புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

நீயின்றி வாழ்வேது-2

நீயின்றி வாழ்வேது-2

     இருகைகளையும் தலையில் தாங்கி பிடித்தவன் அப்படியே சிகைக்குள் விரலை வைத்து கோதி அப்படியே பின்பக்கம் சாய்ந்து அமர்ந்தான்.

   எப்படிச் சொல்வதென்ற பெருமூச்சும், தயக்கமும் இருந்தது. ஆனால் சொல்ல வேண்டிய கட்டாயமும் அவசியமும் உள்ளதே.

     “சுகிர் கொஞ்ச நாளைக்கு முன்ன நம்ம ராஜன் தண்ணி கேன் போட ஒரு வீட்டுக்கு போனான்.” என்று விஷாகன் தயங்கினான்.

ராஜன் கடை பையன் அவன் தண்ணி கேன் போட போனதை எதுக்கு இந்த நேரத்துல பேசறான். எதுக்கு அப்பாவையே அடிச்சிருப்பான் என்ற சிந்தனையில் உழன்றான்.

அதிக நேரம் சிந்திக்க விடாமல் மெதுவாய் “அங்க நம்ம அப்பா போட்டோ இருந்ததா வந்து சொன்னான்.” என்று இழுத்தான்.

விஷாகனின் பேச்சே வெட்டு ஒன்று துண்டு இரண்டு. இப்படி இழுப்பதோ மழுப்புவதோ அவன் அகராதியிலேயே கிடையாது.

“அப்பா போட்டோவா? எதுக்கு?” என்று சுகிர்தன் கேட்டான்.

“அதான் சொல்ல வர்றேன். நானும் நமக்குத் தெரிந்தவங்க வீடா இருக்குமோனு நினைச்சேன். ஆனா அப்பாவிடம் கேட்டுக்கலை. ஏன்னா அப்பா போட்டோ தனியா இல்லை. ஜோடியா இருந்ததாம்.

அதனால மறுமுறை தண்ணி கேன் போட போறப்ப நானும் கூட வர்றேன்னு சொல்லிருந்தேன். கண்ணால காண்பதும் பொய் காதால கேட்பதும் பொய் தீர விசாரிப்பது மெய் என்று வள்ளுவர் சொல்லியிருக்காரே.

அவசரப்பட்டு அப்பாவை கேட்டு சந்தேகிச்சிட கூடாதுல.

    அந்த வீட்ல அப்பா போட்டோ ஒரு பொண்ணோட ஜோடியா இருந்தது. மனசு பக்குனு இருந்துச்சு.

நம்ம வீட்ல அப்பாவோட எடுத்த மாதிரியே சிரிச்சிட்டே தோள்ல கைப்போட்டு.

அந்தப் பொண்ணுக்கு நம்ம வயசை விட ஏழெட்டு வயசு கூட இருக்கும் சுகிர். ராஜனை அந்த நிமிஷம் சந்திக்கவே கஷ்டமா போச்சு.

ராஜனை விட்டு பேசி என்ன உறவுமுறைனை விஷயத்தைக் கேட்க சொன்னேன்.” என்றதும் சுகிர்தனுக்கு அப்படியிருக்குமோ என்று தோன்றியது.

“அப்பா.. அப்பா.. ம்ம்.. அந்தப் பொண்ணுக் கூட வாழ்ந்திருக்கார்.” என்று மிகவும் நாசூக்காய் உரைத்தான்.

சுகிர்தன் ‘அடப்பாவமே அப்படியிருக்காதுனு நினைச்சேன். அப்படியே தான்னு சொல்லறான்’ என்று கோபமாய் அறை பக்கம் திரும்பினான்.

சுகிர்தனுக்கு அப்படியெல்லாம் இருக்காது என்று வாதிடவே தோன்றவில்லை. காரணம் கொஞ்சம் காலமாகவே தான் உபயோகப்படுத்தும் பெர்ப்யூம் தந்தை போட்டுக் கொள்வதும், ஹேர்கலர் அடித்துக் கொண்டு திரிந்ததும், தனது அறையிலிருந்த ஆளுயர கண்ணாடியில் மீசை தடவி அழகை ரசித்துச் சீனை போட்டது அவன் அறிந்ததே. அதற்கு இப்படியொரு மறுபக்கம் வாய்க்குமெனக் கனவிலும் நினைக்கவில்லை.

