முதுகெலும்பின் முடிவில் விண் என்று வலி தோன்றியதும் சிறிது படபடப்பு தோன்றியது. உடனே செல்பேசி எடுத்து தன் கணவனுக்கு அழைத்தாள்.
உடனே எடுக்கப்பட்டது எடுத்ததும்
என்னங்க இடுப்பு வலிக்குதுங்க
மேடம் சார் இன்னும் வரவில்லை. வந்ததும் சொல்லுகிறேன் என்று கூறிய செவிலி
மேடம் நீங்க உடனே மருத்துவமனைக்கு வாங்க என்று கூறினாள்.
மெதுவாக எழுந்து பக்கத்தில் உறங்கும் மகன் ஆதித்யாவை பார்த்தவாறு வெளியே வந்தாள்.
அத்தை அத்தை
என்னம்மா இப்படி வேர்த்து இருக்கு.
இப்படி உக்கார்ந்துகோ என்று மின்விசிறியை இயக்கினார்.
அத்தை எனக்கு வலி ஆரம்பித்து விட்டது.
அச்சோ அவனுக்கு ஃபோன் போடுமா.
சொல்லிட்டேன் அத்த. அவர் இன்னும் வெளிய வரவில்லையாம். என்னை வர சொல்லிட்டாங்க. நான் ஹாஸ்பிடல் போனும்.
நீங்க ஆதியை பார்த்துக்கோங்க.
சரி மா நான் போய் ஆட்டோ தம்பியை கூட்டிட்டு வாரேன்.
வேகமாக வெளியே சென்று வெறிச்சோடிய வீதியில் நடந்து மூன்று வீடு தள்ளி உள்ள வீட்டின் வெளி வாசல் கதவை தட்டினார்.
முப்பது வயது மதிக்கத்தக்க மனிதர் வெளியே வந்து அவரின் படபடப்பை பார்த்ததும்
என்ன மா அக்காவுக்கு வலி வந்துருச்சா, ஹாஸ்பிடல் போகனுமா என்றார்.
ஆமா தம்பி கொஞ்சம் சீக்கிரம் வாங்க.
சரி மா நீங்க போய் அக்காவ தயார் பண்ணுங்க. நான் வர்ரேன், என்றவாறு உள்ளே சென்று மனைவியிடம்
டாக்டர் சார் மனைவிக்கு வலி வந்துருச்சாம்டி நா ஹாஸ்பிடல் போயிடு வாரேன் என்ற படி கிளம்பி வெளியே வந்து ஆட்டோவை ஸ்டார்ட் செய்தான்.
பத்திரமாக கூட்டிட்டு போங்கங்க. நம்ம பிள்ளை இன்னைக்கு மூச்சு விடுதுனா அது டாக்டரால் தான். கடவுளே நல்லபடியா பிரசவம் ஆகி தாய் சேய் நலமாக வீடு வரனும் சாமி என்று மேல் நோக்கி கையை உயர்த்தி கும்பிட்டு வழி அனுப்பி வைத்தார்.
தூங்கி எழுந்து கண்ணை கசக்கி கொண்டு அம்மா அம்மா என்று கூப்பிட்டு கொண்டே நான்கு வயது ஆதி ஹாலுக்கு வந்தான். ஐ லவ் யூ அம்மா என்று தன் தாயை கட்டிக் கொண்டான்.
அம்மாவின் அருகில் உள்ள பையை பார்த்து தன் தாயை கவலையாக நோக்கினான் ஆதி
நானும் வருகிறேன் அம்மா என்று அழ துவங்க
தன் மகனை அனைத்தவாறு தன் வலியை பொறுத்துக் கொண்டு ஆதி கண்ணா கொரோனா நோய் பரவல் அதிகமா இருக்குது இல்லையா அதனால யாரும் வெளியே போக கூடாது. நீங்க ஐயம்மா கூட சமத்தா இருப்பிங்களாம். அம்மா மட்டும் ஹாஸ்பிடல் போயிட்டு பாப்பா பிறந்ததும் பாப்பா கூட வீட்டுக்கு வந்துருவேனாம். சரியா செல்லம் என்று கொஞ்சி கெஞ்சி சமாதானம் செய்தாள்.
