Skip to content
Home » தென்றல் நீ தானே-1

தென்றல் நீ தானே-1

அத்தியாயம் -1

Thank you for reading this post, don't forget to subscribe!

    இளஞ்சிவப்பு நிற ‘ஸ்கூட்டி’யில் புயலாய் வந்தாள் துஷாரா. அவள் வருகை அறிந்ததாலோ என்னவோ, வீட்டின் வெளிவாசல் கதவுத்திறந்திருக்க, ‘சர்ரென்று’ ‘ஸ்கூட்டி’யை, வீட்டு ‘காம்பவுண்ட்’டிற்குள், எப்பொழுதும் நிறுத்தும் இடத்தில், அவசர அவசரமாய் நிறுத்திவிட்டு, வீட்டின்‌ ஹாலுக்குள் நுழைந்தாள் கல்லூரி பாவை.

  அவ்விடத்தில் ஊதுபத்தி வாசமும்,  தோட்டத்தில் அன்று மலர்ந்த பன்னீர் ரோஜாவின் மணமும், தெய்வீக மணத்தை பரப்பியது.  
இறைவனுக்கு பூஜிக்க காமாட்சிவிளக்கு சுடர்விட்டு ஒளிர்ந்திருக்க, ஹாலிலிருந்த தொலைக்காட்சியில் கந்தசஷ்டிகவச வரிகள் ஒலித்துக் கொண்டிருந்தது.

ஆறுமுகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியில் நீண்டபுருவமும்
பன்னிரு கண்ணும் பவளச்செவ்வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச்சுட்டியும்
ஈராறு செவியில் இலகுகுண்டலமும்
ஆறிருதிண் புயத்தழகிய மார்பில்
பல்பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன

அவ்வரிகளை கேட்க, ஆலயத்தினுள் இருக்கும் உணர்வை தந்தது. ஆனால் ‘டிவி ரிமோட்’டை எடுத்து செய்தி சேனலை மாற்றினாள் அவள்.

  செய்தி அலைவரிசையில், ‘நாளைக்கு நேரு ஸ்டேடியம்ல நடக்கப்போற மாபெரும் தென்னிந்திய விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதுல பல்வேறு துறையில் இருக்கறவங்களுக்கும் விருதுகள் வழங்கப்படுது. அதில் முக்கியமா கலை நிகழ்ச்சியில் பங்கேற்க, முன்னனி நடிகை நடிகர்கள் வரப்போவதால் இங்க அதிகபட்ச கூட்ட நெரிசல் இருக்கு. இப்பவே இங்கிருக்கும் லாட்ஜ் ரூம்ல, ரூம்ஸ் எல்லாமே புக்கிங். பாதிக்கு மேல் ஊர்லயிருந்து வந்த இளைஞர்கள் கிடைக்குற இடத்துல தூங்கிட்டு இருக்காங்க.
  ரொம்ப ஆர்வமா இருக்கு. இந்த கூட்டத்தை அடக்க, திருட்டு பயத்தை தவிர்க்க நிறைய நிறைய போலீஸ் அதிகாரிகள் நிற்கறாங்க. கனிவான போலீஸ் மக்களுக்கு உதவிகள் கூட செய்யறாங்க.” என்று வரிசையாக நேரலையை காட்ட, அங்கே அவள் எதிர்பார்த்த போலீஸ் அதிகாரியும் இருந்தார்.

  “இப்ப எதுக்குடி கந்த சஷ்டி கவசத்தை மாத்தின?” என்று பாடலை கேட்டுக்கொண்டே, குலோப் ஜாமூனை தயாரித்த வள்ளி, ஜல்லி கரண்டியோடு ஹாலுக்கு வந்தார்.

    “சாமி ரொம்ப முக்கியம். நீங்க இந்த சாமி பூஜைனு இதை கட்டிட்டே அழுங்க. அவரு கடமை வேலைனு அதை கட்டிட்டு அழுவட்டும். நான் இங்க தனியா புலம்பிட்டு இருக்கேன்.” என்று கோபமாக அறைக்குள் சென்று கதவடைத்தாள்.

   “என்னவாம் இவளுக்கு?” என்று டிவியை காணும் நேரம் நேரடி அலைவரிசையாக தொகுப்பாளர் பேசுவது இன்னமும் ஒளிப்பரப்பாக, அதில் இருந்தவரை கண்டு, “துஷாரா உங்கப்பா டிவில வர்றார் டி” என்று கூப்பிட்டார்.