“ஒரு வாரமா அப்பாவை வாட்ச் பண்ணினேன். அவர் இந்தபக்கம் வந்துட்டுப் போறது தெரிந்தது.

இன்னிக்கு அந்தப் பொண்ணிடம் அதுக்குப் பிறகு எப்படிப் பழக்கம் எப்ப வருவாருனு கேட்டு இன்னிக்கு மதியானம் அங்கயே இருந்து கோழி அமுக்கின மாதிரி அப்பாவை பிடிச்சி, உதைச்சி, இப்ப ஹாஸ்பிடல்ல படுக்க வச்சிருக்கேன்.

என்னால என்ன முடிவெடுக்கறதுனு சத்தியமா தெரியலை.” என்றதும் சுகன்யாவின் அழுகுரல் அதிகரித்தது.

“நான் உங்களுக்கு என்னங்க குறை வச்சேன். அய்யோ… காலம் கடந்து இப்படிப் பண்ணி வச்சிருக்கிங்களே.

பையனுக்குக் கல்யாணம் பண்ணியிருந்தா பேரன் பேத்தியே எடுத்திருப்பிங்களே. இதெல்லாம் பார்க்கணும்னு என்னை உலகத்துல நடமாட வச்சியிருக்கியே முருகா. இப்பவே என்னை உன் காலடிக்கு அழைச்சுக்கோ” என்று முகத்திலடித்துச் சுகன்யா புலம்பவும், விஷாகன் சுகிர்தன் இருவரும் அறைக்குள் ஓடிவந்தனர்.

தனது கைப்பேசி செயலிழுந்து போகவும் மகனின் போனை வாங்கித் தன் கணவரின் உறவுக்கும், ஊரிலிருக்கும் தனது தாய் தந்தையருக்கும் அடிப்பட்டதை அறிவிக்க வெளிவந்த சுகன்யா அனைத்தும் கேட்க வேண்டிய சூழ்நிலை அமைந்துவிட்டது.

விஷாகனுக்கு இங்கு வைத்து சுகிர்தனோடு பேசியிருக்கக் கூடாதெனக் காலம் கடந்து ஞானம் உதித்தது.

இந்த நிமிடம் இடம் பொருளை அலசும் அளவிற்கு விஷாகன் நிதானத்தோடும் இல்லை அந்தளவிற்குத் தந்தை செய்கையால் சினமே குடியிருந்தது இதயத்தில்.

“அம்மா அம்மா.. நீயேன் மா முகத்துல அடிச்சிட்டு அழுவற?” என்று சுகிர்தன் வந்து அன்னையின் கையைப் பிடித்துத் தடுத்தான்.

விஷாகனோ தன் முழுக்கை சட்டையை மடித்து விட்டு வந்தவன், “இங்க பாருங்க அம்மா. உங்களுக்கும் எப்படிச் சொல்லறதுனு தான் தயக்கமா இருந்தது. ஏதோ இங்கயே தெரிந்துக்கிட்டிங்க ரொம்ப நல்லதா போச்சு.

இந்தாளு யோக்கியதை தெரிந்துக்கிட்டிங்க. போதும்… இனியும் ஏமாறாம வாழுங்க.” என்று கூறும் போது சுகன்யாவின் தாய் செல்லம்மா விஷாகன் போனுக்கு அழைத்து இருந்தார்.

“அம்மாச்சிக்கு போன் போட்டிங்களா?” என்று விஷாகன் கேட்டான்.

ஆமா என்று தலையாட்டி சேலையால் வாயை பொத்தி அழுதார்.

விஷாகன் தலையிலடித்து நின்றான். “அதுக்குள்ள என்ன அவசரம். பாருங்க… நானும் வீட்ல இருப்பேன்னு என் போனுக்குப் போனை போட்டுட்டாங்க.” என்று அழைப்பை எடுக்காமல் அங்கும் இங்கும் பார்த்து உதயகுமாரை கண்டு கோபமும் உருவாகியது.

“இப்ப என்ன செய்யறது? எங்கம்மை போனை கொடு.” என்று கேட்டு நின்றார்.

“எதுக்கு… இல்லை எதுக்குனு கேட்கறேன். இருக்குற கொஞ்ச நஞ்ச மரியாதையும் மொத்தமா வழிச்சி எடுக்கவா.