தன் மருமகள் தேவையானவற்றை எடுத்து வைத்து விட்டாளா என்று ஆராய்ந்து மேலும் தேவையானவற்றை எடுத்து வைத்தார்.
பின் பூஜை அறை சென்று தாயையும் சேயையும் பத்திரமாக வீடு வந்து சேர்த்து விடுங்கள் என்று தன் குலதெய்வத்தை வேண்டி மருமகளுக்கு திருநீறு பூசி விட்டார்.
தன் பயத்தை மறைத்து கொண்டு தைரியமா இரு நிலா கண்ணு ஒன்னும் இல்ல கவலை இல்லை என்று ஆறுதல் சொல்லி வாசலுக்கு வந்தார்கள்.
கொரோனாவிற்கு பயந்து கர்ப்பிணி பெண்ணை தனியாக அனுப்புகிறோமே என்று கொரோனாவை சபித்து கொண்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் அனைவரும் வீட்டு வாசலில் இருந்தே ஆதி அம்மா தைரியமா இருங்க, நிலா பயப்படாம இரு, பத்திரமாக போயிட்டு வாங்க, ஆல் த பெஸ்ட் என்று கூறினார்கள். எல்லா பக்கங்களிலும் இருந்து குரல் கேட்டது.
அனைவருக்கும் புன்னகையை பதிலாக தந்து விட்டு பயம் வலி கவலை அனைத்தும் கலந்த உணர்வோடு போயிட்டு வரேன் அத்தை என்று அத்தையிடமும் ஆதி சமத்தா இருக்கனும் என்று மகன் இடமும் கூறி விடைபெற்றாள்.
வாகன நெரிசலில் நாற்பது நிமிடங்கள் ஆகும். ஆனால் இன்று கொரோனா ஊரடங்கால் மிதமான வேகத்தில் இருபது நிமிடங்களில் மருத்துவமனைக்கு வந்தாகிவிட்டது.
மருத்துவமனை வாயிலில் செவிலியர் இருவர் தள்ளு நாற்காலி வைத்து காத்திருந்து நடந்தே வருகிறேன் என்பவளை கட்டாய படுத்தி அமர வைத்தனர்.
ட்ரைவருக்கு நன்றி கூறி
இனிமேல் இவர்கள் பார்த்துக்குவாங்க பாபு அண்ணா, நீங்க பத்திரமாக போயிட்டு வாங்க. அத்தையையும் ஆதியையும் பார்த்துக்கோங்க , என்று கூறிய நிலாவை பார்த்து
அதெல்லாம் நாங்க பார்த்துக்குறோம். நீங்க கவலை இல்லாமல் தைரியமா இருங்க மா. எது வேண்டும் என்றாலும் ஃபோன் பண்ணுங்க என்று கூறி
சுக பிரசவம் ஆகனும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன் என்று கிளம்பினார்.
கொரோனா பரிசோதனை முடித்து அறைக்கு அனுமதிக்கப்பட்டார். தனியாக கணவனை எதிர் நோக்கி காத்திருந்தாள்.
நான்கு மாதங்கள் ஆகின்றன கணவனை பார்த்து.
கொரோனா பிரிவில் மூன்று மாதங்கள் டூட்டி ( வேலை ) பார்த்து விட்டு இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். டாக்டர். சூர்யா. இள வயதிலேயே ஆங்கில எழுத்தில் அதிகம் தன் பெயருக்கு பின் கொண்ட திறமைசாலி.
கர்ப்ப காலத்தில் மனைவி உடன் இருக்க முடியவில்லையே என்ற கவலை ஒருபுறம். அவசர காலத்தில் மக்களைக் காக்கும் பணி ஒருபுறம்.