அடுத்த நொடியே “அச்சோ… இந்த மனுஷனுக்கு இங்க வேலையை போட்டுட்டாங்க. அப்ப நாளைக்கு இவ பிறந்தநாளுக்கு வரமாட்டாரா?” என்று உரைத்துவிட்டு ‘அட அதுக்கு தான் இந்த குதிகுதிக்கறாளா?’ என்று வேகமாய் சமையலறைக்கே சென்றார்.

  துஷாராவுக்கு நாளை பிறந்த நாள். தந்தை தன் பிறந்த நாளுக்கு, ஹோட்டல் அழைத்து சென்று, சினிமா படத்திற்கு குடும்பமாய் செல்வதாக, இன்று காலை வாக்கு தந்தார்.

  இன்றோ தன் தோழி வந்து ‘உங்கப்பாவுக்கும் எங்கப்பாவுக்கும் நேரு ஸ்டேடியத்தில் டூயூட்டி போட்டுயிருக்காங்க. சினிமா நடிகர் நடிகைகளுக்கு பாதுகாப்பா அங்கயும் இங்கேயும் அலைவாங்க. உன் பிறந்த நாள்ல இந்தமுறை உங்கம்மாவோட கோவில்ல மட்டும் தனியா கொண்டாட போற” என்று நளினி ஏற்றிவிட்டாள்.
   துஷாரா தந்தை அண்ணாமலையோடு தான் நளினி தந்தை ராமுவும் வேலை பார்ப்பதால் அவளுக்கு சற்று முன் இந்த தகவல் தெரிந்தது. அதோடு நேரடி ஒலிபரப்பில் அண்ணாமலை நுழைவுவாயிலில் நிற்பது தெரிய அதையும் கூறினாள். போனில் நெட் இருந்தும் அதில் பார்க்காமல், நேராக வீட்டிற்கு வந்ததும் டிவியில் தந்தையை கண்டு கொதித்துவிட்டாள்.

   துஷாராவுக்கு கடந்த முறையும் இதே பிரச்சனை, ஆசையாக தாய் தந்தையோடு தன் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக ஓடிவந்தவளுக்கு யாரோ தற்கொலை செய்து விட்டதால் விசாரணைக்கு துணைக்கு அழைத்து சென்று விட்டார் மேலதிகாரி.  
 
  இந்த முறை வாக்கு தந்தும், மீண்டும் ஏமாற்றம்.
   முகம் கூட கழுவாமல் மெத்தையில் படுத்து தலயணையை கண்ணீரால் நனைத்தாள்.
  அவள் ஒன்றும் சிறுபிள்ளை இல்லை. ஆனாலும் உள்ளத்தில் சிறு கவலை படர்ந்துவிட்டது. வீட்டுக்கு ஒரே குழந்தை அதிலும் செல்லமாக வளர்த்த தந்தை தோளிலேயே இருக்க, இப்படிப்பட்ட சாதாரண ஆசை கூட பெருத்த ஏமாற்றத்தை தந்து விடுகின்றது.

  வள்ளி கதவை திறந்து, “துஷாரா… உனக்கு பிடிச்ச ஜாமூன் செய்திருக்கேன். நல்லா ஜீரால ஊறியிருக்கா பாரு?” என்று வாயில் ஊட்டிவிட செல்ல, “எனக்கு ஒன்னும் வேண்டாம்.” என்று முகம் திருப்பி கொண்டாள்.

  “இப்ப தாண்டி அம்மா கையால ஊட்டி சாப்பிட முடியும்‌. அடுத்தவருஷம் கல்யாணமாகி புருஷன் வீட்டுக்கு போயிட்டா இப்படி அம்மா கையால ஊட்டிவிட முடியாது.” என்று கூறவும், “ஆஹ்… நீங்க கஷ்டப்படுத்தறதுக்கு நானே கல்யாணம் பண்ணி புருஷன் வீடே கதின்னு இருக்க போறேன். அப்ப தெரியும். உங்க புருஷனுக்கு… ரிட்டயர்மெண்ட் வாங்கிட்டு பொண்ணு கூட இருக்க முடியலையேனு அழுவார்.” என்று அழுகையை அடக்கி அன்னையிடம் பேசினாள்.

“பார்டா… ‘கல்யாணமா ஏன்மா இப்படி பேசறேன்’னு வாயில வரலை. அப்ப அப்பாவிடம் சொல்லி, மாப்பிள்ளை பார்த்துடலாமா இந்த வருஷம்” என்று வள்ளி கிண்டலாய் கேட்டார்.

”ம்கூம், சும்மாயிருக்க மாட்டிங்க. என்னை துரத்தி விடாதிங்க.” என்று பௌலில் உள்ள இனிப்பை சுவைத்தாள்.