ஏதோ மாப்பிள்ளை வாட்டசாட்டமா கெத்தா இருக்காருனு நினைச்சிருப்பாங்க. உன்னைய கட்டிக்கொடுத்துட்டுக் காலம் போற போக்குல எமன் வந்தா போய்ச் சேரலாம்னு இருக்கறவங்களோட நிம்மதியை குழித்தோண்டி புதைக்கணுமா?” என்று கோபமாகக் கேட்டான்.

அந்த அறையே அமைதியாக மாறியது. “பின்ன என்னடா பண்ணறது. எனக்கு யாரு இருக்கா.” என்று மூக்குறிந்து நின்றார். லேசாய் இப்போதே சளிப் பிடிக்கும் நிலையாக மாறியது.

சுகன்யாவுக்கு ஏசியோ அழுகையோ அதிகப்படியானால் இப்படி உடனடியாகச் சளிப் பிடிக்கும்.

“ஏன் நான் எதுக்கு இருக்கேன். தாயுக்கு தலைமகன்னு.” என்று கூறும் போதே மீண்டும் செல்லம்மா அம்மாச்சி அழைத்து விட்டார்.

“உப்ஸ்.. போனை அட்டன் பண்ணற வரை இனி நிறுத்த மாட்டாங்க” என்றவன் தம்பியை பார்த்தான்.

சுகன்யா உதயகுமாரை கண்டு திட்டவும் முடியாது, இந்த நிலையைக் காணவும் இயலாது நின்றார்.

மகனே தந்தையை மொத்தி எடுத்திருந்தால் தாய் மகிழவா முடியும். இப்பவும் கணவனுக்காக ஏங்கிய இதயத்தைக் காரி உமிழவும் முடியவில்லை. உதயகுமாருக்கு எப்படியோ? சுகன்யா மனதில் சட்டமாய்க் குடியிருப்பவர் இவர் தானே. அந்த நேசம் இன்னமும் வறட்சியாகாமல் இருந்தது.

விஷாகனோ “சரி இப்ப இதை எப்படிச் சரிப்பண்ணறதுனு யோசிப்போம்.

அம்மாச்சிக்கு போன் போட்டுட்ட.. இனி போன் பேசி வைக்கிற வரை போடறதை விடமாட்டாங்க. நீங்களும் அடிப்பட்டதை எப்படியும் சொல்லிடுங்க அம்மா.

ஆனா இன்னொரு பொண்ணுக்கூட வாழறாரு என்பது எல்லாம் சொல்லாதிங்க. ஏதோ வண்டி இடிச்சி இப்படி ஆனதா மட்டும் சொல்லுங்க. மத்தபடி உங்க தலையில நீங்களா மண் அள்ளி கொட்டிக்கணும்னா உங்க புருஷனுக்கு இன்னொரு குடும்பம் இருப்பதைச் சொல்லுங்க.” என்றான்.

சுகன்யாவோ “மறுபடியும் அவளைத் தேடி போவாரா?” என்று கேட்டு அழுதார்.

“போகட்டுமே… போய்ப் பார்க்கட்டுமே… காலை உடைச்சி படுத்தபடுக்கையா போட்டு கஞ்சி ஊத்த வச்சிடுவேன்.” என்று அன்னையிடம் கோபமாகப் பேசியவன், தந்தையிடம் “என்ன போவீங்களா?” என்று தந்தையைப் பார்த்து ஒரு மிரட்டல் தொணியில் கேட்டான்.

அவரோ பார்வை தழைந்து நின்றார்.
மீண்டும் போன் இம்முறை தாத்தா செந்தூரன் அழைத்து இருந்தார்.

“அம்மா தாத்தா.” என்றவன் “நான் இப்ப போன்ல அடிப்பட்டதை மட்டும் சொல்வேன். அச்சு பிசகாம அதையே தான் மத்தவங்களிடம் சொல்லறிங்க.” என்று விதிமுறையை இயற்றிவிட்டு, “அழாதிங்க இந்தாளுக்கு அழறது வேஸ்ட்” என்று போனின் அழைப்பை ஏற்றான்.

“தாத்தா.” என்றான் துள்ளலோடு. சற்று சுருதி குறைந்தாலும் தாத்தா என்னடா ராசா ஏதோ பிரச்சனையா? என்று கேட்டுவிடுவார். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழி போல, குரலை வைத்தே மனதின் மகிழ்ச்சியைக் கணக்கிடுவார்.

