் பிடிக்கனும்… ம்கூம் பார்ப்போம்…” என்று ஆயாசாமாக சொல்லிவிட்டு கிச்சன் சென்றார் பொன்னி.
அதன் பின்னர் ரூபி எழுந்து வர காஃபி கலக்கிய பொன்னி மூன்று கோப்பையில் ஊற்ற “ஹை… அத்த காஃபி ஸ்ட்ராங்கா இருக்குல இன்னும் டையர்ட் போகவே இல்லை….” என்று கோப்பையை தூக்கப் போக
“அடியே… முதல்ல உன் புருஷனுக்கு கொண்டு போய் கொடு… அப்படியே உன் அண்ணனுக்கும் அந்த தம்பி மதனுக்கும் சேர்த்து கொடு… பாவம் என் புள்ளை எப்படி தான் இவளோட காலம் தள்றானோ…” என்று ரூபியிடம் மூன்று கோப்பையையும் ஒரு தட்டில் வைத்து கொடுத்து அனுப்பி விட்டார் பொன்னி.
குமார் ஆதீரன் மதனும் கூட காஃபியை குடித்து விட்டு இங்கு வர “அத்தை தென்றல் எப்படி இருக்கா?” ஆதீரன் பதட்டமாக கேட்க சித்ராவிடம் சொன்னதையே அவனிடமும் கூறி அமைதி படுத்திய பொன்னி “குமாரு… நீ போய் கறி மீன் எல்லாம் வாங்கிட்டு வா… இன்னைக்கு ஒரு நாள் தான் எல்லாரும் வீட்ல இருக்கீங்க… எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி சமைக்கிறேன் ஒன்னா உட்கார்ந்து சாப்பிடுவீங்க..” என்று சொல்ல
“அம்மா.. தென்றல் இப்படி இருக்கும் போது…” மதன் தயங்க
“அட அவ எங்க போயிருவா தம்பி… அப்புக்குட்டியை வைச்சே அவளை ஈசியா வழிக்கு கொண்டு வந்திடலாம்…” என்று பொன்னி கூற
“ஆமா மதன்… இப்படியே இருந்தா எப்படி எல்லாம் சரியாகும்… பிரச்சினை வந்தா தான் அதுக்கான தீர்வு தெரியும். எந்த தப்பான முடிவும் எடுக்காம பார்த்துக்க இத்தனை பேர் இருக்கோமே… சரி நான் கடைக்கு போய்ட்டு வரேன் அம்மா வேற எதுவும் வாங்கனுமா?” என்று கேட்டு விட்டு கிளம்பினான் குமார்.
ஆதீரன் அத்தையும் தோழனும் சொல்வதை கேட்டு அமைதியாக இருக்க தென்றல் வெளியே வரவே இல்லை… அபூர்வா எழுந்த உடனே “அம்மா… அம்மா” என்று தென்றலை தேட தென்றல் வெளியேவே வரவில்லை…
“அப்புக்குட்டி… அம்மா இங்க தான் இருக்கா… நான் உனக்கு குடிக்க பால் கொண்டு வரேன் நீ சமத்தா சக்தி கூட விளையாடு…” என்று பொன்னி சொல்ல
“இல்ல அம்மம்மா… எனக்கு இப்போ அம்மா வேணும்…” என்று வெளியே வந்தவள் தென்றல் இருக்கும் அறை கதவை தட்ட அப்போதும் கூட தென்றல் கதவை திறக்காமல் இருக்க ஆதீரன் பயம் கொண்டு அபூர்வா அருகில் வந்து நிற்க “அப்பா… தெட்டு கதவ தெறக்க மாட்டா…” என்று முதல் முறை அழைத்த அபூர்வா அவனின் காலை கட்டிக் கொண்டு அழ
தன் மகள் முதல் முறை தன்னை “அப்பா” என்று அழைத்த மகிழ்வை கூட கொண்டாட மறந்து தென்றல் அறையை தட்டினான் ஆதீரன்.
- தொடரும்…
- நன்றியுடன் DP ✍️
O.g. what what happened to thendral?.Sema twist. Intresting