   லேசாக கண்ணீர் அரும்பிட, வள்ளி துடைத்து விட்டார்.

  அண்ணாமலை போனில் மகளை அழைத்திட, அவளோ கத்தரித்து முடித்தாள்.

இரவு தந்தையின்றி சாப்பிடும் போது வள்ளி போனில் அண்ணாமலை அழைத்து, மகள் சாப்பிட்டாளா இல்லையா என்று அறிந்து கொள்ள, ‘இதுக்கு ஒன்னும் குறைச்சலில்லை’ என்று முனங்கினாள் துஷாரா.

  வள்ளியிடம் “நைட் எப்படியும் வந்துடுவேன்‌ முதல் வாழ்த்து என்னுடையது தான்” என்று அவர் போனில் சொல்ல, “நான் நம்பிட்டேன்” என்று ஸ்பீக்கரில் இருந்ததால் உரைத்தாள் துஷாரா.

   “அப்பாவும் பொண்ணும் என்னவோ பண்ணி தொலைங்க, ஏங்க…. நைட் வந்துடுங்க” என்று அணைத்தார் வள்ளி.

  “அவர் வருவார்னு நம்பறிங்க பாருங்க” என்று துஷாரா சலித்துக் கொண்டாள்.
  துஷாரா சாப்பிட்டு உறங்க முயன்றாள்.

   வள்ளியோ, ஹாலுக்கும் அறைக்கும் நடந்துக் கொண்டிருந்தார்.

அண்ணாமலை சொன்னதை போல பதினொன்று இருபத்திரண்டு மணிக்கு கதவை தட்டினார்.

  உதட்டில் கையை வைத்து அமைதிக்காத்திட கூறினார்.

  வள்ளியோ “ஆமா..‌ உங்க பொண்ணு தூங்கி ஒருமணி நேரத்துக்கு மேல ஆச்சு.” என்று கூறினார்.

  அண்ணாமலை மெதுவாக முகம் கைகால் அலம்பி குளித்து முடித்து வர, அதற்குள் வள்ளி பாலும் பிரட்டும் எடுத்து வந்தார். 

  “என்னங்க மறுபடியும் போலீஸ் டிரஸ்?” என்று அவர் உடையை பார்த்து கேட்டு முடிக்க, “பர்மிஷன் போட்டுட்டு வந்திருக்கேன் வள்ளி. பொண்ணுக்கு நேர்ல பிறந்த நாள் வாழ்த்து கூறி, கேக் கட் பண்ணி, மகளோட செல்ஃபி போட்டோஸ் எல்லாம் எடுத்துட்டு, கிளம்பணும்.

  டிவில பார்த்தல்ல… நிறைய போலீஸ் குமிச்சிருக்காங்க. அதோட முதல்வர் வேற குறிப்பிட்ட நேரத்துல வந்துட்டு போறார். பலத்த பாதுகாப்பு ஏற்பாடு இருக்கு. அதனால் தான் என்னையும் ராமுவையும் திடீருனு வரசொல்லிட்டார். நமக்கு மேல் அதிகாரிங்க வேலை சொல்லுறப்ப கேட்டு தானே ஆகணும்.” என்று மணியை பார்க்க பதினொன்று நாற்பத்தியந்து காட்டியது.

மகளின் சிகையை  வருடி, “பொண்ணோட சின்ன சின்ன ஆசையை கூட நிறைவேத்த முடியலை.” என்று மகளையே ஆசைதீர கனிவாய் பார்த்தார்.

  அவருக்கு மகளின் முகத்தை பார்த்தால் கூட பசி தூக்கம் மறந்துவிடும். ஏன் உலகமே மறந்து விடுவார்.

   “போதும் மகளை ரசிச்சது. இப்ப எழுப்பலை. அடுத்து போன்ல அவ பிரெண்ட்ஸுங்க கால்  பண்ணிடுவாளுங்க” என்று மகளை தட்டி எழுப்பினார் வள்ளி.

  “என்னம்மா?” என்று முகம் சுருங்கி எழுந்தவள் தந்தையை காணவும் ஆச்சரியமும், ஆனந்தமும் அடைந்தாள்.

  “துஷாரா குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்” என்று கூற, “அப்பா” என்று கட்டிக்கொண்டாள்.

ஆனந்தத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்த “எப்படி வந்திட்டிங்க. அங்க மேலதிகாரி விடமாட்டேங்கறார்னு சொல்லி என்னை சமாதானம் செய்விங்கனு பார்த்தேன்.” என்றாள்.