“என்ன ராசா… சுகன்யா போன் போட்டுப் பிறவு எடுக்கலையாமே. உங்க அம்மச்சி ஒரே புலம்பி தள்ளி போனை போட சொல்லிட்டா. நீயும் போனை எடுக்கலையாமே.” என்று கேட்டார்.

“ஒன்னுமில்லை தாத்தா… அப்பாவுக்குச் சின்னதா உடம்பு சரியில்லை. ஆஸ்பிடல்ல சேர்த்து இருக்கு. அம்மா உடனே மூக்குறிஞ்சு அம்மாச்சிக்கு போன் போட்டுட்டாங்க.” என்று உண்மையோடு ஆரம்பித்தான்.

“அடடே.. மாப்பிள்ளைக்கு இப்ப எப்படியிருக்கு.?” என்றார் செந்தூரன்.

“அதெல்லாம் இப்ப கல்யாணம் கட்டினாலும் புது மாப்பிள்ளை கணக்கா ஜோரா இருக்கார்.” என்று தந்தையைப் பார்த்து நக்கலாக உரைத்தான்.

“என்னப்பா ஆஸ்பிடலுனு சொல்லற. சின்னதா உடம்பு சரியில்லைனு சொல்லற. அம்மாவிடம் போனை கொடு” என்று அம்மாச்சி வாங்கிப் பேசினார்.

“அம்மச்சி அம்மா அப்பா கூட இருக்காங்க. நான் நைட்டு சாப்பிட ஏதாவது வாங்கலாம்னு கடைக்கு வந்தேன்.
நீங்க ஒன்னும் கவலைப்படாதிங்க. அம்மாவை நைட்டுக்குள்ள பொறுமையா பேச வைக்கிறேன்.

இப்ப வச்சிடவா?” என்று மரியாதை நிமித்தம் கேட்டான்.

“சரியா சரியா நீ ஆஸ்பிடல்ல வந்ததும் போனை போட்டு தா.” என்று அணைத்து வைத்தார்.

“ஸப்பா.. எதுக்குமா அழுதுட்டே இருக்க. உங்க அழுகையால தாத்தாவுக்கோ அம்மாச்சிக்கோ கேட்டுடும்னு பயந்து பயந்து பேசினேன்.

இங்க பாருங்க. வண்டி மோதி அடிபட்டுடுச்சு. இதான் யார் போன் போட்டாலும் பேசறிங்க” என்று போனை கொடுத்தான்.

ஒரு கால் ஹவர் போனதும் அம்மாச்சியிடம் பேசுங்க.” என்றவன் தம்பி சுகிர்தனை அழைத்து இரவுக்கு உணவை வாங்கிவர கட்டளையிட்டான்.

எப்படியும் யாராவது தங்க வேண்டிய நிர்பந்தம் உண்டு. அன்னை இருப்பது உசீதம். ஆனால் அழுதுக்கொண்டும், யாரிடமாவது உளறிக் கொட்டினால், எதற்கு வம்பு அடித்தவனே காவல் காக்கும் நிலைக்கு வந்து நின்றான்.

சுகிர்தனிடம் பணத்தைக் கொடுக்க, மறுக்க வந்தவன், இதற்கு முன் விஷாகன் யாரிடமும் காசு வாங்கிட மாட்டான். அவன் செலவு அவனே செய்வது பிடிக்கும். அதனால் சுகிர்தன் பணத்தைப் பெற்றுக் கொண்டு சென்றான்.

அலுவலகப் பையை அறைக்குள் வைத்து சுகிர்தன் சென்றான்.
காதில் ஹெட்செட் பொருத்திக் கொண்டு காதலி ஜெனிபரிடம் நடந்தவையை ஒன்று விடாமல் பாவ மன்னிப்பு கேட்பவன் போல ஒப்புவித்தான்.

இதனால் ஏதேனும் அபத்தம் நடக்குமா என்றெல்லாம் அவன் சிந்தனைக்குத் தோன்றவில்லை.

இங்குச் சுகன்யாவுக்குக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கண்ணீர் வடிய துவங்கியது.