மனைவிக்கு பிரசவ வலி என்று நர்ஸ் சொன்னது முதல்,
மனைவியை காண தவியாய் தவிக்கின்றான். தன் நிலாவை காண ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறான். அரை மணிக்கு ஒரு முறை செவிலியரிடம் தன் மனையாள் நிலை பற்றி கேட்டுக் கொண்டே இருக்கிறான்.
இங்கு தன் அறையில் நிலா தன் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் ஃபோன் செய்து பேசினாள். அம்மாவிடம் பேசிய பின் அம்மாவின் பேச்சில் சிறிது தைரியம் வந்தது.
இருந்தாலும் தன் அன்பு கணவன் முகம் காணவும் அவனின் ஆறுதல் வார்த்தைகள் கேட்கவும் மனம் ஏங்கியது. அனைவரும் இருந்து இப்படி தனியாக இருப்பதும்,
கணவனின் சூழ்நிலையும் அறிவுக்கு தெரிந்தாலும் மனம் அவன் இன்னும் வரவில்லை என்று கோபம் கொண்டது.
அவ்வப்போது மருத்துவர் வந்து சோதித்து பார்த்தார். இன்னும் பிரசவம் ஆக நேரம் ஆகும் அறைக்குள்ளே மெதுவாக நடக்கும் படி கூறி சென்றார்.
காலை ஆறு மணி முதல் வலியை தாங்கிக் கொண்டு இருந்தாள் நிலா. மணி சாயங்காலம் ஐந்து ஆகிவிட்டது.
கணவனை காண மனம் அதிகம் ஏங்கியது. அத்தான் அத்தான் என்று தவித்தாள்.
ஆறு மணிக்கு மேல் வலி அதிகமாகியது. மருத்துவர் வந்து சோதித்து பிரசவம் நெருங்கி விட்டது என்று நிலாவை பிரசவ அறைக்குள் அழைத்துச் சென்றார்கள்.
உயிர் போகும் வலி…. அம்மா அம்மா என்று கத்திகொண்டே கையை துழாவினாள்.
பாதுகாப்பாய் அவள் கையை பற்றியது ஒரு கை. கண் திறந்து கை பற்றியது யார் என்று பார்த்தால் நிலா. கண் முன் தன் அன்பு கணவன்.
சூரியனை கண்டதும் பனித்துளி காணாமல் போவது போல் , அன்பு கணவன் சூர்யாவை கண்டதும் தனிமை பயம்.வலி அனைத்தையும் மறந்தாள்.
அத்த்த்தான்….. என்று கத்தினாள்.
பதிமூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு சூர்யா – நிலா தம்பதியரின் இளைய மகள் பூமியில் புதுவரவு ஆக வந்தாள்…
பன்னீர் ரோஜா போல் இருக்கும் தன் மகளை கைகளில் ஏந்தி தன் மனைவிக்கு காட்டினான். கணவன் கையில் பட்டு போல் இருக்கும் குழந்தையையும் கணவனையும் பார்த்ததும் நிலாவின் சேர்ந்த முகம் சோர்வு நீங்கி புத்துணர்வுடன் முழு நிலவாக பிரகாசித்தது.
சூர்யா – நிலா வின் ஆசை மகள்
ஆதித்யா வின் அன்பு தங்கை
புதுவரவு வெண்மதி 🌹🌹🌹
🌹🌹🌹
– அருள்மொழி மணவாளன்
உண்மையில் கொரான கால கட்டம் நம்மை போன்ற பொதுஜனங்களுக்கே கொ(க)டுமையான கால கட்டமாக
இருக்கும்பொழுது, இது போல் பொதுப்பணியில் இருப்பவர்க்கும், அவர்களின் குடும்பங்களுக்கும்
எத்தனை கஷ்டமான காலம் என்பதை உணர்த்துகிறது இந்த கதை. அதில் விடிவெள்ளியாக, நம்பிக்கை தரும் ஒளியாக இந்த சிறு குழந்தையின் புதுவரவு மனதிற்கு உற்சாகத்தையும், புத்துணர்வையும் அளிக்கிறது.
நன்றி 😊😊
Nice story
Nice