“முதல்ல கேக் கட் பண்ணுடி” என்று வள்ளி கூற, “ஆஹ்ஹா… கலர் டிரஸ்ல அப்பா இருக்கணும் எப்பபாரு போலீஸ் டிரஸ்.” என்றாள்‌ அங்கலாய்த்தாள்.

  “உங்கப்பா பர்மிஷன் கேட்டு வந்திருக்கார். விளையாடாதே” என்று வள்ளி கூற, மகள் தனக்கென வாங்கிய உடை அவளது மேஜை அருகேயிருக்க சட்டை மட்டும் எடுத்து மாற்றினார்.

  கால்சட்டை அதே காக்கிபேண்டில் இருக்க, பன்னிரெண்டு அடிக்கவும் மெழுகுவர்த்தி ஏற்றி, அதை ஊதி, கேக் கட் செய்யவும், தாய்வள்ளி, தந்தை அண்ணாமலையோடு துஷாரா மிக எளிமையாக இனிமையாக பிறந்தநாளை கொண்டாடினாள்.

தந்தை கூட இருப்பதே அவளுக்கு பேரானந்தம். அவர் நினைத்தது போலவே செல்ஃபியை எடுத்து தள்ளினாள். கேக்கை தாய் வள்ளி முகத்தில் பூசி விளையாடினாள். அண்ணாமலை மகளது விளையாட்டில் அகமகிழ்ந்தார்.

   வள்ளி மகளை துரத்த, துஷாரா தந்தை பின் மறைந்து ஆட்டம் காட்டினாள்.

இருபது நிமிடம் கழிய, போனில் வாட்ஸப்பில் வாழ்த்துகள் வழிந்தது. ஆனால் அவள் எடுத்து பார்க்கவில்லை. எல்லாம் நண்பர்கள் தானே பொறுமையாக காண்போம் என்றெண்ணினாள்.

   அண்ணாமலையோ பிறந்த நாள் பரிசாக “இந்தா மூன்று டிக்கெட் நீயும் நேரு ஸ்டூடியோவுக்கு வரலாம்.” என்று கொடுத்தார்.

  அந்த டிக்கெட்டின் விலை அதிகம். மகளோடு ஹோட்டலுக்கும், சினிமா படத்திற்கும் போக முடியாதென்று, இந்த டிக்கெட்டை கஷ்டப்பட்டு வாங்கி, மகளின் பிறந்த நாளில் சினிமாவில் நடித்தவர்களை காணவே தந்திருக்கின்றார்.

அவரும் நாளை அங்கே இருப்பதால் வாய்ப்பை அமைத்துக் கொண்டார்.

  “நான் டியூட்டில இருப்பதால் அங்க தான் இருப்பேன். நீ உன் அம்மாவோட, உன் பிரெண்ட் நளினியை கூட்டிட்டு அங்க வந்துடு‌. பிறந்த நாளுக்கு அப்பா உன்னோட இருந்த மாதிரி ஆகும். குடும்பமா வெளியே போன மாதிரியும் இருக்கும்” என்றதும் துஷாரா கண்ணீரோடு தந்தையை அணைத்து கொண்டாள்.
 
  “நான் நல்ல மகளா என்பது தெரியாது அப்பா. ஆனா நீங்க நல்ல அப்பா” என்று கூறினாள்.

   “யார் சொன்னா… நீயும் நல்ல மகள்‌. பிறந்த நாளும் அதுவுமா அழக்கூடாது. சரிம்மா அப்பா கிளம்பறேன். இன்வஸ்டிகேஷன்ல தான் என்னால திருடனை விரட்டி பிடிக்க முடியாது. தொப்பை சதி செய்யும்.  இது போல பாதுகாப்பு முறைமைகளுக்கு நான் நேரத்துக்கு வரலைன்னு அப்பறம் நடுவுல பர்மிஷன் கேட்டாலும் தரமாட்டார். நான் புறப்படறேன்” என்று மகளது ஆனந்தக்கண்ணீரை துடைத்து, மேல்சட்டையை மாற்றி காக்கி உடையை அணிந்தார்.

   துஷாரா தந்தையிடம் கேக்கை ஒரு பாக்ஸில் போட்டு மற்றவர்களுக்கும் கொடுத்து விட, மகள் நெற்றியில் முத்தமிட்டு, வள்ளியிடம் “கூட்டத்துல நடிகர் நடிகைகளை பார்க்கறேன்னு எம்மகளை கவனிக்காம இருந்துடாத” என்று அறிவுறுத்திச் சென்றார்.