லேசாய் அடிக்கடி சேலையால் மூக்கை உறிந்து சின்னச் சின்னப் புலம்பல் மட்டும் வந்தது. உதயகுமாரோ பெரிய மகனை கண்டு ஆடிப்போயிருந்தார். வாங்கிய அடிக்கு ஒரு வாரம் நிச்சயம் ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டார். அது மகன் மீது தோன்றிய திடீர் பயத்தால்….

விஷாகனோ அன்னையைக் கண்டு தந்தையை அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்து வெளியேறினான்.

மீண்டும் அதே இருக்கையில் வந்து அமர்ந்தவன் மனதில் “இப்பவே அதையும் சொல்லியிருக்கணுமோ? சூட்டோட சூட்டா அதையும் ஜீரணிக்க முயற்சி பண்ணுவாங்க. ஆனா இதுக்கே இந்தக் களோபரம் என்றால் அந்த விஷயத்துக்கு அம்மா மனசு தாங்கணும். இப்பவே ஆளு அரையாளா மாறிட்டாங்க.’ என்று அன்னைக்காகக் கவலைக் கொண்டான்.

அவன் கவலை கொள்வதற்குக் காரணம் இருந்தது. அவை அவன் மட்டுமே அறிவான். தந்தை பழகிய பெண் எளிதில் ஒதுங்கும் ஆளில்லை.

அவன் கணித்தது போல ஒளிந்து ஒளிந்து அந்தத் தளத்தில் கால் பதித்து வந்தாள் சங்கீதா. இதுவரை மட்டுப்பட்ட கோபம் மீண்டும் தலைக்கேறியது விஷாகனுக்கு.

-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்
    

15 thoughts on “நீயின்றி வாழ்வேது-2”

  1. Epadiyum sollitan aganum enna panradhu vichu…. Ne solradhuku avangalae vazhi kaatitanga ini. Adhuva nadakum vichu vidu….

    Super ka🥰…. Waiting for next ud….

  2. நீயின்றி வாழ்வேது…!
    (அத்தியாயம் – 2)

    அய்யய்யோ…! அப்போ, அப்பா இன்னொரு வீட்லேயும் விளையாடிட்டாரா…? அதுக்குத்தான் இந்த தர்ம அடி
    ராஜவைத்தியம் எல்லாமுமா…?
    அடேய்…அடேய்… வயசுக்கு வந்த பசங்களை வைச்சிட்டு…,
    எப்படி டா செட்டப் எல்லாம் வைச்சுக்கத் தோணுது.
    அதுவும் வீட்ல மகாலஷ்மி மாதிரி பத்தினியை வைச்சுட்டு..
    வெளியில குரங்காட்டம் எத்தினியை வைச்சுக்கறிங்களே உங்களுக்கு மனசாட்சியே இல்லையா..? இனிமே வயசு புள்ளைங்களை காபந்து பண்றதுப்போய், அரைகிழவனை எல்லாம் பந்து பந்து பண்ணனும் போலயிருக்கே..?? இனி அந்த சக்காளத்தி வேற என்ன செய்யப் போறாளோ…?

    அம்மாடி சுகன்யா…! நீ யாரு கிட்ட சொல்லி அழுவுறன்னு தெரியுதா…? நீ சொல்ற அந்த முருகனே ரெண்டு பொண்டாட்டிக்காரன் தான்ம்மா. புலம்ப கூட உனக்கு வேற ஆளே கிடைக்கலை பாரேன்…
    என்னாத்தை சொல்ல…?

    அச்சச்சோ..! இந்த சுகிர்தன் வேற, இது ஏதோ அமர காதல் மாதிரி அவங்கப்பா பண்ண கூத்தை, தன் காதலி கிட்ட வேற உறி வைக்குறானா…?? சுத்தம் விளங்கிடும். ஏன்..? அட.. ஏன் ?
    குடும்பம் மொத்தமே இப்படித்தானா…????
    கடவுளே !
    இன்னும் என்னென்ன வில்லங்கம் எல்லாம் வரப்போகுதோ…???
    😴😴😴
    CRVS (or) CRVS 2797

  3. Entha maganukum appa va ippadi patha kandipa kovam kastam varum irukum atha udane adichi kamichitan ithula inum vera ena iruku therila athu therinja amma inum udanjiduvanga solran . Interesting sisy next ena padikanum

  4. இந்த வயசுல இந்த மனுஷனுக்கு இந்த சபல புத்தி தேவையா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!