   “உங்கப்பொண்ணு அங்க ஸ்டேடியத்துல நடிகன் ப்ரனித் இருக்கார், புது நடிகன் அம்ரிஷ்  இருக்கார்னு என்னை கழட்டி விட போறா. என்னவோ அவளை நான் கவனிக்காம இருக்கற மாதிரி” என்று வெள்ளித்திரை நடிகர்களை மகள் கவனித்து அம்மாவையே கவனிக்க மாட்டாள் என்று கூறவும் அண்ணாமலை சிரித்து, டாட்டா காட்டி இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார்.

  “என் புருஷன் சொன்னது மாதிரி வந்தாரா?” என்று வள்ளி மகளிடம் கேட்க, “எங்கப்பா… எனக்காக எங்கிருந்தாலும் வருவார்” என்று கர்வமாய் கூறினாள் மகள்.

  “சரி சரி அப்பாவிடம் கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பாருங்கன்னு சொல்லிடவா?” என்று கேட்டார் வள்ளி.

“பார்த்திங்களா… சந்தடி சாக்கில் என்னை அப்பாவிடமிருந்து பிரிக்கற வேலையை பார்க்கறிங்க. எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம்.” என்றாள்.

  “உன்னை எல்லாம் அப்பா வேலையில் இருக்கும் போதே ஒருத்தனிடம் ஒப்படைக்கணும்னு நினைக்கறார்.” என்று வள்ளி உரைத்திட, “அதெல்லாம் அப்பா என்னிடம் சொல்லலை. என் ரியல் ஹீரோ வரவேண்டிய நேரத்துக்கு வருவான். அப்ப கல்யாணம் பண்ணிப்பேன்‌. இப்ப அரியர் இல்லாம படிப்பை முடிக்கணும்” என்று அன்னையிடம் வாயாடினாள்.

  -தொடரும்.
பிரவீணா தங்கராஜ்

கதை வாசிக்கும் அன்பான ரீடர்ஸ் உங்க கருத்தை கமெண்ட்ஸ் பகுதியில் தட்டி விடுங்க. எனக்கு முகநூலிலா கருத்து வரவில்லை என்றால் அங்கே பகிர்வதை குறைத்து கொள்வேன். எல்லாரும் புதுக்கதை போடுங்கன்னு சொல்லறிங்க. கதை போட்டதும் வாசிக்க வர்றிங்க. பட் கமேண்ட்ஸ்… நீங்க நினைக்கறிங்கன்னு தெரிந்தா தானே அடுத்ததுடுத்த கதையில் நிறை குறையை நீக்கி, என்னால இன்னும் நல்லவிதமா யோசிக்க முடியும். அதனால் கருத்து முக்கியம் தட்டி விடுங்க.

 

20 thoughts on “தென்றல் நீ தானே-1”

  1. கடமை தவறாத
    காவலன் தந்தை
    கடவுள் பக்தியில்
    கணவனை புரிந்த
    குடும்பத்தலைவி தாய்
    கல்லூரியில் படித்தாலும்
    கண்முன் பிறந்தநாளில் தந்தையை
    காண துடிக்கும் மகள்…
    கடமை பிரித்தாலும் மகளுக்கு
    காலத்தை கொடுக்கும் தந்தை….

  2. Dharshinipriya

    Super sis amazing start 👌👍😍 arambamey appa ponnu paasam attagasam eagerly waiting to read this story 😘❤️💞

  3. Unmaiavey police life ithuthaan… Nalla naal ku kooda veetla family kooda time spend panna mudiathu… Yetharthamana unmaigala theliva orey oru birthday va solli arputhama sollitinga… Nice…

  4. M. Sarathi Rio

    தென்றல் நீ தானா..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 1)

    துஷாரா…! பேரே நல்லா இருக்கு பாசக்கார பொண்ணு போல, ஆனா அதுவே பீதியை கிளப்புதுங்க. பின்னே, இப்படிப்பட்ட பாசக்கார டாடீஸ் லிட்டில் பிரின்ஸஸ் தான்
    லவ் வந்தவுடனே, அப்பாவுக்குத் தெரியாமலே மறைக்குறது, கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு அப்பனுங்களை ஒரேயடியா ஏமாத்தி கலங்க வைச்சிடறாங்க. துஷாரா அப்படிப்பட்ட பொண்ணு இல்லைன்னு சத்தியம் பண்ணி சொல்லுங்க, அப்பத்தான் நான் கதையையும் படிப்பேன், கமெண்ட்ஸ்ஸூம் போடுவேன்.
    (சும்மா உல்லலாய்க்கு)

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *